தமிழ் முனிவன் தாள் பணிந்து !
நாதமும்.. கீதமும் !
Cosmic symphony
இயற்கையின் இயக்கத்தில் எதுவும் தனியே தோன்றுவதில்லை .
ஒன்று இன்னொன்றைத் தோற்றுவிக்கிறது, அல்லது அது தோற்றுவிக்கப் படுகின்றது.
ஆதியில் ஒலி ஒளித் தோற்றங்களும், சிவசக்தி பிறப்பும் அவ்வாறே நிகழ்ந்தன
என்று அறியப்படுகிறது. அகர உகரமே ஆதியான ௐங்காரமாயிற்று.
ஆதி அந்தமே சித்தவியலின் அகர உகரத் தத்துவம்.
எட்டு இரண்டின் பிரபஞ்சக் கருப்பொருள்.
நெல்லுடன் புல்லும், பயிருடன் களையும் சேர்ந்தே வளர்கின்றன.
இரண்டும் பிறந்தது ஒரே மண்ணில் தான் !
உமிக்குள் அரிசியையும், தேங்காய் ஓட்டுக்குள் இளநீரையும் மறைத்து வைத்ததும்
இயற்கையின் இயங்கு சக்தியே.
தீதும் நன்றும், நாத்திகமும் ஆன்மீகமும் இயற்கையின் இணைந்த படைப்புகள்.
பக்கங்கள் இரண்டு நாணயம் ஒன்றுதான்.
மனதில் பிறக்கின்ற எண்ணங்களும் தனியே தோன்றி மறைவதில்லை,
ஒன்று இன்னொன்றை இயற்றி இயக்குகிறது (ripples).
நீதிதுறையும் கூட விலக்கல்ல..
ஒரே குற்றம்.. ஒரே சட்டம்.. இரு வேறு தீர்ப்பு!
குளத்து நீரில் எறிந்த கல், தொடர்ச்சியான நீரலைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படுத்தி அவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தே பயணிக்கின்றன.
தொடர்ந்து எழும் எண்ண அலைகளின் இயக்கம் Domino Theory எனக் கூறப்படுகின்றது.
தொடர் அலைகளாக எழும் முன்பு, முதல் அலையினை, அதன் முகத்துவாரத்திலேயே அமைதியாக்கினால், தொடர் அலைகள் அமைதியிலேயே அடங்கி விடுகின்றன.
பிறக்கின்ற ஒவ்வொரு எண்ண அலைகளும் அவற்றின் பாதிப்பினை மனதில் பதிவு செய்து, பின்பே மனதிற்குள் மறைகின்றன (Sub consciousness)..
“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”
மனதில் உறுதியிருந்தால், நினைத்ததை முடிக்கலாம் என்கிறார் வள்ளுவர்.
எண்ணம் (Thought) என்பது... அதன் வடிவமைப்பு (Structure)...
பற்றி ஒரு சிறிய கூர்ந்தாய்வு...
எண்ணங்கள் தொடர் அலைகளாகத் தோன்றுகின்றன என முன்னர் பார்த்தோம்.
எண்ணம் என்பது மனத்திரையில் தோன்றி விரிகின்ற படக்காட்சி,
இதில் திரையும் காட்சியும் ஒன்றே, இரண்டுமே மனந்தான்!
எண்ணங்களின் பிறப்பினைக் கூர்ந்து நோக்கினால்...
சில எண்ணங்கள் தானாகவேத் தோன்றி நிழலாய்த் தொடரும்,
இவை ஆழ்மனதிலிருந்து எழுபவை, இவையே ஆட்டிப் படைக்கின்ற சக்தி- தோன்றுவன!
சில எண்ணங்களை நம்முடைய சிந்தனை பிறப்பிக்கின்றது,
இவை நம்மால் தோற்றுவிக்கப் படுகின்றன- தோற்றுவிக்கப் படுவன !
தோன்றுவதும், தோற்றுவிக்கப் படுவதும் கடந்து சில எண்ணங்கள்
எங்கிருந்தோ, எப்போதாவது தோன்றும்- இவை இயற்கையின் எஸ் எம் எஸ் !
“ யானோ ? மனமோ ? எனை ஆண்ட இடம்
தானோ ? பொருளாவது சண்முகனே ”
- அருணகிரிநாதர்
இம்மூன்றின் இணைந்த இயக்கமே மனதின் அரசாட்சி !
இல்லாத மேடை - எழுதாத நாடகம் - நாமே நடிக்கின்றோம் - நாமே பார்க்கின்றோம்!
எல்லா வினைகளும், பிரதி வினைகளை இயற்றி இயக்குகின்றன என்கிறது கர்மக்கொள்கை
( Karmic theory ) .
எண்ணங்களுக்கும் அப்படியே !
இவை தொற்றிப்பரவும் குணமுடையது (infectious).
அருகிலுள்ள மனங்களையும் தொற்றிப் பிரதி விளைவுகளைக் கிளறி விடும் -
Action & reaction theory வழி.
எண்ணங்கள் மனிதன் என்ன, மரங்களைக் கூடப் பாதிக்கின்றன.
சிந்தனைகள் செடி கொடிகளையும் பாதிக்கின்றன.
மொத்தத்தில் எண்ணங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன,
எனும் உண்மையினை உணர்வீர்களாக!
