Monday, 20 August 2018

சித்தர்கள் தரிசனம்..! இரண்டாம் பாகம்

                                             தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                           சித்தர்கள் தரிசனம்..!
                                                       இரண்டாம் பாகம்

            சிவன், பார்வதி, நந்தி சித்தர் பரம்பரையில் பழம்பெரும் தமிழ் நாட்டில் பிறந்து வாழும் மூலசித்தர்கள் பதினெண் பேர்களாவர்.
பதினெண் தொகையாகக் கூறப்படும் இவர்களின் பட்டியலில், சில சில பெயர்கள் கூடியும்,
ஒவ்வொரு பெயர் விடுபட்டும் நூல்களில் காணப்படுகின்றன .
பதினெண் பட்டியலின் பெயர்களில் வேறுபாடுகள் காணப்படுகிறதே தவிர, 
பதினெண் தொகைக் கணக்கில் எவ்வித மாற்றமும் இல்லை. 
பதினெண் பேர் என்னும் தொகைக்கு, அகத்தியர் முதலான அனைத்து சித்தர் பெருமக்களும்
தங்கள் நூல்களில் ஏற்பிசைவு அளித்துள்ளனர். 
பதினெட்டு எனும் ஞானத்தத்துவம் ஆராய்வுக்கு உரியதே.
பதினெண் பேர்கள் யாவர் என்பதனைக் காண்போம் :

நந்தியகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப்புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கரூரார் கொங்கணவர் காலாங்கியன்திற
சிகந்திலழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதிணெண்பேர் பாதம்
சிந்தையுளிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்க !

இவர்களே நம் பதினெண் சித்தர்கள் என்பர்.

‘ கருவூரார் பல திரட்டு ’ என்னும் நூலில் பதினெண் சித்தர்களின் வணக்கம் கூறும் பாடலையும் காணுங்கள் :

“ பார்த்திடவே நந்தீசர் மூலத் தீசர்
       பண்பான அகத்தீசர் சட்டை நாதர்
போர்த்திடவே பதஞ்சலியும் ஊனர் கண்ணர்
      கோரக்கர் கமலமுனி சண்டி கேசர்
கூர்த்திடவே இடைக்காடர் சிவாய சித்தர்
      கொங்கணவர் தந்தை போக நாதர்
காத்திடவே மச்சமுனி பிண்ணாக் கீசர்
     காலாங்கி சுந்தரரும் காப்பு தானே ”

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் இன்றும் இவர்கள் நம்மிடைய வாழ்ந்து வருகின்றனர் .
மானிட வாழ்க்கையின் அருள் மணக்கும் மலர்கள் !
எல்லாவற்றையும் கடந்து நிற்பவர்கள் என்றாலும், 
நம்மோடு இருந்து ஞானத்தை ஊட்டும் நல்லாசிரியர்கள்!
இவர்கள் இருக்கிற இடம் தெரியாது, ஆனால் இறைவனாகவே வாழ்பவர்கள் !

நிற்கத் தெரிந்த மனதிற்கு நிலைக்கத் தெரிகிறது .
நிலைக்கத் தெரிந்த மனதிற்கு உற்று நோக்கத் தெரிகிறது .
உற்று நோக்கக் கற்ற மனதிற்கு உய்த்து உணரத் தெரிகிறது .
உய்த்து உணரும் மனம் ஊடுருவிச் செல்கிறது .
ஊடுருவிச் சென்ற மனம் உட்பொருளைக் காண்கிறது.
உட்பொருளைக் கண்ட மனதிற்கு பரம்பொருள் தெரிகிறது .
பரம்பொருளின் தரிசனமே பரந்தாமனின் இருப்பிடம்
பரந்தாமனின் இருப்பிடம் பாற்கடலின் தத்துவம் 
பாற்கடலின் தத்துவம் பிரம்ம வித்தை பிறப்பிடம் !
அண்டத்தை பிண்டத்தில் அறிவதே இதன் பொருள் !
அறிந்தவன் சித்தன் !
அறியாதவன் பித்தன் !
மனிதனும் தெய்வமாகலாம் !
மனம் என்னும் கோவில் திறக்கின்ற வேளை,
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் !

தானான தானவனாய் நின்று வாழ்வான் 
        சதகோடி நாளுமொரு நாளாய் நிற்பான்
ஊனான காயாதி கற்ப மெல்லாம்
        உண்டுகரை யேறியவ னுறுதி யாவான்
வானான அண்டபகி ரண்ட மெல்லாம்
        வரைகடந்து திரையகற்றி வந்து சேர்வான்
தேனான மொழியுடையா னமுத பானம்
       தினந்தோறும் கொள்பவனே சித்த னாமே
                       - கடைப்பிள்ளைக் கலைஞானம்.

