தமிழ் முனிவன் தாள் பணிந்து !
விடுதலை..என்பது !
Freedom
அண்டமும் அவனியும் அறியொணாப் பொருள்களும்
உடம்பாற் பிறந்த மனிதனை உய்விக்கவே
உருவான இயற்கை சக்திகள், இறைசக்திகள் .
மானிடப் பிறப்பு ஆண்டவனின் அரிய படைப்பு .
மனித சக்தி மாபெரும் சக்தி; ஐம்பூதங்களையும் வயப்படுத்துகின்ற அணுசக்தி !
ஆறு படை வீடுகள் கொண்ட மயில் வீரனே மனிதன் .
அருள் வெளியில் அறக் காற்றினை சுவாசித்து, இயற்கையினை ஆளப்பிறந்தவன்.
நாதவிந்துகளின் அதிபன், வேத மந்திர சொரூபனின் அம்சம் .
இயற்கையின் இயற்றல் இயக்கம் அனைத்திற்கும் மனிதன் தான் centre of gravity .
மனிதனை விட்டால் புவியேது ? புவனமேது ? பூமியேது ?
மனிதன் இல்லாவிட்டால் தேரேது? சிலையேது? தெய்வந்தான் ஏது..?
பூமியின் இயற்கை வளங்களுக்கு மனிதன் தான் அறங்காவலன்.
வேலியே பயிரை மேய்ந்தால்..?
வேதனையில் இயற்கை அன்னை!
கல்லாப் பிழையும் ; கருதாப் பிழையும்
நில்லாப் பிழையும் ; நினையாப் பிழையும்
எல்லாப் பிழையும் இணைந்த ஊழிற்பெருவலி
மனிதனைக் கைதியாய் , கைப்பாவையாக்கி ஆளுகிறது .
காவலனைக் கைதியாகக் காணுவது ...
காலம் செய்த கோலம், கர்மாவின் கணக்கு .
பிறந்தவனெல்லாம் படிப்பது இல்லை,
படித்தவனெல்லாம் பதவியில் இல்லை,
பதவியில் எல்லோரும் உயர்வது இல்லை,
உயர்பவர் எல்லோரும் உயர்ந்தவர் இல்லை,
உயர்ந்தவர் கூட உருப்படி இல்லை .
தேவை அறிந்து தெய்வம் போட்ட பிச்சை
அறியாத மானுடனுக்கு அக்கரையில் பச்சை !
நாடு மொழிகளைக் கடந்து மனிதனை வருத்தும் மனநோய் (Human ailment)
ஒன்றாகவே இருக்கிறது .
உகாண்டாவில் உள்ளவனும் லண்டனில் இருப்பவனுக்கும் நிறம் தான் வேறு,
மனம் ஒன்றுதான் !
எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் எதோ ஒரு வகையில் மனிதன் விலங்கு பூட்டிய கைதியாகவே காணப் படுகின்றான், எதோ ஒன்றுக்கு அடிமையாகி வாழ்கின்றான்.
பற்று, பணம் காசுக்கு அடிமை ,
பதவி சுகம், பந்தபாசங்களுக்கு அடிமை ,
பழக்க வழக்கங்கள் எனப் பாழாய்ப்போன மனம் எதோ ஒரு விதத்தில்
அடிமையாகி விடுகின்றது .
பாவ புண்ணியமென்ன, பண்படா பக்தியும் ஒரு வகையில் அடிமைத்தளையாகிறது .
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ;
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் ! என்கிறார் திருமூலர் .
கை விலங்கினைக் கழற்றலாம்;
கால் விலங்கினை அகற்றலாம்;
மன விலங்கினை..? யார் நீக்குவது...?
மாட்டிக் கொண்டவனுக்கேத் தெரியாத மாய வித்தை !
மாட்டிக் கொண்டவன் மனிதன் என்றாலும், மாட்டிக் கொள்ளத் தூண்டியது எது ?
பொன் விலங்காக இருந்தாலும், அது கைதியின் அடையாளம் .
தங்க ஊசியென்றாலும் தைப்பதற்குத்தானே பயன்படும் .
அனுபவங்கள் தான் அமைதியின் அரண்மனை .
கல்லைக் கட்டிக் கடலில் வீசினாலும், தன்னை அறிந்தவன் தண்ணீரில் மிதப்பான்,
நெருப்பு உலையிலும் நிம்மதியாய் இருப்பான் .
தன்னை அறிந்தவனுக்கு நற்றுணையாவது நமசிவாயமே,
பக்கத்துணை நிற்பது பஞ்ச பூதங்களே .
தன்னை அறிந்தவனுக்குப் பறவையின் சிறகிலும் பரந்தாமன் தோன்றுகிறான்.
