Sunday, 10 March 2019

சிந்தனைப் பூக்கள்..!

                                          தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                          சிந்தனைப்  பூக்கள்..!


          இயற்கையின் துடிப்பில் விளைந்தது உலகம் .
இறைவனின் துடிப்பில் பிறந்தன உயிர்கள் .
உலகத்தைப் படைத்துவிட்டு அதில் எங்கும் நிறைந்து நின்றான்.
மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்குள் மறைந்து விட்டான் !
கிடைத்தவன் மறந்தான் ; படைத்தவன் மறைந்தான் !
வரத்தைக் கொடுத்தான் , சிவனே தவித்தான் என்பது தானே புராண வரலாறு.
மறந்த , மறைந்த பரம்பொருள் எங்கே என்று தேடத் தொடங்கியது மனம் .
அந்த வேட்கையின் விளைபொருள் கலைகள் .

        கலைகள் மானுடத்தின் உடன் பிறப்பு உயிர் நாதம் .
லகம் உருவானதும் உயிர்கள் படைக்கப்பட்டதும் ஒரு வகைக் கலையே, கலைக்கூடத்தின்  பரிமாணங்களே.
டிமுடியும் ஆதியந்தமும் ஓங்கார ஓசையின் பரிணாமந்தான் .
இயற்கை என்பதும் இசையின் சலங்கை ஓசை ; ஏழு ஸ்வரங்களின் ஆலாபனை.
ஏழு கோள்களின் இயக்கம் கூட இசைக் கலையின் அடிநாதங்கள்.
ஆதவனும் அம்புலியும் ஆதிசக்தியின் சின் முத்திரை .
கலைகளும் அதன் வடிவங்களும் , ஆன்மாவின் அனுபல்லவி , அதன் அபிநயங்கள் .
பரம்பொருளுக்கு மானுடம் பாடுகிற மங்களாசாசனம் .
பரம் பொருளைக் காண மன ஏவுதளம் செலுத்துகிற வேட்கை விண்கலம் !

        Art for art’s sake என்றது மேல்நாட்டுத் தத்துவம் .. ஆனால் எங்கும் எதிலும் தெய்வத்தைக் கண்டது இந்த மண் . 
எல்லாமே இறைவனின் திருவிளையாடல் என்றது . 
உள்ளுவதெல்லாம் உயர்உள்ளல் தானே தமிழனின் பண்பாடு !
காக்கைச் சிறகினிலும் கண்ணனைக் கண்டது ; தீக்குள் விரலை வைத்த போதும்  திருமாலைத் தீண்டி மகிழ்ந்தது . 
வானவில்லின் நிறம் குழைத்து மின்னல் என்னும் தூரிகையால் மண்ணில் மனம் வரைந்த கோலங்களே கலைகளின் வடிவங்கள் . 

     இந்த மண் வீரத்தின் விளை நிலம். 
                       ஞானத்தின் அட்சய பாத்திரம் .                
                       அறிவியலின் ஆதார். 
                       ஆன்மீகத்தின் தொட்டில் . 
                       சாகாக்கலையின் பிறப்பிடம்.
                       வாழும் கலையின் வழிகாட்டி . 
                       மொழியே இவற்றின் அடிமுடி . 
தன்னை அறிதலே இதன் பயிற்சி கூடம் , பாடசாலை .
மொத்தத்தில் அனைவரையும் ஈர்க்கும் ஆன்மீக காந்தம் .
கலைகள் அதன் கற்பக விருட்சங்கள் . 

      இறைவனைக் கூட இசை வடிவில் கண்டது பக்தி வழிபாடு .
ஏழிசையாய் இசைப் பயனாய் பரம்பொருளை அனுபவித்தது பக்தி மார்க்கம் .
குயில்கள் பாடுவதும் , மயில்கள் ஆடுவதும் கலைகளின் சிரிப்பு , வர்ணஜாலங்கள் .
காற்று வீசுவதும் , கடல் அலைகள் எழுவதும் காலத்தின் கீர்த்தனைகள்.
மனித வாழ்க்கை தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடிகின்றது .
எங்கும் எதிலும் கலைக்கோவில் மணியோசை .

    மரங்கள் வளர்வதும் மலைகள் வளர்வதும் 
பூக்கள் பூப்பதும் , காய்ப்பதும் கனிவதும் கீதத்தின் நாதங்கள் ;
நதிகள் பிறப்பதும் நடப்பதும் ஓடுவதும் நாதமணி கீதங்களே.

    இதயம் இயங்குவதும் , நாடி துடிப்பதும் இசையின் எதிரொலிகளே.
பேச்சும் பாட்டும் ஆன்மாவின் ஆலாபனை , ஆதார சுருதியின் சஞ்சாரங்கள்.
இறைவனின் ஆனந்த கூத்தும் அற்புதத் திருநடனமும் அண்ட சராசரங்களின் இயக்கம் .
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் மூழ்கி முத்து எடுத்தவர் முன்னோர்கள் .

      ஏட்டிலும் பாட்டு - எழுத்திலும் பாட்டு , எண்ணத்திலும் பாட்டு , இயற்கையிலும் பாட்டு.
தாலாட்டு , தெம்மாங்கு , கும்மி , காவடி , குலவை என எல்லாவற்றிலும் இசையும் பாட்டும் நர்த்தனம் புரிகிறது . 
கழனியில் களை எடுக்கும் போது பாட்டு , கதிர் அறுக்கும் போது பாட்டு , நீர் இறைக்கும் போது பாட்டு , நெல் நடும் போது பாட்டு .
கழனி நெல்லை களஞ்சியத்தில் சேர்த்து பொங்கல் வைத்து வழிபடும் போது , நினைத்தது நடக்க , பார்த்தது பலிக்க பொங்கலோ பொங்கல் ” எனும் புதுப்பாட்டு .
குலவையிட்டு குதுகலம் , கூடி மகிழும் கும்மிப்பாட்டு. 
சோறுபோடும் உழவனுக்கும் , கூட உழைத்த காளைகளுக்கும் பொங்கல் வைத்து நன்றி சொல்வது தமிழனின் குணம் , தமிழ் மண்ணின் மணம் , தரணிக்கு ஓர் பாடம் .
நன்றி பாராட்டுவது , நல்ல மனம் பாடுகிற கடவுள் வாழ்த்து .

     காவியம் பாடும் கோவில் சிற்பங்கள் காலத்தால் கரையாத கலைகளின் உயில் .
தமிழ் மண்ணின் தெய்வங்களும் , தேவதைகளும் கலை வடிவான ஞானபீடங்கள் .
கலைமகள் வீணை மீட்டுகிறாள் ; நந்தியும் தட்சணாமூர்த்தியும் மத்தளம் வாசிக்கிறார்கள்.
கோவிந்தன் குழல் ஊதுகிறான் .
நடராஜர் நடனமாடுகிறார் , நாரதர் தம்புரா இசைக்கிறார் .
தேவகணங்கள் எல்லாம் திருநடனம் புரிகின்றன .
தேவலோகத்தில் எப்போதும் வேதவாத்தியங்களின் மங்கள இசை , மணியோசை , சலங்கை ஒலி.
ஆக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பிறப்பித்தது , பிரசவித்தது இந்த மண் .
எந்த மண் ?
நாம் வந்த மண் , நம் சொந்த மண் ! தெய்வம் நமக்கு தந்த மண் !

