தமிழ் முனிவன் தாள் பணிந்து !
குருவாய்.. வருவாய்..! ( Cosmic Lantern! )
அகர முதலாய், ஆதிபிரம்மமாகி, நாதவிந்து அதிபனான
வேத மந்திர சொரூபமே சொற்பதங் கடந்த சற்குருவானவர்.
ஆதி அந்தமில்லா ஞான ஒளியானவர்.
அரிஓம் நன்றாக குரு வாழ்க, குருவே துணை
என்பதே நம் முன்னோரின் அரிச்சுவடித் தொடக்கம்.
“ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ - ஔவை .
‘ குருவாய் வருவாய் ‘ என ஆறுமுகனை
அழைக்கிறார் அருணகிரிநாதர்.
‘ குருமணிதன் தாள் வாழ்க ‘ எனத்
தொழுது பாடுகிறார் மாணிக்கவாசகர்.
ஐம்பூதங்களில் வாயு மண்டல அதிபதி குரு.
ஒன்பது கோள்களில் ஞானகாரகன் என வணங்கப் படுபவர்.
ராசி மண்டலத்தில் தனுசு, மீனம் ராசிகளுக்கு அதிபதி.
குருபகவானுடைய ஸ்தலம் திருச்செந்தூர் .
விருட்சம் அரசமரம் .
பிரம்மாவும் தட்சிணாமூர்த்தியும் அதி தேவதைகள்.
உச்சமாகி தனது சொந்த வீட்டையே பார்க்கும் சிறப்பு
கொண்டவர்.
குரு உடலியக்கத்தின் ஞான பீடாதிபதி;
ஐந்தெழுத்தும் ஓரெழுத்தானவர்.
தன் பார்வையால் அகவிருள் அகற்றி,
அறிவொளி வீசுபவர்.
மானுட வாழ்க்கையில் புத்தி, புத்திரம்,
பூர்வபுண்ணியம், இறையருள் -
இவற்றுக்கெல்லாம் அதிபதியானவர்.
மனித உடற்கூறு அமைப்பில் மூளை, சுவாசம்,
இருதயம் மற்றும் ஜீரண மண்டலங்களை
ஆட்சி செலுத்துபவர்.
குருவைத் தேடுவதே நாடுவதே
ஆன்மீகமும், லௌகீகமும் -
ஏன் அறிவியல் அறிவும் கூட அதைத்தான்
மறைவாகச் செய்கிறது.
ஏனெனில் தொட்டுக்காட்டா வித்தை
சுட்டுப்போட்டாலும் வராது;
குருவில்லா வித்தை பாழ்.
அர்சுனன் வென்றதற்கும் கர்ணன் தோற்றதற்கும் காரணம்-
அவரவர்க்கு அமைந்த தேரோட்டிகளே !
மானசீக குருவினால் மாபெரும் வீரன் ஆனான் ஏகலைவன்.
குருவோடு காட்டிற்கு சென்ற ராமன்
தாடகை வாதம் செய்து,
அகலிகைக்கு வாழ்வளித்து, சாதனைகள் புரிந்து
பெருமையோடு திரும்பினான்;
குடும்பத்தோடு காட்டிற்கு சென்றவர் சிக்கல்களில் சிக்கி
இன்னல்களை அனுபவித்தார் என்பது
ராமாயணம் புகட்டுகின்ற பாடம் !
ஜென்மாந்திரத் தேடலின் பயனாக, தகுதிகள் நிரம்பித்
தயாராய் நிற்கும் போது இறைவனால் அருளப்படுகின்ற
வரமே குரு, குருவெனும் திருவருள் !
விவேகானந்தனுக்கு பரமஹம்சர் வாய்த்ததும்
மாணிக்கவாசகருக்கு, தாயுமான சுவாமிகளுக்கு
குரு வாய்த்ததும் அவ்விதமென வரலாறு கூறுகிறது.
ஆனால் இதனினும் பெரிய பேறு ஓளவைக்கு ஐங்கரனும்,
அருணகிரிநாதருக்கு ஆறுமுகனே குருவாய் வந்து
அருளால் ஆட்கொண்டது -
இது பெரிதினும் பெரிய வரம்; அரிதினும் அரிய காட்சி !
