தமிழ் முனிவன் தாள் பணிந்து !
காலமும்.. ஞால(ன)மும்..!
(Time & Space)
அகரமே ஆதிபகவன்; ஆதிமூலம்; ஆதி பிரணவம்.
அண்டமும் அவனியும், அகரமாகிய ஆதியிலிருந்து பிறந்தன.
அகரமும் அகரத்திலிருந்து பிறந்த உகரமும்
இயற்கையின் ஆதார நாதங்கள்; தோற்றத்தின் கரு !
“ ஓசை ஒடுங்குமிடம் ஓங்காரத்து உள்ளொளி காண்க !
பேசாது இருக்கும் பிரம்மம் இது என்றாண்டி !”
- பட்டினத்தார் .
அகரமாகிய ஒலிசக்தியும், உகரமாகிய ஒளிசக்தியும்
அதன் உட்பொருளும், உறுபொருளும்
சித்தர் பெருமக்கள் கண்டறிந்த அடிமுடி; பிரம்ம வித்தை.
இருபெரும் சக்திகளின் கருப்பொருளே சித்தர் மெய்ப்பொருள்;
சித்தர்கள் உண்ட காயகற்பம்;
சித்தவியல் தத்துவத்தின் வேத மந்திர சொரூபம் !
அகர உகர மகர சேர்க்கையே அ உ ம் (AUM) எனும் பிரணவம்.
இவை ஓங்காரத்தின் ஊமை எழுத்துக்கள் ஆகும்.
“ ஊமை யெழுத்தே உடலாச்சு மற்றும்
ஓமென்றெழுத்தே உயிராச்சு;
ஆமிந் தெழுத்தை அறிந்து கொண்டு விளை
யாடிக் கும்மியடியுங்கடி “
- கொங்கண நாயனார் .
ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் கூறும் பின் வரும் பாடல் :
“ ஓங்காரம் ஆவதென்ன வென்று கேட்கில்
உகாரமொன்று, மகாரமொன்று, அகாரமொன்று
பாங்காக நின்ற பிரணவமேயாச்சு
பாரிந்த கருவல்லோ ஆசான் சொன்னார்
பாங்காக அகார உகாரத்திற் சேர்த்து
வன்னி நின்றயிடமல்லோ மகாரமாச்சு
தாங்காதே யுரைக்கிற் கேசரியைக் காட்டும்
சச்சிதானந்த மென்ற மவுனந்தானே “
- மச்சமுனி .
சித்தர்கள் ஓங்காரத்தின் உட்பொருளினை அறிந்து
அதன் இரு பெரும் தத்துவச் சாற்றினை அருந்தி அனுபவித்தவர்கள்.
கிறித்தவமும் இதைனையே Trinity என வழிபடுதல் காண்க.
உடலூரில் வாழ்ந்திருந்து, உயிரூரில் தவமிருந்து,
கருவூரில் குடிபுகுந்து, மண்ணூரில் பிறந்த
மனிதப்படைப்பின் அடிப்படைத் தத்துவம்,
இந்த மகத்தான மந்திரசக்தி - சிருஷ்டியின் ரகசிய ஆற்றல்.
அண்ட அருள் வெளி பஞ்சபூதங்களைப் பிறப்பித்தது.
பஞ்சபூதங்களில் இருந்து கருவாகி உருவாகின நவக்கோள்கள்.
தோற்றப் பொருள்யாவும் வான் வெளியின் கர்ப்பத்திலிருந்து உருவாகி,
அதன் கர்ப்பத்துள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்றன,
என்பதே பிரபஞ்ச பேருண்மையை அறிவோமாக.
நவக்கோள்கள் துணையுடன் பஞ்சபூத சக்திகளின் வார்ப்பே மனிதன்.
பஞ்சபூதசக்திகளின் வடிவமைப்பான மனிதனை,
மனம் எனும் மந்திரக்கோல் காட்டி ,
ஆட்சி செய்வதும் ஆட்டுவிப்பதும் கிரகங்களே.
ஏனெனில் மனத்தை உடையவன் மனிதன்.
மனிதனை இயக்குவது மனம்..
மனதை இயக்குவது கர்ம வினைகள்.
வினைகளை விதைப்பவன் மனிதன்; அதனை அறுவடை செய்வதும் அவனே.
இது நீதி தேவனின் அரசாட்சி. மானுட வழக்கின் மனச்சாட்சி.