     மருத்துவமும் , வானியலும் இம்மண்ணின் மகரந்தம் .
இரசவாதமும் சாகாக்கலையும் இதன் பொக்கிஷங்கள் .
உடம்பின் அதிர்வுஅலை மூச்சில் , அணுசக்தி வீச்சில் வர்மக்கலையினை வடித்தார்கள் சித்தர் பெருமக்கள் - அண்டத்தை பிண்டத்தில் பார்த்த அனுபூதிசீலர்கள் அல்லவா ?
அதிலும் தொடு வர்மம் , நோக்கு வர்மம் என எத்தனை சூட்சுமங்கள் , அத்தனையும் அதிசயங்கள்..
சிலம்பு விளையாட்டின் சிற்பகூடம் இந்த மண் . இதில் இவனை மிஞ்ச இவ்வுலகில் இன்றுவரை யாருமில்லை .
களரி விளையாட்டில் கரைகண்டவன் , மல்யுத்தத்தில் மாமல்லன் , மஞ்சு விரட்டில் மாவீரன் , மதம் கொண்ட களிற்றையும் , சினங்கொண்ட சிங்கத்தையும் அடக்கிய சூரன் .
வாள் வீச்சு , வில் வித்தைகளில் விண்ணைத் தொட்ட விஞ்ஞானி .
இன்றைய கராத்தே குங்ஃபூ எல்லாம் இவற்றின் xerox நகல்களே.

“ போற்றவே வாசியைத் தான் அறிய வேண்டும்
         பொங்க முடன் ஆதிஉப்பு அறிய வேண்டும்
ஏற்றவே பூரகத்தை மனதில் உன்னி
           எழிலான தேவியுட பாதங் கண்டு
மாற்றவே குண்டலியின் பொருளைக் கண்டு
          மகத்தான வல்லபையை மனதில் உன்னி
தூற்றியே அண்ட பிண்ட நிலையைக் கண்டு
           துப்புரவாய் சிவகாமி தன்னைக் காணே ”
                                             - அகத்தியர் பன்னீராயிரம்

   வீர விளையாட்டுகள் மட்டுமல்ல ; விடுகதைகளுக்கு விடை சொல்லும் மனக்கணக்கு விளையாட்டுகளிலும்  வில்லாதி வில்லன் , வல்லவனுக்கு வல்லவன் .
சான்றாக ஒன்று ; சராசரி மனிதர் இருவரின் சம்பாஷணைக் கேளுங்கள் :

ஒருவர் :- “ முக்காலை ஊன்றி மூவிரண்டுக்குப் போகையிலே, ஐந்துதலை நாகம் அழுந்த கடித்தது பார் ” - இது வினா.
அடுத்தவர் பதில் :- “ பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் எடுத்து தேய் .”

இந்த விடுகதைக்கு விடை தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் .
இது யாரோ தமிழ் புலமைமிக்க பண்டிதர்களின் பேச்சு உரையாடல் அல்ல.
இரு சாமன்யர்களின் வழக்க நடைமுறை விளையாட்டு சம்பாஷணை.
இந்த விடுகதைக்கு விடை அடுத்த வரைவில்.
இது நமக்குச் சொல்லுவது என்ன ? 
தமிழ்க்குடியின் சாதாரண மனிதனிடம் கூட மொழி அறிவும் , மதி நுட்பமும் சும்மாப் புகுந்து விளையாடியது என்பது தான் !
இந்த கலைகள் எல்லாம் வீரத்தைக் கொடுத்து , ஞானத்தை ஊட்டியது , தீரத்தை வளர்த்தது .

      இது சித்தர்கள் ஜீவிக்கும் பூமி.
உலகிற்கே ozoneஐ வழங்கி , பொங்கும் அருவிகள் தங்கும் பொதிகை மலை இங்குதான் உள்ளது. இது உலகத்தின் காவல் தெய்வம் என்று சொன்னால் மிகை ஆகாது.
அயல்நாட்டவரையும் ஆகர்ஷிக்கும் அண்ணாமலை அகரத்தின் ஆதி வீடு.
மேனாட்டவர் எல்லாம் வியந்து போற்றும் மெய்ஞானக் கலைகள் இந்த மண்ணின் மகரந்தம் , இந்த பூமியின் புதையல்கள் .
மொழிக்கென்று சங்கங்கள் நிறுவி தமிழ் மந்திரத்தால் தரணியையும் வாழ வைத்தது தமிழ்க்குடி.
தமிழ்மணி , தமிழ்ச்செல்வி , தமிழிசை என மொழியால் பெயர்சூட்டி மகிழ்ந்த மண் இவ்வுலகில் இது மட்டுந்தான் .
“ யாதும் ஊரே , யாவரும் கேளிர் ” எனும் கணியன் பூங்குன்றனின் சொல்லில் தான் என்ன அறிவு , எத்தனை மனித நேயம் !
தனக்கென வாழாத் தகைமை அதில் சுடர் விடுகிறது .
“ உன்னைப் போல் பிறரையும் நேசி ” என்னும் உயிர்களைப் போற்றும் உன்னதத் தத்துவம் அங்கே ஒளி வீசுகிறது அல்லவா !
அதனால் தானே ஐ.நா.சபை அந்த சொற்றொடரைத் தத்தெடுத்துக் கொண்டது !

      இப்படிப்பட்ட மண்ணில் பிறந்த நீ சாதாரண மனிதப் பிறவி அல்ல .
உன் மரபணுவில் மறைந்திருக்கும் மந்திர சக்தி உனக்குத் தெரியாது , ஆனால் உலகிற்குத் தெரியும் .
உன் ஊனுக்குள் உறைந்து , அணுவிற்குள் அணுவாய் , அப்பாலுக்கு அப்பாலாய் நிறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் நீ அறிய வில்லை ; ஆனால் அயல் நாட்டான் அறிந்தான் .
வெள்ளையன் வந்தான் , வியாபாரம் செய்ய . 
இந்த மண்ணின் மகத்தான சக்தி அவனை மலைக்க வைத்தது.
மனித ஆற்றலின் மாயசக்தியில் அவன் மருண்டே போனான்.
மண் வளத்திலும் மனித வளத்திலும் அவன் மயங்கித்தான் போனான் .
மண்ணின் தெய்வீகமும் மனிதர்களின் வீரமும் சூரமும் அவன் நினைவில் நின்று நிழலாடியது.
இவர்கள் வளர்ந்தால் என்ன ஆகும் என்று வியந்து நின்றான் .
இவர்களுடைய விஸ்வரூபத்தைத் தடுப்பது எப்படி என்ற சதித்திட்டம் தீட்டப்பட்டது , சதி வலைப் பின்னப் பட்டது.
விதியின் சதியால் , மண்ணின் மைந்தரும் மயங்கி அந்த வஞ்சக வலையில் சிக்கத் தொடங்கினார்கள் , பாவம் !
அந்நிய மோகம் அவர்களை ஆட்டிப் படைத்தது .
தாய்ப் பாலினை ஒதுக்கி , தமிழ்ப் பாலையும் மறந்து , ஏதோ ஒரு நினைப்பால் புட்டிப்பாலின் மீது புதிய மோகம் கொண்டார்கள் .
இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க முயல்வது தானே மனித சுபாவம் , இவன் மட்டும் விலக்கா என்ன ?

