தமிழ் முனிவன் தாள் பணிந்து !
உன்னை அறிந்தால்..! (Treasure Island)
உலகும் , உலகின் உயிரினங்களும்
அண்ட அகண்ட ஞான வெளியில் பிறப்புற்று
அதன் கர்ப்பத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன
என்பது அண்ட அறிவியல் உரைக்கும் பேருண்மை (Cosmic Theory).
ஐம்பூதங்களோடு ஒன்பது கோள்களின் சாற்றினைக் கலந்து,
அண்ட அணுசக்தித் திரள்களின் (Quantum Particles)
துணையுடன் இயற்கையால் வடிவமைக்கப் பட்டதே
மானுடப்படைப்பு.
மானுட வாழ்க்கை என்பது காலத்தின் கணக்கீடு;
இயற்கையின் பணித்திட்டம் .
காலக் குயவனின் மாயப் பாண்டம் !
அண்ட அதிசயங்களில் ஒன்று -
மனித மூளை இன்று வரை ஒரு புரியாப் புதிர் !
“ அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது .”
அண்டம் பிண்டத்தினுள்; பிண்டம் அண்டத்தினுள்,
என்பது ஆன்றோர் வாக்கு.
சித்தர்கள் உபதேசம் செய்த
மௌனம் என்ற பிரம்ம வித்தையே
சிவ நடனதத்துவத்தின் (Cosmic Dance)
சிதம்பர இரகசியம்.
“ வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே ?“
- பட்டினத்தார் .
பிரபஞ்ச சக்திக்கும் மனிதசக்திக்குமிடையே உள்ள
இணைப்புப் பாலமே இயற்கையின் வேதியல்.
அதனைச் சுட்டிக்காட்டுவதே சோதிடவியல்.
ஐம் பூதங்களின் குழந்தைகள் ஒன்பது கோள்கள்.
இவை ஐம்பூதங்களின் குணாதிசயங்களைக் கொண்டனவாய்
பரவெளியில் இயங்கி வருகின்றன.
இவ்வியக்கத்தின் அறிவிப்புப் பலகையே
கால அட்டவணையும், நாட்காட்டியும்.
ஐம்பூதங்களுக்கும் கிரகங்களுக்குமிடையே உள்ள
தொடர்பினைக் காண்போம் :-
கிரகம்
|
ராசிமண்டலம்
| |
மண்
|
புதன்
|
ரிஷபம், கன்னி,மகரம்
|
நீர்
|
சந்திரன், சுக்கிரன்
|
கடகம்,விருச்சிகம்,மீனம்
|
நெருப்பு
|
சுரியன், செவ்வாய்
|
மேஷம், சிம்மம், தனுசு
|
காற்று
|
குரு, சனி
|
மிதுனம், துலாம், கும்பம்
|
ஆகாயம்
|
ராகு, கேது சாயாக் கோள்கள். இவைகட்கு ராசிமண்டலத்தில்
வீடுகள் ஒதுக்கப் படவில்லை.
இயல்பில் சனியைப் போல் ராகு; செவ்வாயைப் போல் கேது
எனக் கூறுகிறது சோதிடவியல்.
கோள்களின் அடிப்படைத் தத்துவமே பின் வருமாறு
தோற்றப் பொருட்களின் பாகுபாட்டிற்கும் காரணமாய்
அமைந்த உண்மையினைக் காண்க :-
நாட்காட்டியின் ஏழு நாட்கள் ;
நிறத்தின் ஏழு தோற்றங்கள் ;
இசையின் ஏழு ஸ்வரங்கள் ;
சரீரத்தின் ஏழு தாதுக்கள் இன்னும் பிற .
ஒன்பது கோள்களின் ஆதிக்க சக்தியினால்,
நவ தான்யங்கள் , நவ மூலிகைகள்
நவ லோகங்கள் , நவ ரத்தினங்கள்
நவ லவணங்கள் , நவ பாஷாணங்கள் முதலியவற்றை
வான் வெளி படைத்துள்ளது.