அதில் கால தேவனின் கணக்குத் தணிக்கை !
குற்றத்திற்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதி, தண்டனைக் காலத்தையும்
சேர்த்தே கணக்கீடு செய்கிறார்.
“ ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா !
உன் பாதஞ் சேரேனோ ?”
- அழுகணி சித்தர் .
காலம் என்பது தான் என்ன ?
அதன் தோற்றம் செயல்பாடு என்ன ?
அவரவர் கர்மக் கணக்குகளைப் பொருத்தது.
அண்ட அவனியின் தோற்றம், பெருக்கம், முடிவு எல்லாம்
காலக் கணக்காயனின் தணிக்கைக்கு உட்பட்டவை.
மனிதனின் பிறப்பு, வளர்ச்சி, பின் இறப்பும்
காலத்தால் கணிக்கப்பட்டு கணக்கீடு செய்யப்படுகின்றன.
வினைப்பயன்களைப் பஞ்சபூதசக்திகள் தீர்மானிக்கின்றன;
அதனை நிறைவேற்றும் பொறுப்பு காலத்தின் கையில்.
காலத்தின் வாகனமே கிரகங்கள்!
பிறப்பு தொடங்கி இறுதிவரைக்கும்,
கர்ம வினை கணக்குகளை
நிர்ணயிக்கிறது மனமாகிய பஞ்சபூதம்.
கால சக்தி கிரகங்களின் வாயிலாக,
அதனை செயல் படுத்தி நிறைவேற்றுகிறது.
மன நீதி மன்றத்தின் தீர்ப்பை, காலமெனும்
காவல்துறை நிறைவேற்றுகின்றது எனக் கொள்ளலாம்.
காலமென்பது நவக்கோள்களால் எழுதப் பட்ட பஞ்சாங்கம்.
கோள்களின் இயக்கமே காலத்தின் மயக்கம்.
காலத்தின் கணக்கீடு கதிரவன் உதிப்பதும் மறைவதும்.
ஞாயிறுக்குப் பின் திங்கள் என்பதும்
வெள்ளிக்கிழமைக்குப் பின் சனிக்கிழமை யென்பதும்
காலக் கிரமத்தின் அட்டவணை (Chronological Time).
மனித வாழ்க்கையில் இளமையும் முதுமையும்
காலக் கணக்கீட்டின் வரைபடமே.
ஆனால் இந்த கால இலக்கணத்தினைத் தாண்டி,
மனம் ஒரு காலக்கணக்கினை வகுக்கின்றது (Psychological Time).
அது தான் நேற்று, இன்று, நாளை !
அந்த மனக் கணக்கில் தான் மனிதன் வாழ்கின்றான்.
மனக் கடிகாரம் காட்டும் நேரம். மன நாட்காட்டி காட்டும் நாள்.
வாழ்க்கையின் மேடு பள்ளம், இன்ப துன்பங்களைக்
காலம் கிரகங்களைக் கருவியாக்கி நடத்தி முடிக்கின்றது.
இதுவே சோதிடவியல் !
மனக் காலமானி காட்டும் நேற்று, நாளை
எனும் காலக் கணக்கீடுகளுக்கு,
எந்த கணித சூத்திரங்களும் இல்லை.
எந்த விதி முறைகளும் கிடையாது.
“ ஆடிப் பட்டம் தேடி விதை “ எனும் ஔவைவாக்கில்
காலக்கிரமமான கணக்கு கூறப்படுகின்றது.
ஆனால் “நாளை பிறக்கும்”, “நாளைப் பொழுது நல்ல பொழுது”
என்னும் நம்பிக்கையில், எந்த நாள் குறிப்பிடப்படுகின்றது;
இது என்ன கணக்கியல் ?
இந்த மனக் கணக்கின் சூத்திரம் என்ன ?
இந்த கணக்கினை வகுக்கும் கால்குலேட்டர் எது ?
“நாளை” எனும் நம்பிக்கை மனிதனை இயக்குகின்ற மந்திர சக்தி;
மன அசதிக்கு சுடர் தரும் தேன் ! (Psychological Tomorrow)
இந்த மனக் கடிகாரத்தை ஓட்டும் மாய சக்தி எது ?
மனம் என்னும் pendulum நிகழ்காலத்தில் நிற்காமல்,
நேற்று நாளைக்கிடையே ஏன் ஆடிக் கொண்டிருக்கிறது ?