       தீட்டிய சதித் திட்டத்தின் முதல் பலிபீடம்தான் இன்றைய கல்விமுறை .
மக்கப் செய்து மார்க் வாங்கும் மாயச்சூது .
மனதை மழுங்கவைத்து , சிந்தனையைச் சிறியதாக்கி , ஞானசக்தியை ஊனப் படுத்தியது இந்த கல்விமுறை.
மனத்திட்பம் குறைந்தது , மதிநுட்பம் அகன்றது , நுண்ணறிவு எல்லாம் மறைந்தே போனது.
ஞானமும் வீரமும் , தீரமும் சூரமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தானே வளர்ச்சி , complete and harmonious growth !
சீரிளமைச் செந்தமிழாய்ச் செழிந்தோங்கிய மனமும் , நரம்போடு பின்னி வளர்ந்த ஞானவீரமும் , எண்ணத்தால் தாழ்ந்து இயக்கத்தால் குறைந்து விட்டதே இன்று !
உன் கற்பனைத் திறமும் , கண்டு பிடிப்பு ஆற்றலும் என்னவாயிற்று ?
உலகிற்கே பாடம் சொன்ன உன் அறிவெல்லாம் எங்கே போயிற்று ?
சிந்தையால் சுருங்கி செயலாற்றலில் முடங்கி விட்டான் .
வாழ்க்கையில் எதையும் எதிர் கொள்ளத் தயக்கம் , எதிலும் மயக்கம் , ஏனென்று தெரியாத கலக்கம், மொத்தத்தில் ஒரே குழப்பம் .
தடுமாறுகின்ற மனதை தாய் கூட விரும்ப மாட்டாள் .

    நோபல் பரிசெல்லாம் மேலை நாட்டு சீதனம், அயல்நாடுகளின் குத்தகை என்று ஆகிவிட்டது !
ஒலிம்பிக் மெடல் எல்லாம் வெறும் கானல் நீர் தானா ? கற்பனைப் பொருள் தானா ?
உடம்பில் உரம் இல்லை , மனதில் துணிவில்லை .
அறிவிலும் தெளிவில்லை , ஆண்டவனும் துணை இல்லை !
அன்ன நடை கற்கப்போய் தன் நடையை இழந்து விட்டோமே என்று அங்கலாய்கிறது பேதை மனம் .
வசதி வாய்ப்புகளுக்காகத் தேடி வாழ்க்கையைத் தொலைத்து விட்டான் .
காசு பணத்திற்கு அலைந்து கால்களை இழந்து விட்டான் .
சிறகு ஒடிந்த குயில் என்ன பாடும் ? கால் ஒடிந்த மயில் எப்படி ஆடும் ? 
உறுதி இல்லாத மனதுக்கு வெற்றி எங்கே கிடைக்கும்..
இந்த மனப்புண்ணை யார் ஆற்றுவார் ? இந்த நிலையினை யார்தான் மாற்றுவார் ?

     திரும்பவும் நினைவூட்டுகிறேன் : மக்கப் செய்து மார்க் வாங்குவது மாத்திரம் கல்வி அல்ல.
அறிவை வளர்க்காத கல்வி என்ன கல்வி ? ஆற்றலைப் பெருக்காத கல்வியால் யாருக்கு லாபம்? தன்னம்பிக்கைத் தராத கல்வியால் என்ன பயன் ?
வீர ஞானத்தை ஊட்டாத படிப்பு வீணான படிப்பு .
மனதை மழுங்கடித்து சிந்தனையைச் சிறகொடித்து 
தன்னை அறியாமல் தனக்குள் மறைந்திருக்கும் சக்தியை உணராமல் , அச்சத்திலும் அடிமைச் சிறுமதியின் உச்சத்திலும் உன்னை வைத்திருக்கும் கல்விக்குப் பெயர் கல்வியா ?
விடுகதைக்கே விடை தெரியாத கல்விமுறை , நவபாஷாணத்திற்கு எங்கே விளக்கம் சொல்லப் போகிறது...?

     போகருடைய வேதியலையும் , இடைக்காடருடைய விண்ணியலையும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும் .
அவர்களிடம் இருந்து கற்றது என்ன ? பெற்றது எது ?
நீ எதாவது செய்தாயா என்று நாளை உன் பேரன் வந்து கேட்பான்...
அதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறாய் ?
ஏனோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் , காலம் வந்தது கதையும் முடிந்தது என்பது தானா ?

     கல்வி ஒரு தவம் , அது கடவுள் கொடுக்கிற வரம் .
உன்னை அறிவித்து உனக்கருள் செய்யும் சித்து .
உடம்பாலும் மனதாலும் உன்னை உய்விக்கும் ரசவாதம்
மண் மீது உன்னை மனிதனாக நடக்கச் செய்யும் மாமருந்து.
எத்தனையோ பிறப்பு எடுத்து பெறுகின்ற பேற்றை எல்லாம் இந்த ஒரு பிறவியிலேயே அத்தனையும் பெற வைப்பது தானே மெய்யறிவுக் கல்வி , தவஞான வேள்வி .

“ கூர்ந்து பஞ்ச பூதத்தின் குறிப்பு கேளு 
        கூரான வேதைக்கு பஞ்ச பூதம்
நேர்ந்து நின்ற சிருட்டிக்கும் பஞ்சகர்தான்
         செயலான மனுஷருக்கு மஞ்சுபூதம்
ஆர்ந்து நின்ற பறவைக்கு மஞ்சு பூதம்
         அப்பனே யோனி யெல்லா மஞ்சு பூதம்
வார்ந்து நின்ற வாதத்திலஞ்சு பூதம்
        வகையெல்லாம் மார்க்கமாய் மருவக்காணே ”
                                                     - போகர் நிகண்டு

     வருமானம் மட்டுமே வாழ்க்கை என்று ஆகிவிட்ட பிறகு, ஆன்மா என்ன ? ஆண்டவன் என்ன?
ஆத்ம ஞானத்திற்கு அங்கு இடமே இல்லை .
காசு பணமே கடவுள் என்று கருதி விட்ட பிறகு , காயகற்பம் அங்கே என்ன செய்யும் ?
அதனால் தானே “ பெரிதினும் பெரிது கேள் ” என்று பாரதி பாடினான் .
காய்ச்சல் வந்த பின்பு தான் சுக்கு மிளகைத் தேடுகிறான் .
சுக்கில் இருக்குது சூட்சுமம் என்றுதானே அறியத் தொடங்குகிறான் .
சுக்கில் இருக்குது சுட்சுமம் என்று தானே அறியத் தொடங்குகிறான .
இதில் சொல்வது பிறமொழிகளைப் புறக்கணிப்பு செய்வது அன்று.
அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள் , கற்று தேர்ச்சி பெறு.
ஆனால் சொல்ல வருவதெல்லாம் தாய்மொழி கண் போன்றது , கண்ணின் மணி போன்றது , ஒளி தருவது .
பிறமொழி அறிவெல்லாம் கண்ணுக்கு அணிகின்ற கண்ணாடி தான்.
கண்களை விற்று கண்ணாடி வாங்காதே ; கண்களை இழந்த பிறகு கண்ணாடியால் யாது பயன் என்பது தான் .

