Saturday, 30 June 2018

துறவு என்பது ..!(Renunciation)


     
                           
                           தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                         துறவு என்பது ..!
                                        (Renunciation)



      அனைத்துத் தோற்றங்களுக்கும் ஆதாரம்
காரண காரியங்களே (Cause & Effect).
அவைகளே அனைத்து இயக்கங்களின் பின்புல விசை.
எந்தச் செயலும் பிரதியாக ஒரு விளைவினை இயற்றுகின்றது.
Cause & Effect என்பதும் Action & Reaction என்பதும்
கர்மக் கொள்கையின் (Karmic Theory) அடிமுடித் தத்துவம்.

அண்டத்தின் பிரதியே அவனியில் மானுடம்.

கீழ்க்காணும் செய்யுள் வரிகளைப் படியுங்கள்..

பாரப்பா பூரணமே அண்டமாச்சு
   பதிவான காரணமே பிண்டமாச்சு
   நேரப்பா அண்டமொடு பிண்டம் இரண்டும்
   நேர் அறிந்து கொண்டவனே சித்தன் சித்தன்
   சாரப்பா அந்தரங்க தீஷை நூலை
   தண்மையுடன் பூரணமாய் சார்ந்து கொண்டால்
   மேரப்பா அண்டபிண்டம் தானாய் நின்று
   மேதினியில் பூரணமாய் வாசி யாமே .”
                - அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி .

கடைமைகளைச் செய்
விளைவுகளின் வித்து வேறிடத்தில்!
கடமையாற்றுவதில் ஞான வீரனாய்
வீரத்துறவியாய் இரு - என்றொரு பாதை
உரைப்பது கீதை .
மயங்காத மனம், கலங்காத உள்ளம், அஞ்சாத நெஞ்சம் -
இவை வாழ்வியல் வகுத்த அனுபவ அறிவியல் !

மனத்தினால் ஆளப்படுகின்ற அல்லது 
ஆட்டுவிக்கப்படுகின்ற மனிதன்,  
எண்ணங்களின் அடிமையாக
செயல்களின் சேவகனாகத்,
தானாக இயங்காமல், இயலாமல் 
தவியாய்த் தவிக்கின்றான்.
சுதந்திரத் தாயின் அடிமைப் புதல்வனாய்?

எங்கும் எதனிலும் அச்சமும் அடிமைத்தனமுமே 
மிச்சமுள்ள மூலதனம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?”  
என்று கேட்பதே மெய்த்துறவு .
அச்சமும், பேதமையும், அடிமைச்சிறுமதியும் 
உச்சத்திற் கொண்டு உலா வரும் மானுடனைப் பார்த்து 
நெஞ்சம் பொறுக்காமல் நினைவூட்டு வரைவதே 
மெய்க்கல்வி கற்ற மெய்த்துறவு .

மனம் ஒரு கீறல் விழுந்த gramaphone record -
எண்ணியதையே எண்ணும்;சொல்லியதையேச் சொல்லும்;
செய்ததையேச் செய்யும்; தேடியதையேத் தேடும்
நாடியதையே நாடும், ஏனென்று அறியாமல்,
ஏற்றுக் கொள்ள முடியாமல் .

ஏன் ? என்ற கேள்வியினை யார் கேட்பது ?
அதுவும் -
மனந்தானே செய்ய வேண்டும் 
மனம் தானே செய்ய வேண்டும்..!

விதியினை வெல்வது விதியாலே;
அன்பினை உணர்வது அன்பாலே;
அறிவினை அறிவது அறிவாலே
தர்மம் தழைப்பது தன்னாலே
அதர்மம் அழிவது அதனாலே;
ஆவதும் அழிவதும் மனத்தாலே!
அதனைக் கற்பிப்பது கணக்கியலே !

வாங்கியதை வழங்குவதே வாழ்க்கை.
பாக்கியினை செலுத்துவதே பிறப்பு
பிறப்பில் கொண்டு வந்தது செலுத்தாமல் விட்டகடன்;
பின்னர் பெற்றோருக்குப் பட்டது பட்ட கடன் ;
வாழ்வில் சொந்தம் சுற்றம் நட்பு எல்லாம் 
தொட்டகடன்.

கடன் சுமந்து களைத்த மானுடனுக்கு இளைப்பாறுதல் 
தருவதே துறவின் நோக்கம்.
காலக்கணக்குகளின் பதிவுகளிலிருந்து 
மனப்பேரேட்டினைக் காத்து நிற்கும்
Vigilance wing துறவு.

