தமிழ் முனிவன் தாள் பணிந்து !
சித்தர்கள் தரிசனம்..!
எட்டாம் பாகம்
அண்டமும் அவனியும் அறியொணாப் பொருள்களையும் இயக்கும் பின்புலவிசை உயிர் என்னும் அணுசக்தி .
இதுவே அனைத்து உயிரினங்களின் மூலம் .
உயரே பறக்கும் காத்தாடிக்கு உதவியாய் நிற்கும் நூல்போலே , சுழலும் வாழ்வின் சக்கரத்திற்கு அச்சாணி என்பது உயிர்தானே !
விடிவென்பது தொடக்கம் , முடிவென்பது அடக்கம்
விதியென்பது விளக்கம் , உயிர் என்பது என்ன ?
கருவென்பது தோற்றம் , உருவென்பது மாற்றம்
வினை என்பது இயக்கம் , உயிர் என்பது என்ன ? அது
அறிவியலுக்கு வயப்படவில்லை !
ஆன்மீகத்திற்கும் பயப்படவில்லை !
ஆண் என்ன , பெண் என்ன ;
அரசன் என்ன , ஆண்டி என்ன ;
நீ என்ன , நான் என்ன ;
ஏன் , விலங்குகள் கூட... எல்லாவற்றுக்கும் உயிர் ஒன்றுதான் .
நல்லவர் தீயவர் , வாழ்ந்தவர் தாழ்ந்தவர்
அறிந்தவர் அறியாதவர் எல்லோரையும் இயக்குவது இந்த உயிர் தான் .
உயிர் என்ற ஒன்று இருக்கின்ற வரை தான் “ உயர்திரு” எல்லாம் .
பிரிந்து சென்ற பிறகு அவனுக்குப் பெயர் வேறு, முகவரியே வேறு .
வழியெல்லாம் வல்லாரை தூதுவளை
வனத்துக்குள் கருநொச்சி
விதையினை கண்டதுண்டா ?
பசும் புல்லுக்கு விதை விதைத்தவன் யார் ?
காட்டுக்குள் மரங்களை பதியம் போட்டவன் யார் ?
தேங்காய் ஓட்டுக்குள் இளநீரையும்
தேகக் கூட்டுக்குள் உயிரையும்
வாழைக்குள் கன்றையும்
பனம் பாழைக்குள் பதநீரையும் இருப்பு வைத்து
ஏதும் தெரியாதவன் போல் இருக்கிறான் ஒருவன் ;
தெரிந்து கொண்டால் அது தான் பரம்பொருள் !
உயிரென்ற ஒன்றை உருவாக்கி விட்டு கருவாகி நின்றான் !
கண்டு கொண்டால் அவன் பெயர் இறைவன் !
உயிர் என்பது தான் என்ன ? அதன் வடிவம் தான் யாது ?
அதன் உறைவிடந்தான் எங்கே ?
ஆயிரம் சொன்ன அறிவியலும் , பாயிரம் பாடிய பக்தியும் கூட உயிர் என்பதற்குப் பொருள் கூறவில்லை .
இதற்கு விளக்கம் சொல்லும் ஒரே அதாரிட்டி , எதற்கும் விடை கண்ட நம் சித்தர் பெருமக்களே! கேட்போம் வாருங்கள் .
உயிர் என்பதற்கு உரை எழுதுகிறார் ஆதிசித்தர் காகபுசுண்டர் ,
பாடலைப் படியுங்கள்...
“ அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள்பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணிவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்டவுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே ”
- காகபுசுண்டர்
ஆதிசித்தர் புசுண்டர் கூறுவதைச் சற்று ஆராய்வு செய்தோமனால் , உயிர் என்பது மனம்; உயிரும் மனமும் ஒன்று தான் என்பது தெளிவாக ஒளிவீசும் தத்துவச் சித்து !
உயிருக்கு உருவம் கிடையாது, அந்த உயிரின்றி எதுவும் நடவாது, உள்ளத்திற்கும் அவ்விதமே.