ஆன்மீகமோ லௌகீகமோ, அறிவியலோ வாழ்வியலோ,
அரும் பெரும் சாதனைகளுக்குப் பின்னால் நிலவி நிற்கும்
உட்பொருள் உறுபொருள் சற்குருவின் திருவருளே !
அதுவே அண்டத்தின் அணு இயக்கத்தினை ஆளுகின்ற
Atomic reactor; அதன் விசைச்சக்தியினை முடுக்கி
விடுகின்ற cyclotron.
மொத்தத்தில் குரு ஒரு Quantum Mechanics -
(இயற்பியலின் நவீன அண்மைக் கண்டு பிடிப்பு )!
“ பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே ”.
“ திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே “
- அகத்தியர் பரிபூரணம் .
“ மொழியின் முட்டறுத்து வீடு பெறுதல் ” என்பதனைக்
குறிக்கோளாகக் கொள்ள வேண்டிய மானுட வாழ்வில்
மெய்ப்பொருள் அறிந்திடும் மெய்யறிவினைப் புகட்டுவதே
குருகுலத்தத்துவம் .
உலகில் எக்கலையினைக் கற்பதற்கும் அதற்கான
அடிப்படைத் தகுதி பரவெளி பற்றிய அறிவு.
குரு சீடர் பரம்பரையின் நேர்முகப் பயிற்றுவித்தலும்,
பயிற்சியும் சித்தவியல் தத்துவத்தின் அடிநாதம்,
ஓரெழுத்து மந்திரம் !
உலகப் புகழ் பெற்ற மேலை நாட்டு விஞ்ஞானிகளாகிய
கேரல், அக்ஸ்லி போன்றோர் நம் நாட்டுக் கலைகளின்
அமைப்பொழுங்கினைக் கண்டு வியந்ததோடு நிற்காமல்
மேலைநாட்டுக் கலைகளையும் இந்த தத்துவ அடிப்படையில்
அமைக்கலாமென்று பரிந்துரை செய்துள்ளனர்.
ஆதிசிவன் காலந்தொட்டு இந்த குருசீடர் பரம்பரைத்
தத்துவமே, நம் நாட்டில் சித்தவியல் வளர்ச்சிக்கு
அருந்துணையாகவும் பெருந்துணையாகவும் இருந்து
வந்துள்ளது .
சித்தவியல் தேருக்கு இதுவே அச்சாணி !
சித்தத் தத்துவக் கலைகள் அனைத்தும்
ஆதி முதல் சித்தனாகிய சிவபெருமானால்
குருமுக வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு
உபதேசிக்கப்பட்டவையாகும் .
“ சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல “
குரு பரம்பரைத் தத்துவமும் குருமுக உபதேசமுமே
சித்தவியலின் ஓரெழுத்து மந்திரம்; ஓங்கார சொரூபம் .
“ சொல்லிடவே தேவிக்குச் சதாசி வன்றான்
சொல்லவே தேவியும்நந் திக்குச் சொல்ல
நல்லிடவே நந்திதன் வந்தரிக்குச் சொல்ல
நயமுடன் தன்வந்தரி யசுவனிக்குச் சொல்ல
அல்லிடவே யசுவனியாந் தேவர் தாமும்
அகத்தியர்க் குரைத்திடவே யம்மு னீந்திரன்
புல்லிடவே புலத்தியர்க் குபதே சிக்க
புலத்தியரும் தேரையர்க்குப் புகன்றிட் டாரே ”
- யூகி முனி வைத்திய சிந்தாமணி
சுக்கைப் போல் மருந்தில்லை;
சுப்பிரமணியரைப்போல் தெய்வமில்லை.
ஆதி முதல் சித்தனான சிவபெருமானே
முருகனிடம் உபதேசம் பெற்றதாகப்
புராணங்கள் கூறுகின்றன.
இதன் உட்பொருள் என்ன?
ஆதியை அறிந்த ஞான சொரூபமான குருவே
முதல் ஞானாசிரியன் எனும் தத்துவப் பேருண்மை
இதில் உணர்த்தப் படுகின்றது.
குரு-சீட இலக்கணங்கள் சேர்த்தே காட்டப் படுகிறது !