        தேன், தினை , கம்பு , வரகு , சாமை குதிரைவாலி என பாரம்பரிய உணவு கொண்ட நம் முன்னோர்களின் தோற்றம் செயல்களில் என்ன மிடுக்கு எவ்வித கம்பீரம் , அதோடு வீட்டுக்கு வீடு குறைந்தது அரை டஜன் குழந்தைகள் .
அவர்களுக்கு வைரம் போன்ற நெஞ்சம் , வஜ்ராயுதம் போன்ற தேகம் .
அவர்களை எந்த நோயும் அண்ட வில்லை .
தமிழ் மூதாட்டிகள் புலியை முறத்தாலயே அடித்து விரட்டியதாக வரலாறு சொல்கிறது .
ஆண்மை சிங்கத்தின் கூட்டம் என்பதை நினைவூட்டுகிறேன் . 
ஞான வீரத்தை ஞாபகமூட்டுகிறேன் .
பாரம்பரிய உணவுகளை எல்லாம் புறந் தள்ளிவிட்டு பீட்சா , பர்கரில் வந்து நிற்கிறது இன்றைய தலைமுறை .
இது எதில் போய் முடிகிறதோ , இன்னும் என்னென்ன நோய்கள் எல்லாம் வரப்போகிறதோ , தெரியவில்லை .

       குனிந்து குடிக்கிற குளிர் பானத்தை விட , நிமிர்ந்து குடிக்கிற மோர்தான் நன்மைகள் செய்கிறது !
அதுதான் பாரம்பரிய உணவின் மகிமை ; அருந்தும் போது கூட உன்னை தலை நிமிரச் செய்கிறது !
பாரம்பரிய உணவுகளை மறந்ததால் தானே பாழாய் போன நோய்கள் எல்லாம் படையெடுத்து வந்தன .
ஆரோக்கியத்தை அடியோடு தொலைத்து விட்டோமே , ஏன் இந்த அவலம் ?
ஆரோக்கியத்தை மட்டுமா தொலைத்தோம் , அதோடு நிம்மதியையும் சேர்த்துத் தானே தொலைத்தோம் . காசு பணம் கரியாகப் போனது தானே மிச்சம் .
ஆரோக்கியத்தை தொலைத்தது நீ , அதனை வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம் எப்படித் தீர்த்து வைக்கும் ? 
தொலைத்ததை தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும் !

     இவை எல்லாம் சொல்லப்படுவது எதற்காக என்றால் , இந்த மொழியும் இதன் களஞ்சியக் கலைகளும் உன்னுடைய அடையாளச் சின்னங்கள் , அதிகார முத்திரைகள் .
இந்த ஞானமும் , வீரமும் எங்கே போயிற்று ? என்பது தான் கேள்வி .
எழுதி வைத்த ஏடுகளையும் , எண்ணிலாக் கலைகளையும் இழந்த பின்பு நமக்கென மிஞ்சி நிற்பது இந்த மொழி ஒன்று தான் .
அதனையும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .
இறுதியில் உனக்கென்று சொல்வதற்கு இந்த பூமியில் எதுவும் இல்லை.
எதுவுமே இல்லாத அனாதை ஆக்கி உன்னையே அழிப்பதற்கு எத்தனை சூழ்ச்சிகள் என்பது போகப்போக புரியும், பின்பு உனக்குத் தெரியும் .
இதையெல்லாம் உணர்ந்து கொண்டால் சரி ; இல்லை என்றால் உன் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் .
இனம் அழிந்த பின்பு நீ என்பது வெறும் கானல் நீர்.
இது அறியாது வருகின்ற அஸ்தமனம் .

      அயல்நாடுகள் என்ன அண்டை மாநிலங்கள் கூட உன்னை அலட்சியமாகப் பார்க்கும் நிலை.
காசு பணத்தைத் தேடுகிறோம் , ஆனால் ஆரோக்கியத்தை இழந்துவிட்டோம் ; ஆகிருதி காணாமல் போயிற்று .
வசதி வாய்ப்புகளுக்கு அலைகிறோம் ஆனால் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் .
நிம்மதி இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? அது 
சுவர் இல்லாத சித்திரம் , ஸ்வரம் இல்லாத பாட்டு .
ஓயாத கவலை ஒழியாத சோகம் , எதற்கும் தயக்கம் எதிலும் மயக்கம் .
சுவை அறியாத உணவு , சுகம் இல்லாத தூக்கம் என்று ஆகி , இருந்தால் போதும் என்றொரு வாழ்க்கை .
வாழ்விற்கு வழிகாட்டி , வையகத்திற்கு கையேடு என்று முன்னோர் வாழ்ந்தது போய், விழுவதும்  அழுவதும் , தேம்புவதும் திணருவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது .

      சுற்றிலும் எது நடந்தால் எனக்கென்ன என்ற ஒரு சுயநல எண்ணம் .
காவிரி வந்தால் என்ன , கழனிகள் காய்ந்தால் என்ன , காடுகள் அழிந்தால் என்ன , ஆற்று மணல் பறிபோனால் என்ன , அரியவகை மூலிகை வனங்கள் அழிந்தால் என்ன... என்று தன்நலச்சேறாய் வாழ்வதில் பயன் என்ன ?
கட்டி வாழ்ந்ததை விட வாழ்வில் நீ விட்டு செல்லும் தடயங்கள் தான் 
விளக்காய் நின்று ஒளிவீசும் , வாடா மலராய் மணம் பரப்பும் .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் , இவர் போல யார் என்று ஊர் சொல்லும் .
பொல்லாங்கு தேடுவது புது நாகரிகம் , கல்லாத பேர்களுக்கு எது நாகரிகம் ?
கன்றாத வளமை , குன்றாத இளமை என்று கற்றோர்கள் சொன்னார்களே அது நாகரிகம் .
முதுமையை வென்று முன்னோர்கள் வாழ்ந்தார்களே அது நாகரிகம் !
இன்றைய நாகரிகம் எல்லாம் இலக்கணம் இல்லாத எழுத்து , seriousness இல்லாமல் சிரித்து விட்டுபோகும் நகைச்சுவை , சிந்திக்க மறந்த அறியாமை , சிதறிப் போகிற செலவுக்கணக்கு !
நாகரிகம் என்ற பெயரில் நலத்தை இழந்தோம் , நல்லதை எல்லாம் தொலைத்துவிட்டோம்.

     போனது போகட்டும் , புரிந்தது மிஞ்சட்டும் . இந்த ஆதங்கத்தின் அர்த்தங்களைக் காலங்கள் காட்டட்டும்.
சொல்லத் துடித்தது மனது , சொல்லி வைத்தது குறைவு , இது நம்மிடைய உள்ள உறவு , அது எல்லோர் கணக்கிலும் வரவு.
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் , ஏட்டளவில் வந்ததெல்லாம் கொஞ்சம் .
எழுதியவை வரைவு அல்ல , எண்ணம் ; இதில் உள்ளது எல்லாம் எழுத்து அல்ல , ஏக்கம் !
இவை , நீ உள்ளதை உணர்ந்து கொள்ள , உண்மைகளை தெரிந்து கொள்ள !
மற்றதைப் பரம்பொருள் பரந்தாமன் பார்த்துக் கொள்வான் .
இன்று நாளை மாறும் , சென்ற வாழ்வு திரும்பும் ; இதயங்கள் ஒன்று சேரும் , இழந்த பெருமை நிச்சயம் கிடைக்கும் .

    உன்னை நேசி , அதோடு இந்த மண்ணையும் மரபையும் நேசி !
அதில் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களை உற்று நோக்கி ஆழ்ந்து யோசி .
தெரியாத உண்மைகள் தெரிய வரும் , புரியாத புதிர்கள் புரிந்து விடும் .
உனக்கென்று சொல்லப்பட்ட “ சாகாக்கலை ”, உலகிற்கு உணர்த்தப்பட்ட உபதேசம் .
இந்த அரிய கலை தமிழ் மொழியில் மட்டுந்தான் மறைந்து மணம் வீசுகிறது .

