தமிழ் முனிவன் தாள் பணிந்து !
ஆள்வது கோள்களே..!
(Planetary Magic)
அண்ட வெளியில் விளைந்த அற்புத சக்திகளே ஐம்பெரும்பூதங்கள்.
ஐம்பூதங்களின் ஆற்றல் இயற்றிய ஞான சக்திகளே ஒன்பது கோள்கள்.
இவர்கள் காலக் கணக்காயனின் கணக்கு அலுவலர்கள்.
அவனியில் ஐந்தொகைக் கணக்குகளை ஆய்வு செய்து ஆட்சி நடத்தும்
விண்ணியல் விஞ்ஞானிகள்.
வாழ்வின் வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்யும்
வான்வெளித் தணிக்கைத் துறையே இக்கோள்களின் மண்டலம்.
வித்தாகி, முளையாகி, விளைவதாகி, விளையும் வினைப்பயன்களை
விநியோகம் செய்திடும் இயற்கையின் மனச்சாட்சிகளே இவ்வொன்பது கோள்கள்.
பிறப்பிற்கு முன்னும் அவைகளே தீர்மானம் செய்தன.
இறப்பினையும், இறப்பிற்குப் பின்னும் அவைகளே தீர்மானம் செய்கின்றன.
ஒன்பது கோள்களும் அவைகளுக்கான இருபத்தேழு நட்சத்திரங்களும்,
அவற்றினை உள்ளடக்கிய பன்னிரு ராசிகளும் காலத்தின் கணக்குக் கையேடு.
தனக்கொரு பாதையினைத் தெரிவு செய்து, தாயின் கர்பத்தில் கருவாகுமுன்பே
வாழ்வின் மேடு பள்ளங்கள், இன்பதுன்பங்கள் அனைத்தும் நிச்சயிக்கப்படுகின்றன, நிர்ணயிக்கப்படுகின்றன.
“ Astrology can only indicate the ways in which the things may happen.
Who else except the Creator can say with certainty what will definitely happen ”, என்பது ரிக் வேதத்தின் voice.
நிகழ்வுகளின் வாய்ப்பினைச் சுட்டிக் காட்டுவதே சோதிடம்;
அவற்றின் நிச்சயத்தினை அறுதியிட்டுக் கூற பிரம்மாவைத் தவிர யாரால் இயலும்
என்பதே இதன் பொருள்.
காலம் எனும் Cosmo physics உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும்
ஒரு வாழ்க்கைப் பாதையினை வகுத்தளிக்கிறது.
காலம் வகுத்த பாதையில்தான் நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது.
வாழ்வின் நிகழ்வுகள் எதுவும் அவ்வப்போது புதிதாகத் தோன்றுவதில்லை.
காலப் பயணத்தில் ஏற்கனவே அங்கங்கே இந்த நிகழ்வுகள் ஒத்திகை செய்யப்பட்டு
நம் வரவிற்காகக் காத்து நிற்கின்றன.
நாம் நடக்கும் பாதையில் அவற்றை சந்திக்கிறோம்.
இதுவே காலம் பற்றிய “ The Dimensional Theory ”.
நம்முடைய பெற்றோர், உற்றார், உடன்பிறந்தோர், உறவினர், நண்பர்கள், பகைவர்கள் அனைவரும் காலங்களே.
காலங்களே ஆனந்தத்தை அளிக்கின்றன. அவையே அழவும் வைக்கின்றன.
காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.
“ ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் .” என்கிறது தமிழ் மறை.
“ நன்றான நவக்கிரக மொன்ப துக்கும்
நலமான அனுக்கிரக நிலையுங் காட்டிக்
குன்றான அனுக்கிரக வாசல் காணக்
குவிந்துமன அறிவதனால் விண்ணென் றூணே ”
- சுப்பிரமணியர் ஞானம் .
ஜோதிடம் சரியாகப் பார்க்கப் படுமானால் இவை மனிதன் என்ன,
இயற்கை மண்டலத்தையே கணித்து விடும்.