உயிரின் பிறப்பிடம் எதுவோ , மனதின் இருப்பிடம் அதுவே .
உயிரின் தன்மை பூதபௌதீகம் , மனதின் தன்மையும் அதனைச் சார்ந்ததே.
உயிரின் வாழ்நாள் ஊழி வரை , மனதின் ஆயுளும் அப்படியே .
இந்த இரண்டுமே பரத்திலே பிறக்கும் மணிவிளக்கு, பரமே நிற்கும் சுடர் !
பகல் இருள் அல்லாத அருள் வெளியில் பூத்த ஞானமலர் !
இரண்டுமே அருவன்று உருவன்று , உளதன்று இலதன்று !
உயிர் பிறப்பதும் ஆதித்தன் உதிப்பதும் மறைவதற்காக அல்ல ; மறைவதெல்லாம் வெறும் தோற்றமே!
அது மனம் போடும் மனக்கணக்கு !
பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல , மீண்டும் பிறவாமையே - இதுவே உயிரின் வேட்கை !
அதனை மரணமில்லாப் பெருவாழ்வு என்று பாடினார் வள்ளலார் .
இந்த உயிர் என்னும் உயர்ஞானப் பொக்கிஷத்தைக் காலனிடமிருந்து காப்பாற்றும் ரசவாதமே சாகாக்கலை .
அதனை அருளும் அமிர்த சஞ்சீவியே “ முப்பூ ” எனும் சாகாமூலி , மார்க்கண்டேய மருந்து !
இந்த சாகாமூலியை எல்லா சித்தர்களும் பலவிதமாகப் பரிபாஷை சொற்றொடரால் பாடிப்பரவுகிறார்கள் , பாமாலை சூட்டுகிறார்கள் !
“ அண்டம் ” எனும் சித்தர் உலகினை குருமுகமாக அறிந்தவர்கள் , மெய்ப்பொருளை இவ்வளவு வெளிப்படையாக எழுதுவது கண்டு அதிர்ச்சி அடையலாம் .
நம்மை வாழ்விக்க வேண்டி இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்களின் ஜென்மாந்திர உறவு நம்மிடையே தொடரவேண்டும் என்பது என் அவா .
அந்தப்பேறு நமக்குக் கிட்டுமா ? அதனை உணர்வது தானே உண்மையான கல்வி !
அதற்கான முதற் படியே இவ்வலைப்பூவின் வரைவுகள் !... சித்தர்கள் தரிசனம் !
வாழையின் கன்று வாழையின் நிழலில் வாழ்வது போல நம்மை வாழ வைப்பார்கள் !
வரஞ்செய்த தவத்தால் வாய்க்கும் இந்த மகத்தான மூலியை சித்தர்கள் , நாதவிந்து , அண்டம் பேரண்டம் , பீஜகோசம் , கருநெல்லி , நாதமணி , பொன்னாவரை , கல்லுப்பு , கருங்கோழி , குரு வண்டு , பூநீர் , சிவநீர் , வாலை ரசம் , காமப்பால் , கானற்பால் , கள்ளிப்பால் , பாதாள மூலி , பாஷாண மூலி எனும் பல விதமான பெயர் சூட்டி மகிழ்கின்றனர் .
“ விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும் ”
- காகபுசுண்டர் .
இயற்கை இதனைக் கலியுகக் கடவுளாகப் படைத்துள்ளது .
மானுடர்க்கே அருளப்பட்டுள்ள கற்பப் பொக்கிஷம் .
மனிதனைப் புனிதனாக்கும் பிரணவ பீஜம்.
சாகா உடலைக் கொடுக்க வல்ல நவநீதம் .
தேகமது சித்தியானால் ஆதிசிவசோதி அங்கே சுடரொளி வீசும் .
மேனாட்டு ரசவாத சித்தர்களும் இந்த மாமருந்துக்கு “ Philosopher’s stone ”, “ Divine Water ”, “ Water of life ”, “ Elixir of life ” எனப் பல்வேறு பெயர்கள் சூட்டியுள்ளனர் .
