Sunday, 10 March 2019

சிந்தனைப் பூக்கள்..!

                                          தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                          சிந்தனைப்  பூக்கள்..!


          இயற்கையின் துடிப்பில் விளைந்தது உலகம் .
இறைவனின் துடிப்பில் பிறந்தன உயிர்கள் .
உலகத்தைப் படைத்துவிட்டு அதில் எங்கும் நிறைந்து நின்றான்.
மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்குள் மறைந்து விட்டான் !
கிடைத்தவன் மறந்தான் ; படைத்தவன் மறைந்தான் !
வரத்தைக் கொடுத்தான் , சிவனே தவித்தான் என்பது தானே புராண வரலாறு.
மறந்த , மறைந்த பரம்பொருள் எங்கே என்று தேடத் தொடங்கியது மனம் .
அந்த வேட்கையின் விளைபொருள் கலைகள் .

        கலைகள் மானுடத்தின் உடன் பிறப்பு உயிர் நாதம் .
லகம் உருவானதும் உயிர்கள் படைக்கப்பட்டதும் ஒரு வகைக் கலையே, கலைக்கூடத்தின்  பரிமாணங்களே.
டிமுடியும் ஆதியந்தமும் ஓங்கார ஓசையின் பரிணாமந்தான் .
இயற்கை என்பதும் இசையின் சலங்கை ஓசை ; ஏழு ஸ்வரங்களின் ஆலாபனை.
ஏழு கோள்களின் இயக்கம் கூட இசைக் கலையின் அடிநாதங்கள்.
ஆதவனும் அம்புலியும் ஆதிசக்தியின் சின் முத்திரை .
கலைகளும் அதன் வடிவங்களும் , ஆன்மாவின் அனுபல்லவி , அதன் அபிநயங்கள் .
பரம்பொருளுக்கு மானுடம் பாடுகிற மங்களாசாசனம் .
பரம் பொருளைக் காண மன ஏவுதளம் செலுத்துகிற வேட்கை விண்கலம் !

        Art for art’s sake என்றது மேல்நாட்டுத் தத்துவம் .. ஆனால் எங்கும் எதிலும் தெய்வத்தைக் கண்டது இந்த மண் . 
எல்லாமே இறைவனின் திருவிளையாடல் என்றது . 
உள்ளுவதெல்லாம் உயர்உள்ளல் தானே தமிழனின் பண்பாடு !
காக்கைச் சிறகினிலும் கண்ணனைக் கண்டது ; தீக்குள் விரலை வைத்த போதும்  திருமாலைத் தீண்டி மகிழ்ந்தது . 
வானவில்லின் நிறம் குழைத்து மின்னல் என்னும் தூரிகையால் மண்ணில் மனம் வரைந்த கோலங்களே கலைகளின் வடிவங்கள் . 

     இந்த மண் வீரத்தின் விளை நிலம். 
                       ஞானத்தின் அட்சய பாத்திரம் .                
                       அறிவியலின் ஆதார். 
                       ஆன்மீகத்தின் தொட்டில் . 
                       சாகாக்கலையின் பிறப்பிடம்.
                       வாழும் கலையின் வழிகாட்டி . 
                       மொழியே இவற்றின் அடிமுடி . 
தன்னை அறிதலே இதன் பயிற்சி கூடம் , பாடசாலை .
மொத்தத்தில் அனைவரையும் ஈர்க்கும் ஆன்மீக காந்தம் .
கலைகள் அதன் கற்பக விருட்சங்கள் . 

      இறைவனைக் கூட இசை வடிவில் கண்டது பக்தி வழிபாடு .
ஏழிசையாய் இசைப் பயனாய் பரம்பொருளை அனுபவித்தது பக்தி மார்க்கம் .
குயில்கள் பாடுவதும் , மயில்கள் ஆடுவதும் கலைகளின் சிரிப்பு , வர்ணஜாலங்கள் .
காற்று வீசுவதும் , கடல் அலைகள் எழுவதும் காலத்தின் கீர்த்தனைகள்.
மனித வாழ்க்கை தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடிகின்றது .
எங்கும் எதிலும் கலைக்கோவில் மணியோசை .

    மரங்கள் வளர்வதும் மலைகள் வளர்வதும் 
பூக்கள் பூப்பதும் , காய்ப்பதும் கனிவதும் கீதத்தின் நாதங்கள் ;
நதிகள் பிறப்பதும் நடப்பதும் ஓடுவதும் நாதமணி கீதங்களே.