அறிவுடையவரை அறிவே விழுங்கி
தன்மயமாக்கி விடுகிறது எனும்
சித்தவியல் தத்துவம் அன்றோ !
சித்தத்தை சிவன் பால் வைத்து சித்தி பெற்ற
ஞானிகளே சித்தர் பெருமக்கள் .
அரூப அருள் வெளியில் நாதாந்த ஒளியாய்
நிற்பவர்கள்.
அவர்களுள் சிலர் உலகிற்கு வழிகாட்டிகளாக
விளங்குகின்றனர் .
அவர் வழியே உலகவியக்கம் .
இவர் சார்ந்த ஒரு தனித் திருக்கூட்டம்
இமயத்தின் முடியில் வீற்றிருக்கின்றது .
அது தான் இராப் பகல் அற்ற கயிலாயம்.
பூமண்டலத்தில் இமயமலையின் நடுவேயுள்ள
கயிலாயம் (Mount Kailash) வேறு என்பதை
அறிவீர்களாக .
மெய்கயிலாயம் என்பது சிரமெனும் குகையிலே
உள்ள சிவகயிலாயம் !
இது நுண்ணறிவினால் மட்டும் உணரக்கூடிய
நுண்ணியது (Microcosm) .
சிவநீரை உண்டு மரணமில்லாப் பெருவாழ்வு
பெற்றவர்களே சித்தர் பெருமக்கள் .
இவ்விதம் நமனை வென்ற ஞான சித்தர்கள்
ஐம்பூதங்களின் இயக்கத்தினை வென்று,
கோள்களின் கோளாறுகட்கும் அப்பாற்பட்டவர்கள்.
தெளிந்தவன் தானே தெரியாதவனுக்கு
வழி காட்டமுடியும் .
சித்த நெறி தேர்ந்த மகான்கள் பலர் நம்மிடையே
பூத உடலோடு உலாவி வருகின்றனர்.
அவர்கள் யாவரும் வெவ்வேறு நிலைகளில்
காணப்படுகின்றனர்.
இவர்கள் மந்திரத்தில் மாங்காயும்
தந்திரத்தில் விபூதி குங்குமம் வரவழைக்கும்
மாய ஜால வித்தைகள் காட்டுபவரல்ல .
தன்னை மறைத்து வாழும் மகாபுருஷர்கள்.
பலர் பேசுவதில்லை; சிலர் பேசுவர்.
ஆனால் அது நமக்கு புரிவதில்லை.
அவர்களின் தரிசனமே நமக்கும் நல்ல பலனளிக்கும்.
அவர்களிடமிருந்து வெளிவரும் அருட்கதிர் வீச்சு
நம் உடம்பிற்கும் உள்ளத்திற்கும் மாமருந்து .
“ திண்ணமாய் மெய்ஞ் ஞானி மார்க்கம் சொல்வேன்
திறமுடனே நாதாக்கள் தம்மைப் போல
வண்ணமுடன் சகல நூல் எல்லாம் கற்று
வளமுடனே மாயா சம்பந்தம் நீக்கி
வண்ணமுடன் தொல்லை சாகரத்தை விட்டு
எழிலான சின்மயத்தின் சோதி கண்டு
நண்ணமுடன் ஞான சாகரத்தின் நேர்மை
நாட்டமுடன் தானறிந்து நவில்வார் தாமே .“
“ நவிலவே வெகு நூல்கள் பார்த்துமே தான்
நலமான தத்துவத்தின் நேர்மை பூண்டு
குவியவே ஞான சாகரத்தைக் கண்டு
குவலயத்தில் பாசமென்ற கயிற்றை நீக்கி
தனிமையுடன் பெரியோர்கள் ரிஷிகள் தேவர்
தகமையுடன் கண்டறிந்து கேள்வி கேட்டு
புவியதனில் காயாதி கற்பம் உண்டு
பூ தலத்தில் என்னாளும் இருந்தார் தாமே .”
- அகத்தியர் பன்னீராயிரம்
தீட்சை மூவகைப்படும் அவை:
காணும் தீட்சை, நினையும் தீட்சை,
தீண்டும் தீட்சை என்பனவாம்.