“ ஒண்ணான மூலியதின் பெருமைமெத்த
உலகமென்ற யேழுலக முண்டா மூலி
பெண்ணான ஆண்பெண்ணாய் விளங்கும் மூலி
பெருமைபெற்ற முப்பூவு முண்டா மூலி
வண்ணானு மாவதுவே பஞ்ச மூலி
வானவர் கோனிமையவர்க்கும் வாய்த்த மூலி
கண்ணான நீலகண்ட ருண்டநஞ்சு
காய்பழமாம் பழங்காயாம் கந்தமாமே ”
- நந்தீஸ்வரர் நிகண்டு
இந்த அமிர்த சஞ்சீவி உடம்பினுள் சுடர் விடுவதையே தசதீட்சை (8+2) எனச் சொல்கின்றனர் .
பத்து தலை உடைய இராவணேஸ்வரன் எனும் சொற்றொடர் பரிபாஷை , இந்நோக்கில் பார்க்கத்தக்கது .
இது கடல்கடந்து , மலைகள் தாண்டி காட்டில் குகையில் மறைந்து இருக்கும் மாயப் பொருள் அல்ல .
அருளிலே விளைந்து பொருளிலே புனைந்து , எட்டும் தொலைவில் மண்ணிலே மலர்ந்து மணம் வீசும் வாடாமலர் .
அணுவிற்குள் அண்டமாய் அம்பலத்தே ஆடும் அருமருந்து .
கண்முண்ணே காணக்கிடக்கும் விண்கடந்து நிற்கும் சோதி .
இதன் பெருமை ஏட்டில் அடங்காது , எழுத்தில் பிறவாது .
சொல்லாலே சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை !
இது பேசாத பிரம்மம் , வடிவில்லா வான் பொருள் !
பாற்கடலில் பிறந்த அமுதகலசம் !
“ உரைத்ததால் புலத்தியனே உனக்குச் சொன்னேன்
உண்மையுடன் எட்டு ரெண்டு மென்ற வார்த்தை
அரைகிறேன் தசதீஷை யாகு மப்பா
அப்பனே யிதை யறியார்க் கென்ன வாய்க்கும்
உரைக்கிறேன் இந்த எட்டு ரெண்டு தன்னை
உத்தமனே நன்றாக யறிந்தா யானால்
அரைகிறேன் புலத்தியனே என்னைப் போலே
அந்தமாங் கோடியுகம் வாழலாமே ”
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
“ அலையிலே வழிந்தாடி யசைந்தது
சிலையதாய் மதியாகத் திரண்டது
மயிலே வரும் மங்கை மகத்துவம்
தலையிலே சிவசத்தியின் தீட்சையே ”
- யூகி முனி
“ ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா ! முக மாறுடைத் தேசிகனே ”
- அருணகிரிநாதர்
விட்டகுறை வாய்த்தால் , இதன் உண்மைப் பொருளை குரு தொட்டுக் காட்டுவார் .
அதற்கான முதல் தகுதி ஆசைகள் அகன்று , தேவைகளை கடந்து நிற்பதே ஆகும் .
அகத்தூய்மை , குணப்பொலிவு , மனவலிவு , உளத்திட்பம் , மதிநுட்பம் - இவையெல்லாம் இறையருளை நிச்சயம் ஈட்டுத் தரும் , குருவருளும் கூடிவரும் .
அவனருளாலே அவன் தாள் பணிவீராக !
இறவா வரம் பெறுதற்கு சித்தர்கள் தரிசனம்... தொடருவோம் , வாருங்கள் ...
குருவருள் தேடும் ஞானப்பாதையில் , இப்போது நாம் தரிசிக்க இருப்பது பழமுனி , கிழமுனி என்றெல்லாம் வணங்கப்படும் சித்தர் பெருமான் காகபுசுண்டர் .