தீயிலும் தெய்வத்தின் ஸ்பரிசம் தெரிகின்றது .
தன்னை அறிந்தவனுக்கு, வாழ்க்கை என்பது வகுக்கப்பட்ட சாலை.
சாலை நீளம், சந்திப்புகள் அதிகம், சலனங்கள் அதில் இல்லை .
“ பூசையென்ன மனதுறுதியாகக் கொண்டு
பூரணத்தை பற்றி மனதறிவாய் நின்றால்,
நேசமுள்ள மனதுறுதி யாகுமாகும்
நிஷ்டையிலே அஷ்டாங்க யோகங்காணும்,
பாஷையென்ற பரிபாஷை பண்பாய்க் காணும்
பக்குவமாய் கற்பூரத் தீபந்தோணும்,
ஆசையென்ற தசதீட்சை காரந்தோன்றும்
அரகரா இன்னமொரு கற்பங்கேளே ”
- அகத்தியர் அமுதகலை ஞானம்
“ செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் ”
அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியர் என்கிறார் வள்ளுவர் .
மனிதன் தன் வேலைகளை எவ்வாறு செய்கின்றான் ?
- அச்சம் குடிகொள்ள அடிமையாகிச் செய்வது (slaverism).
- அறிவு மயங்கி அலட்சிய மனப்பான்மையில் செய்வது (escapism).
- பலனை எதிர்பார்த்துப் பற்றுடன் செய்வது (egotism).
- ‘ சர்வம் கிருஷணார்ப்பணம் ’ என்று கர்மயோகியாய் கடமையாற்றுவது (pragmatism).
இவையெல்லாம் பலகீனத்தின் பகிர்மானங்கள். திடமற்ற தடுமாற்றங்கள்.
விளையாட்டாக நினைக்காதீர்கள் - இவை மனநோயின் மாதிரி வடிவம் (Test samples).
இதில் பற்றில்லாமல், பலன் கருதாத ஞான வீரமே கர்மத்தின் தர்மம்.
இந்த தர்மம் தலைகாக்கும், தலைமுறைக்கும் கூட வரும் .
பணியாற்றுவதில் பரம்பொருளைக் காண்பவன் கர்மயோகி .
அதில் தன்னை அறிதலே “ தத்வமஸி ” தத்துவம் .
“ பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே .”
- திருமந்திரம்
இப்படித் தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் வினைகளிலிருந்து
விடுதலை பெற்று விடுகிறான்.
வினைகளின் நிழல்கள் அவன் மேல் விழுவதில்லை.
அதன் விளைவுகள் அவன் நிழலைக்கூடத் தொடுவதில்லை.
கணக்கு எழுதுபவன் விழிப்பாய் இருந்தால், ‘ஆடிட்’ அங்கே அவசியமே இல்லை.
பகலிலே பணியாற்றத் தெரிந்தவன் இரவில் நிம்மதியாய்த் தூங்குகிறான் .
அதில் பகல் கணக்குகளின் தணிக்கைத் தொடர்வதில்லை!
வினைகளில் விடுதலையே மெய்யான விடுதலை.
தனி மனிதன் விடுதலையே தாயகத்தின் விடுதலை.
இந்த விடுதலைப் பெற்று விட்டவனே மனிதரில் யோகி!
அமைதியே அவன் வசிக்கும் மாளிகை!
நிம்மதியே அவன் சுவாசிக்கும் காற்று !
கண்கள் காண்பதற்கு, காதுகள் கேட்பதற்கு .
ஆனால் நடப்பது என்ன ?
எதையும் மனம் பார்க்கிறது; மனம்தான் கேட்கிறது .
மனம் என்னும் கருவியின் மூலமாகப் பார்க்கிறோம்;
மனம் என்னும் கருவியின் வழியாகக் கேட்கிறோம் .
மனமே அந்த வேலையினை ஆக்கிரமித்து (encroachment) செய்யுமானால்,
ஒளி படைத்த கண்களும்..?
ௐங்கார வடிவில் காதுகளும் ..?
இறைவன் கொடுத்தது எதற்காக ..?
விடை தேடுவோம் ...
வினைகளில் இருந்து பெறுகின்ற விடுதலையில், செய்பவனுக்கும் செயலுக்கும் இடையே கொட்டாவி விடுகின்ற இடைவெளி மறைகிறது .
செயல் இயக்கமும் அதன் சக்தியும், சுடர் விட்டு ஒளி வீசுகிறது .
