Thursday, 29 November 2018

சித்தர்கள் தரிசனம்..! ஏழாம் பாகம்

                                           தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                          சித்தர்கள் தரிசனம்..!
                                                        ஏழாம் பாகம்


             உலகம் இயற்கையின் தோட்டம் .
அங்கே அழகு சிரிக்கின்றது ; அருள் ஒளிர்கின்றது .
இவை யாவுமே இயற்கையின் கை வண்ணம் , கலை வண்ணம் .
மண்ணின் கலை வண்ணம் மரங்கள் ,
பூவின் கலை வண்ணம் நறுமணம் ,
விண்ணின் கலை வண்ணம் வானவில் ,
பண்ணின் கலை வண்ணம் பாடல் ,
கல்லின் கலை வண்ணம் சிற்பம் ,
சொல்லின் கலை வண்ணம் கவிதை ,
ஸ்வரத்தின் கலை வண்ணம் இசை ,
தூரிகையின் கலை வண்ணம் ஓவியம் ,
எண்ணத்தின் கலை வண்ணம் எழுத்து ,
இறைவனின் கலை வண்ணமே மனிதன் !
எங்கும் எதிலும் கலைகளின் சிரிப்பு ! கலைக்கோயில் மணியோசை !

   வீணை இல்லாத கலைமகளா
குழல் இல்லாத கோவிந்தனா 
மத்தளம் இல்லாத நந்தியா
தம்புரா இல்லாத நாரதரா
நடனம் இல்லாத நடராஜரா
ஆண்டவனும் ஆலயங்களும் கூட கலைகளின் பீடங்களே !
ஆனால் அவை என்றும் கலையாத கலைகள் !
குன்றாத இளமையும் , குறையாத வயதும் ,
கலையாத கல்வியும் , கழுபிணி இல்லாத உடம்பும் 
ஒரு வகை வாழ்வியல் கலைகளே ! -
அது தான் நிலமிசை நீடு வாழும் சாகாக்கலை ! -
சித்தர் பெருமக்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள தத்துவப் பேழை , திருநடனப் பெட்டகம் !

    இக்காய சித்திக் கலையினை -
ஓங்கார உட்பொருள் ; நமசிவய எனும் ஐம்பூத பௌதிகம் , உயிரெழுத்து ஊமை எழுத்து ; ஓரெழுத்துக் கருப்பொருள் ; சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் எனப் பல்வேறு வகைகளில் பரிபாஷை சொற்றொடராக சித்தர் இலக்கியங்கள் கூறுகின்றன .
ஓங்காரப் பொருளே அகர உகர மகரக் கருப்பொருள் என்பதும் (எட்டு , இரண்டு ) , உடம்பினுள்ளே இந்த உறு பொருளைக் காண்பவன் - ஆதி ஒளியாகி , ஆள்வானும் தானாகி , மேதினியில் மெய்கடந்து வாழ்வான் என்பது , சித்தர்கள் வாழ்ந்து காட்டிய வரலாற்றுத் தடயங்கள் .

“ வறுமை போலுண்டுடுத்து உபரசத்தைத் தேடு
      மகத்தான யோகிகளைக் கண்டு பேசு
நிறுமையாய் அவருடனே வார்த்தை பேசு
      நினைவழிந்து போகாமல் உபரசத்தைக் கேளு
வெறுமைபோற் சீவனத்துக்கு இடத்தைக் கேளு
      வேதாந்த நுட்பத்தின் விபரங் கேளு
திறமையாய் மலைதனிலே சஞ்சரித்து
       சூதத்தின் சாரணைக்கு விபரங் கேளே
                                                           - போகர் நிகண்டு
            
       இதன் பொருளை உணர்த்தித் தொட்டுக் காட்டும் ஆசான் இல்லாமல், இதனை அடையமுடியாது என்பதும் உண்மை , மறுப்பதற்கில்லை .
ஆனால் அவ்வித சற்குருவிற்கும் அநேக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் உண்மை .
ஏழ் உலகு கிடைத்தாலும் எளிதில் உபதேசிக்கக்கூடாது . 
ஏனெனில் இது வானம் , பூமி , மலை , கடல் எல்லாவற்றினும் பெரிது , பெரிதினும் பெரிது !
ஏழ் நிலைக்கு அப்பால் உள்ள தண்ணமுது !
வானோர்க்கு அரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற நவநீத அமுதம் !
ஞானமும் யோகமும் , வாதமும் காயமும் , தியானமும் கர்மமும் சித்திக்கும் தேனமுது !
ஆசானை ஈசனாய்க் காணும் குருபக்தி நிறைந்த குணசீலருக்கே அருளப்படும் ஞானாமிர்தம் !
பரம்பொருள் மனம் வைத்தால் கோடியில் ஒருவருக்குக் கிட்டும் !