    இதயம் இயங்குவதும் , நாடி துடிப்பதும் இசையின் எதிரொலிகளே.
பேச்சும் பாட்டும் ஆன்மாவின் ஆலாபனை , ஆதார சுருதியின் சஞ்சாரங்கள்.
இறைவனின் ஆனந்த கூத்தும் அற்புதத் திருநடனமும் அண்ட சராசரங்களின் இயக்கம் .
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் மூழ்கி முத்து எடுத்தவர் முன்னோர்கள் .

      ஏட்டிலும் பாட்டு - எழுத்திலும் பாட்டு , எண்ணத்திலும் பாட்டு , இயற்கையிலும் பாட்டு.
தாலாட்டு , தெம்மாங்கு , கும்மி , காவடி , குலவை என எல்லாவற்றிலும் இசையும் பாட்டும் நர்த்தனம் புரிகிறது . 
கழனியில் களை எடுக்கும் போது பாட்டு , கதிர் அறுக்கும் போது பாட்டு , நீர் இறைக்கும் போது பாட்டு , நெல் நடும் போது பாட்டு .
கழனி நெல்லை களஞ்சியத்தில் சேர்த்து பொங்கல் வைத்து வழிபடும் போது , நினைத்தது நடக்க , பார்த்தது பலிக்க பொங்கலோ பொங்கல் ” எனும் புதுப்பாட்டு .
குலவையிட்டு குதுகலம் , கூடி மகிழும் கும்மிப்பாட்டு. 
சோறுபோடும் உழவனுக்கும் , கூட உழைத்த காளைகளுக்கும் பொங்கல் வைத்து நன்றி சொல்வது தமிழனின் குணம் , தமிழ் மண்ணின் மணம் , தரணிக்கு ஓர் பாடம் .
நன்றி பாராட்டுவது , நல்ல மனம் பாடுகிற கடவுள் வாழ்த்து .

     காவியம் பாடும் கோவில் சிற்பங்கள் காலத்தால் கரையாத கலைகளின் உயில் .
தமிழ் மண்ணின் தெய்வங்களும் , தேவதைகளும் கலை வடிவான ஞானபீடங்கள் .
கலைமகள் வீணை மீட்டுகிறாள் ; நந்தியும் தட்சணாமூர்த்தியும் மத்தளம் வாசிக்கிறார்கள்.
கோவிந்தன் குழல் ஊதுகிறான் .
நடராஜர் நடனமாடுகிறார் , நாரதர் தம்புரா இசைக்கிறார் .
தேவகணங்கள் எல்லாம் திருநடனம் புரிகின்றன .
தேவலோகத்தில் எப்போதும் வேதவாத்தியங்களின் மங்கள இசை , மணியோசை , சலங்கை ஒலி.
ஆக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பிறப்பித்தது , பிரசவித்தது இந்த மண் .
எந்த மண் ?
நாம் வந்த மண் , நம் சொந்த மண் ! தெய்வம் நமக்கு தந்த மண் !

     மருத்துவமும் , வானியலும் இம்மண்ணின் மகரந்தம் .
இரசவாதமும் சாகாக்கலையும் இதன் பொக்கிஷங்கள் .
உடம்பின் அதிர்வுஅலை மூச்சில் , அணுசக்தி வீச்சில் வர்மக்கலையினை வடித்தார்கள் சித்தர் பெருமக்கள் - அண்டத்தை பிண்டத்தில் பார்த்த அனுபூதிசீலர்கள் அல்லவா ?
அதிலும் தொடு வர்மம் , நோக்கு வர்மம் என எத்தனை சூட்சுமங்கள் , அத்தனையும் அதிசயங்கள்..
சிலம்பு விளையாட்டின் சிற்பகூடம் இந்த மண் . இதில் இவனை மிஞ்ச இவ்வுலகில் இன்றுவரை யாருமில்லை .
களரி விளையாட்டில் கரைகண்டவன் , மல்யுத்தத்தில் மாமல்லன் , மஞ்சு விரட்டில் மாவீரன் , மதம் கொண்ட களிற்றையும் , சினங்கொண்ட சிங்கத்தையும் அடக்கிய சூரன் .
வாள் வீச்சு , வில் வித்தைகளில் விண்ணைத் தொட்ட விஞ்ஞானி .
இன்றைய கராத்தே குங்ஃபூ எல்லாம் இவற்றின் xerox நகல்களே.