மீன் முட்டைகளை இட்டுக்கொண்டே
நீரில் நீந்திச் செல்லும்.
எல்லா முட்டைகளையும் இட்டானபின்
தான் இட்ட முட்டைகளைத் திரும்பிப்பார்த்த அளவில்
அவை குஞ்சுகளாகிவிடும்.
இதுவே காணும் தீட்சையாகும்.
ஆமை தன் முட்டைகளைக் கரையில் வைத்துவிட்டு
குளத்தில் உலாவிக் கொண்டு இருக்கும்.
தான் இட்ட முட்டைகளை நினைத்த மாத்திரத்தில்
அம்முட்டைகள் குஞ்சுகளாக வெளிப்படும்.
அதே போன்று குரு தம் சீடனுக்கு நினைப்பாற்றல்
மூலமாக தீட்சை அளிப்பது.
இது நினைப்பு தீட்சையாகும்.
கோழி முட்டையிட்ட பின், தானே அதன் மேல்
உட்கார்ந்து சூடு படுத்திக் குஞ்சு பொறிக்கச்
செய்கிறது.
இதனை அடைகாத்தல் என்பர்.
இவ்வாறே குரு சீடனைத் தம் கையால்
தொட்டு உணர்த்துவது.
இது தீண்டும் தீட்சை எனக் கூறப்படும்.
இதனை உபதேசம் எனவும் கூறுவர் .
சிலர் காடுகள் மலைகளில் வாழ்ந்து வருபவர்கள்.
சிலர் நம்மிடையே சாதாரண மனிதர்களைப் போல்
உலாவிக் கொண்டிருப்பர் .
அவர்கள் எல்லோருடைய கண்களிலும் படுவதில்லை.
பலர் கடலினுள்ளும், பூமியினுள்ளும்
வாழ்ந்து வருகின்றனர்.
ஐம்பூதங்களை வயப்படுத்திய இவர்கள்
நெருப்பின் மத்தியிலும் இருப்பர்.
நெருப்பு அவர்களைச் சுடாது.
அதேபோன்று காற்று நீரும் அவர்களுக்கு அவசியமில்லை.
சிலர் ஆகாயமார்கத்திலும் உலாவிக் கொண்டிருப்பர்.
தன்னையறியும் தெய்வீகக் கலையினால் மட்டுமே
சித்தர்களின் அருட்காட்சியினைப் பெறமுடியும்.
தன்னை அறிவதே தலைவனை அறிவதாம் .
இவர்களில் ஒருவகை தன்னைப் போன்று
பிறரையும் மேலேற்ற விழைபவர்கள் .
அதற்கென எவ்வித பலனையும் எதிர்பாரார்.
சாதாரண மனிதர்களைப் போல் காணப்பட்டாலும்
சதா சிவமோனத்திலேயே மூழ்கித்திழைத்திருப்பர்.
இன்னொரு வகை தானாக உலக விவகாரங்களில்
ஈடுபடுவதில்லை.
யாரவது கொடுத்தால் உண்பதுண்டு.
ஆனால் கேட்பதில்லை.
அலை ஓய்ந்த கடல் போன்று எப்போதும்
சிவயோக நிலையிலேயே நிலைத்திருப்பர்.
பிறிதொருவகை சிவநீர் அமுதத்தை
அருந்திய வண்ணம் சிவமந்திர சொரூபமாக
சிவமுற்றாகவே காணப்படுவர் .
சித்தர்கள் பலவிதம்; ஒவ்வொருவர் ஒரு விதம் !
விட்டகுறை வாய்த்தால் மட்டுமே சித்தகுரு
சிவகுருவாய் சற்குருவாய் கிடைப்பார்.
தன்னையறியும் தவத்தில், இவர் தெய்வத்தால்
காட்டப்படுகின்ற தத்துவஞானி.
இவரது தரிசனம் பாவங்களைப் போக்கும்;
கர்மவினைகளை அகற்றும்; மரணமில்லாப் பெருவாழ்விற்கு
நம்மை உய்ப்பித்து உயர்த்தும்.
சிரத்தில் சீவிக்கும் சிரஞ்சீவியாக்கும்!