மனக்கணக்கின் காலத்திற்கு எண்ணங்கள் தானே
எருவாகி உரமாகின்றன.
மனக்கடிகாரத்தின் முள்ளினை நகர்த்தும் சக்தி அதுவோ?
நேற்றைய கவலைகளிலும், நாளைய கனவுகளிலும்
தோய்ந்த மனம் ஏன் நிகழ்காலத்தில் நிற்பதில்லை ?
நிலைப்பதில்லை ? ஆழ்ந்த சிந்தனைக்கு...
இது தானே நிஜம்; நிகழ்காலம் தானே நிதர்சனம்.
முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு
கையிருப்பை இழப்பது எதனால்?
மனம் தவிப்பது அதனால் !
“ We look before and after,
And pine for what is not “ - Shelley
கனவு காண்பதிலும் கவலை கொள்வதிலும்
அடிமையாகிப் போன மனம்,
நிகழ்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைத்
தட்டிக்கழிக்கிறது, தள்ளிப்போடுகின்றது.
நேற்றைய தூக்கத்திலும், நாளைய ஏக்கத்திலும் தோய்ந்த மனம்
நிகழ் கால நிஜங்களை ஏற்க மறுக்கிறது.
அச்சம் கொண்டு விலகுகின்றது.
அதனால் தான் அவரவர் கடமையைச் செய்யச் சொன்னது
அர்த்தமுள்ள இந்து மதம்.
நிகழ்காலத்தை ஊன்றி உள்நோக்குகின்ற மனத்தில்
கடந்த காலத்தின் கவலைகளும்,
எதிர் காலத்தின் ஏக்கங்களும்,
ரேகை பதிப்பதில்லை என்பதை அறிவீர்களாக.
கடந்த காலமும் எதிர்காலமுமின்றி,
நிகழ்காலத்தில் நிலைகெடாது நிலைத்தலே
நிலையான நிம்மதி தரும்.
அதுவே காலங்கடந்த இன்ப நிலை.
“ காலனை வென்ற கருத்தறிவாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி ? - குதம்பாய் !
கோலங்கள் ஏதுக்கடி ? “
- குதம்பைச் சித்தர் .
மனக்கால மானியே (Psychological Time) நாளை என்றொரு
நாளை (Psychological Tomorrow) கற்பனையில் சிருஷ்டி செய்கிறது.
I want to be, I want to become என்பது கற்பனை வனைகின்ற
ஒரு “ Psychological tomorrow “ என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.
மன ஏவுதளம் ஏவுகின்ற கற்பனை விண்கலம்.
அது ஒரு மாயத் தோற்றம். கனவுக் காட்சியகம்.
இது இல்லாத ஊருக்கு போகாத வழி சொல்லும்.
அதனால் விளைவு முடிவற்ற போராட்டம் (Perpetual conflicts).
வாழ்க்கைக்காகப் போராடலாம்..,
ஆனால் போராட்டமே வாழ்க்கையானால்..?
விளைவு தோல்வியும், விரக்தியுமே !
இவை மனத்தினை மரத்துப் போகச் செய்திடும் மாய சக்திகள்.
இதனை உணர்ந்த தெளிந்த நல்லறிவே
கால ஞானப் பெட்டகம் கையில் கிடைத்திட வழி !
இக் கடிகாரத்தின் டிக்... டிக்... ஓசையை நிறுத்தும் வழி ஏது ?
தெரியாது தவிக்கிறது மனம்...
இதன் சூட்சுமத்தை தெரிந்தவன் ஞானி.
அவனே காலத்தை வென்ற விராட புருஷன்; திரிகால ஞானி.
மனக் காலத்தினை (Psychological Time) வென்று நிற்பதே
காலங்கடந்த பேரின்ப நிலை (Timeless State).
“ தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்?
யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கன்மனமே !”
“ சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி ? வகுத்தறிநீ கன்மனமே !”
- இடைக்காடர் .
காலத்தினை வெல்லும் தத்துவ நிலையே இறவா நிலையின் விளக்கம்;
சாகாக்கலையின் தத்துவம் (Art of Immortality).
சாகாக்கலையின் தத்துவத்தை சூக்குமத்தைத் தன்னுள் வைத்திருப்பதே
தமிழ் மொழியின் தனிச் சிறப்பு என்பதில் பெருமை கொள்வீர்!