“ போற்றவே வாசியைத் தான் அறிய வேண்டும்
         பொங்க முடன் ஆதிஉப்பு அறிய வேண்டும்
ஏற்றவே பூரகத்தை மனதில் உன்னி
           எழிலான தேவியுட பாதங் கண்டு
மாற்றவே குண்டலியின் பொருளைக் கண்டு
          மகத்தான வல்லபையை மனதில் உன்னி
தூற்றியே அண்ட பிண்ட நிலையைக் கண்டு
           துப்புரவாய் சிவகாமி தன்னைக் காணே ”
                                             - அகத்தியர் பன்னீராயிரம்

   வீர விளையாட்டுகள் மட்டுமல்ல ; விடுகதைகளுக்கு விடை சொல்லும் மனக்கணக்கு விளையாட்டுகளிலும்  வில்லாதி வில்லன் , வல்லவனுக்கு வல்லவன் .
சான்றாக ஒன்று ; சராசரி மனிதர் இருவரின் சம்பாஷணைக் கேளுங்கள் :

ஒருவர் :- “ முக்காலை ஊன்றி மூவிரண்டுக்குப் போகையிலே, ஐந்துதலை நாகம் அழுந்த கடித்தது பார் ” - இது வினா.
அடுத்தவர் பதில் :- “ பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் எடுத்து தேய் .”

இந்த விடுகதைக்கு விடை தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் .
இது யாரோ தமிழ் புலமைமிக்க பண்டிதர்களின் பேச்சு உரையாடல் அல்ல.
இரு சாமன்யர்களின் வழக்க நடைமுறை விளையாட்டு சம்பாஷணை.
இந்த விடுகதைக்கு விடை அடுத்த வரைவில்.
இது நமக்குச் சொல்லுவது என்ன ? 
தமிழ்க்குடியின் சாதாரண மனிதனிடம் கூட மொழி அறிவும் , மதி நுட்பமும் சும்மாப் புகுந்து விளையாடியது என்பது தான் !
இந்த கலைகள் எல்லாம் வீரத்தைக் கொடுத்து , ஞானத்தை ஊட்டியது , தீரத்தை வளர்த்தது .

      இது சித்தர்கள் ஜீவிக்கும் பூமி.
உலகிற்கே ozoneஐ வழங்கி , பொங்கும் அருவிகள் தங்கும் பொதிகை மலை இங்குதான் உள்ளது. இது உலகத்தின் காவல் தெய்வம் என்று சொன்னால் மிகை ஆகாது.
அயல்நாட்டவரையும் ஆகர்ஷிக்கும் அண்ணாமலை அகரத்தின் ஆதி வீடு.
மேனாட்டவர் எல்லாம் வியந்து போற்றும் மெய்ஞானக் கலைகள் இந்த மண்ணின் மகரந்தம் , இந்த பூமியின் புதையல்கள் .
மொழிக்கென்று சங்கங்கள் நிறுவி தமிழ் மந்திரத்தால் தரணியையும் வாழ வைத்தது தமிழ்க்குடி.
தமிழ்மணி , தமிழ்ச்செல்வி , தமிழிசை என மொழியால் பெயர்சூட்டி மகிழ்ந்த மண் இவ்வுலகில் இது மட்டுந்தான் .
“ யாதும் ஊரே , யாவரும் கேளிர் ” எனும் கணியன் பூங்குன்றனின் சொல்லில் தான் என்ன அறிவு , எத்தனை மனித நேயம் !
தனக்கென வாழாத் தகைமை அதில் சுடர் விடுகிறது .
“ உன்னைப் போல் பிறரையும் நேசி ” என்னும் உயிர்களைப் போற்றும் உன்னதத் தத்துவம் அங்கே ஒளி வீசுகிறது அல்லவா !
அதனால் தானே ஐ.நா.சபை அந்த சொற்றொடரைத் தத்தெடுத்துக் கொண்டது !

      இப்படிப்பட்ட மண்ணில் பிறந்த நீ சாதாரண மனிதப் பிறவி அல்ல .
உன் மரபணுவில் மறைந்திருக்கும் மந்திர சக்தி உனக்குத் தெரியாது , ஆனால் உலகிற்குத் தெரியும் .
உன் ஊனுக்குள் உறைந்து , அணுவிற்குள் அணுவாய் , அப்பாலுக்கு அப்பாலாய் நிறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் நீ அறிய வில்லை ; ஆனால் அயல் நாட்டான் அறிந்தான் .
வெள்ளையன் வந்தான் , வியாபாரம் செய்ய . 
இந்த மண்ணின் மகத்தான சக்தி அவனை மலைக்க வைத்தது.
மனித ஆற்றலின் மாயசக்தியில் அவன் மருண்டே போனான்.
மண் வளத்திலும் மனித வளத்திலும் அவன் மயங்கித்தான் போனான் .
மண்ணின் தெய்வீகமும் மனிதர்களின் வீரமும் சூரமும் அவன் நினைவில் நின்று நிழலாடியது.
இவர்கள் வளர்ந்தால் என்ன ஆகும் என்று வியந்து நின்றான் .
இவர்களுடைய விஸ்வரூபத்தைத் தடுப்பது எப்படி என்ற சதித்திட்டம் தீட்டப்பட்டது , சதி வலைப் பின்னப் பட்டது.
விதியின் சதியால் , மண்ணின் மைந்தரும் மயங்கி அந்த வஞ்சக வலையில் சிக்கத் தொடங்கினார்கள் , பாவம் !
அந்நிய மோகம் அவர்களை ஆட்டிப் படைத்தது .
தாய்ப் பாலினை ஒதுக்கி , தமிழ்ப் பாலையும் மறந்து , ஏதோ ஒரு நினைப்பால் புட்டிப்பாலின் மீது புதிய மோகம் கொண்டார்கள் .
இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க முயல்வது தானே மனித சுபாவம் , இவன் மட்டும் விலக்கா என்ன ?