கருவிகள் வேறு, ஆனால் இசையின் இருப்பிடம் ஒன்றுதான் .
கலைகள் வேறு, ஆனால் அவற்றின் பிறப்பிடம் ஒன்றுதான் .
எண்ணங்கள் ஆயிரம், ஆனால் அவை உதயமாவது ஓரிடம்.
அதுவே அறிவின் அகலிடம், ஆன்மாவின் புகலிடம் !
மனதை மாளிகையாக்கி, மனிதனை மன்னன் ஆக்குவதே
சித்தவியலின் அடிநாதம், ஆதார சுருதி !
இந்த அறிவெளியில் விளைந்த உயர் ஞானவிருட்சமே,
தன்னை அறியும் தத்துவம் ! ஞான நெறியின் இலக்கணம் !
தன்னை அறிந்த தவசிக்குத் தருவதற்கு, இனி அவன் பெறுவதற்கு மேதினியில் ஏதுமில்லை .
அது வாக்கு மனம் கடந்த மனோலயம் ! 
ஆழ் கடலின் அமைதி ! 
ஒரு வகையில் துறவு நிலை !

“ தன்னையுந் தனக்கா தாரத்
      தலைவனை யுங்கண் டானேல்
பின்னையத் தலைவன் றானாய்ப்
      பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்
உன்னைநீ யறிந்தா யாகில்
     உனக்கொரு கேடு மில்லை
என்னைநீ கேட்கை யாலே
      யீதுப தேசித் தேனே
                - கைவல்ய நவநீதம்

பிறப்பின் இலக்கு இறப்பு அல்ல... மீண்டும் பிறவாமையே.
பிறவிப் பிணி தீர்க்க சித்தர்கள் கண்ட அருமருந்து காயசித்தி, வகுத்த யோகநெறி
சாகாக்கலை தத்துவம்.
அதனைத் தன்னுள் ஆழ மறைத்து வைத்திருப்பதே தமிழ் மொழியின் இரகசியம் !

மேனியை மெய்யென்று கூறியதை மெய்யாக்கி, மாயப் பிறப்பறுத்த மன்னர்கள் 
சித்தர் பெருமக்கள்.
சாகா நெறியே சித்த நெறி !
மனிதன் மார்கண்டேயன் ஆகக் கையில் ஏந்த வேண்டிய தண்டாயுதமே சித்தர்களின் 
குருமருந்தான “ முப்பூ ”.
இதுவே காலனை சாய்த்த மருந்து, மாலயன் தேடும் மருந்து, கோமளம் கூடும் மருந்து,
வைத்திய நாத மருந்து.

மேல்நாட்டு சித்தவியல் அறிஞர்கள் இதனை “ Philosopher’s stone ” எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் .
The Water of Life என ஏசு பிரான் இதனைக் குறிப்பிடுகிறார்.
நம்முள் விளையும் இந்த நாத மருந்தினை, நமனை வெல்லும் அமுதத்தைத் தொட்டுக்காட்டும் 
குரு வாய்த்தால், மரணத்தைத் தடுக்கமுடியும், தவிர்க்கமுடியும்.

“ போமப்பா யாக்கையதற் கழிவோ இல்லை
பொருளான கற்பமடா கொள்ளுகொள்ளு
வாமப்பா மதியமுதர்தங் கொண்டுவிட்டால்
வாரிதியா மஞ்சு வயதாகுமப்பா
நாமப்பா வயது சொல்ல முடியாதப்பா
நமனேது கோடியண்டங் கட்டலாம்பார்
காமப்பால் கானற்பால் ரெண்டுங்கொள்ள
கனமான சூரியன் போல் தேகமாச்சே ”
                                - தன்வந்திரி நிகண்டு 

“ கேளப்பா ஊரடுக்க மெத்தவுண்டு
        கிடையாமற் போவதில்லை கதியுண்டானால்
ஆளப்பாஇல்லாக் காற்காடுதோரும்
        அரூபமாயிருக்குமடா அறிந்துபாரு
நாளப்பா நாட்டினிலே ரொம்பவுண்டு
        நாடினாற்கிடைக்குமடா நலம்பெற்றோர்க்கு
வாளப்பா மலையாதே மயங்கிடாதே
        மண்டையிலேயெழுதினது பிர்மந்தானே ”
                          - அகத்தியர் கற்பமுப்பு குரு

சாகாக்கல்வியே கல்வியென்றால், நாம் கற்ற மற்ற கல்வியெல்லாம்...?

