Monday, 7 May 2018

சும்மா இரு... சொல்லற.!! ( Silence & Inner peace )

தமிழ் முனிவன் தாள் பணிந்து !


                                          சும்மா இரு... சொல்லற.!!    
                                          ( Silence & Inner peace )


   அமைதியே வித்து ! உண்மையே சித்து !

  “ வாக்கும், மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து ”
                                   (விநாயகர் அகவல்)
எனும் வரம் வேண்டுகிறார் ஓளவையார்.

“ சும்மா இரு; சொல்லற! ” - ஆறுமுகப்பெருமான் அருணகிரிநாதரைத் தடுத்து ஆட்கொண்ட பின், அருளிச்செய்த முதல் உபதேசம்! முதன்மையான உபதேசம்!
ஆனால் கந்தரனுபூதி பெற்று, கந்தரனுபூதி பாடிய எந்தை அருணகிரி, “ திருப்புகழ் ” முழுமையும் பாடிமுடித்த பின்னரும், இச்சொற்றொடர்களுக்கானப் பொருளை உணர இயலாதவர் போல் இவ்வாறு உருகிப் பாடுகிறார்!  :
 “ சும்மாவிரு சொல்லற வென்றலுமே
   அம்மா பொருளோன்று மறிந்திலனே ” (கத்தரனுபூதி : பாடல் 12)
அருணகிரிநாதருக்கே விளங்காதபொருள், நமக்கு மட்டும் எப்படி விளங்கும் ?

சும்மா இரு எனச்சொன்னாலே போதுமே; ஏன் சொல்லற என்ற சொல்லையும் சேர்த்து உபதேசித்தார் ?
அருணகிரிநாதரை சும்மா இருந்து, சோம்பேறி என்ற பெயர் வாங்க வைப்பதற்கா
இவ் உபதேசம்  அருளிச் செய்யப்பட்டது ?

பெரியோரின் வாய்மொழிச் சொற்கள் என்றுமே மலிவான பொருள் கொள்ளாது; அவை பல பரிமாணங்களை உள்ளடக்கிய மறை மொழி மந்திரமாகும்.

அவ்வாறாயின் சும்மா இரு; சொல்லற எனும் உபதேசச் சொற்றொடரின் பொருள்தான் யாது? அறிந்து கொள்ள முயலுவோம்.
அதற்கு முன் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும்.,
இது அருணகிரிநாதருக்கு மட்டும் அருளப்பெற்ற உபதேசமன்று;
அவர்மூலமாக, கழிவிரக்கங் (Selfpity) கொண்டு செய்வதறியாது தேம்பித் திரியும் இம்மானுடத்திற்கு உரைக்கப் பெற்ற உளவியல் நெறியுறை(Counselling) என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.
நம்முள் உறைந்து வாழும் ஒரு அருணகிரிநாதருக்கு அருளிச் செய்யப்பட்ட ஆத்திசூடி!

  “ எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நானிருக்க
    மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே “ (பட்டினத்தார்).

“சும்மா இரு” - தெய்வம் திருவாய் மலர்ந்தருளிய இம்மந்திர உபதேசத்திற்குத் தெய்வத்தின் திருவருளாலேயே பொருள் அறிந்திட முயலுவோமாக ! உள்முகமாக நோக்கும் ஒரு உள்வெளிப் பயணம்!( Inner voyage ).
மனிதன் சித்தமெனும் மனத்தினால் ஆளப்படுகிறான்; ஆட்டுவிக்கப் படுகின்றான்; மனமானது கிரகங்களின் ஏவலாள்; கிரகங்கள் கர்மவினைகளின் கருவிகள் !

இதனால் மனமானது ஒய்வு ஒழிச்சலின்றி, சதா காலமும் இயங்கி பதில் வினையாற்றிக் கொண்டே இருக்கிறது(Response of memory cells) என்பது நிதர்சனம். அலைக்கழியும் மனத்திரையில் 24 மணி நேரமும் பலவித சினிமாவும் சீரியல்களும் இடைவேளையின்றி ஓடிக்கொண்டிருக்கும் உண்மையை உணர்ந்தாரில்லை ...!

மனம் அலையாது அமைதி கொள்வதே சும்மா இருப்பதாகும்.
சும்மா இருத்தல், உழைப்பை ஒதுக்கிய சோம்பேறித்தனமன்று.  
சலியாத மனம், சமநிலையில் நிலை கெடாதிருப்பதே சும்மாயிருத்தலாகும்.