       தீட்டிய சதித் திட்டத்தின் முதல் பலிபீடம்தான் இன்றைய கல்விமுறை .
மக்கப் செய்து மார்க் வாங்கும் மாயச்சூது .
மனதை மழுங்கவைத்து , சிந்தனையைச் சிறியதாக்கி , ஞானசக்தியை ஊனப் படுத்தியது இந்த கல்விமுறை.
மனத்திட்பம் குறைந்தது , மதிநுட்பம் அகன்றது , நுண்ணறிவு எல்லாம் மறைந்தே போனது.
ஞானமும் வீரமும் , தீரமும் சூரமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தானே வளர்ச்சி , complete and harmonious growth !
சீரிளமைச் செந்தமிழாய்ச் செழிந்தோங்கிய மனமும் , நரம்போடு பின்னி வளர்ந்த ஞானவீரமும் , எண்ணத்தால் தாழ்ந்து இயக்கத்தால் குறைந்து விட்டதே இன்று !
உன் கற்பனைத் திறமும் , கண்டு பிடிப்பு ஆற்றலும் என்னவாயிற்று ?
உலகிற்கே பாடம் சொன்ன உன் அறிவெல்லாம் எங்கே போயிற்று ?
சிந்தையால் சுருங்கி செயலாற்றலில் முடங்கி விட்டான் .
வாழ்க்கையில் எதையும் எதிர் கொள்ளத் தயக்கம் , எதிலும் மயக்கம் , ஏனென்று தெரியாத கலக்கம், மொத்தத்தில் ஒரே குழப்பம் .
தடுமாறுகின்ற மனதை தாய் கூட விரும்ப மாட்டாள் .

    நோபல் பரிசெல்லாம் மேலை நாட்டு சீதனம், அயல்நாடுகளின் குத்தகை என்று ஆகிவிட்டது !
ஒலிம்பிக் மெடல் எல்லாம் வெறும் கானல் நீர் தானா ? கற்பனைப் பொருள் தானா ?
உடம்பில் உரம் இல்லை , மனதில் துணிவில்லை .
அறிவிலும் தெளிவில்லை , ஆண்டவனும் துணை இல்லை !
அன்ன நடை கற்கப்போய் தன் நடையை இழந்து விட்டோமே என்று அங்கலாய்கிறது பேதை மனம் .
வசதி வாய்ப்புகளுக்காகத் தேடி வாழ்க்கையைத் தொலைத்து விட்டான் .
காசு பணத்திற்கு அலைந்து கால்களை இழந்து விட்டான் .
சிறகு ஒடிந்த குயில் என்ன பாடும் ? கால் ஒடிந்த மயில் எப்படி ஆடும் ? 
உறுதி இல்லாத மனதுக்கு வெற்றி எங்கே கிடைக்கும்..
இந்த மனப்புண்ணை யார் ஆற்றுவார் ? இந்த நிலையினை யார்தான் மாற்றுவார் ?

     திரும்பவும் நினைவூட்டுகிறேன் : மக்கப் செய்து மார்க் வாங்குவது மாத்திரம் கல்வி அல்ல.
அறிவை வளர்க்காத கல்வி என்ன கல்வி ? ஆற்றலைப் பெருக்காத கல்வியால் யாருக்கு லாபம்? தன்னம்பிக்கைத் தராத கல்வியால் என்ன பயன் ?
வீர ஞானத்தை ஊட்டாத படிப்பு வீணான படிப்பு .
மனதை மழுங்கடித்து சிந்தனையைச் சிறகொடித்து 
தன்னை அறியாமல் தனக்குள் மறைந்திருக்கும் சக்தியை உணராமல் , அச்சத்திலும் அடிமைச் சிறுமதியின் உச்சத்திலும் உன்னை வைத்திருக்கும் கல்விக்குப் பெயர் கல்வியா ?
விடுகதைக்கே விடை தெரியாத கல்விமுறை , நவபாஷாணத்திற்கு எங்கே விளக்கம் சொல்லப் போகிறது...?