இயற்கை நியதிகளை வென்று , இறவாப்புகழுடன் வாழும் திரிகாலஞானி .
ஊழி யுகங்களைக் கண்டு கடந்து வாழும் உற்ற மெய் ஞான ஒளி .
பிரளயங்களை வென்று பிரம்ம அண்டங்களில் நின்ற குருபரன் .
பிரம்ம வித்தையினுடைய மூலம் அறிந்தவர் .
பிறப்புகளுக்கு அட்டவணை சொல்லும் காலக் கணக்காயன் , காலக் கணக்குகளின் கருத்துக் கருவூலம் - ஆதிசித்தன் அல்லவா !
“ வேதனென்ற சித்தமே புத்தியாகத்
தெளிந்தவரே மெய்ஞானி யாவர் பாரே ”
- காகபுசுண்டர்
“ ஆடவே அவர்செய்த வகைஏதுஎன்னில்
ஐயமாம் கும்பகந்தான் அறுபான்நான்காம்
பூடவே பூரகந்தான் பதினாறாகும்
புகையான ரேசகம்முப் பத்திரெண்டாம்
ஆடவே அவர்இருந்து பேறுபெற்றார்
அழகான கற்பமா மரத்தின்மேலே
காடவே காகம்என்ற உருவைக்கொண்டு
கண்டிருந்தார் கோடியுகம் கரைகாணேனே ”
- போகர் ஏழாயிரம்
“ கூறுகிறேனென் மகனே வாசி நாதா ”... எனக் காகபுசுண்டர் கூறுவதைக் கேட்க அருகில் செல்வோம், வாருங்கள்...
என் பெயர் காகபுசுண்டர் .
மூதண்ட ராஜரிஷி என அகத்தியர் அழைப்பார் .
ஆதியென்ற பராபரன் என்றும் அழைப்பார்கள் .
அருளான போதமெல்லாம் நிறைந்த வீட்டில் , சிவகலையில் பிறப்புற்று சிவநாத ரூபமான காக வடிவில் வந்துதித்தேன் .
ஏக பரம் பொருளொடு இரண்டறக் கலந்து வாழ்பவன் .
மாயத்தை நீக்கி மருவினைகள் போக்கி
காயத்தை வேறாக்கி கடந்து நின்றேன் கால ஊழி .
விண்ணிறந்து மண்ணிறந்து வெளியிறந்து ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகாந்தமாகி நின்றேன் !
“ காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் ”
- காகபுசுண்டர்
“ வானப்பா காகமென்ற ரூபமானேன்
வட வரையின் கூடு தொத்தி யிருந்தேன் பாரே ”
- காகபுசுண்டர்
“ பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
பார்தனில் நானிருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னைப் போல அறிவாருண்டோ
ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானேன் ”
- காகபுசுண்டர்
ஊழிகள் முடிவுற்று , புவிதனில் மானுட உதயம் தொடங்கும் போது , மனித உருக்கொண்டு புஜண்டராய்ப் பிறப்புற்றேன் பார்தனிலே , பேரன்புற்றேன் ஈசனிடம் .
பிறப்புகளின் ரகசியத்தைப் பிறருக்குப் புகட்டும் பேரருள் பெற்றேன் .
யுகங்களின் நிகழ்வுகள் கூறும் வரலாற்றுப் பேராசிரியன் !
“ பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும் போது
பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர் கொண்டேனே ”
- காகபுசுண்டர்
உயிரென்ற ஒன்று உருவாகும் கருவறை எது ?
உயிர்கள் உறைவிடம் எது , தங்கி வாழும் தவக்குடில் தான் எது ?
ஓடும் நதிகள் , மலரும் மலர்கள் , காய்க்கும் கனிகள் , சுழலும் கோள்கள் , உழலும் உயிர்கள் உலகில் நன்று தீது நாலுக்கும் , எண்ணம் இயக்கம் எல்லாவற்றுக்கும்
உயிர் ஒன்றுதான் ; உருவங்கள் தான் வேறு .