வெளியில் மனம் செல்லாமல், உள்நோக்கித் தன்னில் நிலைத்தலே சும்மாயிருத்தலாகும் என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்.

“  சும்மா இருக்கும் சுகம் ஒன்றறியேன் பராபரமே “ (தாயுமானவர்).
உலகில் செயற்கரிய சாதனைகள் நிகழ்த்திய பெரியோரெல்லாம், முதலில் மனம் சும்மா இருக்கப் பயின்றவரே ஆவர். சும்மா இருத்தல் ஒரு சுகமான ராகம். ஆன்மாவின் லயிப்பு.

அமைதியற்ற மனம் மனோசக்தியினை விரையமாக்கி, எப்போதும் எதிர் வினையாற்றிக் கொண்டே இருப்பதின் காரணமென்ன? (We never act; we only react).
அதன் விளைவு எதனையும் உற்று நோக்கும் திறன் ( Art of listening ) அறவே இல்லாது போனது அல்லவா ?
உற்று நோக்கும் திறனில்லாததால், மனம் கற்கும் திறனை(Learning skill) இழந்து விட்டது எனும் பேருண்மை அதிர்ச்சிக்குரியது;
ஆழ்ந்த சிந்தனைக்குரியது! எதிர்காலம் கவலைக்குரியது !

கற்கும் திறனின்றி எவ்விதம் நிறைவான, முழுமையான (totality & wholeness) வாழ்க்கையை வாழ இயலும் ?
கற்பதற்கு வாழ்; வாழ்வதற்குக் கல்! (Learn to live & live to learn) என்பது தானே வாழ்வியல் தத்துவம்.
இந்த மனச்சீக்கிற்கு மருந்து தான் என்ன?இவ்வியாதியை எப்படிக் குணப்படுத்துவது ?

இதற்கான அருமருந்தே அமைதி! அமைதியில் அமிழ்ந்திருக்கும் மனதால் மட்டுமே எதிர் வினையாற்றாமல் இருக்கமுடியும்; பதில் வினையாற்றாத மனதால் மட்டுமே “சும்மா இரு”க்க முடியும். அமைதி குடிகொண்ட மனம், வாழ்வியல் தேருக்கு அச்சாணி போன்றதாகும்.
எதிர்வினை (response & reaction) யாற்றுவதை மனதால் நிறுத்த முடியாதா ?
எதிர் வினையாற்றும் பழக்கத்தினை மனதால் விட்டொழிக்க முடியாதா?
(Can the mind refrain from reacting ceaselessly ?).
எதிர் வினையாற்றாத மனம் வினையற்ற வெளி நிலையை அடையும் .
( When the knowledge sleeps, Intelligence wakes up !) .
வினையறுந்த வெளிநிலையிலேயே, பூரண வினைச்செயல் பிறப்பெடுக்கும் ( Action  in inaction is the Absolute action ) எனும் உண்மைத் தத்துவத்தை உணர்வீர்களாக .

இந்த நிலையை இயக்கத்தில் இயங்காமை என்பார்கள். அதாவது இயங்கி கொண்டே இயங்காமல் இருப்பது. கடலின் மேற்பகுதி இயங்கும்போது, அடிப்பகுதி இயங்காமல் இருக்கிறதல்லவா? அதுபோல.

மனம் ஒன்றி, ஆன்மசக்தி ஓங்கி உயர்ந்ததின் பயனாக விளைந்த சித்தின் வெற்றியைக் கீழ்க்காணும் பாடல் வாயிலாக அறியலாம் :

“ போமென்ற ஓங்கார மஞ்செழுத்தோடாறும்
         பேரான பஞ்சகர்த்தர் இருந்திடந்தான் பாரு
ஆமென்ற ஆங்கார ஆணவமும் போனால்
          அப்பவல்லோ அகாரமுதலுகாரந் தோன்றும்
வேமென்ற மகாரமொடு விந்து நாதம்
          விளங்கியதன் மேல் நிற்கும் பராபரந்தான் மைந்தா
வாமென்ற மகாரத்தைப் பற்றி யேனு
          மனமொன்றி லாகிரியா லொத்துக்காணே .”
                                       ( போகர் 7000 - 2 ஆம் ஆயிரம் - பாடல் 346 )

தன்னை யறிந்து, தானைத் தகர்த்தால் உட்கலந்த சோதியை உணரலாம் என்பதே இதன் உட்கருத்து ! இது உள்ளத்திற்குத் தேன் ! உயர்வுக்கு வான் !!
விட்டகுறை இருந்தால் விளங்கும்.