     போகருடைய வேதியலையும் , இடைக்காடருடைய விண்ணியலையும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும் .
அவர்களிடம் இருந்து கற்றது என்ன ? பெற்றது எது ?
நீ எதாவது செய்தாயா என்று நாளை உன் பேரன் வந்து கேட்பான்...
அதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறாய் ?
ஏனோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் , காலம் வந்தது கதையும் முடிந்தது என்பது தானா ?

     கல்வி ஒரு தவம் , அது கடவுள் கொடுக்கிற வரம் .
உன்னை அறிவித்து உனக்கருள் செய்யும் சித்து .
உடம்பாலும் மனதாலும் உன்னை உய்விக்கும் ரசவாதம்
மண் மீது உன்னை மனிதனாக நடக்கச் செய்யும் மாமருந்து.
எத்தனையோ பிறப்பு எடுத்து பெறுகின்ற பேற்றை எல்லாம் இந்த ஒரு பிறவியிலேயே அத்தனையும் பெற வைப்பது தானே மெய்யறிவுக் கல்வி , தவஞான வேள்வி .

“ கூர்ந்து பஞ்ச பூதத்தின் குறிப்பு கேளு 
        கூரான வேதைக்கு பஞ்ச பூதம்
நேர்ந்து நின்ற சிருட்டிக்கும் பஞ்சகர்தான்
         செயலான மனுஷருக்கு மஞ்சுபூதம்
ஆர்ந்து நின்ற பறவைக்கு மஞ்சு பூதம்
         அப்பனே யோனி யெல்லா மஞ்சு பூதம்
வார்ந்து நின்ற வாதத்திலஞ்சு பூதம்
        வகையெல்லாம் மார்க்கமாய் மருவக்காணே ”
                                                     - போகர் நிகண்டு

     வருமானம் மட்டுமே வாழ்க்கை என்று ஆகிவிட்ட பிறகு, ஆன்மா என்ன ? ஆண்டவன் என்ன?
ஆத்ம ஞானத்திற்கு அங்கு இடமே இல்லை .
காசு பணமே கடவுள் என்று கருதி விட்ட பிறகு , காயகற்பம் அங்கே என்ன செய்யும் ?
அதனால் தானே “ பெரிதினும் பெரிது கேள் ” என்று பாரதி பாடினான் .
காய்ச்சல் வந்த பின்பு தான் சுக்கு மிளகைத் தேடுகிறான் .
சுக்கில் இருக்குது சூட்சுமம் என்றுதானே அறியத் தொடங்குகிறான் .
சுக்கில் இருக்குது சுட்சுமம் என்று தானே அறியத் தொடங்குகிறான .
இதில் சொல்வது பிறமொழிகளைப் புறக்கணிப்பு செய்வது அன்று.
அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள் , கற்று தேர்ச்சி பெறு.
ஆனால் சொல்ல வருவதெல்லாம் தாய்மொழி கண் போன்றது , கண்ணின் மணி போன்றது , ஒளி தருவது .
பிறமொழி அறிவெல்லாம் கண்ணுக்கு அணிகின்ற கண்ணாடி தான்.
கண்களை விற்று கண்ணாடி வாங்காதே ; கண்களை இழந்த பிறகு கண்ணாடியால் யாது பயன் என்பது தான் .

        தேன், தினை , கம்பு , வரகு , சாமை குதிரைவாலி என பாரம்பரிய உணவு கொண்ட நம் முன்னோர்களின் தோற்றம் செயல்களில் என்ன மிடுக்கு எவ்வித கம்பீரம் , அதோடு வீட்டுக்கு வீடு குறைந்தது அரை டஜன் குழந்தைகள் .
அவர்களுக்கு வைரம் போன்ற நெஞ்சம் , வஜ்ராயுதம் போன்ற தேகம் .
அவர்களை எந்த நோயும் அண்ட வில்லை .
தமிழ் மூதாட்டிகள் புலியை முறத்தாலயே அடித்து விரட்டியதாக வரலாறு சொல்கிறது .
ஆண்மை சிங்கத்தின் கூட்டம் என்பதை நினைவூட்டுகிறேன் . 
ஞான வீரத்தை ஞாபகமூட்டுகிறேன் .
பாரம்பரிய உணவுகளை எல்லாம் புறந் தள்ளிவிட்டு பீட்சா , பர்கரில் வந்து நிற்கிறது இன்றைய தலைமுறை .
இது எதில் போய் முடிகிறதோ , இன்னும் என்னென்ன நோய்கள் எல்லாம் வரப்போகிறதோ , தெரியவில்லை .