விஞ்ஞான அறிவினை விஞ்சி நிற்பது விண்ணியல் அறிவு !
ஜாதகத்தில் 1,5,9 ஆகிய திரிகோணங்களின் முக்கோணமே
ஜாதக அமைப்பின் அடிநாதம்; ஜாதகனை உயர வைக்கிற உந்து விசை.
1 ஆம் இடமாகிய லக்னம் ஜாதகனின் உயிர்வினை அதனை நிறைவேற்றும் ஆற்றல்.
5 ஆம் இடம் பூர்வ புண்ணியங்களின் சேமிப்பு-reservoir-எடுப்பினை.
9 ஆம் இடம் அவற்றைப் பிராப்த வினையாக்கி அனுபவிக்கக் கொடுக்கிற கொடுப்பினை.
5 ஆம் இடத்து அணைக்கட்டு சேமிப்புநீரினை சுமந்து வரும் ஆறு 9 ஆம் இடம்.
அதனால் பாசன வசதி பெரும் விளைநிலம் லக்னமாகிய உயிர்வினை.
அணைக்கட்டு காய்ந்தால் ஆற்று நீர் காய்ந்து விடும்
ஒரு ஜாதகத்தின் சேமிப்பு வங்கியே 5 ஆம் இடமான பூர்வ புண்ணியம்.
5 ஆம் இடம் சேமிப்பு; 9 ஆம் இடம் விநியோகம்; லக்னம் பயனாளி.
இந்த மூன்று திரிகோணங்களின் முக்கோணத்தில் கட்டமைந்ததே ஜாதகம்.
ஆனால் ஒரே நேரத்தில் பிறக்கின்ற அத்தனைக் குழந்தைகளும் ஒன்றுபோல்
இருப்பதில்லையே ஏன் ?
ஒரே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே கிரக அமைப்புதான் ஏறக்குறைய இருக்கும். கிட்டதட்ட ஒரே ஜாதக அமைப்புதான்.
அவ்வாறெனில் படைப்பில் ஏன் இந்த பாகுபாடுகள் ?
உருவத்தில், பிறப்பிடத்தில், வாழ்க்கை வசதியில், தேக ஆரோக்கியத்தில்,
ஏன் இத்தனை வித்தியாசங்கள் ?
இவ்வேறுபாட்டினை நிகழ்த்தும் காரணி (Factor) எது ?
நேரு பிறந்த நேரத்தில் பிறந்தவர் எல்லோரும் பிரதமராகவில்லையே ஏன் ?
எல்லோருக்கும் ஒரே ஜாதகம் தானே.. ஒரே கிரக அமைப்பு தானே..
திருப்பதியிலும், திருக்குறுங்குடியிலும்(ஆதி திருப்பதி)இருப்பவர் ஒரே பெருமாள்தான்;
இரு இடங்களுமே கொங்கண நாயனார் அடங்கியுள்ள ஜீவசமாதிகள் !
ஆனால் ஒரு கோவிலில் மட்டும் கோடிகள் குவிகின்றனவே - ஏன் இந்த பாகுபாடு?
இத்தனைக்கும் ஆதி திருப்பதி என அழைக்கப்படுவது திருக்குறுங்குடி.
கோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது.
கோயிலின் ஜாதகம், கோயிலைக் கட்டியவன் ஜாதகம், குருக்களின் ஜாதகம்
அனைத்தும் சேர்ந்த collective karma எப்படியோ, யார் கண்டது ?
கண்ணுக்குத் தெரிவது Cumulative effect தானே !
“ பாரான சித்தரடையாளஞ் சொல்வேன்
பரனருளான் மனிதர்களிலொருவ ராவார்
தாரான துலாராசி பூர்வஞானந்
தான்றொடர்ந் தவனிமிசைத் தோன்றிமேலும்
வீறான விட்டகுறை தொட்ட நேர்மை
விளங்கவே லபித்தக்காற் சித்தியாகும்
ஆரான பிராணமய விந்து வாலே
யாச்சுதையா மாயையிலே மனிதர் வாழ்வே ”
- அகத்தியர் பரிபாஷை திரட்டு
இந்தச் செய்யுளில் அகத்தியர் உபதேசிப்பது, துலாராசியில் பிறந்தவர்களுக்கு
சிவ தீட்சைகள் எளிதாக சித்திக்கும் என்பதாகும்.
