Thursday, 30 August 2018

சித்தர்கள் தரிசனம்..! மூன்றாம் பாகம்



                                        தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                        சித்தர்கள் தரிசனம்..!
                                                      மூன்றாம் பாகம் 


                சித்தவியல் தத்துவங்கள் நம் மரபணுவில் பரவியிருக்கும் மந்திர சக்தி
இரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் இரசவாதம்.
இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் இயற்கையிலேயே நம்முள் ஓளிவிடுகின்ற ஊட்டச்சத்துக்கள்.
மேலை நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் பெருகிய போது, நம் மண்ணில் தானே 
ஞானிகள் தோன்றினார்கள்.
நியூட்டனுக்கு முன்பே Karmic theory யை உலகத்திற்குக் காட்டியது நம்முடைய 
அறமும் ஆன்மீகமும் தானே. ‘ விட்டகுறை ’தானே சித்தவியல் syllabusன் முதல் பாடம்!
டால்டனுக்கு முன்பே ( Dalton’s atomic theory )  அணுவைக் கண்டறிந்து அறிவிக்கை செய்தவர்கள் நம்முடைய சித்தர் பெருமக்கள் !
அண்டவியலின் ஆதாரத் தத்துவங்களை ஐன்ஸ்டீனால் அறிய முடிந்ததா..? ஆராய்ச்சி தானே மேற்கொண்டார்.
ஆனால் நம் போகரும், புலிப்பாணியும் அதனை மிக எளிதாய்க் கூறிவிட்டார்களே !

         பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள்! 
தோரணமலையே மருத்துவச் சிகிச்சையின் ஆதிபீடம், தமிழ் மருத்துவத்தின் தத்துவ பீடம் !
தமிழ் மருத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பதல்ல, நோக்கம் !
மரபணுவிற்கு ஒவ்வாத , அன்னிய மருத்துவத்திற்கு அடிமை ஆகி விட்டோமே என்பது தான் ஆதங்கம்.
உயிரோடு விளையாடுகிறோமே என்பது தான் வேதனை.
உன்னை இரண்டாந்தர மனிதனாக்கி வைத்திருக்கிறதே இங்லீஷ் வைத்தியம் என்பது தான் கவலை
இதனை விதி என்பதா ? இல்லை சதி என்பதா ?
தமிழும், தமிழ் மருத்துவமும் அவமானப் பொருள்கள் அல்ல, அடையாளச் சின்னங்கள் !  

         Karateயும், Kung fuவும் நம்முடைய தற்காப்புக் கலைகளின் பிரதி பிம்பம் தானே...
இந்த கலைகளின் ஆசான் யார் ..? 
நம்முடைய அகத்தியரும் , போகரும் தானே !!
தாய் தன் குழந்தைக்குப் பால் ஊட்டியதைப் போன்று ஞானத்தை மட்டும் அல்ல, வீரத்தையும் ஊட்டினார்கள், தீரத்தையும், சூரத்தையும் சேர்த்தே ஊட்டினார்கள்.
இது தானே நம் மரபணுவின் இரகசிய ஆற்றல், இரசவாத வித்தை .
இருந்தும் இவைகளிலிருந்து நம்மை தொலை தூரத்திற்குக் கடத்தி சென்றவர்கள் யார்..? எது..?
நம்முடைய தலைமுறையிலாவது நாம் விழித்துக் கொள்வோமா ...?
எல்லே ! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ ?

        உடலியல் தத்துவம் சொல்ல உடம்பை ‘ எக்ஸ்ரே எடுத்தார்கள்
உயிரின் இலக்கணம் சொல்ல உயிரையே ‘ ஸ்கேன் ’ செய்தார்கள்.
உடம்பை அறிந்திட எக்ஸ்ரே கொடுத்தார்கள்.
உயிரையே படமெடுத்து வரைபடம் தந்தார்கள் ( scan report ).
உயிரின் ஓசையே ஓங்காரம் !
அதன் அசைவே ஓங்காரக்கருப்பொருள் , பிள்ளையார் சுழி !
உயிரின் மொழியே மௌனம், உலக உயிரினங்களின் ஒரே மொழி !
ஓசை இல்லாமல் பேசும் மொழி, உருவமில்லாத தெய்வ மொழி !
உயிரின் ஊமை எழுத்தே மௌனம் எனும் தேவ பாஷை !
மௌனத்தின் இருப்பிடம் :-
                      உயிரின் உறைவிடம் ,
                      அமைதியின் பிறப்பிடம் ,
                      ஆழ்கடலின் தத்துவம் !
மௌன வித்தையின் பிறப்பிடம், பிரம்ம வித்தையின் ஆதி பீடம் !
மௌன லயம் ஆண்டவனைத் தொடர்புகொள்ளும் அலைவரிசை, antenna .
சரி.. கேபிள் கனெக்‌ஷன் யார் கொடுப்பது ..?