அடிமைத்தளையினின்று அகவிடுதலை
(Freedom from shackles)யினைப்
பெற்றுத்தருகின்ற அறப்போராளியே துறவு
அகவிடுதலையே புறவிடுதலையினை 
வேளாண்மை செய்யும்
வீடு மனைகளைத் துறந்து காடு மலைகளுக்குச் 
செல்லச் சொல்வதல்ல துறவு.
இல்லறத்திலேயே இருந்து நல்லறம் காண வைப்பதே 
மெய்யானத் துறவு.
இல்லறத்தில் நல்லறம். நல்லறத்தில் துறவறம்.
இழப்பதும்,விலக்குவதும்,விட்டு விலகுவதுமல்ல துறவு -
அது escapism.

கர்ம வினைகளை வென்றெடுக்கக் கையிலேந்தும்
காண்டீபமே துறவு !
சுற்றி நில்லாதே போ ! பகையே
துள்ளி வருகுது வேல் !
என முழங்கும் பாஞ்சசன்யம் !

பிறப்பினால் தெரிவு செய்த வாழ்க்கையில்,
தாமரையிலைத் தண்ணீராய்ப்
பற்றற்றான் பற்றின் மேல் பற்றிப் படர்ந்து
உலகு உய்திட உழைப்பதே,
துறவு கற்பிக்கும் இலக்கணம் - அதில் 
தன்னை அறிதலே தத்துவம் !

துறவு தவமெனக் காந்தியடிகள் இமயமலைக்குச் 
சென்றிருந்தால் என்னவாகி யிருக்கும்?
மானுட சித்தத்தில் அவர் பெயர் மறைந்தே போயிருக்கும்.
வெள்ளையனை விரட்டிய வீரத்துறவி என்ற பெயர்
நிலைத்திருக்காது வரலாற்றில் .

சிந்தனை செய்யும் மனதில் சந்தன மழை பெய்யும்.
இன்பத்தில் துன்பம்; துன்பத்தில் இன்பம் 
இறைவன் வகுத்த நியதி.
சும்மா இருப்பதின் சுகமே தவம்;
தவத்தில் பிறப்பதே துறவு
இதனை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் 
மறைந்தே போகும் !

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
   போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
என உருகுவது திருவாசகம்.

பழுக்கவே வாராது எப்பாடு பட்டும்
         பரவியே வருகிறது வந்தே யாகும்
  அழுக்கவே மனம்அலைந்தால் அசைந்து போகும்
         அறியாது குருசொல்ல அறிய லாகும்
   தெழுக்கவே தேனுக்குள் இன்பம் போலத்
         தெளிந்தவரே சிவயோகி சித்த ராவார்
   தழுக்கவே சாத்திரந்தான் இருமை சொல்லும்
          சாதித்து மனமுறைத்தால் யோகி யாமே .”
                     - போகர் 7000 - 2ஆம் காண்டம்

உலகத்தில் காசு பணத்திற்காக அலைபவனும் 
கடைசியில் தேடுவது எங்கே அமைதி?
எங்கே நிம்மதி? அங்கே தனக்கொரு இடம் !
அதுவே அவனுக்குப் புகலிடம்.
மனித வாழ்க்கையில் எங்கெங்கு காணினும் 
துன்பங்களின் காட்சிகளே.
ஆன்மா விரும்புவது அவைகளிடமிருந்து விடுதலையே!
வையகமோ, வாழ்ந்தால் எரியும், தாழ்ந்தால் சிரிக்கும்.
இதற்குத் துறவு தான் தமிழ் மருத்துவம்.
துறவில் துன்பந் தீருகிறதோ இல்லையோ
நிம்மதி நிச்சயம் கிடைக்கும் !

          நாமார்க்குங் குடியல்லோம்
             நமனை அஞ்சோம்என்றார் அப்பர் சுவாமிகள்.
இது ஆணவத்தின் அலைமோதல் அல்ல.,
தன்னை அறிந்துகொண்ட தத்துவ விளக்கம் !
அதனால் தான் அவர் அப்பர்.
நாமெல்லாம் லோயர்..!

துறந்துவிட்ட ஞானிக்கு வேந்தனும் துரும்பு
ஆணவம் உள்ள மனிதன் ஒரு வீட்டைக் காட்டி
இது என்னுடையதுஎன்றான் .
அவன் காலுக்கு கீழேயிருந்த மண்,
இந்த உடம்பு எனக்குச் சொந்தம்என்றது .

