தமிழ் முனிவன் தாள் பணிந்து !
எங்கே.. நிம்மதி..!
Inner Harmony
ஓங்காரம் அண்டங்களைப் பிறப்பித்தது.
ஆதி சக்தி ஐம் பூதங்களைப் படைத்தது.
ஐம்பூதங்கள் கோள்களை இயற்றியது.
இவற்றுடன் இணைந்து அணுத்திரள் மனிதனைப் படைத்தது.
எது மனதைப் படைத்தது ?
பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்.
பாயும் மீன்களில் படகினைக் கண்டான் .
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான் .
எதனைக் கண்டான் ? மனந்தனைப் படைத்தான் ?
மனதைப் பெற்ற பின்னே அமைதியைக் காணவில்லை !
எதற்கும் பயம், எதிலும் தயக்கம்.. நிம்மதி என்பது தொலைந்தே போயிற்று..
வாழ்க்கை அவன் கையில் இல்லை; மனதின் கைக்கு மாறியது-
இன்பதுன்பங்கள் யாவும் அதன் கையில் .
இயக்கும் சக்தி அதுவே ஆகியது.
காட்டிலே திரிந்த மானைத் தேடி, கூட்டிலே இருந்த குயிலை இழந்தான் !
மனதை ஆராய்ச்சி செய்யலாம், ஆட்சி செய்யமுடியாது !
கடலிலே நீரை வைத்து அதனைக் குடிக்கமுடியாமல் செய்தது, இயற்கை கற்பிக்கும் பாடம்.
மனதிற்குள் நிம்மதியை வைத்து அதனை அனுபவிக்க முடியாமல் பண்ணுவது
ஆண்டவனின் லீலை .
இந்த நிம்மதியைத் தேடித்தான் வாழ்க்கைச் சக்கரமே ஓடுகின்றது.
கோவில்களில் எல்லாம் கூட்டங்கள் அலைமோதுகிறது .
பூஜை பரிகாரமென்று காசு பணம் கரைகிறது .
இவை எல்லாம் நிம்மதிக்கு மனிதன் கொடுக்கும் விலை !
நிம்மதி, எங்கே தேடுவது..?
தொலைந்த பொருளைத் தொலைத்த இடத்தில்..
தொலைந்ததே நீ ஆனால்..?
யார் தேடுவது..? திருவிழாக் கூட்டத்தில் எப்படித் தேடுவது..?
தன்னைத் தேடியவனே ஞானி ஆகிறான்..!
“ சாத்திரந்தான் பார்த்துத்தெளியாத பேர்க்குத்
தந்தைதாய் கொடுமையென்று தவத்திலாதோர்
யாத்திரைதான் போனதனாலாவதென்ன
அறிவில்லாக் கொடுமையதாலெபியாதையா
கோத்திரந்தான் விளங்க விந்து தத்துவத்தைக்கண்டு
குருவாதிநிலையளவு தானறிந்து பாத்திரம்
தானிதக்கமில்லாப் பாவிகட்கு பார்த்துப்பார்
தினந்தோறுமலைவார் தாமே “
- அகத்தியர் சௌமியசாகரம்
தூக்கம் இயற்கை அளித்த வரம்.
நிம்மதியான தூக்கம் இறைவனின் அருட்கொடை .
அதன் அமைதி லயத்தில் தான் உடலும் உள்ளமும் புதுப்பிக்கப் படுகின்றது.
பொழுது புலரும் போது புத்துணர்ச்சி பெற்ற புதிய உடம்பு, புதிய மனம்.
இன்று புதிதாய்ப் பிறந்த ஒரு புது உணர்வு .
புதிய வானம், புதிய பூமி, எதிலும் இளமை, எல்லாம் புதுமை .
எல்லாம் நம்மை வரவேற்கும் !
ஆனால் தூக்கத்திலும் பகல் நிகழ்வுகள் தொடர்ந்தால், தூக்கம் பகல் வாழ்க்கையின்
பின் இணைப்பு (annexure) - விரிவாக்கம் என்பதை உணர்ந்துகொள்வீர்..!
பழைய கணக்குகள் துவக்க இருப்பாக அப்படியே எடுத்து எழுதப்படும் .
விளைவு புதுப்பித்தல் மறைகிறது, அமைதி தொலைகிறது.
கெட்டுப் போகிறது உடம்பு, பட்டுப் போகிறது மனம் .