உயிர் என்பது யாது ? அதன் உருவம் தான் என்ன ?
மனம் என்பது என்ன
இரண்டிற்கும் உள்ள தொந்தம் , இயற்கையின் பந்தம் !
இந்த உண்மையினை உணர்த்திக் காட்டுவதே இந்த பாடல் வரிகள் .

உயிருக்கு விளக்க உரை கூறும் பாடலைக் காண்போம் :

“ அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
      அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் 
      பஞ்சமா பாதகங்கள்பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணிவ தாக்கி
      விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்டவுச்சி
      கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே
                                    - காகபுசுண்டர்

      உயிரின் மொழிதான் எது..?
மௌனம் என்றால், அது தான் என்ன ? அதன் பொருள் தான் யாது ?
சொல்லாமல் சொல்லும் சின் முத்திரை !
தன் அருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கவைத்து,
அவற்றின் உயிருக்கு உயிராய் தழைப்பது எது ?
மனம் நினைக்கிறது , வாய் பேசுகிறது,  இவற்றினை இயக்குவது எது ?
அதுவே மௌனத்தின் உருவெளி அருவெளி !
மௌனம் அறிவின் திருநடனம் !
ஆன்மாவின் சலங்கை ஒலி !
இயக்கும் நட்டுவனார் இறைவனே !

மௌனம் என்பது யாதெனக்  கேட்டேன் - அது
ஒலியின் ஒடுக்கம் என்றான் .
ஒலி என்பது யாதெனக் கேட்டேன் - அது
வெளியில் விளைவது என்றான் .
வெளி என்பது யாதெனக் கேட்டேன் - அது
உயிரின் உறை விடம் என்றான் .
உயிர் என்பது யாதெனக் கேட்டேன் - அது
மனதின் காப்பகம் என்றான் .
மனம் என்பது யாதெனக் கேட்டேன் - அது
எனது ஆடல் அரங்கம் என்றான் இறைவன் !
இறை என்பது ..? எனவும் கேட்டேன் ..
மௌனத்தின் தீட்சை என்றான் !
உயர்தரு ஞான குரு உபதேசம் !

மௌனத்திற்குப் பதவுரை சொல்லும் பாடலைக் காணுங்கள்

“ கேளப்பா அகண்டத்தில் மௌன தீஷை
கெடியான கேசரியால் காணும் காணும்
நாளப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை
நாளில்லை பாவில்லை நானென்ப தில்லை
சூளப்பா அகண்ட வெளி கோடி பானு
சுடர் கோடி காந்தியைப் போல தோற்றும் தோற்றும்
வாளப்பா யிதுவல்லோ மௌன தீஷை
மகத்தான இந்நூலே மாட்டும் பாரே
                 - அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

“ தானென்ற சாரவித்தை யார்தான் காண்பார்
     தன்மையுள்ள பூரணத்தைக் கண்டோர் காண்பார்
ஊனென்ற வுரிசைதனை யார்தான் காண்பார்
     ஊமையென்ற பொருளறிந்தோன் காண்பானப்பா
தேனென்ற மதியமுது யார்தான் காண்பார்
      திரமான மவுனியவன் காண்பானையா
மானென்ற மவுனமதையார் தான் காண்பார்
      மகத்தான யோகியவன் காண்டான் பாரே
                               - அகத்தியர் அமுதகலைஞானம் 