“ ஆமென்ற வெளிகடக்க அகண்ட வீதி
          அதிகமேதான் இவை எல்லாம் மனதுண்டானால்
ஓமென்ற ஒளிகடக்க அந்த போதம்
           உன்னியேதான் எட்டிப்பார் அதுவும் பேசும்
நேமென்ற நிலைகடக்க முப்பாழ் தாண்டி
           நிலைத்துமேதான் ஏறுபவன் குளிகை ஞானி
மோமென்ற வெளிகடக்க ஒன்று மில்லை
          மூச்சில்லை பேச்சில்லை முழுநோக் கில்லை ”
                                                         - போகர் ஏழாயிரம்

       தமிழ் இனத்தை தலை நிமிரச் செய்வது தலையாய கடமை.
நீயும் வாழ்ந்து பிறரையும் வாழவை . அனைவரையும் அரவணைத்துச் செல் .
எட்டு நாடுகள் சேர்ந்து உன் இனத்தை அழித்தார்கள் , உன் கண்முன்னே .
கொத்து கொத்தாய் குண்டுகள் போட்டு குழந்தைகளைக் கூடக் கொன்றார்களே குழந்தைகள் என்ன செய்தன ? பாவம் !
இந்த இன அழிப்புக்கு நோக்கம் என்னவாக இருக்கும் ? வம்சத்தை வளரவிடக்கூடாது என்பதைத் தவிர .
ஐ.நா. சபையும் இதனை வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தது .
இழந்த உயிர்களை இனி மீட்கமுடிமா ? முடியும் , ஏனென்றால் அவைகள் புதைக்கப்படவில்லை , மண்ணில் விதைக்கப்பட்டிருகிறார்கள் - ஞானவீரம் தமிழ் மண்ணை விட்டு என்றும் அகலாது , மறையாது , அழியாது . - இது சித்தர்கள் ஜீவிக்கும் பூமி !

      யாழ்ப்பாணத்தில் நூலகத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள் .
 நெஞ்சு கொதித்தது , நீதியும் துடித்தது .
நூலகத்தைத் தீயிட்டு அழித்தப் பாவச்செயல் உலக வரலாற்றில் எங்கேனும் பார்த்தது உண்டா ? படித்தது உண்டா ?
இந்தக் கேவலமான இழி செயலின் கோழைத்தனமான ஈனச் செயலின் நோக்கம் என்ன ?
உன் அறிவுக் கருவூலத்தை அழித்து உன்னை அறியாமை இருளில் வைக்க வேண்டும் என்பது தான் .
உன்னை வளர விடக் கூடாது , உனக்கு எதுவும் தெரிந்து விடக் கூடாது என்பது தான் .
இவையெல்லாம் உன்னை அழிக்கத் துடிக்கும் சூழ்ச்சிகளின் சொக்கட்டான் விளையாட்டு, திட்டமிட்ட வெறிச் செயல்கள் !
பாவம் செய்பவரைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை , பார்த்ததைப் புரிந்து கொண்டால் போதும் , உள்ளதை உணர்ந்து கொண்டால் போதும் .

     நீ இந்த மண்ணின் மைந்தன் , மரபணுவின் விளைநிலம் ; சித்தர் பெருமக்களே அதன் உயிர்அணு , ஊட்டச்சத்து !
உன்னை வெல்வதற்குப் பூமியில் யாரும் பிறக்கவில்லை ; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தான் உண்டு.
தீதும் நன்றும் பிறர் தர வாரா !
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தான் உண்மை .
இரவுக்கும் பகல் உண்டு அதில் வெற்றி நிச்சயம் உனக்கு உண்டு.
இவற்றை எல்லாம் தாண்டி நீ கால் வை ; எதற்கும் அஞ்சாமல் உன் வழியில் பயணம் செய் .
நீ செய்ய வேண்டியதெல்லாம் பழைய தமிழ் ஏடுகள் , சுவடிகள் , நூல்களை எல்லாம் மேலும் அழிந்து விடாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் , வரும் தலைமுறைக்காக !
அதை நீ படிக்கவில்லை என்றாலும் உனக்கு ஒரு மகன் பிறப்பான் , அவன் வந்து படிப்பான் பயன் பெறுவான் .
இது இந்த மண்ணுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் ; உனக்காக உயிர் விட்ட தியாகிகளுக்குச் செலுத்தும் அஞ்சலி.
வழி ஒன்று பிறக்கும் , ஒளி அன்று தெரியும் , பரிசு என்ற ஒன்று நிச்சயம் கிடைக்கும் .
பகை என்ற ஒன்று அப்போது பரிதவித்து நிற்கும் ; சூழ்ந்த சூழ்ச்சிகள் சூன்யமாகப் போய் விடும் .

     அமைதியாய் இரு , ஆழ்ந்து யோசி .
மனம் விந்தைகள் புரிகிற மந்திரக்கோல். அணுசக்தி நிறைந்த atomic reactor.
பேதை மனதை ஒருபோதும் பேதலிக்க விடாதே .
தியானத்தின் மூலம் அதனைத் திடப்படுத்து .
திடமான மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும் .
தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவு எடுக்கும் .
தீர்க்கமான முடிவு உறுதியான செயல்பாட்டைக் கொடுக்கும் .
உறுதியான செயல்பாடு அமைதியின் அரசாட்சி ;
அமைதியான உள்ளம் ஆண்டவன் வாழும் இல்லம் , நிம்மதியின் ராஜசபை.
அமைதி நிறைந்தவனின் பேச்சும் செயலும் அனைவரையும் ஆகர்ஷிக்கும் .
அவன் செல்லும் இடமெங்கும் அமைதியைப் பரப்புவான் , ஆனந்தத்தால் நிரப்புவான் .

“ ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி !
   சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி !
                                                                       -பட்டினத்தார்

வருங்காலத்தில் நம் தலைமுறைகள் ,
“ நாமார்க்கும் குடியல்லோம் , நமனை அஞ்சோம் ” என்று முழங்கட்டும் .
தமிழன் என்று சொல்லட்டும் , தலை நிமிர்ந்து வாழட்டும் !
தரணி எல்லாம் ஆளட்டும் !


“ வீடறிந்து மந்திரத்தை நிறுத்த வேணும் 
         வீட்டிலுள்ள பேர்களையும் விரும்பவேணும்
நாடறிந்து நல்ல பதங்காண வேணும்
          நன்மையுள்ள சத்திசிவ பூசை வேணும்
கூடிருந்து குருபாதங் காண வேணும்
        குருடரைப்போலிருந்தாக்கால் குணமோ மைந்தா
தேடறிந்தால் சற்குருவை தேட வேணும்
         செகசால மாய்கையெல்லாந் தள்ளுதள்ளே ”
                                     - அகத்தியர் அமுதகலை ஞானம்

                 நன்று ! வாழ்த்துக்கள் !!

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...