உடலுக்கென்றால் மருந்து போதும்.. உள்ளம் பாவம் என்ன செய்யும் !
விட்டு விடும் ஆவி, பட்டு விடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு, சூன்யத்தின் நிலைப்பு ! - கண்ணதாசன்.
எதிலும் கடைசி வரை நம்கூட வருபவை
நாம் செய்யும் பாவ புண்ணியங்களே!
அவைகளே கோள்களை இயக்கும் ஞானசக்தி !
“ உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு .” என்றார் வள்ளுவர் .
உறக்கத்தினை இறப்பு என்றும், காலையில் கண் விழித்தலைப் பிறப்பு என்றும் குறிப்பிடுகிறார் .
காலைக் கதிர்களோடு ஒவ்வொரு நாளும் மனிதன் புதிதாய்ப் பிறப்பதாகப் பொருள். வாழுகின்ற நாளை முழுமையாக வாழ்ந்தால், உறக்கத்தில் அமைதி தானே தவழும்.
அதில் அன்றாடக் கணக்குகள் பைசல் செய்ய அவசியமே இல்லை .
பகல் பொழுதின் பிசகுகளே, இரவுத் தூக்கத்திலும் வேட்டையாடுகிறது .
இதில் தொலைந்து போனது தான் நிம்மதியும் அமைதியும் !
வசதி வாய்த்தால் மெத்தையைத்தான் வாங்கமுடியும்,
தூக்கத்தை..?
இறப்பது பிறக்கிறது.
வீழ்வது எழுகிறது.
மறைவது உதிக்கிறது.
வாழத் தெரிந்தவனுக்குப் பிழைக்கத் தெரியும்,
பிழைக்கத் தெரிந்தவனுக்கு உழைக்கத் தெரியும்,
உழைக்கத் தெரிந்தவனுக்கு ஓய்வென்பது தெரியும்,
ஓய்வினை உணர்ந்தவனுக்கே உறக்கத்தில் அமைதி !
உழைப்புக்குத் தெரியும் ஓய்வு ஒரு கலை என்பது !
அறிவுக்குத் தெரியும் “ சும்மா இரு ” தத்துவம்.
உறக்கம் எனும் சாக்காடு நேற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது ,
இன்று புதிதாய்ப் பிறக்க வைக்கிறது, புத்தம் புதுக் காலையில் !
அதில் நாளை என்ற ஏக்கம் பஞ்சாய்ப் பறக்கிறது ..
தியானிக்கத் தெரிந்தவனுக்கு காடும் ஒரு வீடு, தெரியாதவனுக்கு வீடும் ஒரு காடு !
விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தூக்கத்தில்தான் விடைகள் கிடைத்ததாய்க் கூறுவார்கள் - கணித மேதை இராமானுஜம் ஓர் எடுத்துக் காட்டு!
அமைதியான தூக்கத்தில் விடைகள் கிடைக்கிறதோ இல்லையோ,
நிம்மதி நிச்சயம் கிடைக்கும் !
“ தேறுவது மதியாலே தேறவேண்டும்
தெளியவது மதியாலே தெளியவேண்டும்
கோறுவது மதியாலே யறிய வேண்டுங்
குரு செயலு மதியாலே புத்தி வேண்டும்
சேறுவது மதியாலே சித்திவேண்டுந் தெசதீட்சை
பெறுவதுந்தான் மதியால் வேண்டும்
பேறுவது மதியாலே செல்வம் வேண்டும்
பேரின்பச் சாத்திரத்தைப் பேணிப்பாரே “
- அகத்தியர் சௌமியசாகரம்
உறக்கத்தினை உதாசீனப்படுத்தாதே !
அதுவும் ஒரு வகையில்,
தியானமே - தியானிக்கத் தெரிந்தவனுக்கு!
துறவே - துறக்க தெரிந்தவனுக்கு!
உடம்பின் அணுத்திரள்களைப் புதுப்பித்துப் புத்துயிர் ஊட்ட,
இயற்கை அளித்த வரம், தூக்கம்.
வானம் பொழிகின்ற அருள் மழை..
நோயாளியை மருத்துவர் கேட்கும் கேள்வியே, “ தூக்கம் வருகிறதா ” என்பது தானே..
“ அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரை மறந்து தூங்குவது எக்காலம் “
- பத்திரகிரியார்
நன்று !! வாழ்த்துக்கள் !!
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
No comments:
Post a Comment