“ பாரப்பா வல்லாரையார் தான் காண்பார்
       பக்குவமாய் குரு சொல்லக் காணவேணும்
நேரப்பா குருவுரைத்துக் கண்டாலுந் தான்
        நினைவாக மனதுறுதியாக வேணும் 
காரப்பா மனதுறுதி யானாலுந்தான்
        கைபாகஞ் செய்பாகங் காணவேணும்
ஆரப்பாவானாலுங் குருவில்லா வித்தை
         அசத்தியந்தான் சத்தியந்தானாகா தெண்ணே ”
                                       -  அகத்தியர் அமுதகலைஞானம்

                      சித்தர்கள் தரிசனம் செய்வோம்... வாருங்கள் !
இப்போது நாம் தரிசிக்க இருப்பது சிவனுமையின் நேரடிச் சீடர் நந்தியெம்பெருமான் !
சித்தர் குருகுலத்தின் துணை முதல்வர் . 
சித்தர் பரம்பரையினைக் கட்டமைப்பு செய்த சிற்பி .
நேரடிச் சீடர் மட்டுமல்ல , நேர்முகச் செயலரும் ஆவார் .
ஆதி பராபரத்தின் அருகிலிருந்து கற்ற சோதிச் சுடரொளி .
ஆதி அரன் பாதத்தில் பெற்ற சகல கலை ஞானமெல்லாம் , பின் வந்த வேதியர்க்குப் புகட்டிய கோனான குரு நாதர். 
சிவன் உமைக்கு உபதேசித்த சாத்திரத்  தோத்திரங்கள் யாவும் கற்று , தம் சீடர்கள் வாயிலாக இப்பூவுலகிற்கு அருளிய பேருபகாரி .

“ நட்டேனே தமிழ்ப்பயிராய்  விளைய வைத்து 
       நன்மைபெற யிப்பொருளைக் கூறினேனே .
                                               - நந்தீஸ்வரர் நிகண்டு 


        நந்தீஸ்வரர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்.  கேட்போமா ...

   என் பெயர் நந்தி .
தமிழ்நாட்டு மூலச் சித்தர் மரபில் முதல் சித்தன் .
அதனைக் கட்டமைத்து நிர்மாணித்த ஆர்க்கிடெக்ட் !
ஆதிசிவன் உமையே என்னுடைய சற்குரு .
ஆதி குரு அருளிய தீட்சை தியானமெல்லாம் , இக்குவலயத்தோர் பயன் பெறவே குருமுறை கைமுறையாய் சித்தர் மரபிற்கு அருளிச் செய்தேன் .
தன்வந்திரி , திருமூலர் என்னிடம் பயின்ற மாணாக்கர்கள் .
சண்டிகேசர் எனது முதன்மைச் சீடர் .

“ சித்தியாம் நந்தி தேவனென் றென்பேர்
     அத்தனார் கூப்பிட் டருளினார் வாதம் 
பெத்ததினாலே பெரெனக் காச்சு 
     முத்தமி ழதனால் மொழிந்தமுந் நூறே ”
                         -  நந்தீஸ்வரர் கருக்கடை சூத்திரம் 

“ கேளப்பா முப்புரமெரித்த சிவன் சொல்ல
         வெகு விசுத்தியுமையவளும் விளங்கினாள் பாரே 
விளங்கினாள் நந்தியவர்க்குபதேசஞ் சொன்னாள் 
         விபரமதாய் நந்தீசர் தன்வந்திரிக்கருள ,
வழங்கினார் தன்வந்திரி பகவானுமையா ,
         வசனித்தாரசுவனி தேவருக்கருள ,
உளங்கினாரசுவனி தேவர்தானும்
          உபதேசமெந்தனுக் கருளினார் பார் 
புளங்கினோ மென்பெய ரகத்தியன்றானையா 
          புலத்தியனே யுந்தனுக்குப் புகட்டினோம் நாமே ”
                                              - அகத்தியர் சௌமிய சாகரம்