“சொல்லற” என்பது என்ன ?
பேச்சடங்கி மனமடங்கும் மௌனநிலையே அது !
உலகில் உள்ள மொழிகளிலேயே உயர்ந்த மொழி, உன்னதமான மொழி மௌனமேயாகும்.
வாக்கும் மனமும் அடங்கி, தியானம் குடிகொள்ள மௌனமே மந்திரமாகும்.
உள் மௌனத்திற்கு வாய் மௌனமும், வாய் மௌனத்திற்கு உள்மௌனமும் ஒன்றுக்கொன்று பெருந்துணையாகும்.

வாய் அடங்கினால் மனம் அடங்கும்; மனம் அடங்கினால் வாயடங்கும் !
மனத்தின் ஒலிபரப்பியே வாய்; வாயின் ஒலிப்பேழை மனம்..!
என்பதனை நன்கு உணர்வீர்களாக.
மனதிற்குள் ஆயிரம் தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, வாய் மட்டும் பேசாதிருந்தால் அதற்குப் பெயர் மௌன விரதமா...?

சித்தமும் வாக்கும் ஒன்றுபட்டு அமைதியுள் உறைவதே ஆழ்நிலை தியானம் எனக்கொள்ளலாம். தியானத்தில் திழைக்கின்ற மனம், சத்தத்தினுள் பயணம் செய்து சத்தத்தினுள்ளே சதாசிவத்தைக் காணுகிறது (Silence in Sound).
பேசா அநுபூதி பெற்று, மனம் தியானத்தில் ஆழ்ந்து மன ஓசை அடங்கும் போது, சித்தத்தினுள்ளே சிவலிங்கம் கண்டு, ஒலியினுள்ளே ஓங்காரம் கேட்கும் (Sound in silence). இதன் பயனாக அண்ட அருள்வெளியில் இருந்து பிறந்த ஆத்மா ஆனந்தத்தை அனுபவிக்கிறது.

“ வாக்கும் மனமும் “, என்று ஔவையும்,
“ மனவாக்கினில் “, என தாயுமானவரும்,
“ வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க ”, என ஆண்டாளும்,
“ வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் “, என அப்பர் பெருமானும்,
‘வாயினையும் மனத்தினையும்’, இனணத்துக் கூறுவதன் சூக்குமம் தெளிந்த தேடுதலுக்கு...!
"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்" என்று பாரதி கூறுவதும் சிந்தனைக்கு..!

சிதறிய புலன்கள் சித்தம் அலைக்கும்; அடங்கிய புலன்கள் ஆற்றலைப் பெருக்கும்!
நிறைகுடம் தழும்பாது; ஆழ்கடல் அலையாது !
எழுவதும் விழுவதும் அலைகளே; ஆழ்கடல் அமைதியிலேயே நிலைத்திருக்கும்.
மனம் அலையாத அமைதியில் ஆத்ம சுகம் பிறக்கும்;
அப்பேரின்பத்தில் அறிவுச் சுடர் ஆடாது நிலைக்கும் .

“ மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்;
  மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்” எனத் திருமூலர் கூறுவதைக் காண்க.

“ ஓசையென்ற சத்தம் உதித்தடங்கும் வீட்டை
  உத்தமனே மனக்கண்ணால் நித்தம் பாரே” என அகத்திய முனிவர்
“ அந்தரங்க தீட்சாவிதி “ யில் கூறுவதையும் காண்பீராக.

“ தானே தான் தன் மனமே சாட்சியாக
தன்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
கோனே தான் தானவனாய் அருளே தங்கும்
கருவான நவக்கிரக சூட்சத்தாலே
பூண நீ பொற்கமல உச்சி மீதில்
பூரணமாய் நின்றிலங்கும் அருளே பெற்றால்
நானே தான் நீ யெனவே நன்மையாக
நாட்டமுடன் வாசியினால் நயந்து பாரே”
                                        ( அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி ).
தன்னையறியும் அறிவால் தலைவனை அறிந்தால் தான் தானாகவே விளங்கும் . அந்நிலையில் அருள் தங்கி ஆனந்த பூர்த்தியாகும் என்பதே இதன் பொருள். விட்டகுறை இருந்தால் விளங்கும்.