       ஊன் உடலுக்கு மருந்துகள் சொன்னார்கள் .
உயிர் நீட்டும் மூலிகைகள் காட்டினார்கள் .
உயிருக்கே மருந்து சொன்னார்கள் , இந்த மருத்துவ சிரோன்மணிகள்.
அதுதான் சிவ அமுது ! சிரஞ்சீவித் தேனமுது !
சிவகைலாயத்தின் சிவகங்கைத் தீர்த்தம் !
உடல் குளிர்ந்து , உயிர் கிளர்ந்து , உள்ளமெலாம் ஒளிவீசும்
அமிர்த புஷ்கரிணி ! ஆனந்தத் தேன் , ஆகாயகங்கை

இந்த ஆதி மருந்து , சோதி மருந்து , போதி மருந்தினைப் புகழாத சித்தர்களே இல்லை

“ மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப்பாயும் நெடி நாடி யூடு போய்ச்
சிலையார் பொதுவில் திருநடமாடுந்
தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே
                                              - திருமூலர்

“ ஞான மறிந்தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதையுண்டு பசியானால் - ஞானமது
கண்டாலுடல் உயிருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசமுண்
                                 - திருவள்ளுவர் ஞானம்

“ அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும் 
விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன் 
வட்டாகிச் செம்மதிப் பாலூறல்உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னைவிழுங்கி இருக்கின்றதே ”
                                                                    - பட்டினத்தார்

இந்த ஞான மருந்து எங்கே இருக்கிறது ?
இருக்கும் இடம் தான் எது ?
இது இருக்கும் இடமே அமுத சுரபி ! அட்சய பாத்திரம் !
இது நம் உள்ளே, நமக்கு உள்ளே கொலுவிருக்கும் நாத மருந்து
நாவிற்கினிய அருள் மருந்து !
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு !
அவ்வைப் பாட்டி சொல்லும் மெய்ஞானக் கரும்பு !
மனிதனைப் புனிதாக்கும் பிரணவ பீஜம் !

“ காயம் பட்டிக்கு ளத்துள்ளே வெள்ளைக்
     காயாவேரு முளைத்திருக்கும்
வாயாற் றின்று நிமிர்ந்தக் காலுடல்
     மாயா தல்லவோ - ஞானப் பெண்ணே !
                                       - ஞானக்கும்மி

“ கோவானூருப் பொட்டலிலே
     குண்டு மேனியம்மன் சந்நிதியில்
சாகா மூலி முளைத்திருக்குது அதைச்
     சார்ந்து பாரடி - ஞானப் பெண்ணே !
                                    - ஞானக்கும்மி 

“ சந்திரபுஷ்கரணி தீர்த்தமும்
சலியாத பானமும் கள்ளுதான்
சுந்தரமாகவும் பிண்டத்தில்
தோன்றுமே கண்டத்தானமே
சிந்தையாலறி சிவராஜ யோகமாம்
சித்விலாச நற்சாதனை
புந்தியோடு புரிந்ததால் சுத்தப்
புனிதனாகவும் வாழலாம் !
                    - பஞ்சரெத்தினம் 

இது மண்குடிசை யானாலும் தேடி வரும் தென்றல் .
ஏழையே ஆனாலும் ஒளி வீசுகின்ற முழு நிலவு .
காடு மலைகள் என அலைந்து அடைவதல்ல .
கோவில் குளங்கள் எனச் சுற்றிப் பெறுவதல்ல.
இருக்கும் இடத்தில் இருந்தே பெறுகின்ற வானமுது, ஞானமுது !
தேவை அதற்கானத் தகுதிகளே .
அதனைக் குருமுகமாகப் பெற்று வளர்த்துக் கொள்ளுங்கள் .
தானான தன்னறிவால் காண வேணும்; கோனான குரு சொல்லி அறிய வேணும்.
மந்திரங்கள் எல்லாம் மனதினை செம்மைப் படுத்தவே; மாங்காய் பறிப்பதற்கல்ல !
இதுவே சித்தர் பெருமக்கள் உணர்த்திக் காட்டும் உண்மை .

 பிறவாப் பேறே பெரும் பேறு !
இறவா நெறியே சித்த நெறி !
சித்த நெறியே சீர்மல்கும் சிறந்த நெறி !
இந்த அருமருந்தே  சித்தெல்லாம் செய்வித்த மருந்து !
சித்தத்தில் சிவமயமாக வாழும் மருந்து !
சிதாகாசத்தில் பாய்கின்ற தேனருவி !

“ தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
     சஞ்சார சமாதியென்பததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும் 
     உதயகிரி தனிற்சென்று
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுங்
     கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே
                                   - காகபுசுண்டர் 

       விண்ணோர்க்கும் கிட்டாத வீர மருந்து, இது மானுடத்தின் தனிச்சொத்து !
மனிதனுக்கு இறைவன் அளித்த கிரயப்பத்திரம்; உனக்கு இயற்கை எழுதி வைத்த உயில் !
இந்த சிவ அமுதத்தின் மகிமை மகத்துவங்கள் சொற்பதங்கடந்தது,
அளவீட்டிற்கு அப்பாற்பட்டது !
இக்கற்ப மருந்தால் ஞானம், செல்வம் பேறு பெற்று, பெரியர் என்று உலகோரால் போற்றப்படுவர். பெரியோர்க்கும் தெய்வமாய் விளங்குவான் எனக் கூறப்பட்டுள்ளது .

பின்வரும் செய்யுளை ஊன்றி வாசியுங்கள் :

“ வெளியாகும் கல்மலை மண்செடி பூடெல்லாம்
விளம்புவேன் மேருபோல் தங்கமாகும்
விழி யிரண்டும் பட்ட இடமெல்லாந் தானும்
ஈசனது கைலைபோல் விளங்கு மப்பா
சுளுவாக இரு வினைக்கும் அவிழ்தந் தானும்
சூட்டினேன் இக்கற்பம் நாட்டில் உளார்க்கு
வெளியாக ஞானமது வாய்க்கும் பாரு
விருப்பமுடன் பெரியோர்க்கும் தெய்வ மாவான்
                       - அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி 

“ வசனித்தோம் மவுனவுபதேசம் சொல்வார்
     வாழலாங்கோடான கோடிகாலம்
கசனித்த காயமது சிவயோகஞ் சித்தி
     கணக்கில்லா வாதசித்தி ஞானசித்தி
கெசனித்த கெவனசித்தி குளிகைசித்தி
     கேள்மகனே மவுனசித்தி கிருபையாகும்
அசனித்த ஆதாரத்தத் துவங்கள்சித்தி
     அதிகசித்தி கற்பசித்தியாகுந் தானே
                        - அகத்தியர் ஞான காவியம்

      விண்ணியல், புவியியல் , வாழ்வியல் , அறிவியல், உளவியல், மருத்துவம் , யோகம் , ஞானம் என இவர்கள் வென்று நிற்காதக் கலைகள் இல்லை , துறைகள் இல்லை
அட்டமா சித்திகள் இந்த ஞான பீடாதிபதிகளைத் தேடி வந்த வீரப்பதக்கங்கள் !
செயற்கரிய செய்யும் இந்த வித்தகச் சித்தர் பெருமக்களுக்கு இயற்கையும் ஏவல் செய்யும் !
பஞ்சபூதங்களும் பணிவிடை புரியும் !
இந்த அறிவுக் களஞ்சியங்களின் ஆற்றல் தான் என்ன ?
இவர்களின் வல்லபம் தான் யாது ?

ஞானசக்தியின் திருவிளையாடலைக் காண்போமா...!

“ செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் செய்வோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப் பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்லபங் கண்டாடாய் பாம்பே !”
                                            - பாம்பாட்டிச் சித்தர்

பாட்டளி துதைந்துவளர் கற்பகநந் நீழலைப்
       பாரினிடை வரவ ழைப்பீர்
  பதுமநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
       பணிசெயுந் தொழிலா ளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப்பீர் பிச்சை 
       கேட்டுப் பிழைப்போ ரையும் 
   கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமோர்
       கேணியிடைக் குறுக வைப்பீர்
ஓட்டினை யெடுத்தாயி ரத்தெட்டு மாற்றாக
       ஒளிவிடும் பொன்னாக் குவீர்
   உரகனு மிளைப்பாற யோகதண் டத்திலே
       உலகுசுமை யாக வருளான்
மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனன்
       மெழுகாக்கி வைப்ப தரிதோ
  வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைப்பெற்ற
       வித்தகச் சித்த கணமே
                               - தாயுமான சுவாமிகள்.