வந்தான், இருந்தான், அலைந்தான், தவித்தான்,துடித்தான், மடிந்தான் 
யாருக்கும் லாபமில்லை என மாற்றுத் திறனாளியாக வாழ்ந்த மானுடத்திற்கு, 
மாமழை போல் வந்து, மாற்றிப் பிறக்க வைக்கும் மருந்து கூறினார்கள்.
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் புகட்டிய ஆசான்கள், வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த அனுபூதி சீலர்கள்.
உயிரும் மெய்யும் இணைத்து உயிர்மெய் எழுத்து அறிவித்த இறைவன் !
பிணிமூப்பு அகலத் தாயைப் போல் மருந்துகள் சொன்னார்கள் .
இல்லாத நோய்கள் இல்லை, இவர்கள் சொல்லாத மருந்துகள் இல்லை.
இத்தனைக்கும் மேலாக மரணத்தை வெல்ல மார்க்கங்கள் காட்டினார்கள் .
என்றும் இளமைக்குக் கற்பங்கள் சொல்லித் துவளாத மேனிக்கு சக்தியை ஊட்டினார்கள் .
படுக்கையில் விழுந்து பரிதவிக்காமல் தடுத்து ஆட்கொண்ட தத்துவ சீலர்கள் !
யோகத்தைப் போதித்தார்கள், ஞானத்தை ஊட்டினார்கள் .
அறிவியலைப் புகட்டி, அதிசயங்களைக் காட்டினார்கள் .
வாழ்க்கை என்பது வாழுவதற்கே..., வீழ்வதற்கல்ல, மாள்வதற்கல்ல என்று 
ஆள்வதற்கான “ ஆதார் ” அளித்தார்கள் .
சாகாக்கலையை கற்றுக் கொடுத்ததில் இவர்களைப் போல் யாரும் இல்லை.
இறந்தவரை உயிர்ப்பித்து நிகழ்த்திய விந்தைகள் என்றளவும் நிற்கும் வரலாற்றுச் சான்றுகள்!

“ சாகாத கல்வியைத் தாங்கற்க வேணும்
வேகாத சிந்தை படைத்திட வேணும்
கோகா மியத்தைக் குறைத்திட வேணும்
ஆகாத மட்டைக் கறிவதுண்டாமோ ”

உடம்பு வெறும் எலும்பும் சதையும் அல்ல .
ஐம் பூதங்களின் மடாலயம் !
ஆறு சக்கரங்களின் சரவணப் பொய்கை !
அணுசக்தியின் திரு நடனம் !  ( Cosmic dance of Lord Siva )
அருட் பெருஞ்சோதியின் ஆதி பீடம் !
சித்தர் கைலாயத்தின் ஞான பீடம் !
மொத்தத்தில்   உடம்பு ஒரு கோவில், 
                           உள்ளே வாழ்பவன் இறைவன், 
                           அறிவே அங்கு தீபம் !
பூத பௌதீகத்தை (Cosmo physics) உலகிற்குச் சொன்னார்கள் இந்த ஞானப் பேராசிரியன்கள் !

“ தன்னுக்குள் தலமாறுங் காணவேண்டும் 
         தத்துவந்தான் றொண்ணூற்றாது மேலாறுங்காணும்
மண்ணுக்குள் நின்ற நேர்மை காணும்
        மாத்துமாவில் பஞ்சபூத மறுவஞ்சு காணும்
கண்ணுக்குள் மணிதீபஞ் சோதி காணும்
       கைலாசமுடிகாணு முயிரைக் காணும்
விண்ணுக்குள் வாதம் நின்ற நேர்மை காணும்
      விட்டகுறை தொட்டகுறை விதங்காண்பாயே ”
                                 - அகத்தியர் சௌமியசாகரம் 

குருமுகக் கல்வியும், குருமுகப் பயிற்சியுமே சித்தவியலின் சித்தாந்தக் கருப்பொருள் .
குருபக்தியும், குரு உபதேசங்களும் இந்த ஞானக்கல்வியின் பாடத்திட்டங்கள் .
குரு சீடர் இலக்கணத்தில் சற்குருவே ஞானபிதா, உபதேசமே ஞான தீட்சை .
குருவின் அருட்கதிர்வீச்சும், மௌன உபதேசங்களும் சீடர்களுக்கு வித்தைகளின் பேருண்மைகளை விளக்கிக் காட்டின, சித்தத்தினை வெல்லும் அணு சக்தியை அளித்தன.
குரு சொல்லில் காணவேண்டும் ; 
குரு சொல்லி கேட்கவேண்டும் என்பதே கலைகளின் இலக்கணம், வேதத்தின் தத்துவம்.
இக்கொள்கை சித்தநெறியில் உட்கலந்த உண்மை, ஓங்கார மெய்ப்பொருள்.
மொத்தத்தில் இந்த ஞானதீபங்களின் அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து, தெளிந்து,
அறிவுருவாய் அழியாமை அடைந்தனர் சீடர்கள் .
சீடனின் வழியில் விழியாய்,
                விழியில் ஒளியாய்,
                ஒளியில் சுடராய்,
                வித்தைக்குள் வித்தாய் நிறைந்திருப்பவர் அருள் கருவூலமான சற்குரு.