மனம் என்பது மனிதப்பிறப்பின் ஆதாரம். மனத்தை உடையவன் மனிதன் ஆகிறான்.
சிந்திப்பது இதன் தொழில். மனத்திலிருந்து பிறப்பதே வாக்கு எனக் கொள்ளலாம்.
குரல் நாண்களை ஒலியெழுப்பி பேசவைப்பதே மனம். அதாவது மனிதனைப் பேச வைக்கும் உந்து விசை மனம். மனதின் இயக்கத்தால் பிறப்பெடுப்பவையே சொற்கள்.  
இவையிரண்டின் இணைந்த செயல்பாட்டினை,
“ மனமது நினைய, வாக்கு
       வழுத்த மந்திரங்கள் சொல்ல “ என சிவ.சித் 2ஆம் சூத்திரம் கூறுகிறது.
மனதில் உதித்து வாக்கினில் பிறப்பது தானே மந்திரம்.

“ மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே “
                                                              ( அகத்தியர் ஞானம் - 2 )
எனும் மந்திர மலரின் மணத்தினை நுகர்வோமாக.

மனம் ஊற்று; சொல் பிரவாகம் !
மனம் சோதி; சொல் சுடரொளி !
மனம் வீணை; சொல் நாதம் !

சும்மா இருந்து, சொல்லறுந்த சுகத்தினை
“ ஆசா நிகளம் துகளாயினபின்
   பேசா அனுபூதி பிறந்ததுவே “ ( கந்தரனுபூதி ) என அருணகிரிநாதர்
பாடிப் பரவுவதைக் காண்க.

வாய்ச்சொல் அடங்கினாலும் மனச்சொல் அடங்குவதில்லை. மனமெனும் வானொலி இடைவிடாது எப்போதும் பாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறது.
உற்று நோக்கினால் மனதிற்குள் ஒரே இரைச்சல் கூச்சல்- அதுவும் இடைவேளையின்றி! ஒய்வு இடைவெளியின்றி மனதிற்குள் நடக்கும் உரையாடல் (Inner dialogue & conversation), பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கத்தினை உணரத் தெரியாத மனிதன் அறியாமையில் மூழ்கி அவற்றினை நிறுத்தும் வழி தெரியாது தவிக்கின்றான்.

“ தன்னையறியும் அறிவுதனைப் பெறில்
  பின்னைப் பிறப்பில்லை வீடு “ என்கிறார் மகாயோகி ஔவை.

அடங்கிய மனமே அளப்பரிய ஆற்றலின் உறைவிடமாகிறது. மனதை அடக்கிய மகான்களே மானுடவாழ்க்கையின் மாயா விளக்கு! (Magic lantern).
மனத்தை விடுங்கள், ஒரு மரத்தையேனும் ஒரு நொடிப் பொழுது முழுமையாக உற்று நோக்க முடிகிறதா? எத்தனை எண்ணங்கள் குறுக்கீடு புரிகின்றன. இதனால் மனோசக்தி வீணாகி, விரயமாவதை எப்போதாவது உணர்ந்து பார்த்திருக்கிறோமா ? எதையும் உற்று நோக்கி கேள்வி கேட்கும் மனிதனே, வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறான்; இல்லையேல் எதோ இருக்கின்றான். Are you living or just existing ?
நேர்மையான பதிலை துணிவிருந்தால் சொல்லுங்கள் !

அமைதி யெனும் “முப்பூ” எங்கே கிடைக்கும் ? அதனை அடைவது எவ்விதம்?
Mind is a mysterious flower; Peace is its fragrance !  Silence is its essence !
 ஆதியே அறிவு. “ தன் நோய்க்கு தானே மருந்து “.
அருட் காட்சி கிட்ட வேண்டுமாயின் தன்னிடத்தில் ஒளிதேவை.

“ என்னையறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
  உன்னையறியாமல் உடல் இழந்தேன் பூரணமே “ என்பது பட்டினத்தாரின் அறைகூவல்.
  
“ தன்னையறியத்  தனக்கொரு கேடில்லை“ ( திருமந்திரம் ).