Monday, 4 February 2019

சித்தர்கள் தரிசனம்..! பத்தாம் பாகம்



                                              தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                சித்தர்கள் தரிசனம்..!
                                                          பத்தாம் பாகம்


          காலம் பரம்பொருளின் பரிமாணம் . 
கடவுள் பாடுகின்ற கீர்த்தனைகள் .
எதற்கும் ஒரு காரணம் உண்டு, பொறுத்திரு ;
அதற்கு ஒரு வேளை வரும் காத்திரு ;
இது தான் வாழ்வியல் வேதம் , நடைமுறை நெறிமறை !
காலை என்பது பிறப்பு , மாலை என்பது மறைவு .
இரவு என்பது மயக்கம் , நாளை என்பது என்ன ?
பிறப்பு என்பது தொடக்கம் , பருவங்கள் அதில் அடக்கம் ,
கதி என்பது இயக்கம் , மதி என்பது கலக்கம் ,
விதி என்பது விளக்கம் , விடை என்பது காலம் !

      காலம் என்பது என்ன
கடிகாரம் காட்டுவது காலங்கள் ; காலண்டர் காட்டுவதும் காலங்கள் .
கோள்கள் கூறுவது காலங்கள் ; வரலாறு வடிப்பது காலங்கள் ; 
இதயம் துடிப்பதும் காலங்கள் ; மனம் எண்ணி கணக்குச் சொல்வதும் காலங்கள் - அது நேற்று இன்று நாளை .
நேற்றைய பொழுது கண்ணோடு போனது , இன்றைய பொழுது கையோடு கிடைத்தது , நாளைய பொழுது நிழலாய் நடப்பது .
இன்றைய பொழுதைத் தவறவிட்டால் , அது நேற்றைய பொழுதாக மாறிவிடும் நாளை .
இது காலம் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு !

     விதி என்பது கூட்டல் , வினை என்பது கழித்தல் 
மதி என்பது பெருக்கல் , வழி என்பது வகுத்தல் 
விடை தருவது காலங்கள் ! வினாத்தாள் வடித்தவன் இறைவன் - விடைத்தாள் திருத்தி மதிப்பெண் கொடுப்பவன் .
கொட்டைக்குள் பஞ்சையும் , பஞ்சுக்குள் விதையினையும் வைத்து விளையாடும் சாகசக்கலைஞன் அல்லவா? 
அவனிடம் கதை சொல்ல இயலாது , அவனுக்கு கடுக்காய் கொடுக்க முடியாது !

      உலகினை படைத்தது இயற்கை , அதில் உயிர்களைப் பயிர் செய்வது காலங்கள் !
காலங்கள் மனிதனைச் செதுக்குகின்ற சிற்பி .
அது ஒரு கண்ணாடி , அதில் நீ உன்னைப் பார்க்கலாம் , உன்னைத் தேடலாம் , உன்னை அறியலாம்.
ஏன் என்றால் கண்ணாடி , உண்மையைப் பொய் என்றும் , வெண்மையை கருப்பென்றும் சொல்வதில்லை !
மாலையினைக் கட்டி அதற்குத் தகுந்த தோள்களைத் தேடுவதே காலங்கள் !
இறக்கைகளைக் கொடுப்பது இயற்கை , பறக்கக் கற்றுக் கொடுப்பது காலம் !
பாட்டும் பரதமும் காலங்களே , பாடி ஆடும் நம்மைப் பாடவைப்பதும் , ஆடவைப்பதும் காலங்களே !

    வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளும் நபர்களும் காலத்தின் வடிவங்களே .
விதியின் ரதங்களுக்குக் காலமே தேரோட்டி , கிரகங்களே பூட்டிய புரவிகள் .
தெய்வம் பொழிகின்ற திருவருள் கூட காலத்தின் கைகளினால் தான் கொடுக்கப்படுகின்றன.
இளமையில் கல் , பருவத்தே பயிர் செய் என்பன காலத்தின் பயன் கருதி கூறப்பட்ட அறவுரைகள் .
ஆடியில் காற்று , ஐப்பசியில் மழை , மார்கழியில் பனி, பங்குனியில் வெயில் - இவை எல்லாம் காலப் பணித் திட்டத்தின் patternகள்.
தமிழ்ப் புத்தாண்டு தை பிறக்கத் தொடங்குவதும் , அதனை மார்கழி வைகறைப் பொழுதில் வரவேற்க , நம்மைத் துயிலெழச் செய்தவை திருப்பாவையும் , திருவெம்பாவையும் .

     ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பது காலமானியின் கணக்கு .
காலங்களாலேயே பருவங்கள் மாறுகின்றன , உடலும் மனநிலையும் மாறுகிறது .
காலத்தோடு தன்னை இணைத்துப் பார்க்கும் மனிதன் , காலத்தினை இருப்புத் தணிக்கை செய்கிறான் : சிறுவயதில் , கல்லூரிக் காலங்கள் எனக் கடந்தவைகளை அசைபோட்டு சுவைக்கிறது மனம் .
Remember, rewind, recall & respond என்பது தான் மனதின் தொழில் .
Known cannot know the unknown.
ஆனால் காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை .
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல ; அவன் எப்படி வாழ்ந்தான்.. என்ன செய்தான்.. என்பது தான் நாளையக் கேள்வி .
இந்த ஆண்டில் இன்ன காரியம் இவனால் நடந்தது என்றொரு பதிவு , வரலாற்றுப் பேரேட்டில் காலக் கணக்கனால் எழுதப்பட வேண்டும் .

       நம்மை சிரிக்க வைப்பதும் , அழவைப்பதும் ,
சிந்திக்க வைப்பதும் , செயல்பட வைப்பதும் 
அதற்கான பலன்களைக் கொடுப்பதும் காலத்தின் கரங்கள் .
இந்த நேரத்தில் நீ பூமியில் பிறக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது காலமே.
இந்தெந்த வயதில் இந்நிந்ந நிகழ்வுகள் என்று நிர்ணயிப்பதும் காலமே .
அவற்றை அறிந்து கூறுவதே சோதிடக்கலை .
வசிஷ்டர் நாள் குறித்துத் தான் இராமனின் பட்டாபிஷேகம் நிச்சயிக்கப்பட்டது .
ஆனால் நடந்தது என்ன ? அதை நான் என்ன சொல்வது , நாடறியும் !
வசிஷ்டர் குறித்த அதே நாளில் தான் வனவாசம் சென்றான் இராமன் .
காலம் அங்கே கூனியின் வடிவத்தில் வந்தது ; கைகேயி வடிவத்தில் நின்றது !

மூன்றரை வயதில் ஞானசம்பந்தனுக்குக் கிடைத்த முக்திஞானம் , அப்பர் சுவாமிகளுக்குக் கிட்டுவதற்கு அறுபது வயது ஆயிற்று .
இருந்தாலும் அவர் ‘அப்பர்’தான் , நாமெல்லாம்  ‘லோயர்’தான் .

பரந்தாமன் மனது வைத்துப் பாரதப் போரையே நிறுத்தி இருக்கலாம் . ஆனால் போரைத் துவங்குவதற்கு சகாதேவனை நாள் குறிக்கச் சொல்லிக் கேட்டான் தருமன் - புருஷோத்தமன் அறிவுரைப்படி .

     காலம் ஒன்றும் மாயப்பேழை , மர்மப் பெட்டகம் அல்ல.
கணிக்கத் தெரிந்தவனுக்கு அது காமதேனு ! கற்பக விருட்சம் !
காலங்களின் கட்டமைப்பே வரலாறு .
வரலாற்று நதியை காலங்களே கடலுக்கு அழைத்துச் செல்கின்றன .
காலங்களே வரலாற்றை வரைகிறது ; நடக்க வேண்டியவைகளுக்கு நாள் குறிக்கிறது .
பரம்பொருளின் கையில் காலம் ஒரு பேனா .
எண்ணுவது பரம்பொருள் , எழுதுவது காலம் .
இயக்குவது பரம்பொருள் , இயங்குவது காலம் .
விரிவுரை பரம்பொருள் , விடை சொல்வது காலம் .
கணக்கு போடுவது பரம்பொருள் , கையில் கொடுப்பது காலம் !
காலங்களே கனிகளாகச் சுவைக்கப் படுகின்றன .