மனித உடம்பிற்கும் கோள்களுக்கும் இடையேயுள்ளத்
தொடர்பினைக் காண்போம் :-
மூளை, நரம்பு மண்டலம் - குரு, புதன், சனி
எலும்புதசை மண்டலம் - சூரியன், சனி, செவ்வாய்
சுவாச மண்டலம் - புதன், குரு, சனி
இரத்த மண்டலம் - குரு, சூரியன், செவ்வாய்
ஜீரண மண்டலம் - குரு, புதன், சந்திரன்
குடல், உற்பத்தி மண்டலம் - சுக்கிரன், செவ்வாய்,
குரு, சந்திரன்.
ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமாக செவ்வாயும், சந்திரனும்
நன்கு வலுப்பெற்று அமைதல் வேண்டும் என்பது
குருமார்களின் அனுபவ சோதிடம்.
இதற்கு ஐந்தாம் இடமும் நன்கு அமைந்து ஒத்துழைக்க
வேண்டும்.
அனைத்திலும் மேலாக சந்திரனை மனக் காரகன்
என்று சோதிடம் குறிப்பிடுகிறது.
ஆன்மிக, லௌகீக வாழ்க்கை வெற்றிகளுக்கு சந்திரன்
சிறப்பாக அமைதல் மிக முக்கியம்.
இவ்வுடலில் பஞ்ச பூதங்கள்
மண் 1 1/4 பங்கும்,
நீர் 1 1/2 பங்கும்,
நெருப்பு 1 பங்கும்,
காற்று 3/4 பங்கும்,
ஆகாயம் 1/2 பங்குமாக விரவி
உள்ளடக்கப் பெற்றுள்ளன.
இந்த இருப்பளவு எப்போதும் நிலை பெறுமானால்
இறப்பு என்பதே இல்லை.
இந்த ஐம்பூதங்களும் தத்தமது அளவில் மாறுபடும்போது
பிறப்பு தோன்றுகின்றது என ஔவை தன் ஞானக்குறளில்
“ பரமாய சக்தியுட் பஞ்சமாபூதம்
தறமாறிற் றோன்றும் பிறப்பு “ என்று கூறுகிறார் .
இதனையே அகத்தியர் பின் வருமாறு உபதேசிக்கின்றார்:
“ என்னவே ஐந்து ஐந்தாய் பிரித்துப் பார்த்து
எழிலான சரக்கெல்லாம் கூட்டினாக்கால்
பன்னவே பஞ்ச பூதம் என்னலாகும்
பாருலகில் நாதாக்கள் வகுத்த வண்ணம்
துன்னவே பஞ்ச பூதம் குறைவு பட்டால்
துப்புரவாய் பேதமது வகுத்துக் காட்டும்
நன்னயமாய் பூதங்கள் பிரித்து மல்லோ
நலமுடனே நடத்துபவன் வாதி யாமே “
- அகத்தியர் பன்னீராயிரம் .
இனி மனித உடற்கூறு அமைப்பு, செயற்பாடுகட்கும்
ஐம் பூதங்களுக்கும்இடையே உள்ளத் தத்துவத் தொடர்பினைக்
காண்போம் :
நிலம் : அஸ்தி- மாமிசம், தோல், நரம்பு, உரோமம்
நீர் : வாய்நீர், மூத்திரம், வியர்வை, இரத்தம், சுக்கிலம்
நெருப்பு : பசி, தாகம், நித்திரை, சோம்பல், சங்கமம்
வாயு : படுத்தல், நடத்தல், கிடத்தல், ஓடல், தாண்டல்
ஆகாயம் : இராகம், துவேஷம், பயம், லச்சை, மோகம்
ஐம் பூதங்களும் அவைகளின் பொருளாக விளங்கும்
ஐம்புலன்களும், உரிய தேவதை மற்றும் இடுகுறியாக
அழைக்கும் அட்சரங்களும் :
நிலம்
|
பிரம்மா
|
சரீரம்
|
ந காரம்
|
நீர்
|
விஷ்ணு
|
வாய்
|
ம காரம்
|
நெருப்பு
|
உருத்திரன்
|
கண்
|
சி காரம்
|
காற்று
|
மகேசன்
|
மூக்கு
|
வ காரம்
|
ஆகாயம்
|
செவி
|
ய காரம்
|
தமிழ் மொழியின் எழுத்துக்கள் மனித உடற் கூற்றினை
விளக்கும் பெருமை வாய்ந்தன:
உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து.