“ ஒன்றைப் பிடித்தோர்க்கே, பசுவே,
   உண்மை வசப்படுமே;
   நின்ற நிலைதனிலே, பசுவே,
   நேர்மை அறிவாயே ! “ ( இடைக்காடர் ) என்பது சிந்தனைக்குச் சுடர் தரும் தேன் !

மனம் ஒடுங்கி, வாக்கு அடங்கி, உள் நிலைப்பெற்று, யார் வீட்டில்? என மனக் கதவைத் தட்டினால், உள்ளே இருந்து பதில் வந்து கதவு திறக்கப்படும். மெய்க்கைலாயத்தின் சொர்க்க வாசல் திறக்கும்.
“ கதவு திறந்திடப் பெற்றேன், காட்சியெல்லாங் கண்டேன்”  ( வள்ளலார் ).

“ பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம் “ ( கண்ணதாசன் ).

மரங்கள் தானே அசைகின்றன; மலைகள் அசைவதில்லை.
மௌனம் ஒரு மகத்தான வரம். அது தெய்வீகக் கலை.
மெய்யானத்தவம் மந்திரம் கூட உச்சரிப்பதில்லை என்பது தான் உண்மை !
(“ ஈசனோடாயினும் ஆசை அறுமின் !“).

சும்மா இருக்கும் நிலையில் மனம் குவிகின்றது. ஒருமுகப்பட்ட மனமே அளப்பரிய ஆற்றலை அடைகின்றது. சும்மா இருத்தல் என்பது, Acute awareness & absolute alertness ! என்பதை உணர்வீர்களாக.

சும்மா இருக்கும் சூட்சுமம் அறியாமலும்,
சொல்லினை நிறுத்தும் சூத்திரம் தெரியாமலும்,
என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம்,
என்ன நினைக்கிறோம், எவ்விதம் வாழ்கிறோம்,
என்பதே உணராமல், உணர்வதற்கும் தெரியாமல்,
அறியாமை இருளில் மூழ்கி அறிவொளி இழந்து,
அகப்பேய் பிடித்து அலைகிறான் மனிதன் !
அன்பென்றால் என்னவென்றே தெரியவில்லை.
அறிவென்றால் என்னவென்றே அறிந்தானில்லை.
வாழ்வில் ஒரு நொடியேனும் மகிழ்வுற்று மலர்ந்தானில்லை .
ஆர்ப்பரிக்கும் மனதால் நீ வாழ்வில் அடைந்ததென்ன ?
அமைதியற்ற உள்ளத்தால் இழந்து நிற்பதென்ன ?
பூச்சியும் கிருமியும் வைரசும் பூஞ்சையும்
உன்னை அணு அணுவாய் அரித்து கொண்டிருப்பதை
என்றேனும் உணர்ந்தாயா ?
எல்லாமிருந்தும் எங்கே நிம்மதியென ஏங்கித்
தவிக்கும் பேதை மனிதனே,
எத்தனைக் காலந்தான் ஏமாறப்போகிறாய்
இந்த வாழ்விலே, இந்த நாட்டிலே !

நீ இறைவனின் குடிமகன். இயற்கை வளங்கள் உன்னுடைய சொத்து. அவை சூறையாடப் படும்போது ராணுவ வீரனைப் போல் அவற்றை காத்து நிற்பது உன் கடமை.
நெருப்பு பற்றி எறியும் போது, காரணத்தைக் கலந்தாய்வு செய்வதில்லை.
உயிரைக் கொடுத்தேனும் உடனே பரவாமல் செய்துவிடுவர்.. சிந்திக்க.. செயல்பட!

ஏனென்று கேட்கவே
ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம்
தலைவிரித்து ஆடுதடா
ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் - காலம்
உயர்வாய் மதிக்குதடா! ( பட்டுக்கோட்டையின் பாட்டுக்கோட்டை ).