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை 
   மனிதன் மீது மண்ணுக்கு ஆசை 
   மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது 
   அதை மனம் தான் உணர மறுக்கிறது ..!“ (வைரமுத்து)

இருப்பது தெரிபவனுக்குத் தான் வருவது புரியும்.

அலெக்சாண்டர் என்றாலே உலகமே நடுங்கியது.
உன்னால் மண்ணைத்தான் ஜெயிக்க முடியும் 
ஆனால் என்னை ஜெயித்தவன் நான்என்றார் ஒரு ஞானி.
அதோடு அடங்கியது அலெக்சாண்டரின் ஆணவம்.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம்
தோற்கடித்தது.
காரணம் ஞானிக்கு தேவையென்று எதுவும் இல்லை.
அதனால் யாரிடமிருந்தும் எதிர்பார்ப்பும் இல்லை.
ஞானிக்கு இருப்பது ஆணவம் அல்ல 
தன்னை அறிந்த அரசாட்சி !

துறவி என்றுமே இயற்கையின் குடிமகன்.
அவன் லௌகீக வாழ்க்கையிலும் பக்குவமடைந்த
தேகசுத்தி !
அவன் ஒரு இல்லறத் துறவி .
வெள்ளை வேட்டி சந்நியாசி .
வாழ்க்கையின் வரவு செலவு கணக்குகளை 
தெய்வத்தின் பெயரால் எழுதுபவன் .
நமது தலைமுறையில் காந்தி அடிகள் ஒரு உதாரணம்.
குடும்பத்தில் இருந்தார் துறவியாக வாழ்ந்தார்.

பசிக்கிற அளவிற்கு தானே உண்ண முடியும்.
இது உடம்பு ஊட்டுகின்ற பாடம் .
எப்போது துறக்க கற்றுக் கொள்கிறாயோ 
அப்போது உன்னை அறியக் கற்றுக் கொள்கிறாய்.
உன்னை அறியக் கற்றுக் கொண்டால் 
உன் மனம் தெய்வம் தேடி வரும் திருக்கோயில் !

தருகின்ற காலமே அதை பறிக்கவும் செய்கிறது.
சிரிக்கச் செய்கின்ற காலமே அழவும் வைக்கிறது.
ஆடியில் காற்றும், ஐப்பசியில் மழையும்,
மார்கழியில் பனியும், இயற்கையில் இயக்கங்கள்.
அதில் இயங்காது இருப்பதே துறவு !

இறைவன் நேரடியாக பூமிக்கு வந்து எல்லாவற்றையும்
செய்துகொண்டிருக்க முடியாது.
அதற்காக அவன் உருவாக்கிய கருவிகளே 
இயற்கையோடு இயைந்து வாழும் துறவிகள்.

நாளை பட்டம் சூடுக என்றதும், 
நாளை கானகம் செல்க என்றதும்,
ராமனிடம் எந்த வித விளைவையும்(Reaction)
ஏற்படுத்தவில்லை .

இதுவே மெய்யானத் துறவு நிலை.
சலனங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்தும் 
விடுதலை பெறும் ஞான வீரமே மெய்யானத் துறவு.

பற்றுக்கும் (Attachments),
தேவைகளுக்கும் (Demands),
பழக்க வழக்கங்களுக்கும் (Habits) 
கைதியாகிற மனிதனை 
மனம் அடிமையாக்கி ஆட்சிசெய்கிறது.
இதனை வெல்லும் ஞான வீரமே துறவின் திறவுகோல்.
துறவு என்பது தப்பித்துச் செல்வதல்ல
நின்று வெல்வது ! வென்று நிற்பது !

கடமை செய்வதிலும் காரியங்கள் ஆற்றுவதிலும்
முன்பாக மனம் ஒரு Model தயார் செய்கிறது.
இந்த Modelக்கும் நிகழ்கின்ற நிதர்சனத்திற்கும் 
இடையே நிகழும் போரே வாழ்க்கையாகின்றது.

இந்த போரின் விளைவு உடம்பின் அணுசக்தி துகள்கள்
இரையாகி மடிகின்றன
இதனின்று விடுதலையே ஆத்ம ஞானம் !
இதனை எப்போதாவது உணர்ந்து பார்த்ததுண்டா ?

பற்றற்றான் பற்றினை பற்றிய ஞானத் துறவிகளால் தான்
மானுடம் தலை நிமிர்ந்து நிற்கிறது .
தர்மம் தழைத்தோங்க இவர்களே வழிகாட்டி.