நமசிவய என்ற அட்சரங்களால் உடம்பு எங்ஙனம்
கட்டமைக்கப் பட்டுள்ளது என்னும் அரிய கருத்தினை
நம் தமிழ்மொழியில் அன்றி வேறு எந்த
மொழிகளிலும் காணமுடிவதில்லை.
இந்த ஐம் பூதசக்திகள் துணை இன்றி,
அறிவு எனும் சிவனை அடைதல் அரிது.
கற்றதனலாய பயன் இந்த ஆதி அறிவினைப் பெறுவது.
அதனை அளிப்பவர் அனுபூதி நிறைந்த குரு.
“ உதித்ததோர் சனங்களுக்கும் அஞ்சு பூதம்
ஓங்கியதோர் தேவதைக்கும் அஞ்சு பூதம்
கதித்ததோர் அண்டமெல்லாம் அஞ்சு பூதம்
காரணமாம் சதாசிவமும் அஞ்சு பூதம்
புதித்ததோர் யோனியெல்லாம் அஞ்சு பூதம்
பஞ்சபூ தியத்தினால் எல்லாம் ஆச்சு
விதித்ததோர் வேடமிட்டும் உபதே சித்த
விதியெல்லாம் அஞ்செழுத்தின் வித்துமாச்சே “
- போகர் 7000 - 2ஆம் காண்டம்
ஐம்பூதங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள மனித உடம்பினை,
அண்டத்தின் அணுத்திரள்களே இறுக்கிப்பிடித்து
ஒன்றிணைத்து ஒருங்கிணைத்துக் காக்கும்
ஆற்றல் மிக்க சக்திகளாகும் (Quantum Mechanics).
இந்த அமைப் பொழுங்கினைச் சிதைத்து சீர்குலையச்
செய்வது கர்ம வினைகளின் கைப்பாவையாகிய மனம்-
அதன் அறியாமையினால்.
மனச் சலனத்தினாலும், சஞ்சலங்களினாலும்
ஐம்புலன்களில் நிகழும் நிலை தடுமாற்றம்
ஐம்பூதங்களின் விகிதாச்சார அமைப்பில்
நிலை குலைவினை விளைவிக்கின்றது .
அதன் காரணமாக சீவ அணுத்திரள்கள் தளர்ச்சியுற்று
வலுக்குன்றி சீவ சக்தியின் தேய்மானத்தால் உடம்பில்
நோய் எதிர்ப்பு சக்தி குன்றி குறைந்து போகின்றது .
அதனால் பிணி மூப்பிற்கு இரையாகி
உடம்பு மரணத்தினைத் தழுவுகின்றது .
மெய்யெனும் மேனி பொய்யாகிப் போகின்றது !
“ மனத்தொடு உறுபுத்தி ஆங்காரம்
சித்தம் அனைத்துமில்லை “
- ஔவைக் குறள் .
“ பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரை யின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே “
- திருமந்திரம்
“ உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே !”
- கொங்கணர்
உடம்பின் சீவ அணுத்திரள்கள் சிதைவுற்றதனால்
உடம்பில்உறைந்துள்ள நோய்களை அகற்றவே,
சித்தர்கள் “ முப்பூ ” எனும் காயகற்பத்தைக் கொண்டு
காயசித்தி வழியினை வகுத்து, நமக்கும் காட்டியருளினார்கள்.
“ சுக்கு சுக்கு வெள்ளைக்கல்
சுப்பிரமணியன் வெள்ளைக்கல்
காசுக்கு ரெண்டுகல்லடா
கருணைக் கிழங்கடா
மயிற்றைப் பிடுங்கடா ?”
- விளையாட்டுச் சித்தர் .
மனம் என்பது தான் என்ன ?
அது எதனால் ஆனது ?
அதன் தோற்றம் கட்டமைப்பு என்ன ?
அதன் இருப்பிடம் எது ?
யாரிடம் கேட்பது ? யார் பதில் சொல்வது ?