மூவாயிரம் ஆண்டு ஒரு சித்தர் வாழ்ந்ததும் உண்மை; வாழ முடியும் என்பதும் உண்மை!
எவ்வாறு என என்றேனும் சிந்தித்தது உண்டா ?
துன்பத்திலேயே உழன்று, துக்கத்திலேயே துவண்டு மகிழ்ச்சியென்றால் என்னவென்றே மறந்து வாழும் மனிதா..!
உன் மனம் சீழ் பிடிப்பதற்கும், சீக்கு பிடிப்பதற்கும் காரணம் வேறுயாருமல்ல.
நீ தான், நீயே தான் என்பதனை உணரும் வரை உலகம் உன்னை உதாசீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்!
ஆடி ஓடி அலுத்துக்களைத்து, நோய்வாய்ப்படும்போது
ஐந்தொகைக் கணக்கினை “ஆடிட்” செய்கிறான்.
காசு பணத்திற்காக காலமெல்லாம் அலைந்தவன், காய்ச்சல் வந்த பின்பு தான் சுக்கு மிளகைத் தேடுகிறான்...!

வாழ்க்கை வெறும் கேள்விக்குறிகளால் நிரம்பியது.
“ காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் ” ( கண்ணதாசன் ).

நான் ஏன் பிறந்தேன் ? என்ற கேள்வியே வாழ்க்கையின் உயிர் வினை (Mission of birth). அதற்கான பதிலை உன்னுளே தேடுக.
அறிவு கேட்கும் கேள்விகளுக்கு அனுபவம் காட்டும் உண்மைகளே பதில்!
இருக்குமிடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையாதே.
கல்வியின் பயன் ஆனந்தத்தை அனுபவித்தலே ஆகும்.
அது கிட்டாத கல்வியினால் பயன்தான் என்ன ?
அதை எட்டாத வாழ்வினால் என்னதான் பயன்? வயிற்றுப் பிழைப்பு மட்டுந்தான் வாழ்க்கையா?
அப்பத்தினால் மட்டும் மனிதன் உயிர் வாழ்வதில்லை என்கிறார் ஏசு பிரான்.
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம் என்பதனை உணர்த்துவதே உண்மையான கல்வி !

மெய்க்கல்வி கற்று மெய்ப்பொருளைத் தேடு !
அதுவே அருமருந்து ! குரு மருந்து !
எல்லாம் செய்யவல்ல மருந்து !
அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்துள்ளது.
அதை திறந்து காட்டும் குருவேண்டும். அது வரை காத்திரு.
பராபரம் உள்ள இடத்தை புத்தகக் கல்வியினால் அறியமுடியாது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
உள்ளத்தில் அறிவொளியைக் கண்டு, உலகத்திலும் அதனை ஏற்றி வைக்க முயலுங்கள்!

“  எல்லாமற என்னையிழந்த நலம்
  சொல்லாய் முருகா “ ( கந்தரனுபூதி : அருணகிரிநாதர் ).

“  ஞானமறிந்தோர்க்கு நமனில்லை “ ( திருவள்ளுவர் ஞானம் ).

“  உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்து
  உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று
  பக்திகொண்டு அலைவார்கள் விண்ணைப்பாரார் ” ( சட்டமுனி ).

“  மாற்றிப் பிறக்க மருந்தெவ்விடம் சிங்கி - அது
  மாளாமல் மாண்டு மறந்து இருப்பதே - சிங்கா “ ( பீர்முகம்மது ).
Learn to Listen; Listen to Learn !
The words are mine, the meaning is yours !
If you do not understand Silence, you cannot understand Words !

இதனை வாசிப்பவர் மனம் அமைதியால் நிரம்பட்டும் !
அமைதியில் பிறப்பது தான் நிம்மதி !
நிம்மதியே தெய்வத்தின் சந்நிதி !
அமைதியான உள்ளம் இறைவன் வாழும் இல்லம்.

“  நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
 நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே ! “

நன்று ! வாழ்த்துக்கள் !!
சித்தர் பெருமக்களின் திருவடிக்கு !

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...




6 comments:

  1. மிக மிக அருமை!

    ReplyDelete
  2. நெடுநாள் கேள்விக்கு ஆத்ம திருப்தியான பதில் கிடைத்தது. நன்றி.❤️

    ReplyDelete
  3. wonderful script writing .I really enjoyed while reading this article.
    I would like to know about the writer of this article. Because, i would like to read more of his article. I love the writer writing style.

    ReplyDelete
  4. "Summa Iru... Solara .." as a key to inner peaCe of mind and finding fulfilment in life is brilliantly explained .
    Salutations to you for your exellent briefing .
    Thanks

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்

    ReplyDelete
  6. சிறப்பு…நன்றி

    ReplyDelete