       குனிந்து குடிக்கிற குளிர் பானத்தை விட , நிமிர்ந்து குடிக்கிற மோர்தான் நன்மைகள் செய்கிறது !
அதுதான் பாரம்பரிய உணவின் மகிமை ; அருந்தும் போது கூட உன்னை தலை நிமிரச் செய்கிறது !
பாரம்பரிய உணவுகளை மறந்ததால் தானே பாழாய் போன நோய்கள் எல்லாம் படையெடுத்து வந்தன .
ஆரோக்கியத்தை அடியோடு தொலைத்து விட்டோமே , ஏன் இந்த அவலம் ?
ஆரோக்கியத்தை மட்டுமா தொலைத்தோம் , அதோடு நிம்மதியையும் சேர்த்துத் தானே தொலைத்தோம் . காசு பணம் கரியாகப் போனது தானே மிச்சம் .
ஆரோக்கியத்தை தொலைத்தது நீ , அதனை வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம் எப்படித் தீர்த்து வைக்கும் ? 
தொலைத்ததை தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும் !

     இவை எல்லாம் சொல்லப்படுவது எதற்காக என்றால் , இந்த மொழியும் இதன் களஞ்சியக் கலைகளும் உன்னுடைய அடையாளச் சின்னங்கள் , அதிகார முத்திரைகள் .
இந்த ஞானமும் , வீரமும் எங்கே போயிற்று ? என்பது தான் கேள்வி .
எழுதி வைத்த ஏடுகளையும் , எண்ணிலாக் கலைகளையும் இழந்த பின்பு நமக்கென மிஞ்சி நிற்பது இந்த மொழி ஒன்று தான் .
அதனையும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .
இறுதியில் உனக்கென்று சொல்வதற்கு இந்த பூமியில் எதுவும் இல்லை.
எதுவுமே இல்லாத அனாதை ஆக்கி உன்னையே அழிப்பதற்கு எத்தனை சூழ்ச்சிகள் என்பது போகப்போக புரியும், பின்பு உனக்குத் தெரியும் .
இதையெல்லாம் உணர்ந்து கொண்டால் சரி ; இல்லை என்றால் உன் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் .
இனம் அழிந்த பின்பு நீ என்பது வெறும் கானல் நீர்.
இது அறியாது வருகின்ற அஸ்தமனம் .

      அயல்நாடுகள் என்ன அண்டை மாநிலங்கள் கூட உன்னை அலட்சியமாகப் பார்க்கும் நிலை.
காசு பணத்தைத் தேடுகிறோம் , ஆனால் ஆரோக்கியத்தை இழந்துவிட்டோம் ; ஆகிருதி காணாமல் போயிற்று .
வசதி வாய்ப்புகளுக்கு அலைகிறோம் ஆனால் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் .
நிம்மதி இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? அது 
சுவர் இல்லாத சித்திரம் , ஸ்வரம் இல்லாத பாட்டு .
ஓயாத கவலை ஒழியாத சோகம் , எதற்கும் தயக்கம் எதிலும் மயக்கம் .
சுவை அறியாத உணவு , சுகம் இல்லாத தூக்கம் என்று ஆகி , இருந்தால் போதும் என்றொரு வாழ்க்கை .
வாழ்விற்கு வழிகாட்டி , வையகத்திற்கு கையேடு என்று முன்னோர் வாழ்ந்தது போய், விழுவதும்  அழுவதும் , தேம்புவதும் திணருவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது .

      சுற்றிலும் எது நடந்தால் எனக்கென்ன என்ற ஒரு சுயநல எண்ணம் .
காவிரி வந்தால் என்ன , கழனிகள் காய்ந்தால் என்ன , காடுகள் அழிந்தால் என்ன , ஆற்று மணல் பறிபோனால் என்ன , அரியவகை மூலிகை வனங்கள் அழிந்தால் என்ன... என்று தன்நலச்சேறாய் வாழ்வதில் பயன் என்ன ?
கட்டி வாழ்ந்ததை விட வாழ்வில் நீ விட்டு செல்லும் தடயங்கள் தான் 
விளக்காய் நின்று ஒளிவீசும் , வாடா மலராய் மணம் பரப்பும் .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் , இவர் போல யார் என்று ஊர் சொல்லும் .
பொல்லாங்கு தேடுவது புது நாகரிகம் , கல்லாத பேர்களுக்கு எது நாகரிகம் ?
கன்றாத வளமை , குன்றாத இளமை என்று கற்றோர்கள் சொன்னார்களே அது நாகரிகம் .
முதுமையை வென்று முன்னோர்கள் வாழ்ந்தார்களே அது நாகரிகம் !
இன்றைய நாகரிகம் எல்லாம் இலக்கணம் இல்லாத எழுத்து , seriousness இல்லாமல் சிரித்து விட்டுபோகும் நகைச்சுவை , சிந்திக்க மறந்த அறியாமை , சிதறிப் போகிற செலவுக்கணக்கு !
நாகரிகம் என்ற பெயரில் நலத்தை இழந்தோம் , நல்லதை எல்லாம் தொலைத்துவிட்டோம்.