தென்னையில் தேங்காயின் ஓட்டுக்குள்ளே
இளநீரை இருப்பு வைத்தது யார் ?
இது தான் இயற்கையின் சாகசம் !
தென்னை தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதல்
மானுட வாழ்விற்கு உபதேசம்; கற்பிக்கும் வாய்ப்பாடு !
போதிக்கும் போதிமரம் !
ஆட்டிற்கு வாலும், ஆலுக்குக் கனியும்
இயற்கையின் ஆராய்ந்த அளவீடு என்பது
அனுபவம் கற்பிக்கும் பாடம்.
தேகத்தின் கூட்டுக்குள்ளே இருதயத்தை இயங்க வைத்து
இரத்த ஓட்டத்தினை வழி நடத்தும் சக்தி எது ?
நுரையீரலை இயங்கவைத்து சுவாசத்தினை நடத்தும்
சக்தி எது ? இதற்கு பஞ்ச பூதங்களே பதில்.
அதுவும் கண்கூடான காலத்தின் இயக்கமல்லவா ?
விடைதேடும் வினாக்கள்... அறிவியலுக்கு அறைகூவல்...
விடைகண்டு கற்பித்தவர்கள் சித்தர்கள் !
இதன் இயக்கங்களின் ஓசைக்கும், கிரங்களின் சுழற்சிலயத்திற்கும்
(The music of spheres) உள்ள நட்பின் இலக்கணம்
தியானிக்கத் தகுந்தவை.
ஏழு கிரகங்களிலிருந்து ஏழு ஸ்வரங்கள் !
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்!
காலத்தை வென்ற காவிய நாயகர்கள் நம் சித்தர் பெருமக்கள்.
இறவாநிலை வென்று பிறவாப்பேறு பெற்றவர்கள்.
பிறப்பின் உயிர்வினை (Mission of Birth) பிறவாப்பேறு என்பதனை
வாழ்ந்து வழிகாட்டி, அறிந்து அறிவுறுத்தியவர்கள்.
சாகாநெறியே சித்தர் நெறி; சித்தர் நெறியே சிவநெறி
என்பதனை அறிவோமாக!
காயசித்தி செய்து, பிரணவதேகமாக்கி, ஞானதேகம் பெற்று,
அண்டப் பெருவெளியில் இரண்டறக் கலப்பதை, உலகிற்கு
கற்றுக் கொடுத்த ஆசான்கள்.
“ விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும் “
- காகபுசுண்டர் .
சாகாக்கலைத் தத்துவம் பற்றிக் கூறும் இச்செய்யுளின் பொருள்
விட்டகுறையிருந்தால் விளங்கும்.
“ மாங்காய்ப் பால் உண்டு
மலைமேல் இருப்போர்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? – குதம்பாய் !
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? “
- குதம்பைச் சித்தர் .
அழிவில்லா சோதி சொரூபியான சித்தர் பெருமக்கள்
இன்றும் நம்மிடையே அருவாய் உருவாய்
உலாவி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்-
தன்னை மறைத்து !
கற்றதனாலாயபயன் காலத்தை வென்று
நில மிசை நீடு வாழ்தலே ஆகும்.
உயிர்மெய் ஞானநிலையடைய உடம்பே சாதன கருவியாகும்.
உடல் வழியே உயிர் உய்வு பெறும்.
அதனால் அதுவே மெய்ஞானம் !
அதுவே பாட்டி கூறிய, பட்டினத்தார் காட்டிய மெய்க்கரும்பு.
நுனி இனிக்கின்ற ஞானக்கரும்பு !
அணுவிற்குள் அணுவான ஆதிக்கரும்பு !
சத்தத்தினுள்ளே சதாசிவம், சித்தத்தினுள்ளே சிவலிங்கம்
காட்டும் தனிப் பெருங்கரும்பு !
அதன் சாறு நரை திரை நீக்கும் சாகா மருந்து !
மாற்றிப் பிறக்க வைக்கும் மாமருந்து !
உணர்ந்தவருக்கு உதவும் !
“ உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே “
எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
“ அன்னத்தால் ஆய உடம்பின் பயன் எல்லாம்
முன்னோனைக் காட்டி விடும் “
- ஔவை குறள்
“ ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு “
- ஔவை குறள்
சிவனும் சக்தியுமாய், ஆதியும் அந்தமுமாயுள்ள பராபரம்
இருக்குமிடம் தெரியாமல் இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகிறோம். ஏதும் அறியாமல் !