விசை ஒன்றுதான் ; வெளிப்பாடு தான் வேறு .
மூலம் ஒன்றாகி முடியும் ஒன்றாய் , எல்லா உயிர்களுக்கும் காலமாய் நிற்பதே சிவம் .
மண்ணில் பிறந்த உயிர் அனைத்தும் தானாகி , விண்ணில் வாழ்வதே சிவம் .
தோற்றமது வீடு , உள்ளே குடி இருப்பவன் ஈசன் - அவன்
எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் ; பாலின் கண் பரந்துள்ள நெய் .
உலகத்தில் உள்ள மன்னுயிர்க்கெல்லாம் அலகிறந்த ஆதியே சிவம் .
கருவறை இல்லாத கோவிலுக்கு கருத்துரை ஏது ? அங்கே
உருவின்றி நிற்கும் உணர்வே தெய்வம் - தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல.
வேய்குழலும் நாதஸ்வரமும் வெவ்வேறானாலும் , அதன் ஓசையில் பாடும் மூச்சுக்காற்றே ஈசன் !
உருவங்கள் எல்லாம் பருவங்கள் மாறி , திருவாகி அங்கே மலர்கின்ற போது ,
அதில் கருவாகி நின்று கடமை ஆற்றும் வீரமே சிவம் .
அதுவே அண்டம் , அதுவே அகண்டம் , ஆதிமூலம் என்பது ;
அதுவே கண்டம் , அதுவே கருத்து , காவியங்கள் ஆனது .
அதுவே ஊண் , அதுவே உணர்வு , உட்கலந்த சோதி !
என்னவென்று சொல்வேன் இலக்கணம் இலாததை ?
“ சுருதியாயெனை யழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே ”
- காகபுசுண்டர்
“ வீரடா விமலரிடஞ் செல்லும்போது
வெற்றியுடனெனை யெடுத்து முத்தமிட்டார்
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்
காகமென்றே ரூபமா யிருந்தேன் பாரே ”
- காகபுசுண்டர்
உடம்பினை உயிர் தேர்வு செய்ததா ? அல்லது
உயிரினை உடம்பு தெரிவு செய்ததா ?
தேர்வும் தெரிவும் தெளிவால் விளைந்த பயன் தானே !
இல்லாத ஒன்றில்லை , அந்த உயிரின்றி எதுவும் உதிப்பதும் இல்லை !
எல்லாமும் இருந்தும் , எத்தனையோ மலர்ந்தும்
இல்லாத ஒன்றுக்குத் தானே ஏங்குது பாவி மனம் .
வலைபட்டு உழலுகின்ற மானைப் போல் பரிதவித்து வாடாமல்
தலை கெட்ட நூலது போல் தட்டழிந்து நிற்காமல்
இருப்பதை வளர்த்துக் கிடைத்ததை உணர்ந்து
உடம்பினைக் காப்பதே உயிர் பயிரை வளர்ப்பதாகும் , அது தானே உயிர் வினை ஆகும் !
“ இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினி கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடம் பெண்ணரசி யொன்றி நிற்பாள்
ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே,
வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே ”
“ பாரப்பா இப்படியே அனந்த காலம்
பராபரத்தி னூடே தானிருந்து வாழ்ந்தேன்
ஆரப்பா பிரமுந்தான் மனமி ரங்கி
அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போது
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
விமலரென்றும் உவமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே ”
- காகபுசுண்டர்
காக உருவங்கொண்டார் ; காகத்தின் பெயருங் கொண்டார்.
புள்ளி மயில் , பச்சைக்கிளி , பாடுங்குயில் என பறவைகள் பலவிதமிருக்க -
ஏன் காக வடிவெடுத்தார்..?
காகத்திற்கெனத் தனிச் சிறப்பு ஏதேனும் இருக்கிறதா ?
குயில் பாட்டு பாடிய பாரதி கூட காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டானே .