அவ்வாறாயின், - “ விட்டகுறை ”
“ அவரவர்கள் செய்த தவத்தால் ”
“ அவனுடைய விதியிருந்தால் வருகுமென்றே ”
“ தோணவே விட்டகுறை இருக்குமானால் ”
“ பொலிவான புண்ணியர்க்கு வாய்க்கும் பாரே ”
“ என்னவே விட்டகுறை நேர்ந்து தானால்
எழிலான நூல் இதுதான் வாய்க்கும் பாரு ”
“ வாறான அலகத்தில் விட்டகுறை யோர்க்கு
வந்து தென்றால் தச தீஷை மைந்தா கேளு ”
என அகத்தியர் பன்னீராயிரம், அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி,
அகத்தியர் பரிபாஷை திரட்டு நூல்களில் குறிப்படுவது எதனை ?
வலியுறுத்துவது எது..?
விட்டகுறை, விதி, தலையெழுத்து, இறையருள் எனப் பல்வேறு பெயர்களால்
அழைக்கப் படுவது எது ?
விட்டகுறை என்பது தான் என்ன ?
அதன் உட்பொருள் தத்துவம் யாது ?
விட்டகுறை இருந்தால் தானே தொட்டுக் காட்ட முடியும் !
விட்டகுறை என்பது இன்றியமையாத் தகுதிகளை வரையறுத்துக் கூறும்
நிபந்தனைச் சொற்றொடர்.
இச்சொற்றொடரில் - குரு பக்தி, குருவருள், இறையருள், பரஞானம்,
தன்னை அறிதல், ஆத்ம ஞானம், குருபரம்பரைத் தத்துவம், செறிந்த மொழி அறிவு-
ஆகிய இவற்றுடன் intelligibility- இவை அனைத்தும் உள்ளடக்கிக் கூறப்பட்டுள்ளன.
இதுவே விட்டகுறை சொற்றொடரின் சூக்குமத்தத்துவம் !
விட்டகுறையின் விளைநிலமே ஜாதகத்தின் 5 ஆம் இடம் - பூர்வ புண்ணிய
அணுத் திரட்சி !
“ தானென்ற அண்டபிண்டம் குருவைச் செய்ய
தவம்வேணுஞ் செபம்வேணுந் தயவுவேணும்.
மானென்ற அக்கினியா முறையைக் காண
மதிவேணும், விதிவேணும் வாசம் வேணும்
நானென்ற ஆணவத்தை அடக்கவேணும்
நல்லரிவாற் சாஸ்திரத்தை யுணர வேணும்
தேனென்ற சற்குருவை காக்கவேணும்
சித்தியாம் பன்னிரண்டுஞ் சிறக்க முற்றே ”
- அகத்தியர் முப்பூ வழலை சூத்திரம் .
“ A favourable destiny recalling the favourable astrological conditions
is a requisite ...” Alchemy - E.J. Holmyard
விட்டகுறையின் வாசஸ்தலம் எது ?
அதன் இருப்பிடம் எங்கே ?
இதனை அறிந்திடவும் விட்டகுறை வாய்க்க வேண்டும்.
விதிக்குள் பொதிந்துள்ள இன்னொரு விதி - சூக்கும விதி.
இந்த முடிச்சை அவிழ்க்க வல்லவர் இறை வடிவான குரு.
விட்டகுறையின் ஞான பீடத்தினைத் தொட்டுக்காட்டும் குரு வேண்டும்.
அதுவும் விட்ட குறை இருந்தால் தானே தொட்டுக்காட்டமுடியும்.
வருவது, தானே வரும்
வருவதுதானே, வரும் ..!
கட்டி முடித்த வீடு; பூட்டிக்கிடக்குது கதவு; பூட்டின் சாவி குருவின் கையில்-
அது ஞானத் திறவுகோல்!