மெய்ஞான சற்குருவின் காட்சியிலேயே
மனம் கட்டுண்டு, பேரானந்த அமைதியில்
மூழ்கத் தொடங்கிவிடும் .
அவரே உன்னை அறிவித்து உனக்கு அருள் செய்து
தத்துவ நிலையினைத் தந்து உன்னை ஆள்கின்ற
வித்தகர் என்பதை அறிந்துகொள்.
அவரது விரைகழல் சரண் எல்லையில்லா
ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து
அருள் வழி காட்டும் !
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டும் ;
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டும் !
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டும் -
மெய்ஞான கரும்பு !
உன்னை உயர்த்தி உய்விக்கவல்ல
அருமருந்து; குருமருந்து !
மகான்களுடைய காட்சியும் அவர்களுடைய தொடர்பும்
கிடைக்கப் பெறுதல் அரிய பேறு, பெரிய வரம் !
நம்மிடையே நம் கண்முன்னே வாழ்ந்த
சில சித்த புருஷர்களே
கன்னியாகுமரியின் கடலோரம் வாழ்ந்த மாயம்மா
புரவிபாளையத்தில் வாழ்ந்த கோடி சாமி
பூண்டி மகான், கசவனம்பட்டி சுவாமிகள்...
இன்னும் பலர்... எத்தனையோ பேர்.
இவர்களைப்பற்றிய எந்த வரலாற்றுத் தகவலும்
யாருக்கும் தெரியாது.
இவர்களுடைய பெயர், ஊர் விபரங்கள்
எதுவும் கிடையாது .
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாணி,
வாழ்க்கை முறை !
யோகமற்றவனுக்கு புத்தி தன்னுள் நிலையாது
என்கிறது கீதை .
சித்த புருஷர்களின் தரிசனம் மற்றும்
அவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்கள்,
மிகப் பெரிய பொக்கிஷங்கள், வாழ்க்கையின்
கண்ணுக்குப் புலப்படா அரிய சேமிப்புகள் !
அவர்களின் முன்னே அமர்ந்தால் மௌனம் பிறந்து
மனங்குவியும்; புதிய உணர்வு பிறக்கும் ;
ஒரு சூக்குமக்கனல் உடலை ஊடுறுவி
மனத்தினைப் பற்றி உள்முகப் படுத்தும்;
வெளி நினைப்பு மறக்கும்; யோக சக்தியால்
தியான நிலை பற்றிப் படரும் .
உண்மைக்கு அழிவில்லை; இன்மைக்கு இருப்பில்லை
எனத் தெளியும் தத்துவ நிலை கிட்டுகின்றது .
மனம் போல் வாழ்க்கை; குணம் போல் யாக்கை.
அந்தராத்மாவின் வெளித்தோற்றமே
அவரவர்க்கு வாய்க்கும் சற்குரு !
குருவருள் பெற்று குருவினைத் துதிப்பவன்,
பூரணமாகி பூரணசக்தியைப் பரப்புவான் .
அவன் ஒரு தெய்வீக மின்சாரம் போன்று
தன்னை சூழ்ந்திருப்பவருக் கெல்லாம்
ஆத்மசக்தியை இயல்பாக வழங்குவான் ;
அறிவேயாகி அறிவொளி பரப்புவான் ;
அன்பேயாகி அன்பினைப் பரப்புவான் .
அவன் சொற்கள் அருளருவிபோல இயல்பாகப்போந்து
மானுடப்பயிரைச் செழிப்பிக்கும் ;
அவை ஒவ்வொன்றும் அணுசக்தி விதைகளாகும் .
அவன் இறைவனின் இளவரசன் ;
அவன் உள்ளம் ஞானவூற்று ;
உயிர் அன்பு வெள்ளம் ;
உடல் அருட்பணிக்காந்தம் .
அவன் புதிய தெய்வ சோதியினை
உலகினில் தோற்று விப்பான் ;
ஆண்டவனின் அருளரசை நிறுவி
நிலை நாட்டுவான் .
மனித சமுதாயத்திற்கு வழி காட்டுவான் .