எத்தனையோ பெயரிருந்தும் “ காக்கைப் பாடினியார் ” எனப் பெயர் சூடிக் கொண்டாரே சங்கத் தமிழ்ப்புலவர் .
காவிரி என்று காகத்தின் பெயரை ஒரு நதிக்குச் சூட்டினாரே...
இவற்றுக்கெல்லாம் அடிநாதம் ஏதும் உண்டா..?
கூடி வாழும் குணமோ ? குலாவி உலவும் மாண்போ ?
பகிர்ந்துண்ணும் பண்போ ? தெரிந்தவரை இவைதான் .
ஆனால் , காலைப் பொழுது பிறப்பதைக் கரைந்து அறிவிக்கும் காகத்திற்குக் காலத்தின் கணக்கும் கைகூடிய வித்தை .
காரணம் இல்லாமலா காகத்தை சனீஸ்வரனுக்கு வாகனமாக வைத்தார்கள் ?
“ ஆயுள் காரகன் ” சனி பகவானுக்கு ஆராய்ந்து தானே அதை அமைத்தார்கள் .
பித்ருக்களின் உருவமாகக் காகத்தை மட்டுந்தானே சொன்னார்கள் பெரியோர்கள் .
ஆழ்ந்து நோக்கினால் அதற்கான விடை கிடைக்கும் , பொருள் புரியும் !
படைப்புகள் பாடும் பல்லவி விளங்கும் !
சக்தியும் சிவனும் பாதியான பின்பு , அதில் மீதிபாதி எங்கே போயிற்று ?
அந்த மீதிப்பாதிதான் உலகினில் ஆணாகவும் , பெண்ணாகவும் அவதாரம் எடுத்தது என்பார்கள்.
அதைத்தான் “ நாத விந்துகளாதிப நமோ நமோ ” எனப் பாடினார் அருணகிரிநாதர் .
சிவநீர் வாலை ரசம் என்று சித்தர்கள் சொன்னார்கள் .
எளிதில் கிடைப்பது எளிதாய் தோன்றுகிறது .
ஒன்றில் நில்லாமல் ஊசலாடுவதே மனதின் இயல்பு .
ஒன்றிருக்க ஒன்றைத் தேடினால் என்றும் அமைதியில்லை என்பதை உணராமல் ,
இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடும் பொய்யான வாழ்க்கை - இதில்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் .
கிளையிலே பாம்பு தொங்க அதை விழுதெனத் தொட்ட குரங்கு , மரத்தின் விழுதுகளையெல்லாம் பாம்பு என்று எண்ணிப் பயந்து , கிளைதோறும் தாவிக் குதித்து உச்சிக்கு சென்ற பின்பு கீழே தொங்கும் தன் வாலைப் பார்த்தது பழக்க தோஷம் , அதையும் பாம்பு என்று எண்ணி பள்ளத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது .
இந்தக் குட்டிக் கதை சொல்லும் செய்தி என்ன ?
விழுதுகள் இருந்ததும் கிளையில் பாம்பு தொங்கியதும் - இரண்டும் உண்மைதான் .
பாம்பினைத் தொட்டு பதறிய குரங்கிற்கு , பாம்பின் உருவமே மனதில் நின்றது .
விழுதுகள் அனைத்தும் பாம்பிற்குள் மறைந்தன ; விழுதுகளையெல்லாம் பாம்பு விழுங்கிவிட்டது.
குரங்கின் பார்வைக்கு ஆதாரமாய் இருந்தது பாம்பு .
மனதில் பதிந்த பாம்பின் பயமே, மீதிக் குரங்கினை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது .
பிரபஞ்ச தோற்றத்தை மறைக்கும் திரை, மனதில் ஓடும் எண்ணங்கள் - மாய லீலைகள் .
இதிலும் மனம் வேறு எண்ணம் வேறாய் காண்பது மனம் தானே !
பிரபஞ்ச விளக்கத்தில் காணுவதும் காண்பவனும் வேறல்ல , இரண்டு இடைவெளி இல்லாத ஒன்றே !