பூட்டைத் திறக்கும் வழி தெரியாமல், வெளித்திண்ணையிலேயே உண்டு உறங்கி
காலம் கழிகின்றது... சிந்தனைக்கு !
“ நெல்லி இருக்குது காட்டுக்குள்ளே,
கருநெல்லி இருக்குது வீட்டுக்குள்ளே...
பூட்டை திறப்பது கையாலே,
மனப் பூட்டை திறப்பது மெய்யாலே
வீட்டைத் திறக்க முடியாமல்,
விட்ட விதியி தென்கிறார் ஞானப்பெண்ணே !”
– ஞானக்கும்மி
சுவாசக்கணக்கில் 21,600 சுவாசங்கள் நடக்கின்றன என்றும், அக்கணக்கின்படி நடந்தால் மனிதன் ஒன்பது கிரகங்களின் தசாபுக்திகளையும் கடந்து 120 ஆண்டுகள் (Full cycle) உயிர்வாழ முடியும் என்று கூறப்படுகின்றது.
ஐம்பூதங்களில் ஒன்றான காற்று உட்ச்செல்வதால் நுரையீரல் சுருங்கிவிரிந்து
சுவாச மண்டலம் இயங்குகிறதா ?
அல்லது நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாச மண்டலத்தின் இயக்கத்தால்
காற்று உள் இழுக்கப்படுகின்றதா ?
அதாவது வளிமண்டல சுவாசக்காற்று நுரையீரலை இயக்குகிறதா?
அல்லது நுரையீரலின் இயக்கத்தால் காற்றின் போக்குவரத்து நிகழ்கிறதா ?
அவ்வாறாயின் நுரையீரல், இருதயம், இரத்த ஓட்டம் - இவற்றினை இயக்குகின்ற இயக்குநரகம் எது ?
அந்த இறைசக்தி ஏன் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது ?
இதுவும் விட்டகுறைதான் !
கிரகச்சுழற்சியில் சுழலும் உடலியக்கம் !
இந்த சுவாசக்கலையினுள் அடங்கியிருப்பதே சாகாக்கலையின் தத்துவம் !
அதனை வென்று நிற்பது சித்த நெறி; மானுட வாழ்விற்கு வழங்கபட்ட மகத்தான வரம்!
அமைதியில் நடப்பதே ஆழ்ந்த சுவாச லயம் .
இந்த லயம் தான் மூச்சுக்கலையின் அடிநாதம்; சாகாக்கலையின் நாதமணி !
“ ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே ”
- திருமந்திரம்
காற்று இயக்கினால் உடம்பு அடிமையாகிறது.
காற்றை இயக்கினால் வளி மண்டலமே அடிமையாகிறது - ஐம்பூதங்களும்!
இதில் தான் சித்த நெறி முத்திரை பதித்தது.
காலத்தை வென்றுக் கோலோச்சியது !
இது இயக்கத்தில் இயங்காமை;
சுழற்சியில் சுழலாமை;
செயலில் செயலாற்றமை எனச் சொல்லப்படுகிறது .
Action in inaction theory. Inaction is absolute action.
இதுவே மகா விஷ்ணுவின் யோகநித்ரா குறியீட்டுத் தத்துவம் !
நவக்கோள்களை இடமாற்றம் செய்து இயற்கையை வென்று காட்டினார்
விண்ணியல் வித்தகர் இடைக்காடர் பெருமான்.
அவருடைய ஞான சக்திக்கு முன்பு நவக்கோள்கள் தோற்றுப்போயின.
அது ஞான சக்தியின் திருவிளையாடல்!
அண்ட வெளியின் ஞானசக்தியே கால ஞானத் தத்துவம்.
அதனை வாழ்வியலாகக் கற்பித்த பேராசிரியர்களே சித்தர் பெருமக்கள்.
மார்கண்டேயன், அனுசுயா, சத்தியவான் சாவித்திரி இவர்கள்
காலத்தினை வெற்றி கொண்டது ஒருவகையில் சாகாக்கலை
தத்துவத்தின் விளக்கங்களே..