“ கண்டிட்ட மனத்தாலே தவமும் ஆச்சு
கவர்ந்த உயிர் ஆவதுவும் மனமே ஆச்சு
மண்டிட்ட வாயுமேல் மனமும் ஆச்சு
மகத்தான சஞ்சலத்தால் மனம்பேய் ஆச்சு
அண்டிட்ட தீப்போல மனந்தான்சென்றே
அகண்டத்தில் சென்றதென்றால் அதுதான்போதம்
மன்றிட்ட மனம் விட்டால் ஞானம் போச்சு
வாசியைத்தான் நழுவவிட்டால் யோகம்போச்சு “
- போகர் 7000 - 1ஆம் காண்டம்
மனம் ஒரு மாயப் பெட்டகம்; மர்மலாக்கர்.
ஜென்மாந்திர வினைகளின் சேமிப்புக் கிடங்கு.
காலக் கணக்காயனின் ஐந்தொகைக் கணக்குப் பேரேடு.
அண்டப் பெருவெளியில் மனிதனால் கட்டமைக்கப்பட்ட தீவு.
புதிரான மனத்தினை ஒரு புதிய மனங்கொண்டு ஆராய்வோம்.
சொர்க்கமும் நரகமும் மனம் வசமே .
சொர்க்கத்தினை நரகமாக மாற்றுவதும்,
நரகத்தினை சொர்க்கமாக மாற்றுவதும்
மனதின் மாயாஜாலம்.
மனிதன் நோயுறுவதும் ஆரோக்கியமாக வாழ்வதும்
மனத்தினால் தான்; மனமே காரணம்.
ஏனெனில் ஸ்தூல உடம்பிற்கும் சூக்கும மனத்திற்கும்
தொந்தமான தொடர்பு உண்டு .
மனிதனை இயக்குவதும் இயங்கவைப்பதும்
மனமெனும் மந்திர சக்தியே ஆகும்.
பயமும், கலக்கமும், மயக்கமுமே இதன் குணங்கள்-
வினைப் பயன் காரணமாக.
சிறிய நோயினையும் விபரீதமாகச்
சிந்தித்துப் பெரிய நோயாக்குவதும்;
பெரிய நோயினையும் தீருமெனச்
சிந்தித்து அற்பமாக்குவதும்
மனதின் விளையாட்டே !
மனக்கவலையே பிணி, மூப்பு, மரணத்திற்குக் காரணம்.
நம்பிக்கையே சர்வ ரோக நிவாரணி !
மெய்யறிவினால் மட்டுமே மனம் வசப்படும்.
அப்போது மனம் சிவமோனத்தில் லயிக்கிறது.
அதனால் ஜீவ அணுக்கள் தெய்வீகத்
தன்மையடைகின்றது !
மனிதன் எண்ணிய எண்ணியாங்கு
எய்தும் திண்ணியராகின்றான்.
மெய் ஞானம் அடையப் பெற்றவனுக்கு
இறப்பில்லை,பிறப்புமில்லையென்று ஞானிகளாகிய
சித்தர் பெருமக்கள் சொல்கின்றனர்
“ என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே “
- சிவவாக்கியர்
தியானம் என்பது என்ன ? சற்றே தியானிப்போம்.
நடைமுறையில் தியானத்தில் நிகழ்வது என்ன?
உற்று நோக்குக.
தியான முயற்சியில் மூன்று பிரிவுகள் (divisions) விளைகின்றன.
அவை தியானிப்பவர், தியானிக்கும் செயல்,
மற்றும் தியானிக்கப் படுகின்ற பொருளாகும்.
மனத்தின் பிரிவுகள் மனிதனின் சிதைவுகள்,
என்பதை மறக்காதீர்.
இந்த பிரிவுகளுக்கு இடையே போட்டி, அடக்குமுறை,
மோதல், வன்முறை, கலவரம்.
இம்மும்முனைப் போட்டியில் இறுதியில் தோற்பது
என்னவோ தியானந்தான் - என்பதை உணர்வீர்களாக.
யார் யாருடன் போட்டி போடுவது ?
யார் யாரை அடக்குவது ?
தியானம் என்பது போட்டியும், அடக்குமுறையும்
நிகழ்கின்ற கலவரச் செயல் அல்ல!
அடக்குமுறை கையாள்வதற்கு இது என்ன
வன்முறையா ? போராட்டமா?