காற்றே ஆனாலும் ஜன்னலின் அளவைப் பொறுத்தே வருகிறது !
தொட்ட பின்பே பாம்பு என்று அறிந்த மனம் , சுட்ட பிறகே நெருப்பென்று அறிகிறது .
பட்ட பின்பும் , கெட்ட பிறகுமே பாவம் என்பது புரிகிறது , பரம்பொருள் நினைவில் வருகிறது !
அனுபவங்களுக்குப் பிறகு தான் உண்மை என்பது புரிகிறது !
நிழல்களை நீக்கி நிஜங்களை தரிசிப்பதே மெய்யுணர்வு , மெய்யறிவு !
மனது இயற்றும் “ மாடல்கள் ” தானே நிஜத்தை மறைக்கும் மாயத்திரை !
மூர்த்தி தலம் தீர்த்தம் என்பது முன்னோர்கள் சொன்ன பரிபாஷை .
காசிக்கு போ , கங்கையில் நீராடு என்பதெல்லாம் கைகாட்டும் ஞானவழிகள் !
காசிக்குச் சென்றவருக்கு எல்லாம் முக்தி கிடைத்ததா ?
கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் மோட்சம் பெற்றார்களா ?
அப்படி என்றால் கங்கையிலே குளித்து , காசியிலே வாழுகின்ற அத்தனை மக்களும்...?
உடம்பைக் கோவிலாக்கி , உள்ளே குடியிருக்கும் உத்தமனைக் காணாமல் , தேங்காய் உடைப்பதும் , தீபாராதனை காட்டுவதும் எதனைச் சொல்கிறது ?
பக்குவத்தின் பரிணாமம் !
பாதையைப் பார்த்து நடந்தால் , முள் என்பது பார்வையிலேயே தெரிந்துவிடும் .
குத்திய பின்பு தான் முள் என்று அறிந்தால் ...?
முள் என்ன தேடி வந்தா குத்தியது ?
அந்த நேரத்தில் முள் தான் சிந்திக்கச் செய்கிறது .
“ பார்த்து நட ” என்று பாடஞ் சொல்கிறது .
இனியாவது விழிப்பாக இரு என எச்சரிக்கை செய்கிறது .
துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொன்னது அதற்குத்தான் .
பட்டறிவு தருகின்ற பக்குவம் , தவம் செய்து கிடைப்பதை விட வலிமையானது !
எந்த துன்பம் ஆனாலும் , அது எந்த வடிவில் வந்தாலும் , அதன் பின்புலத்தில் தூண்டும் தவசக்தி ஒன்று இருக்கிறது .
ஒரு வகையில் அது கூட விதிக்கப்பட்ட விதிதான் .
எல்லாமே விதியின் கோடுதான் காலத்தின் அரசாங்கத்தில் !
அந்த விதியின் வேகத்தைக் குறைப்பதே தியானமும் , பிரார்த்தனையும் !
எதையும் உற்று நோக்கக் கற்றுக்கொண்டால் , உனக்கு முன்னே அறிவு முன் செல்கிறது !
அதற்கு இன்பமும் துன்பமும் ஒன்றுதான் !
“ மாங்காய்ப் பால் உண்டு
மலைமேல் இருப்போர்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி ? – குதம்பாய் !
தேங்காய்ப் பால் ஏதுக்கடி ?”
- குதம்பைச் சித்தர் .
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html
தேங்காய்ப்பால் மாங்காய்ப் பால் விளக்கம் பெறவில்லையே. மாங்காய்ப் பால் என்பது மண்டை சுரப்பியிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை மாங்காய் வடிவில் அமைந்துள்ள உள் நாக்கால் சுவைத்துப் பேரின்பம் பெறுவதாகும். இந்த நிலையை அடைந்த மேன்மக்களுக்கு, சாதாரண போதை தரும் தேங்காய்ப் பால் (கள்) சுவைப்பதால் பயனில்லை என்பதாகும். சரிதானே?
ReplyDelete