ஸ்தூல வடிவங்கள் தான் வேறு சூட்சும ரகசியம் ஒன்றுதான் !
கிரக மண்டலத்தில் சனி வாயுக்கிரகம்.
சனீஸ்வரன், ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகின்றது .
இதனைக் karmic planet எனச் சோதிட வல்லுநர்கள் அழைப்பர்.
கர்ம வினைக் கணக்குகளின் படி, ஆயுளைத்தீர்மானிக்கும் ஆயுள்காரகன்.
ஜாதகத்தில் 1,8 ஆம் வீடுகளோடு தொடர்புடைய கிரகம்.
கர்மக்கொள்கையின் படி, கர்மவினைகள் யாவும் காலப்
பொதுப்பேரேட்டின் (General ledger) கணக்குப் பதிவுகள்.
இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கணக்குத் தலைப்பு (Personal A/C).
கணக்குத் தலைப்புகளின் கீழ் நிகழும் transactionsக்கு ஏற்ப
வாழ்க்கையில் வெற்றி தோல்விகள், இன்பதுன்பங்கள் எல்லாம்.
அரசன் ஆண்டி ஆவதும், ஆண்டி அரசனாவதும் இதன் விளையாட்டே !
வீதியிலே நிற்பவனைக் கோட்டையில் கொடியேற்ற வைப்பது இதன் விதியே!
கணக்கு ஒன்று தான், தலைப்புகள் வேறு !
உமர்கயாம் பாடல் வரிகளை சற்று நினைவு கூறுங்கள்..!
தாகம்.., தாகம் என்று அலைவதால் தாகம் தீர்வதில்லை.
தண்ணீரே தாகம் தீர்க்கும்.
நெறிபட்ட சற்குரு நேர் வாய்த்திடில், ஊழ்வினை தன்வினையாகத் தானே அழிகின்றது.
அவர் தன்னுடைய ஞான வினையாற்றலில் அருள்கதிர் பாய்ச்சி
ஊழ்வினை, சூழ்வினைகளைத் துடைத்து அழிக்கிறார்.
ஊழிற் பெருவலி, ஞான சக்தியின் இயக்கம் !
ஞான சக்தியின் இயக்கத்தில், விதியும் காலமும் நன்மை பயக்கும் விதத்தில்
மாற்றிச் சுழல்கின்றன, மாறிச்சுழல்கின்றன .
இதில் தலை மேல் அயன் கையெழுத்து தானே அழிகின்றது.
அப்போது நாளுக்கும் கோளுக்கும் இனி அங்கு என்ன வேலை ?
“ பாரப்பா உலகத்தில் ஞான மென்பார்
பரத்தின் இருப்பிடத்தைப் பாரார் பாரார்
சாகப்பா உலகத்தில் யோகம் செய்வார்
சார்ந்திருக்கும் பரஞ் சோதி தன்னைக் காணார்
ஊரப்பா குளிகை யென்றே உழலுவார்கள்
உத்தமனே உள்ளுயிரை அறிய மாட்டார்
நேரப்பா சரிதை யென்பார் தன்னுக்குள்ளே
நெருப்பாறும் திருக் கோயில் கண்டிலாரே .”
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
சிவசக்தியை சிந்தையுள் நிறுத்தி, சித்தர்கள் அருளாலே சித்தர்கள் தாள் பணிந்து,
அவர்கள் குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடிவைத்துத் திறமிது பொருளெனக் காட்டினால் மட்டுமே, பரிபாஷைகளுக்குப் பொருள் விளங்கும்;
மறைத்து வைக்கப்பட்டவைக் கருத்துக்குப் புலனாகும்.
வாலறிவன் நற்றாள் தொழும்போது, கற்றதனாலாய பயன் கைகூடும் !
இதுவே விட்டகுறையின் விளக்க உரை..!
விளக்குவது விஞ்ஞானம்; உணர்த்துவது மெய்ஞானம் !
நன்று!! வாழ்த்துக்கள்!!
“ தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே .”
- திருமந்திரம்
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
No comments:
Post a Comment