காடு, மலை, கோவில் குளமென தேடி அலைந்து
கண்டறிவதல்ல பரம்பொருள்.
“ காடு மலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிற் பலன் காணலாகுமோ ?
வீடு பெறும் வழி நிலை மேவிக் கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடு பாம்பே !”
- பாம்பாட்டிச் சித்தர் .
பராபரம் உள்ள இடத்தை சாஸ்திர ஆராய்ச்சி மற்றும்
கல்வி கேள்வியினால் அடைய முடியாது என்பதனைத்
தாயுமானவர் கூறுவதிலிருந்து அறியலாம்.
“ கற்றதும் கேட்டதுந்தானே யேதுக்காகக்
கடபட வென்று உருட்டுதற்கோ “
மந்திரம் ஓதுவதாலும், ஆகம சாத்திரங்களாலும் பர ஞானத்தை,
பிரம்ம வித்தை இருக்குமிடத்தை அறியமுடியாது, அடையமுடியாது
என்பதே சித்தர்களின் கருத்து.
“ உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்தே
உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார் “
- சட்டமுனி .
“ மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே “
- சிவவாக்கியர் .
“ மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே “
- பட்டினத்தார் .
சித்தர் பெருமக்கள் காட்டுகின்ற நெறியே பிரம்மவித்தை.
அதுவே தட்சிணாமூர்த்தி காட்டுகின்ற சின் முத்திரை .
இந்த வித்தை பயில, உபதேசம் பெறக் கல்வி ஞானம் வேண்டியதில்லை.
இது பயிற்சியினால், முயற்சியினால் அடைய முடியாத மெய்ப்பொருளாகும்.
புத்தகக் குப்பைகளைப் புரட்டுவதால் பெறப்படுவதல்ல
மூலப் பொருளான பரஞானம் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள்.
இறவாநிலை அருளும் அமுத கலசம்
சிதாகாசத்தில் அமைந்துள்ளது .
இதனையே சிவகைலாயம் என்றும் கூறுவர்.
இந்த சிதாகாசத்திற்கு வாயிற் கதவும்,
அதற்கு ஒரு பூட்டும் உண்டு.
அதனைத் திறக்கும் திறவுகோல்
சித்தர் பெருமக்களிடம் உள்ளது.
அதனை நேரில் தான் பெறமுடியும், பெறவேண்டும்.
“ கோனென்ற சற்குருவால் காட்ட வேண்டும்
குறிப்பாகக் கைமுறையாய் அறிய வேண்டும் “
- அகத்தியர் .
“ உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்குள் மேலேறி வானுதிரந்தானெடுத்து
கச்சை வடம் புரியக் காயலூர் பாதையிலே
வச்சி மறந்தல்லோ, என் கண்ணம்மா
வகை மோச மானேண்டி “
- அழுகணி சித்தர் .
“ உச்சி மேற் சென்று
உயர் வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கேதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கேதுக்கடி “
- குதம்பைச் சித்தர் .
வானீர் அருவியான சிவஅமுதை உண்டவர்,
நமனை வென்ற ஞானசித்தன்.
அவனைப் பஞ்சபூதங்கள் தொழுது நிற்கும்.
நவக்கிரகங்கள் ஏவல் செய்யும்.
வேண்டுமாயின் தானே உயிர்களை படைக்க வல்லவர்கள்.
இறந்தோர்களை உயிர்பிக்க வல்லவர்கள்.
பூம்பாவையும், லாசரசும் உயிர் பெற்ற வரலாற்றுச் சான்றுகள்.
ஆதியான மூலப்பொருள் அந்தரார்த்தத்தை
அறிவித்து உபதேசிக்கும் குரு வேண்டும்.
அவர் சொற்பதங்கடந்த துரிய மெய் ஞானி !
அற்புதம் நிறைந்த கற்பகக் கனி !
ௐங்காரத்தினை உபதேசிக்கும் ஞானாசிரியன்!
“ சின்மய நல் நோக்கால் சிற் சொரூபங்காட்டி எனைத்
தன்மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி !“
- பட்டினத்தார்
“ கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டு செய்து பெற்ற சுகம் “
- காகபுசுண்டர் .