ஏன் இந்த அறியாமை?
தியானம் -
அது அருவியில் போடுகின்ற ஒரு ஆனந்தக் குளியல்!
ஆற்றில் மகிழ்ந்து நீந்துகின்ற நீச்சல் !
ஆனால் இதனைக் கலவரக் களமாக மாற்றுவது யார்?
அடக்குமுறையினை நடத்துவது யார்?
யார் மீது ? என்பதை என்றேனும் சிந்தித்ததுண்டா?
விளைவு விரக்தியும், ஏமாற்றமும் தானே !
விரக்தியும் ஏமாற்றமுமே விடையானால்
அது கணக்கின் பிழையன்று.
செய்பவனின் தவறேயன்றி வேறு யாது ?
மனித மனம் மயங்குகின்றது .
தவறுக்குத் துணிந்தவன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே!
ஐம்பூதங்களின் கட்டமைப்பில் விளைகின்ற கணக்குப் பிழையே,
மனித உடம்பின் கழுபிணி, வயோதிக மூப்பு, இறுதியில் காலனின்
அழைப்பிற்குக் காரணங்கள் என்பதனை முன்னர் கண்டோம்.
அவ்வாறாயின் அண்ட அணுசக்திக்கு இணையான
மனித உடம்பின் சீவ அணுதிரள்களும் அவற்றின் அளப்பரிய
ஆற்றலும் என்னவாயிற்று ? அதற்கும்
அவற்றின் கொள்ளிடமான மனக் கோட்டமே
இதற்கான காரணகர்த்தா.
அறியாமையினாலும், ஆழ்ந்து தெளியாமையினாலும்,
மனமானது கர்மவினைகளிடம் அடமானப்பொருளாகவும்,
கோள்களின் கையில் சதுரங்கக் காய்களாகவும்
காட்சியளிக்கின்றன.
இவற்றின் பிடியிலிருந்து மனம் பெறுகின்ற விடுதலையே
மனித வாழ்க்கையின் மெய்யான சுதந்திரப்போர்!
“ உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய் தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா
ஒத்திருந்து வாழேனோ “
- அழுகணி சித்தர்
மனப் பேரேட்டில் 24 மணிநேரமும் எண்ணங்களின் பதிவுகள்
இடைவிடாது எழுதப்பட்டு வருகின்றன.
இந்த இருப்புக்கணக்கில் வட்டியும் முதலும்,
அதற்கான கூட்டு வட்டியும் நாளுக்கு நாள் திரண்டு
கூடிக் கொண்டே போகின்றது.
அதன் இறுதியிருப்புகள், தொடரும் பிறப்புகளுக்குத்
துவக்கயிருப்புகளாக எடுத்து எழுதப்படுகின்றன
(Closing balance carried over).
இவ்விருப்புக் கணக்குகளின்
பதிவுகள் எழுதப்படுகின்ற வரை
மனதில் அமைதி என்பது கானல் நீரே;
நிம்மதியென்பது எட்டாக்கனியே !
வாய் பேசுவதை நிறுத்தலாம்;
மனம் பேசுவதை (Non stop chattering)
யாரால் நிறுத்தமுடியும் ?
மனத்திரையில் இடைவேளையின்றி ஓடுகின்ற
காட்சிகள், உருவங்கள், சத்தங்கள், பாடல்கள்,
உரையாடல்கள், கருத்தரங்கம், கவியரங்கம்
இவைகளை எவ்வாறு ‘mute’ ஆக்குவது ?
மனம் அமைதியின்றி தவிப்பதற்கும்,
அமைதியின்மையினால் உடம்பின் சீவ அணுக்கள்
தளர்ந்து பலமிழந்து வலுக்குன்றுவதற்கும்,
அளப்பரிய மனித ஆற்றல் வற்றி வறண்டு போவதற்கும்
இவை தானே காரணங்கள்...
என்பதனைச் சற்று நிதானித்து உணர்வீர்களாக.
மனம் அமைதி பெறுவது எங்ஙனம் ?
அமைதியெனும் அருமருந்து அருந்துவது எங்ஙனம் ?
இதனைத் தொலைத்த இடத்தில் தானே தேடமுடியும்...