சொல்லுகிறேன் என்மகனே மாணாகேளு
          சூட்சமெல்லா மவனுடைய சூட்சமல்லால்
   வெல்லுதற்கு வேறுமொரு விதமுங்காணோம்
          வெட்டவெளி யென்று நிசம் வெளியேமைந்தா
   அல்லுகின்ற ஆன்மாவே ஒன்றேதெய்வம்
          அவனியிலே தெய்வமுந்தா னையாயில்லைத்
   தள்ளுகிற கருவிகளைத் தள்ளினாக்காற்
          றானவனை தனக்குள்ளே யறியலாமே .”
                            - சுப்பிரமணியர் ஞானம் 200

ஒரு குட்டிக் கதை - தலையில் குட்டும் கதை !

மன்னன் ஒருவன் ஒரு முனிவரின் கோபத்திற்கு ஆளானான்.
கோபத்தின் விளைவு சாபம்.
 ”நீ பன்றியாகப் போ!” என்றது
மன்னனைப் பன்றியாக மாற்றியது முனிவரின் சாபம்.
சக்கரவர்த்தி பன்றியானால்..?
மன்னன் கதறித் துடித்தான்; -
முனிவரிடம் சாப விமோச்சனம் வேண்டினான்.
மனமிரங்கிய முனிவர், ”உன்னுடைய 1 வயது மகன் 
16 வயது பாலகனாய் வளரும் போது, உன்னைத் 
தேடி வந்து மீட்டெடுப்பான்; அப்போது உனக்கு 
சாப நிவர்த்தி”, என விமோச்சனம் அளித்தார்.

காலம் உருண்டோடியது.
மன்னன் மகன் 16 வயதினை எட்டிய போது,
அவனுக்கு முனிவர் அருளிய வண்ணம் 
தன் தந்தையின் ஞாபகம் வந்தது.
நாடெங்கும் தேடி அலைந்தான்.
கடைசியில் கண்டு பிடித்தான் -
தந்தையினைப் பன்றியின் வடிவத்தில் !

அந்த பன்றி ஒரு பெண் பன்றியுடன் சாக்கடையில் 
விளையாடிக் கொண்டிருந்தது.
இளவரசன் பன்றியின் அருகில் சென்று
நீவிர் பன்றியல்ல; சக்கரவர்த்தி! உம்மை மீட்டெடுத்து 
மறுபடியும் சக்கரவர்த்தியாக்கவே யாம் வந்துள்ளோம்,”
எனக் கூறிக் கையை நீட்டினான்.

அப்போது பன்றி பதில் சொன்னது,
உன்னோடு பேசுவதற்கெல்லாம் நேரமில்லை;
என்னுடைய நேரத்தினை வீணாக்காதே
தொந்தரவு செய்யாமல் போய்விடு”.

இந்தக் கதை உரைக்கும் கருத்து என்ன..?

சாபம் பெற்றபோது கதறி அழுத சக்கரவர்த்தி,
பதினாறு ஆண்டுகால இடைவெளியில் 
பற்று, தேவை, பழக்கங்களுக்கு 
அடிமையாகிப் போனார்.
தான் சக்கரவர்த்தி என்பதனை மறந்து
பன்றியாகவே தன்னை மாற்றிக் கொண்டார்;
மாறிப்போனார்..?!

இருப்பதை இழக்க, கிடைத்ததைத் துறக்க 
சக்கரவர்த்திப் பன்றித் தயாராக இல்லை.
அரச வாழ்வினை நம்பி, புருஷ வாழ்வினைக் கைவிட 
பன்றி விரும்பவில்லை.
Fear of losing the known 
Brings perpetual miseries!

வாழ்விற்கான பாடம்:

காப்பாற்றுவதற்குத் தெய்வம்
குருவாய் வந்து கை நீட்டி அழைத்தாலும்
கைபிடித்துக் கரையேற 
மனிதன் தயாராக இல்லை - என்பதே..!

மீண்டும் தலைப்பினை நினைவூட்ட விழைகிறேன் -
துறவு.. என்பது ?!

நன்று !! வாழ்த்துக்கள் !!

பொல்லாதவன், நெறி நில்லாதவன்
ஐம்புலன்கள்தமை வெல்லாதவன்
கல்வி கல்லாதவன்
மெய்யடியவர்பால் செல்லாதவன்
உண்மை சொல்லாதவன்
நின்திருவடிக்கன்பு இல்லாதவன்
மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே
                                            - பட்டினத்தார்  

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...