சூழ்நிலைகள் மனிதனையும், மனம் சூழ்நிலையையும் மாறி மாறிப் பாதித்துப்
பாதிப்புகளைப் பதிய வைக்கின்றன .
உனக்கு முன்பாக உன்னுடைய எண்ணங்கள் முன் செல்லுகின்றன !
மனிதன் தனிமையில் இருக்கலாம்; ஆனால் தனியாக இருப்பதில்லை.
அவனுடைய எண்ணங்களுடன் இணை பிரியாமல் சேர்ந்தே வாழ்கின்றான்.
Lonely but never alone..!
எண்ணங்கள் மனோசக்தியின் உருவகங்கள்,உடம்பிலுள்ள அணுசக்தியின் செலவினங்கள்!
இவை உள் முகமாகத் திரும்பி அகப்பயணம் (Inner voyage) செய்யாமல்
வெளியே விரயமாகி வீணடிக்கப்படுகின்றன, அன்றாட வாழ்வில்.
வீட்டினுள் எரியும் தீபம் வெளியே செல்லுவது விழலுக்கு இறைத்த நீராகின்றது !
“ பாடுகின்ற சித்தர்தம் நூல்களெல்லாம்
பரிபாடை தெரியாத பாவியோர்க்குத்
தேடுகின்ற பொருளழியச் சொன்னதல்லாற்
றிணையளவு பொன் காணச் சொல்லவில்லை
வீடிழந்து மாடிழந்துள்ள செம்பொன்
வேண தெல்லாந் தானிழந்து மெய் தோன்றாமல்
காடு றைந்து போவதற்கோ பெரியோர் சொல்வார்
காணாமற் புதைத்த சொல்லை கண்டுதேறே ”
- அகத்தியர் பரிபாஷைத் திரட்டு
எண்ணங்கள் ஒடுங்கி மனம் உள்நோக்கிக் குவிகின்ற இடத்தில்
தியானசக்தி (Meditative quality) சுரக்கின்றது .
அமைதியும் அங்கேதான் ஆட்சி செய்கின்றது!
அதுவே மனித உடம்பின் ஞான பீடம் ! ஆதி பிரம்ம பீடம் !
அந்த பீடத்தில் வீற்றிருந்து அரசாள்கிறது குரு எனும் ஞானசக்தி !
ஆட்சி வேறு, அரண்மனை வேறாக இருந்தால் ...?
நடைமுறை வாழ்வு அப்படித் தானே நடக்கின்றது .
ஆட்சியும் அரண்மனையும் ஒன்றானால் மட்டுமே,
காட்சியும் காணும் பொருளும் ஒன்றாகும்.
பார்க்கும் சக்தியில் பரம்பொருள் தெரிகின்றது.
அங்கே “ அதுவே நீ ஆகிறாய் ” ( தத்வம்ஸி ).
யோகம் என்பது ஒன்றுடன் மற்றொன்றை சேர்ப்பதுதான் !
“ உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே ”
- திருமந்திரம்
இப்பாடலில் உடலையும், உயிரையும் இணைத்து வளர்த்தேன் என்று கூறுகிறார்
திருமூல நாயனார் .
அவர் மூவாயிரம் ஆண்டுகள் உடல் உயிரோடு வாழ்ந்தார் என்பது அறிய வேண்டிய உண்மை.
எண்ணங்களின் இயக்கமும் பலனும் (wavelength) அவரவர் மனத் திட்பத்தையும், நுட்பத்தையும் பொருத்தது.
நுண்ணறிவால் இதனை உணர்ந்தவன், செல்லுமிடங்களில் அமைதியினைப் பரப்புகிறான்.
உணராதவன்...
காது கேளாதவனிடம் வாய் பேசமுடியாதவன் சேதி சொல்வது போல் ஆகும்.
Some people give happiness wherever they go ;
Some give happiness whenever they go !
“ பேய் பிடித்து சாஸ்திரத்தை உலகத்தோர்கள்
பேணியே படித்திடுவார் பொருளைக் காணார்
.......
.......
தாயறியாப் பிள்ளையிடம் பேச வேண்டாம் ”
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
தன்னைத் தேடுவது தவம், தன்னுள் தேடுவது ஞானம் .
தன்னை அறிபவன், தனக்குள் அறிபவன் மெய்ஞானி ஆகிறான்.
அவனே ஞான வீரன் !
அவனுக்கு இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் இயற்கையின் நியதி;
நெருக்கடியிலும் நிம்மதி இருக்கும்!
அறியாதவனுக்கு நிம்மதியும் நெருக்கடியாகும், என்றும் எமர்ஜென்சியே!
சிந்தைக்குள் செயல் ;
செயலுக்குள் வினை ;
வினைக்குள் வித்து ;
வித்துக்குள் விருட்சம்;
கண்டறிவதே ஞானம் .
ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து.. அதில் வாழ்பவன் மனிதன் அதை ஆள்பவன் இறைவன்.
“ ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேருமாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே ”
- திருமூலர் ஞானம்
இவ்வலைப்பூவின் கருத்தோவியங்களில் ஒன்றான ஒலியும் ஒளியும்...! ( Sound & Images )
இதனுடன் சேர்த்து வாசியுங்கள். பூரணம் புலனாகும் !
நன்று! வாழ்த்துக்கள்!!
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...