    ஆதியே குருவாய் அமைந்தது நான் பெற்ற பெரும் பேறு .
அருளான குரு பதத்தில் அருளைப் பெற்றேன் , அறியாதன எல்லாம் அறிந்தேன் .
கோனான குருவே எந்தனுக்குத் தந்தைக் கொப்ப திருவானார் .
பூத்த மலர் வாசனை போல் பூரணத்தைப் புகட்டினார் .
மனிதன் என்ற பேர் போச்சு , மாநிலத்தில் நானுமொரு முனியுமானேன் .
ஆதியந்தம் நடு மூன்றுப் பொருளைக் கருவாகத் தானறிந்தேன் , அண்டர் கோன்தயவினாலே .
காணரிது , தோணரிது எவராலும் , மூலச்சூட்சம் காண்பவரே சிவயோகி , சிவன்முத்தர் .
தேனென்ற ஞானம் ஊட்டி , தெவிட்டாத பூரணத்தின் வகையும் புகட்டினார் .
மௌனமென்ற வித்தை கூறி மனமடங்க திடம் அளித்தார் .
அருளான முப்பொருள் ஈந்து , பொருளான போதம் அருளினார் .
யார்தான் அறிவார்கள் குருவின் மேன்மை ?
ஆதியிலே விட்டகுறை இருந்து அவரைச் சார்ந்தால் , சோதியெனும் பொருளீவார் , புகழும் ஈவார் , ஊனழியாது உடல் அழியாது , ஊழி தோறும் ஓங்கும் உத்தமச் சித்தி அளிப்பார் .

“ சித்தென்றால் சித்தரிவ ரரிது கண்டாய் 
         சிவமென்ற நாமமது மரிது கண்டாய் 
பித்தென்றாற் பிரணவமு மரிது கண்டாய் 
         பின்னு முன்னும் நீக்குவது மரிது கண்டாய் 
வித் தென்றால் விளைவது மரிது கண்டாய் 
         விளைந்தேறித் தேறுவது மரிது கண்டாய் 
நித்தென்ற நிசாகவச மரிது கண்டாய் 
         நிராமயமாம் நிர்மலமு மரிது தானே ”
                                     - நந்தீஸ்வரர் நிகண்டு 

              மனிதர்களைவிட மரங்களுக்கு வயது அதிகம் .
மரங்களை விட மலைகளுக்கு வயது அதிகம் .
மலைகளை விட கடலுக்கு வயது அதிகம் .
கடலை விட பூமிக்கு வயது அதிகம் .
காரணம் அவை மௌனத்தால் பேசுகின்றன , தேவையில்லாமல் பேசுவதில்லை ;
எப்போதும் எதற்கெடுத்தாலும் react பண்ணுவதில்லை . 
சலனம் அடைவதில்லை .
அதனால் சஞ்சலம் இல்லை .
அது தானே “ தனித்திரு ” தத்துவம் ; “ சும்மா இரு ... சொல்லற ” ஞானம் .

    மௌனம் ஒரு மகத்தான வரம் , தெய்வீகக் கலை .
அசைவது பலவீனத்தின் அடையாளம் ; அசையாமை உறுதியின் உத்திரவாதம் .
அசையாத உறுதிதானே இறுதியில் ஞானப்பழத்தை  வென்றது !
கோவிலின் சிலை மௌனத்தால் பேசுகிறது .
பக்தனின் மனந்தான் பேசுகிறது , புலம்பித் தீர்க்கிறது .
ஒரு வேளை சிலை ஒவ்வொரு பக்தரிடமும் பேசத் தொடங்கினால் , சலிப்புதட்டும் .
அதன் மீதான மதிப்பு குறையத் தொடங்கிவிடும் - இது தானே உண்மை !
கோவிலுக்குச் செல்வது தெய்வம் தெரிவிக்க விரும்புவதைத் தெரிந்துகொள்ள .
உனது குறைகளைக் கொட்டித் தீர்ப்பதற்கு அல்ல . அது தெய்வமே அறியும் .
பிரார்த்தனை என்பது petition அல்ல.., வெறும் மந்திரத்தால் மாங்காய் விழ.
அது உள்ளொளி பெருக்கும் உன்னதக் கலை .
பரம்பொருளை இணைக்கும் பக்திப்பாலம் !