சிந்தையும் செயலும் ஒன்றுபடாமல்,
சிந்தை வேறாய், செயல் வேறாய்,
செய்பவனும் வேறாகக் காணும் செயலியக்கத்தில்,
பூசலும் போராட்டமும் தான் மிச்சம் (Conflicts).
கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றாவதும்;
காதுகள் இரண்டானாலும் கேட்பது ஒன்றாவதும் இயற்கையின் இயல்பு .
வினையாற்றல் தெரிந்தவன் எதையும் விளையாடி மகிழ்கிறான்,
தெரியாதவன் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறான் !
எந்த வேலையைச் செய்தாலும், அதில் பிரிவினை, பிளவுகள் இல்லாமல்,
ஒரே சக்தி ஒரே இயக்கமானால் , அதில் மனிதன் மட்டுமல்ல
ஆன்மாவும் விடுதலை பெறுகின்றது.
அடிமைக் குணம் அறவே மறைகின்றது.
ஆன்ம விடுதலையே மனிதப் பிறப்பின் உயிர்வினை !
ஆன்மா விடுதலை அடைகிறதோ இல்லையோ,
துன்பங்களிலிருந்து விடுதலை நிச்சயம் கிடைக்கிறது! -
அதில் அன்பு மலர்கின்றது, அறம் தழைக்கின்றது !
அவன் போகும் இடமெல்லாம் அன்பை விதைக்கிறான்,
அமைதியை உபதேசம் செய்கிறான் .
“ விடுபடாத பலத் தாலே மனந்தான் சென்று
விரைந்துமேதான் செகச்சாலத்து ஆசை கொண்டு
தடுபடாதே தாமரையின் நீரைப் போலே
தாங்கியேதான் அறிவழிந்து தளர்ச்சி யாகும்
கெடுபடாதே புத்திக்குள் மாயம் பூண்டு
கேடாச்சு போதத்தில் புகுத் தொட்டாது
அடுபடாதே மாய்கைவிட்டு தனித்து நின்றால்
ஆசையான பிறவியது அற்றுப் போமே ”
- போகர் 7000 : 3ஆம் காண்டம்
ஒன்றிலிருந்து விடுபடுவது அல்ல விடுதலை - அப்படியிருக்குமானால் அது reaction!
ஒன்றிலிருந்து விடுபட்டு வேறொன்றுக்கு அடிமை ஆகிவிடும் மனம் .
ஒரு பழக்கத்தை விட்டு இன்னொன்றைத் தொடருவான் .
உண்மையான விடுதலை என்பது உயிரின் வேட்கை ! ஆத்மாவின் தாகம் ! ( Inherent,
Innate & Inborn )
அது - அச்சத்திலிருந்து விடுதலை, அறியாமையிலிருந்து விடுதலை,
அடிமைக் குணத்திலிருந்து விடுதலை, அகந்தையிலிருந்து விடுதலை,
அக விடுதலை, ஆன்ம விடுதலை, ஞான விடுதலை !
இயந்திர வாழ்வின் இயக்கத்திலிருந்து விடுதலை !
அங்கே கர்மாவுக்கு ஏது கணக்கு..? காலனுக்குத்தான் என்ன வேலை..!
அக விடுதலை அடைந்து விட்டவன் சுயம்பு மனிதன், சுதந்திர புருஷன் .
நீ இறைவனின் குடிமகன் !
அதைத் தேடி அலைவதில் பலனில்லை .
தேடுவது என்றால் அதை உனக்குள்ளே தேடு !
அது உனக்கு உள்ளே விளைகின்ற முப்பூ ! - சர்வரோக நிவாரணி ! (Elixir of life).
இதயம் பேசுவது இயற்கையின் மொழி,
இயற்கையின் மொழி இறைவனின் மந்திரம்,
இறைவனின் மந்திரம் இயற்றியது மானுடம்,
இயற்றிய மானுடம் இருபெருந்தத்துவம்,
இருபெருந்தத்துவம் இணைந்தது ௐங்காரம்,
ௐங்கார உட்பொருள் உடம்பின் உறுபொருள்,
உறுபொருள் உணர்ந்தவன் உலகளந்த உத்தமன் !
“ ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பா வைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் ”
- திருப்பாவை
விதி இருந்தால் மதி அறியும் ! விட்டகுறை இருந்தால் விளங்கும் !
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேராது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரை காப்பதும் இல்லை
- கண்ணதாசன்
இவ்வலைப்பூவின் உன்னை அறிந்தால்..! http://solpudhithu10.blogspot.com/2018/06/treasure-island.html வரைவுடன் சேர்ந்தே பயணியுங்கள் . ஞான விடுதலை புலப்படும் !
நன்று ! வாழ்த்துகள் !!
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
No comments:
Post a Comment