எல்லா மாநில மன்னர்களும் கோட்டை கொத்தளங்கள்,
பிரம்மாண்ட அரண்மனைகள் கட்டிய போது
தமிழ் நாட்டு மன்னர்கள் மட்டுந்தான் ஆச்சர்யமூட்டும்
ஆலயங்கள் நிர்மாணித்து வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற பெரிய ஆலயங்கள் அனைத்துமே
சித்தர்கள் சீவ சமாதியடைந்த அருளிடங்கள்.
தல விருட்சங்களென்பன சித்தர் பெருமக்கள்
வசித்து வந்த மாளிகைகளாகும் என்பது பேருண்மை.
இந்த உண்மை நம்மிடமிருந்து மறைக்கப் பட்டது எதனால்?
என்பதனையும் உணர்ந்து கொள்வீர்களாக!
இன்றும் சித்தர் பெருமக்கள் இந்த
அரும்பெருந்தலங்களிலிருந்து அருள் புரிந்து
வருகின்றனர் .
சித்தர்களின் அருட்கதிர்வீச்சே இவ்விடங்களில்
நமக்கு கிடைக்கின்ற அமைதிக்கும் நிம்மதிக்கும்,
நம் வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கும்
காரணம் என்பதனை மனதில் பதிய வையுங்கள்.
பல ஆலயங்களுக்குள் இன்னும் அறிவியல் ரகசியங்கள்
நிரம்பப் புதைந்து கிடக்கின்றன .
நவீன அறிவியல் கண்டுபிடிப்பான கருங்குழிகளைப்
(Black Holes)போன்று, சித்தர்கள் அண்ட வெளிகட்கு
சென்று வரப் பயன்படுத்திய “ நுண்குழிகள் “
(Worm Holes) எனப்படும் ரகசிய சுரங்க நுழை வாயில்கள்
பல ஆலயங்களில் பூமியினுள் புதைந்து மறைந்து
கிடக்கின்றன .
இவைகள் சித்தர் பெருமக்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே!
விட்ட குறையினால் காணப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
கண்டவர் விண்டதில்லை !
வெள்ளத்தனைய மலர்நீட்டம்; உள்ளத்தனையது உயர்வு.
இறைவனாகிய குருவினைப் பெறும் தகுதிகள் யாவை ?
உண்மைச் சீடனின் இலக்கணம் எது ?
குருவினை வரவேற்கும் தகுதிகளோடு
தவமியற்றித் தேடுகிறானா ?
குருவருளைப் பெறும் பாக்கியம் கூடி வரும் வேளை எது?
இவ்வினாக்களுக்கான ஒரே விடை
அவனருளாலே அவன் தாள் பணிதலே ஆகும் .
விட்டகுறை வாய்த்த வரத்தோடு அகத்தூய்மை,
குணப்பொலிவு, திண்ணிய நெஞ்சம், தெளிந்த மெய்யறிவு,
தானெனும் அகந்தையினைத் தகர்த்தெறியும் மதி நுட்பம்,
மனத்திட்பம் எனும் உளச்சீர்களே உண்மைச் சீடனைக்
குருவின்பால் இட்டுச் செல்லும் மெய்ப்பொருள்கள்.
சிறந்த சீடனின் இலக்கணமாக போகர் பெருமான்
கூறுவதைக் காண்போம் :
“ நலங்காமல் யாவருக்குக் கொடுப்பதென்றால்
நாதாந்த வேதாந்த மிரமவிசாரத்தார்
மலங்கவே அவதூதி தர்மிகூர்மி
மகத்தான சிவயோகி மதிமார்க்கத்தார்
துலங்கவே சுத்தசை தந்யத்தோர்கள்
சொன்னமொழிகள் மறவாத தூய்மையாளர்
கலங்கவே கன்மம்அனுட் டித்தோர்சாந்தர்
கற்புடைய மங்கையரைக் கருதார்தாமே .“
“ தாமென்றுந் தந்தைதாய்ப் பூசிப்போர்கள்
தமைஅடைந்த பேர்களையே பாதுகாப்போர்
ஏமென்ற எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணி
இரங்குவோர் வரம்புதப்பி இகழ்ந்திடாதார்
வாமென்ற வாசியுடன் வாதித்தாடும்
அகத்தோர்கள் வாமத்தின் வழியில்நிற்போர்
ஆமென்ற அப்புவுடன் உப்புப்போல
அடைந்தோர்க்கு அங்குஅடங்கலும் போதிக்கலாமே .”