அகரத்தை அறிந்தவன் ஆசான்;
அவனே எழுத்தறிவிக்கும் இறைவன்;
ஏற்றி விடும் ஏணி, கரை சேர்க்கும் தோணி!
சற்குருவின் உபதேசமே சாகா வரம்.
உவட்டா உபதேசம் அளித்து
தெவிட்டாத ஞானத் தெளிவினைத் தருபவர்.
“ ஏகமெனும் ஓரெழுத்தின் பயனைப்பார்த்து
எடுத்துரைத்தார் இவ்வுலகில் ஒருவரில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டு
அறிந்தோமென்பார் மௌனவித்தையறிந்தோமென்பார்
வேகாத்தலை, சாகாக்கால் விரைந்து கேளு
அதையெடுத்துரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி
திரு நடனம் காண முத்திசித்திதானே “
- அகத்தியர் ஞானம்
“ ஔவைக்கு நேராகி ஔவைக்கு நேராய்
ஔவைப் பருவமெய்தி ஔவைப் பினாடி
ஔவிய மோவுத லாயுளர்க்கியல்பே “
- தேரையர் மகாகரிசல் .
இது மருத்துவரிலக்கணம் : குருவிற்கும் இது பொருந்தும்.
கவனத்தையும் கருத்தையும் உள்முகமாகத் திருப்பி
உன் உள்ளே தேடு. மெல்லத் திறக்கும் கதவு.
வாடாமல் வாழ்க்கையில்லை; தேடாமல் செல்வமில்லை.
மன ஓசை ஒடுங்கும் போது, உயிரோசை கேட்கும்.
அதுவே ஓங்காரம் !
ஓங்காரத்தின் உட்பொருளை ஊமையெழுத்தினை
அறிவிப்பவன் இறைவனாகும்.
இறைவனைத் தேடு, குருவினைக் காண்பாய் !
குருவிடம் தேடு, இறைவனைக் காண்பாய் !
எது கிடைக்கிறதோ இல்லையோ
நெஞ்சுக்கு நிம்மதி, நிச்சயம் கிடைக்கும்!
அதுவே சற்குருவின் கதிர்வீச்சு ! கதிர் பாய்ச்சு !
தன்னை அறியும் தவத்தாலும்,
தெய்வம் அருளும் வரத்தாலும்
வந்து வாய்க்கும் திருவருளே குருவருள் !
தெய்வ வடிவில் குரு; குரு வடிவில் தெய்வம் !
அகத்தூய்மை, தெளிவான சிந்தை, திடமான சித்தம்
இவையே அதற்கான அடிப்படைத்தகுதிகள்.
குருவருளான ஞானமே, சிவசக்தியிடமிருந்து
ஞானப்பழத்தினைப் பெற்றுத் தரும்.
அதனை உன்னுடைய சாமர்த்தியத்தால் பெறமுடியாது
என்பதே உணர்த்தப்படுகின்ற உண்மை.
“ வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வத்துத் திருவடி தொழுது ஆடு பாம்பே “
- பாம்பாட்டிச் சித்தர் .
காலம் (Time); பிரபஞ்சம் (Cosmic consciousness);
மனம் (Human consciousness) - இம்மூன்று சக்திகளுக்கு
இடையிலான தொடர்பினைத் தொட்டுக் காட்டுவதே
இச் சொல்லோவியத்தின் நோக்கம்.
இத்தொடர்பினை உணர்ந்தால், காலச் சுழற்ச்சியில்
பிரபஞ்சமும், மனமும் சுருங்கி விரியும் உண்மையினைத்
(Expansion of Universe) தெளிவாக அறிய முடியும்.
அதில் கருங்குழிகளின் (Black Holes) புதிருக்கு
விடை காண இயலும் .
விஞ்ஞானத்தால் இயலாதது மெய்ஞானத்தால் முடியும்.
அதனால் தான் தமிழன் ஓர் அறிவியல் முன்னோடி.
Fast food - ஐ நாடுகின்ற மனிதனுக்குப் பஞ்சாமிர்தம் எதற்கு?
ஏன், எதற்காக எனும் கேள்வி எழும்போதெல்லாம்,
இதனை எழுத வைப்பதும், எழுதுவதும், எழுதிமுடிப்பதும்
இறையருளும் குருவருளுமே ஆகும் எனும் விடையே
கண்முன்னே காட்சி தரும் .