அது தான் வழி !
அதுதான் மெய்க்கல்வி - தன்னையறிந்திடும் தவக்கல்வி !
அறிவும் தெளிவும் வந்த பின் ஞானம் கூடும் .
அந்த ஞானத்திலே அமைதி பிறக்கும் .
வாழ்க்கைப் பட்டரையில் தன்னை அறிதலே
தலையான அறிதலாகும்.
தன்னை உணர்தலே தலைசிறந்த பயிற்சியாகும் !
அதில் தான் முன்னை வினையின்
முடிச்சு அவிழ்க்கப்படும் .
முன்னை வினையின் முதலிருப்பு (capital balance)
தெரியவரும்.
வாழ்க்கைப்பயணத்தில் உடல் ரீதியாக
மன ரீதியாக நிகழும் ஒவ்வொரு
அசைவினையும் உற்றுநோக்கு !
அதில்தான் உள்ளே புதைந்து கிடக்கும்
ரகசியங்கள் வெளியே வரும்.
உன்னை ஒவ்வொரு நொடியிலும் ஆட்சி செய்வது,
ஆட்டிப்படைத்து எது என்பது ஓரளவிற்குத் தெரியவரும்.
மனதின் வானிலை விபரங்களை அறிந்து கொள்ளலாம்!
இதனையே “ பசித்திரு ; தனித்திரு ; விழித்திரு “
என வள்ளலார் வலியுறுத்துகின்றார்.
தன்னையறிதல் ஒரு தெய்வீகக்கலை.
அமைதியினை ஆகர்ஷணம் செய்யும் விசைசக்தி.
அருட் பெருஞ் ஜோதியினைக் காட்டும்
தனிப்பெரும் தத்துவம்.
“ தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே .”
- திருமந்திரம்
“ நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே .”
- வள்ளலார்
சரியை என்பது தேடவேண்டுமென்று எண்ணுவது.
கிரியை என்பது தேடுவது .
யோகம் என்பது கிட்டியதை எடுப்பது .
ஞானம் என்பது எடுத்ததை அனுபவிப்பது.
தன்னை அறியும் தவத்தில் தன்னை அறிந்து,
அடிமுடி அறியவொண்ணாத் தன் தலைவனை
அறிதலே தவச்சீர்வரம் .
உலக வரலாற்றில் ஹிட்லர், நெப்போலியன் வீழ்ச்சி
தன்னையறியாத் தவறு .
காந்தி அடிகள் வென்றது - தன்னையறிந்த பேறு!
ஆங்கிலப் பேரரசை அடிபணிய வைத்த
இரசவாத வித்தை அல்லவா !
தன்னை உணர்ந்து கொண்டவன் பிறரிடம்
கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம்
என்ன இருக்கிறது ? என்று கூறுகிறது
அர்த்தமுள்ள இந்துமதம்.
“ தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம் “
- ஔவை குறள்
பின் வரும் திரைப்படப் பாடலைப் பாடி மகிழுங்கள்..
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
- கண்ணதாசன்
மனித உடலமைப்புத் தத்துவத்தில்,
அண்ட அணுசக்தியின்
தத்துவ ஞான பீடத்தினைத்
தொட்டுக்காட்டும் குரு வேண்டும்.
அவரே மௌன வித்தையினைப் புகட்டுகின்ற பேராசிரியன்!
அவர் அமைதியினை அருளுகின்ற அணு உலை !
குருவருளால் பெறுகின்ற அமைதிக் கதிர் வீச்சு
உடம்பின் அணுத்திரள்களை உயிர்ப்பித்து
வலுவூட்டுகின்ற ஊட்டசக்தி ;
அவைகள் சிதைவுறாமல் தடுக்கின்ற
வீரக்கட்டு.. பூரக்கட்டு..!
அதுவே திருமூலநாயனாரும் மாணிக்க வாசகரும்
கூறிய “ உறுபொருள் ”!
“ அங்கையிற் கண்ணாடிபோல ஆகி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படம் எடுத்து ஆடு பாம்பே “
- பாம்பாட்டிச் சித்தர்
மனிதனுடைய பகுத்தறிவு தெய்வத்தை நேரில்
காணவே விரும்புகின்றது.