     பேசாமல் இருக்கும் மௌனமே பெரிய விஷயங்களைச் சொல்கிறது - eloquent silence !
சலனமற்ற மனமே சாதனைகள் புரிகின்றது .
பேசுபவனுடைய வார்த்தைகளே அவனைக் காட்டிக் கொடுத்து விடும் . காரணம் ?
முதல் நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை .
நேற்றொரு தோற்றம் , இன்றொரு மாற்றம் .
அவை சலனத்தின் சின்னங்கள் , தடுமாற்றத்தின் அடையாளங்கள் .
காற்றடித்தால் தென்னை சாய்கிறது , நாணல் சாய்வதில்லை .
கோபுரங்கள் சாய்வதில்லை !  கனிந்த மரம் வீழ்வதில்லை !
மலைகளில் வாழ்பவர்கள் மருத்துவரைத் தேடுவதில்லை .

சலனங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் கர்த்தா யார் ? “ நான் ” தான் !
“ நான் ” தன்மையை வென்றவனுக்கு மௌனம் வசப்படுகிறது.., 
இயல்பாகவே தியானம் கைகூடுகிறது .
அதன் பின் மௌனமே பேசுகிறது ; தியானமே செயல் புரிகிறது .
மனதின் meditative quality மலர்ந்து மணம் வீசுகின்றது .
அதில் அவன் தன்னை அறிவதால் , எதுவும் பேசுவதில்லை , பிறரிடம் எதுவுமே கேட்பதில்லை .
தேவைகளுக்கு அடிமை ஆகாமல் அவற்றை வென்று நிற்கும் வீரத்துறவி ஆகிறான் .

“ தானென்ற மூலியொன்று ஒன்றேயாகும் 
     தன்னறிவு அறிவதுவும் ஒன்றேயாகும் 
கானென்ற பொருளறமும் ஒன்றேயாகும் 
     கன்னியர்கள் நாதமது ஒன்றேயாகும் 
வானென்ற மண்ணும் விண்ணும் ஒன்றேயாகும் 
      வாய்ப்பதுவும் மாய்ப்பதுவும் ஒன்றேயாகும் 
நானென்ற ஆணுவமே ஒன்றைநீக்கி 
      நல்குமப்போ சுழிமுனையில் நாதங்காணே ”
                                             -  நந்தீஸ்வரர் நிகண்டு

      ஆத்ம பலம் என்பதே தன்னை உணர்தல் தானே !
தன்னை உணர்ந்தவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்கின்றான் - அது அவனுடைய யோகதர்மம் .
இந்த தர்மம் தலைமாட்டில் நின்று காக்கும் !
“ கடமையைச் செய் ” என்பது தானே கண்ணனின் ஞானமொழி !
ஆத்ம ஞானம் அடைந்தவனுக்குப் பிறரிடம் கேட்க என்ன இருக்கிறது ?
அவனுக்குக் கொடுப்பதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது ?
இவன் ஒரு ஓடும் நதி , உதிக்கும் ஞாயிறு , சுழலும் பூமி !
ஓடுகின்ற வண்டியில் ஓடாத யோகி மனம் !

வண்டிதான் ஓடுகிறது . வண்டிக்குள் இருக்கும் உன் மனமும் உடன் சேர்ந்து ஏன் ஓடுகிறது ?
என்றேனும் எண்ணிப் பார்த்தது உண்டா ?
வாழ்த்துக்கள் !

“ வாச்சுதென்று மகிழாதே மனம்பொல்லாது
        வாயாது வாயாது வசனித்தாக்காற்
போச்சுதென்று மவுனமுற்றா லுறையுஞ் சூதம் 
        பொருளாகும் மாத்துமிடப் பொன்னாம் மண்ணும்
காச்சுதென்று மகிழாதே கல்லதானால்
        கண்துலங்கும் பாத்துக்குங் கனியதாகும் 
ஏச்சுதென்று புகலுவா யாவரோடும்
        இணங்கினவர்க் குரைத்திட்டா லிதுதான்போமே ”
                                        - நந்தீஸ்வரர் நிகண்டு

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html

No comments:

Post a Comment