என் செயலால் ஆவது ஒன்றுமில்லை,
எல்லாம் நின் செயலே என்று உணரப்பெற்றேன் !
தெய்வத்தின் ஆணைக்கு அடிபணிதலே
மெய்யான இறைத்தொண்டு என
மனம் அடிக்கடி அறிவுரை சொல்வதுண்டு.
காலத்தின் தத்துவங்களும்,
பிரபஞ்ச ரகசியங்களும்,
மனம் எனும் மாயப்புதையலும்,
விஞ்ஞானிகளே வியந்து பார்க்கும்,
அருங்காட்சியகம் அருட்காட்சியகம்.
இயற்கையின் சித்து விளையாட்டு !
விட்டகுறை வாய்த்தால் கண்டு களிக்கலாம் !
அருந்தி மகிழலாம்! அதற்கான வாழ்த்துக்கள் !
“ கடமையைச் செய் “ - இது இறைவனின் உபதேசம்;
வாழ்க்கையின் கட்டளை.
கடமையாற்றுவதிலும் ஆதாரங்களைத் தேடு.
அதுவே உன்னை உயர்த்துகின்ற உந்து விசை.
உனக்கென உள்ளது, ஒருபோதும் இன்னொருவர்
கணக்கிற்கு மாறாது ; மாற்றமுடியாது (Transfer entry).
ஏனெனில் உனக்கான ஒதுக்கீடு,
கடவுள் கொடுத்த ஊதியம்; இயற்கை அளித்த போனஸ் !
அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை;
அறியாத மானிடர்க்கு
அக்கரையில் பச்சை !
கிடைப்பதை பெற்றுக்கொள்; அதனால் கேட்பதை நிறுத்தாதே.
வருவதை ஏற்றுக்கொள்; அதனால் தேடுவதை நிறுத்தாதே.
“ தேடாமல் சித்தியது தானுண்டாமோ “ எனப் போகர் பெருமான்
கூறுவதை சிந்தையில் கொள்க ( போகர் 7000 : 2 ஆம் காண்டம் )
“ இருட்டறைக்கு நல் விளக்காய் இருக்கும்
உன்றன் வல்லமையை அருள் துறையில் நிறுத்தி
விளக்காகு நீ புல்லறிவே “
- இடைக்காடர் .
" மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்கு
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே ."
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே ."
- குதம்பைச்சித்தர் .
“ கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்
பதியறியு நன்மௌன யோகிகட்கே
பரிசுத்த நூலிதுதான் பதணம் பண்ணும்
விதியிலை என்றெண்ணாதே; நூலைத்தேடு;
விண்டு விண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;
நிதி தருவார் உபசாரம் நீக்கி போடு;
நினைவு கொண்டு சூத்திரத்தின்
நினை வைப்பாரே "
கிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்
பதியறியு நன்மௌன யோகிகட்கே
பரிசுத்த நூலிதுதான் பதணம் பண்ணும்
விதியிலை என்றெண்ணாதே; நூலைத்தேடு;
விண்டு விண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;
நிதி தருவார் உபசாரம் நீக்கி போடு;
நினைவு கொண்டு சூத்திரத்தின்
நினை வைப்பாரே "
- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:7 .
சித்தர்களுடைய நூலினை வாசிப்பது
பெரிதினும் பெரிய பேறு.
விட்டகுறையினால் வாய்க்கும் வரம் !
ஏதோ ஒரு நூலிழை தொடர்பு இல்லாமல், இந்தப்
பாடல்களை வாசிக்கும் வாய்ப்பு,
வாசிப்பவர்களுக்கு கிட்டியிருக்காது
என்பது திண்ணம்;
தேடி வந்த செல்வம் !
இதனை வாசிப்பவர் குறையாத வயதும்,
குன்றாத இளமையோடும் வாழ்ந்திட
வாழ்த்துக்கள் !
சித்தர் பெருமக்கள் திருவடிக்கு !!
“ சித்தர்கள் வாழி சிவன் வாழி முனி
தேவர்கள் வாழி ரிடி வாழி
பக்தர்கள் வாழி பதம்வாழி குரு
பாரதி வாலைப்பெண் வாழியவே “
- கொங்கண நாயனார் .
“ வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது
அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா மகனே
என் அருகினில் இருப்பாயடா “
- கண்ணதாசன்
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html
No comments:
Post a Comment