         தல விருட்சங்கள் என்பன சித்தர் பெருமக்கள் வசித்த மாளிகைகள் ஆகும் .
அந்த இடங்களிலேயே அவர்கள் சீவ சமாதி அடைந்து வாழலாயினர் .
சீவ சமாதி அடைந்த இடத்திலுள்ள மரங்களே பின்னர் தல விருட்சங்களாயின .
தல விருட்சங்கள் மருத்துவக் கருவூலங்கள் ஆகும் !
அந்த இடங்களே மக்களுக்கு அருட் பீடங்களாகி சுடரொளி வீசின !
இந்த அருட் பீடங்களின் மீதே பின்னாளில் ஆலயங்கள் எழுப்பி ஆலய வழிபாடு துவங்கின.
இந்த ஆன்ம நிலயங்களே ஆலயங்களாக மாறி ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் ஆயின !
அந்த இடங்களில் காணப்படும் அருட்கதிர் வீச்சை நேரில் தான் உணரமுடியும் !
சீவ சமாதி என்னும் பேருண்மை பின்னாளில் மறைக்கப்பட்டது எதனால் ?
உங்களின் செறிவான சிந்தனைக்கு !

பதினெண் பேர் வாழ்ந்து அடங்கிய தல விபரங்களை அறிந்து கொள்வதற்கு 
இந்த பாடலும் துணை நிற்கிறது !

“ ஆதிகா லத்திலே தில்லையில் திருமூலர் ,
        அழகர்மலை இராம தேவர் ,
   அனந்த சயனம் கும்பமுனி , திருப்பதி
        கொங்கணவர், கமலமுனி யாரூர் ,
சோதிரங்கஞ் சட்டமுனி , கருவை கருவூரார் ,
         சுந்தரா னந்தர் கூடல் ,
    சொல்லுமெட் டுக்குடியில் வான்மீக ரோடு, நற்
         றொல்காசியில் நந்தி தேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
          பழநிமலைப் போக நாதர்
     பரங்குன்ற மதில்மச்ச முனி , பேரூர் கோரக்கர் ,
          பதஞ்சலி இராமேச் சுவரம் ,
சோதிவைத் தீச்சுவரன் கோயிலில் தன்வந்திரி ,
          திகழ்ம யூரங் குதம்பைச்
     சித்தருணை யோரிடைக் காடர் சமாதியில்
          சேர்ந்தன ரெமைக் காக்கவே !
                       - வாதயோக ஞான சாத்திரம்

வெளியின்றி ஒளியில்லை
ஒளியின்றி உருவமில்லை
உருவமின்றி உட்பொருள் இல்லை
பொருளின்றி பூசனை இல்லை
பூசனையின்றி ஈசனும் இல்லை
ஈசன் இன்றி கோவிலும் இல்லை
கோவிலின்றி கோபுரம் இல்லை
கோபுரமின்றி தீர்த்தங்கள் இல்லை
தீர்த்தமின்றி தேருமில்லை, திருவிழாவும் இல்லை !
கோவிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே !
பேசும் ஈசன் மனத்துள்ளே பிரம்மஞானம் மனத்துள்ளே !

நீள வீடுகட்டி நெடுங்கதவை சாத்திவிட்டு
தெருவோரத் திண்ணையில் வாழுகின்ற மானுடம் !?

“ உதிக்கநின்றது எவ்விடம் ? ஒடுங்குகின்றது எவ்விடம் ?
  கதிக்கநின்றது எவ்விடம் ? கண்ணுரக்கம் எவ்விடம் ?
  மதிக்கநின்றது எவ்விடம் ? மதிமயக்கம் எவ்விடம் ?
  விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்கவேணுமே ”
                                                               - சிவவாக்கியர் 

“ இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல் 
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு ” - இது தானே மானுடம் வேண்டும் வரம் ..!
                         - ஶ்ரீ கிருஷ்ண கவசம் 

                                          சித்தர் பெருமக்கள் திருவடிக்கு !
       
                                                   தரிசனம் தொடரும் !

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html