- போகர் 7000 : 1 ஆம் காண்டம்
கற்றதைக் கூறுவது விஞ்ஞானம்;
கற்க வேண்டியதைப் புகட்டுவது மெய்ஞ்ஞானம்.
குருவினிடத்தில் மனதை நிறுத்தித்
தியானத்தை மேற்கொள்.
அதில் தன்னை மறந்து பரம்பொருளைக் காண்பாய்.
பரம்பொருளை அடைகிறாயோ இல்லையோ,
நிம்மதியை நிச்சயம் அடைவாய்.
நிம்மதி வெளியே கிடைப்பதல்ல...
விரும்பியபோது கொள்முதல் செய்வதற்கு.
அது நெஞ்சுக்குள் ஒளிந்திருக்கும் நாதமணி சொரூபம்!
மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால்,
அமைதி தானாகவே வந்து குடியேறும்.
அமைதி குடிபுகுந்த மனம் ஆன்மீகத்தின் பிறப்பிடம்!
அந்த ஒளிவிளக்கே உன்னை உதாரணம் காட்டும்;
உலகத்திற்கு வழி காட்டும் !
“ எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி யென்று சொன்னான்.
இங்கிவனை யான்பெறவே
என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம் ...”
- பாரதியார்
இவ்வலைப்பூவின் வரைவுகள் வாழ்க்கை
வகுப்பறையின் பாடங்கள்.
இயற்கையும் மனிதனும் தான் இங்கு Syllabus.
சித்தர்கள் நூல்களே படிக்கும் பாடப்புத்தகங்கள்.
வான் வெளியே பேராசிரியன்.
கல்வி கரையில என்பதே காலையில் கடவுள் வாழ்த்து.
ஞானத்தைத் தேடுவதே மாலை நேர விளையாட்டு.
தன்னையறிதலே வகுப்பறைத் தேர்வுகள் .
மெய்யறிவே இப் பள்ளியின் Motto.
இந்தப் பள்ளியின் மாணவன் என்பதில் பெருமையே!!
அன்றாட வாழ்க்கையில்
எதனையும் குவிந்து கவனிக்கவிடாது
எதனையும் கூர்ந்து கேட்கவிடாது
எதனையும் ஆழ்ந்து சிந்திக்க விடாது
தடுப்பது எது ?
அவ்வாறாயின் மனவெளியினை ஆக்கிரமிப்பு
செய்துள்ளது எது ?-
அகற்றப்படவேண்டிய குடியிருப்புகள் ?
மனதின் ஓங்கி நிற்கும் நாட்டம்
(Over riding interest) எது ?
கேள்வி கேட்டுப் பழகுக.
ஏன்?என்று கேட்டதினால் சித்தார்த்தன் புத்தன் ஆனான்.
வல்லான் வகுத்ததே வாழ்க்கையின் தத்துவம்.
வகுத்தலை புரிவதே வாய்ப்பாட்டு ரகசியம்.
புரியாத மானிடனுக்கு வாழ்க்கையே பிரச்னை !
அறியாமை... நீ கொண்டு வந்தது .
ஆனால் அதனை அறியாமலேயே
அதனோடு வாழ்வது ..?
சுட்டிக் காட்டியும் அதனை
உணராமலேயே இருப்பது ..?
நோயினை அறிந்தவனே வைத்தியனைத் தேடுகிறான்.
அறியாதவனைக் காலன் தேடுகிறான் .
சிந்தனைக்கு ..!
தேடுதலே இயற்கையின் இயக்கம்.
தெய்வம் மனிதனைத் தேடுகிறது;
மனிதன் தெய்வத்தைத் தேடுகிறான்;
குரு சீடனைத் தேடுகிறார்;
சீடன் குருவினைத் தேடுகிறான்;
விதைத்தவனுக்கு அறுவடை தெரியும்..
அறுவடையினை அனுபவிக்கும் யோகம் வேண்டும்.
அதனை அருளுவது குருவருளாகிய திருவருள்!
நன்று ! வாழ்த்துக்கள்..!
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
No comments:
Post a Comment