     போனது போகட்டும் , புரிந்தது மிஞ்சட்டும் . இந்த ஆதங்கத்தின் அர்த்தங்களைக் காலங்கள் காட்டட்டும்.
சொல்லத் துடித்தது மனது , சொல்லி வைத்தது குறைவு , இது நம்மிடைய உள்ள உறவு , அது எல்லோர் கணக்கிலும் வரவு.
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் , ஏட்டளவில் வந்ததெல்லாம் கொஞ்சம் .
எழுதியவை வரைவு அல்ல , எண்ணம் ; இதில் உள்ளது எல்லாம் எழுத்து அல்ல , ஏக்கம் !
இவை , நீ உள்ளதை உணர்ந்து கொள்ள , உண்மைகளை தெரிந்து கொள்ள !
மற்றதைப் பரம்பொருள் பரந்தாமன் பார்த்துக் கொள்வான் .
இன்று நாளை மாறும் , சென்ற வாழ்வு திரும்பும் ; இதயங்கள் ஒன்று சேரும் , இழந்த பெருமை நிச்சயம் கிடைக்கும் .

    உன்னை நேசி , அதோடு இந்த மண்ணையும் மரபையும் நேசி !
அதில் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களை உற்று நோக்கி ஆழ்ந்து யோசி .
தெரியாத உண்மைகள் தெரிய வரும் , புரியாத புதிர்கள் புரிந்து விடும் .
உனக்கென்று சொல்லப்பட்ட “ சாகாக்கலை ”, உலகிற்கு உணர்த்தப்பட்ட உபதேசம் .
இந்த அரிய கலை தமிழ் மொழியில் மட்டுந்தான் மறைந்து மணம் வீசுகிறது .

“ ஆமென்ற வெளிகடக்க அகண்ட வீதி
          அதிகமேதான் இவை எல்லாம் மனதுண்டானால்
ஓமென்ற ஒளிகடக்க அந்த போதம்
           உன்னியேதான் எட்டிப்பார் அதுவும் பேசும்
நேமென்ற நிலைகடக்க முப்பாழ் தாண்டி
           நிலைத்துமேதான் ஏறுபவன் குளிகை ஞானி
மோமென்ற வெளிகடக்க ஒன்று மில்லை
          மூச்சில்லை பேச்சில்லை முழுநோக் கில்லை ”
                                                         - போகர் ஏழாயிரம்

       தமிழ் இனத்தை தலை நிமிரச் செய்வது தலையாய கடமை.
நீயும் வாழ்ந்து பிறரையும் வாழவை . அனைவரையும் அரவணைத்துச் செல் .
எட்டு நாடுகள் சேர்ந்து உன் இனத்தை அழித்தார்கள் , உன் கண்முன்னே .
கொத்து கொத்தாய் குண்டுகள் போட்டு குழந்தைகளைக் கூடக் கொன்றார்களே குழந்தைகள் என்ன செய்தன ? பாவம் !
இந்த இன அழிப்புக்கு நோக்கம் என்னவாக இருக்கும் ? வம்சத்தை வளரவிடக்கூடாது என்பதைத் தவிர .
ஐ.நா. சபையும் இதனை வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தது .
இழந்த உயிர்களை இனி மீட்கமுடிமா ? முடியும் , ஏனென்றால் அவைகள் புதைக்கப்படவில்லை , மண்ணில் விதைக்கப்பட்டிருகிறார்கள் - ஞானவீரம் தமிழ் மண்ணை விட்டு என்றும் அகலாது , மறையாது , அழியாது . - இது சித்தர்கள் ஜீவிக்கும் பூமி !