அதுவே அவனுக்கு அறிவியல் நிரூபணம்-Scientific proof.
அந்த விருப்பங்கள் பூர்த்தியே மகான்கள் -
மனித உருவில் தெய்வங்கள்.
அந்தத் தெய்வம் அவன் குறையைத் தீர்க்கிறதோ இல்லையோ,
காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது -
வேறெங்கும் கிடைக்காத நிம்மதி .
நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம் !
“ ஆசானைக் கண்டபேர்க்கும் ஞானப்பேர்க்கும்
அப்போதே யோகத்துக் கருளுண்டாகும்
பேசாதே மௌனமென்ற பிரம்மவித்தை
பிடரிவழிகண் திறந்து பிரகாசிக்கும்
பூசார வஸ்துவுப்பு வன்னிபீசம்
புதைத்த லிடந்தனைக்காட்டப் பொருளுஞ்சேரும்
கேசாதி பாதமுதல் நடுவுந்தோறும்
கெவுனமென்ற குளிகையடா கிடைக்கும்பாரே “
- பதஞ்சலி வாத சூத்திரம்
தாயின் கர்பத்தினுள் மனித உடம்பின்
உறுப்புகளை ஒழுங்கமைப்பு செய்து ,
வடிவமைப்பு செய்திடும் (assembling unit)
சக்தி எது ?
அனைத்து உறுப்புகளையும் கர்பப்பையினுள்
இருப்பு வைத்தது எது ?
அவ்வாறாயின் ஒரு தாய்க்கு வாய்த்த பேறு
இன்னொரு தாய்க்கு ஏன் வாய்ப்பதில்லை?
ஐம்பூதங்களால் கட்டமைந்த உடம்பினைக்
காயசுத்தி செய்து மெழுகாக்கி,
அருள் வெளியினில் ஐம்பூதங்களோடு
கரைத்து(dissolve) மறைந்திடும் சித்து விளையாட்டின்
தத்துவம் எது ? (சமீபத்தில் திருவண்ணமாலையில்
நிகழ்ந்தது நினைவிற்கு.)
தாயின் ஒரே பிரசவத்தில்
ஒரே நேரத்தில் (10 நிமிட இடைவெளியில்)
பிறக்கும் குழந்தைகள் மாறுபட்டு வெவ்வேறாய்
பிறப்பது எதனால் ?
சில குழந்தைகள் பிறக்கும் போதே
நோயுடன் பிறப்பதின் காரணம் ?
பிறந்த குழந்தையினிடத்தில் என்ன
கெட்ட பழக்கங்கள் இருக்கமுடியும் ?
துறவிகளான பரமஹம்சருக்கும்,
திருவண்ணாமலை ரமண மகரிஷி,
விசிறி சமியாருக்கும் கடுமையான
நோய் பாதிப்பு எதனால் ஏற்பட்டது ?
இயற்கையில் இவை போன்று விடைதேடும் வினாக்கள்
ஏராளம் ஏராளம்..
இவற்றுக்கு விடை தேட முயன்றதே
அறிவியலும், ஆன்மீகமும் .
ஆய்ந்து அறிந்ததை உரைத்தது அறிவியல்;
உணர்ந்து தெளிந்ததை உபதேசித்தது ஆன்மீகம் !
அவ்விதம் விடை காணும் ஒரு சிறிய முயற்சியே
இச் சிந்தனைமலர் .
அண்டவியலை ஆராய்வது நோக்கமல்ல
அண்டவெளிக்கும் மனிதனுக்கும் உள்ள
தொடர்பினைக் காட்டுவது .
நன்று ! இதனை வாசிப்பவர்கள் மெய்யறிவினைப் பெற்று
மெய்ப்பொருளினை அறிந்திட வாழ்த்துக்கள் !
சித்தர்கள் திருவடிக்கு !!
“ தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில்
இனிப் பிறப்பு இல்லையென்று ஆடுபாம்பே “
- பாம்பாட்டிச் சித்தர்
“ ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே .”
- பட்டினத்தார்
இந்த உபதேசம் தினசரி சிந்தனைக்கு !
“ எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் “
- கண்ணதாசன்
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
சிறந்த பாடம்
ReplyDelete