“ தொட்டல்லோ காட்டாத வித்தைபாரிற்
        தொட்டெண்ணிப் போட்டாலும் வராதுவித்தை
விட்டல்லோ தன்னாலே யாகுமென்று
        மேதினியி லிறந்தவரோ கோடாகோடி
கெட்டல்லோ ஆண்மையினால் மாயைமூடிக்
         கெருவமெனு மாங்கார யிடும்பினாலே
பட்டல்லோ கூத்தனுட வலையிற் சிக்கிப்
         பதைபதைத்தாற் கேதுகுருபதத்தைப் போற்றே ”

“ போற்றினால் வாசியுட கருவைச் சொல்வோர்
          புகழ்ந்து நின்ற வாதமெனும் பிறப்புஞ்சொல்வார்
தேத்தினால் வாமியுட பூசைசொல்வார்
          தெளிவான ஞானம் நின்ற திரத்தைச் சொல்வார்
வாழ்த்தினால் மவுனம் நின்ற வடிவுஞ்சொல்வார்
          வாகான பிரணவத்தி நிலையுஞ்சொல்வார்
ஆத்தினாற் குருவாக்கால் அறியவேணும்
          அல்லாட்டா லொன்றுமில்லை யறிந்துபாரே ”
                                           - அகத்தியர் கற்ப தீட்சை

இந்த மருத்துவ மடாதிபதிகள் கண்டது எண்ணிலா மருந்துகள், கணக்கிலா கற்பங்கள்.
நமனை வெல்லும் ஞான மருந்துகள் இவர்கள் சொன்னது தானே!
இரசவாத முப்பூவில், அறிவியலே அசந்து தானே போயிற்று !
போகரின் நவபாஷாண சிலை முன்பு இந்த விஞ்ஞான உலகம் இன்றும் 
மயங்கித்தானே கிடக்கிறது ! ஆராய்ச்சி அறிவு அங்கே என்ன ஆயிற்று ..?

“ பாடினோஞ் சுந்தரமே வைப்பு கோடி
       பரிவான வைப்புகளில் கட்டு கோடி
சாடினோஞ் சரக்குகளில் அனந்தங் கோடி
      சமர்த்தான கட்டு சுண்ணஞ் செந்தூரங் கோடி
தேடினோம் கட்டில்செய நீர்கள் கோடி
      தெளிவான திராவகத்தி லனந்தங் கோடி
மூடினோம் போடாமலத் துல க்கமாக
       முப்பூவிலுப்பு வகை கோடி தானே ”
                         - அகத்தியர் சௌமியசாகரம்

இத்தனையும் எதற்காக ..?
இவ்வளவும் யாருக்காக..?
பிணிக்கு இரையாகும் பேதைகள் நமக்காக !

இவைகளிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டது எதனால்..?
அப்படிச் சென்றதனால் நாம் அடைந்தது என்ன..?
தெருவுக்குத் தெரு மெடிக்கல் ஷாப் வந்தது தானே மிச்சம்.
“ நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் ” என ஒரு துறவி வேண்டினாரே.. ஏன்..?

தமிழ் மருத்துவம் நம் மரபணுவில் மலர்ந்து மணம் வீசும் மகரந்தம் !

எத்தனையோ சோதனைகள், அத்தனைக்கும் அறிக்கைகள்.
இத்தனைக்கும் பின்பு “ என்ன செய்கிறது ?” என்று தானே கேட்கிறார் இங்லீஷ் டாக்டர் !
தன்னையே இழந்து நிற்கும் தமிழ் இனத்திற்கு, இதெல்லாம் எங்கே புரியப்போகிறது..?
உன்னுடைய அடையாளங்கள் ஒவ்வொன்றாய் தொலைத்து விட்டு, 
இறுதியில் நீ என்ன செய்யப்போகிறாய்..?
பகலை இரவு என்று பார்க்கும் பாதகத்திற்க்குப் பகுத்தறிவுப் பட்டமா..?
கெட்டபின்பு பட்டினத்தாரைத் தேடுவதால் பயன் என்ன..? சிந்தீப்பீர்களாக...

ஏட்டில் எழுதிவைத்தேன், எழுதியதைச் சொல்லிவைத்தேன்.
கேட்பதற்கோ ஆளுமில்லை, கேள்விக்கோ விடையுமில்லை!

குரு அருளே குறையாத திருவருள் !
ஆத்மஞான மிகுந்த அநுபூதிச் சீலர்கள்
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடர் !
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவு !
அவர்கள் வருகைக்காகக் காத்திருந்து, அவர்களைச் சரணடைவோம் !
அகவிருள் அகலட்டும் !
அறிவொளி வீசட்டும் !


                                              சித்தர் பெருமக்கள் திருவடிக்கு !

                                                       தரிசனம் தொடரும்...

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html


No comments:

Post a Comment