      யாழ்ப்பாணத்தில் நூலகத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள் .
 நெஞ்சு கொதித்தது , நீதியும் துடித்தது .
நூலகத்தைத் தீயிட்டு அழித்தப் பாவச்செயல் உலக வரலாற்றில் எங்கேனும் பார்த்தது உண்டா ? படித்தது உண்டா ?
இந்தக் கேவலமான இழி செயலின் கோழைத்தனமான ஈனச் செயலின் நோக்கம் என்ன ?
உன் அறிவுக் கருவூலத்தை அழித்து உன்னை அறியாமை இருளில் வைக்க வேண்டும் என்பது தான் .
உன்னை வளர விடக் கூடாது , உனக்கு எதுவும் தெரிந்து விடக் கூடாது என்பது தான் .
இவையெல்லாம் உன்னை அழிக்கத் துடிக்கும் சூழ்ச்சிகளின் சொக்கட்டான் விளையாட்டு, திட்டமிட்ட வெறிச் செயல்கள் !
பாவம் செய்பவரைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை , பார்த்ததைப் புரிந்து கொண்டால் போதும் , உள்ளதை உணர்ந்து கொண்டால் போதும் .

     நீ இந்த மண்ணின் மைந்தன் , மரபணுவின் விளைநிலம் ; சித்தர் பெருமக்களே அதன் உயிர்அணு , ஊட்டச்சத்து !
உன்னை வெல்வதற்குப் பூமியில் யாரும் பிறக்கவில்லை ; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தான் உண்டு.
தீதும் நன்றும் பிறர் தர வாரா !
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தான் உண்மை .
இரவுக்கும் பகல் உண்டு அதில் வெற்றி நிச்சயம் உனக்கு உண்டு.
இவற்றை எல்லாம் தாண்டி நீ கால் வை ; எதற்கும் அஞ்சாமல் உன் வழியில் பயணம் செய் .
நீ செய்ய வேண்டியதெல்லாம் பழைய தமிழ் ஏடுகள் , சுவடிகள் , நூல்களை எல்லாம் மேலும் அழிந்து விடாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் , வரும் தலைமுறைக்காக !
அதை நீ படிக்கவில்லை என்றாலும் உனக்கு ஒரு மகன் பிறப்பான் , அவன் வந்து படிப்பான் பயன் பெறுவான் .
இது இந்த மண்ணுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் ; உனக்காக உயிர் விட்ட தியாகிகளுக்குச் செலுத்தும் அஞ்சலி.
வழி ஒன்று பிறக்கும் , ஒளி அன்று தெரியும் , பரிசு என்ற ஒன்று நிச்சயம் கிடைக்கும் .
பகை என்ற ஒன்று அப்போது பரிதவித்து நிற்கும் ; சூழ்ந்த சூழ்ச்சிகள் சூன்யமாகப் போய் விடும் .

     அமைதியாய் இரு , ஆழ்ந்து யோசி .
மனம் விந்தைகள் புரிகிற மந்திரக்கோல். அணுசக்தி நிறைந்த atomic reactor.
பேதை மனதை ஒருபோதும் பேதலிக்க விடாதே .
தியானத்தின் மூலம் அதனைத் திடப்படுத்து .
திடமான மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும் .
தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவு எடுக்கும் .
தீர்க்கமான முடிவு உறுதியான செயல்பாட்டைக் கொடுக்கும் .
உறுதியான செயல்பாடு அமைதியின் அரசாட்சி ;
அமைதியான உள்ளம் ஆண்டவன் வாழும் இல்லம் , நிம்மதியின் ராஜசபை.
அமைதி நிறைந்தவனின் பேச்சும் செயலும் அனைவரையும் ஆகர்ஷிக்கும் .
அவன் செல்லும் இடமெங்கும் அமைதியைப் பரப்புவான் , ஆனந்தத்தால் நிரப்புவான் .

“ ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி !
   சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி !
                                                                       -பட்டினத்தார்

வருங்காலத்தில் நம் தலைமுறைகள் ,
“ நாமார்க்கும் குடியல்லோம் , நமனை அஞ்சோம் ” என்று முழங்கட்டும் .
தமிழன் என்று சொல்லட்டும் , தலை நிமிர்ந்து வாழட்டும் !
தரணி எல்லாம் ஆளட்டும் !


“ வீடறிந்து மந்திரத்தை நிறுத்த வேணும் 
         வீட்டிலுள்ள பேர்களையும் விரும்பவேணும்
நாடறிந்து நல்ல பதங்காண வேணும்
          நன்மையுள்ள சத்திசிவ பூசை வேணும்
கூடிருந்து குருபாதங் காண வேணும்
        குருடரைப்போலிருந்தாக்கால் குணமோ மைந்தா
தேடறிந்தால் சற்குருவை தேட வேணும்
         செகசால மாய்கையெல்லாந் தள்ளுதள்ளே ”
                                     - அகத்தியர் அமுதகலை ஞானம்

                 நன்று ! வாழ்த்துக்கள் !!

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...


No comments:

Post a Comment