      மாதங்களில் நான் மார்கழி , காலங்களில் நான் வசந்தம் என்று காலத்தை குறிப்பிடுகிறான் கண்ணன் !
சொல்லப் போனால் காலச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது .
என்னதான் உணவு சமையற்கட்டில் தயாராக இருந்தாலும் , அதனைக் கொண்டு வந்து பறிமாறினால் தான் சாப்பிட முடியும் .
சமைத்த உணவைப் பரிமாறி நம்மைச் சாப்பிட வைப்பது தான் காலங்களின் கனிவு .
இவர் போல யாரென்று எவர் சொன்னாலும் , மண்ணில் மனிதனின் பெயர் சொல்வது காலங்களே ; பெயர்களை மனதில் பதிய வைப்பதும் காலங்களே !
இந்த வகையில் தான் ஆடிக் கார்த்திகையும் , ஆவணி ரோகிணியும் பரம்பொருளை நம் கண் முன் நிறுத்துகிறது , ஆண்டுகள் தோறும் கொண்டாட வைக்கின்றது .
காந்தி அடிகளும் ஒரு வகையில் காலத்தின் தவமே .
காலத்தோடு பயணிப்பவன் கரை சேர்ந்து விடுகிறான் ; பரம்பொருளைக் காணுகிறான் .
பரம்பொருள் தெரிகிறதோ இல்லையோ , நெஞ்சுக்கு நிம்மதி நிச்சயம் கிடைக்கிறது !

     காலத்தை உணர்ந்தவன் சித்தம் , இறைவனிடம் நிலை கொள்கிறது என்று தானே அர்த்தம்.
காலமே வாழ்க்கையின் போக்குவரத்துகளை ஒழுங்கு படுத்தும் டிராபிக் கான்ஸ்டபிள் .
விதைத்துக் கொண்டே போ , திரும்பி வரும் போது காலங்கனியும் ! 
மரத்தில் கனிகள் குலுங்கும் !
நாற்றுகளை நட்டுவிடு ; அறுவடைக் காலம் வரும் போது நெல்மணிகள் அங்கே ஒளிவீசும் !

    இறைவனே தேரில் இருந்தாலும் , வடம் பிடித்து இழுப்பவனே அதனை வழி நடத்திச் செல்கிறான் .
தடம் மாறிய பயணங்களையும் , தடுமாறிய வாழ்க்கையையும் இடம் மாறிய கோள்களே எடுத்துச் சொல்கின்றன .
உயர்வு வந்தாலும் , தாழ்வு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் .
உறவு வந்தாலும் , பிரிவு நேர்ந்தாலும் மனம் ஒன்றுதான் .
இவை எல்லாம் மனிதனை பிரக்ஞையோடு வைத்து மானுடத்தைச் சீர்படுத்திச் செலுத்துவதற்கே .

    வந்தான் இருந்தான் , தவித்தான் துடித்தான் 
கிடந்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை என்பதை விட
பிறந்தான் வாழ்ந்தான் , வழி கண்டான் ஒளி தந்தான் என 
நாலுபேர் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் 
ஊருக்கு உதாரணமாய் வாழ்வதே உன்னை அறிந்த வாழ்க்கை , மெய்ஞானப் பாதை !
சிருஷ்டியின் அர்த்தம் !
அவனே காலத்தைக் கற்று காவியமாய் வாழ்கின்றான் .
உலகம் காலத்தின் வகுப்பறை , அதில் தேர்ச்சி பெறுபவன் பக்குவம் அடைந்த finest humanbeing !
பக்குவம் அடைந்தவன் இனிமேல் பெறுவதற்கு என்று என்ன இருக்கிறது ; அவனுக்கு கொடுப்பதற்கு பிறரிடம் தான் என்ன இருக்கிறது ?
கால நேரம் கூடி வந்தால் குருவருளும் கூட வரும் ! 
காலம் கண்ணுக்குத் தெரிந்த ஆசான் ! கைகளில் கிடைத்த காண்டீபம் ! 
நீ அர்ச்சுனனாக மாற வேண்டியது தான் பாக்கி !
அது உன் கையில் தான் இருக்கிறது !

     மூச்சை அளப்பதும் காலங்களே , பேச்சை அளப்பதும் காலங்களே .
கால அறிவியலின் மூன்று மண்டலங்களே மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன !
கால இயக்கத்தின் அதிபதியாக ஆயுள்காரகன் சனீஸ்வரனைக் குறிப்பிடுகிறது சோதிடவியல்.
உயிரைப் பறித்துச் செல்வது எமதர்மன் என்றும் , அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன .
இதன் பரிபாலனத்தில் கோர்ட்டும் , கோட்டையும் காலங்களே .
ஆகையால் தான் காற்றைக் கால் என்று பெயரிட்டு சித்தர் இலக்கியம் அழைத்தது !

திரும்பவும் நினைவூட்டுகிறேன் - தேரின் உள்ளே தெய்வம் இருந்தாலும் வடம் பிடித்து இழுப்பவனே வழியினைத் தீர்மானிக்கின்றான் !

“ உறுதியாய் அண்ட பிண்டங் காணவேண்டும்
         உத்தமனே கோஜ பீஜம் அறிய வேண்டும்
நிருதியாம் ஆதாரங் கண்டால் எல்லாம்
         நீள் நிலத்தில் நினைத்த தெல்லாம் சித்தியாகும் 
பருதி போல் மேலான தாரம் கண்டு 
        பட்சமுடன் ஆயிரத்து அண்டங்கண்டு
சுருதியெனும் கீழ்மேலும் நடுவும் கண்டு
        சூட்சத்தில் வகாரத்தின் வாசி போற்றே ”
                               - அகத்தியர் பன்னீராயிரம்

    
            காலங்கள் துணையோடு சித்தர்கள் தரிசனம் செய்வோம்... வாருங்கள்...

         ப்போது நாம் தரிசிக்கச் செல்வது வாலைக்கும்மி தமிழ் செய்த வாத சித்து கொங்கணர் பெருமான் .
அட்டாங்க யோகமறிந்து, அம்பிகை அருள்பெற்று, உத்தமப் பொருள் உரைத்தத் தத்துவ மெய்ஞானி , தவஞான பீடம் .
சிந்தையில் நிறைந்து விந்தையாய் விளையும் வித்தகச் சித்து .
மாயையினை நீக்கிக் காயசித்தி அளிக்கும் கற்பக விருட்சம் .
வேதியல் ரகசியங்களுக்கு விளக்கங்கள் சொன்ன அனுபூதிச் செல்வர் , ஆத்மஞான வேதம் .
“ தவமின்றி வரமில்லை ” எனத் தவத்திற்கு முன்னுரை எழுதிய ஞானாசிரியன் .

“ ஊமை யெழுத்தே உடலாச்சு மற்றும்
         ஓமென்றெழுத்தே உயிராச்சு;
  ஆமிந் தெழுத்தை அறிந்து கொண்டு விளை
         யாடிக் கும்மியடியுங்கடி ”   
                                    - கொங்கண நாயனார் .

“ வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
      காப்பது சேலைக்கு மேலுமில்லை
பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
       கும்மிக்கு மேலான பாடலில்லை ”
                                     - கொங்கண நாயனார்


         கொங்கணர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்... கேட்போம் , வாருங்கள்...

என் பெயர் கொங்கணவர் .
போகமுனிவரின் சீடன் .

“ சுகங்கள் பொருந்திய சூழ்போகநாதர்
மகன் கொங்கனோடு வரையிலிருக்கிறோம்
                             - கருவூரார் வாதகாவியம் 

“ கேளப்பா மூலர்க்குகா ளாங்கி பிள்ளை
         கெடியான காளாங்கி மைந்தர் போகர்
நீளப்பா போகர் பிள்ளை கொங்க ணர்தான்
       நேராக நான்கு முறை பேர னாகித்
 தாளப்பா மேருவிலே தவசு பண்ணிச்
       சாதமாய்க் கைலாய வர்க்க மானார்
ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை
      ஆச்சரியம் இன்னமுண்டு சொல்லு வேனே ”
                                       - சட்டைமுனி சித்தர் ஞானம் 

தமிழ் நாட்டு மூலச்சித்தர் மரபு எனது .
கொங்கண நாயனார் , கொங்கண நாதர் எனும் பெயர்களாலும் என்னை அழைப்பார்கள் .
தானென்ற பிரம்மத்தைத் தவத்தால் அறிந்தேன் - 
அது அன்னை எனக்கு அருளிய துரிய மெய்ஞானம் ;
வாலைக்குமரி வாசித்து அளித்த வாழ்த்துப் பட்டயம்.

ஆதிமுனி அகத்தியர் என்னைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்...

“ போக்கான சாத்திரங்க ளொன் றுமில்லை
        பூரணத்தி னூல்போலச் சொல்லாதொன்றும்
நோக்கான கொங்கணர்சொல் கடைக்காண்டத்தில்
        நுணுக்கங்க ளதிகமுண்டு கண்டுபாரு
வாக்கான விந்நூலூ மந்நூலூம்போல்
        வகைவிபர மாயொன்றும் விளக்கவில்லை
தூக்கான தூக்கெல்லாஞ் சொல்லிவிட்டேன் 
        சோதித்தால் தெரியுமடா சுருதிசொல்லே ”
                          - அகத்தியர் பூரண சுத்திரம் 216

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை .
எந்தை போகமுனிவரே எனக்குக் குருநாதரும் ஆகி அருட் கடாட்சம் அளித்து , அருள் மழை பொழிந்தார் .
பொதிகை முனி அகத்தியரின் மாணாக்கர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமையே !

“ கண்டிலேன் ஆச்சரியங் குமார னேபார்
      கலந்தநற் சென்மமிவர்கை லாய மானார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்துவ மென்ன
      உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு ; 
கண்டிலேன் இவரைப்போற் சித்தர் காணேன்
      காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா
      பரப்பரமாய் வயதுதந்த மௌனந்தானே ”

“ மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்
       மருவியவர் காளாங்கிக் கதுவே சொன்னார்
மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார் 
       மௌனவித்தை யகண்டாதி யறிந்துகொள்ளும்
மற்றொன்று மயக்கற்று மௌனத்தார்க்கு
       மௌனவித்தை எய்திக்கால் அவனே ஞானி
மற்றொண்டு மயக்கற்று மௌனத் தார்க்கு
       வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே ”
                                            - சட்டைமுனி சித்தர் ஞானம்

        இடைவிடாத் தியானமே ( Incessant watching ) தன்னை அறியும் தவம் ;
தன்னை அறிதலே தலைவனை அறிய வைக்கும் அகல் விளக்கு !
சித்தவியல் சீர்நெறிக் கல்வியில் வணக்கத்திற்குரிய வாசுகி அம்மையார் எனது துவக்கப்பள்ளி ஆசிரியை .
சித்த நெறியின் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த ஆசான் .
“ கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவ ?” என்னும் கேள்விக் கணையால் அறிவுக்கண்ணைத் திறந்து , அகவிருள் அகற்றியவர் !
தான் என்ற அகந்தையைத் தகர்த்தெறிந்த bulldozer.
சிந்தையில் முந்தி நல்விந்தையாய் வந்தவர் - என்னை அறிவித்து எனக்கருள் செய்தவர் .
கண்ணாடி ஒளியில் இருந்து , உருவம் இருளில் இருந்தால்
கண்ணாடியால் யாது பயன்..?
அறிவின் அருட்காட்சிக்கு அகத்தினுள் ஒளிதேவை . 
அதில் தன்னை தரிசித்தால், தனக்கு ஆதாரமாக உள்ள தலைவன் தரிசனம் தானே கிட்டும் .
தன்னை அறிதலே தவஞானத்தின் முதல் படி - சித்த நெறியின் அகராதிப் படி .

“ ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
        உப்பிட்ட பாண்டமென் றேண்ணாதே ;
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
       பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே ”

“ உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
        உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள் ;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
        அவனே குருவடி வாலைப்பெண்ணே !”
                                                         - கொங்கணவர்

     வாசுகியின் வினா என்னை வாட்டி வதைத்தது... பல வினாக்கள் என்னுள் பற்றி எரியத் தொடங்கின.
அறிவின் பற்றாக்குறையும் ஆன்மாவின் தேய்மானமும் கண்முன்னே கைகோர்த்து நின்றன .
உள்ளே ஆழ்ந்து விடை தேடத் தொடங்கியது மனம் .
அதுவே பெரிய திருப்புமுனை !

“ புகலவுமே மலக்குப்பை பொய் யாங்கூடு
      பூதலந்தான் ஒன்பதிடம் பொருந்தா தானும்
நிகலவுமே நிலையில்லாக் கானக் கூபம்
       நீர்க்குமிழி வாழ்வான நினைவு தானும்
நகலவுமே எப்போதும் நமன்கை யாடு
      நல்வினை தீ வினைரெண்டால் நலிந்த வீடு 
அகலவுமே ஆகாரக் கரைக்கட் டான
      அழிம்பான சடமிதுதான் அறிந்து கொள்ளே ”

“ சொல்லியுமே மவுனமாக இருந்து கொண்டு
        சித்தருட போக்கிலேதான் சென்றே ஆடி
ஒல்லியுமே ஒன்றுமறி யாதார் போலே 
        ஊமையைப்போல் இருந்துகொண்டு கருவைப்பாரு
கெல்லியுமே ஒவ்வொன்றாய் அறிந்துகொள்ளு
         கர்வமாகத் திரியாதே தொண்டு பண்ணு 
மல்லையுமே வேலைகொள்வார் மார்க்கம் சொல்வார் 
          மாளொட்டார் மார்க்கமாய்த்தான் மருவி டாயே ”
                                                               - போகர் ஏழாயிரம்

      உள்ளே வாழ்கின்ற பரம்பொருளை உணர விடாமல் தடுப்பது, தன்னை அறியத் தவறிய பிழையே .
தன்னை அறியும் ஞானத்தைத் தடுப்பது , ‘ தான் ’ என்கிற அசுர குணம்.
நான் என்னும் எண்ணம் எழுவதில் தவறில்லை . ஆனால் அதுவே ஆக்கிரமிக்கத் தொடங்கினால் , ஆட்டிப் படைத்தால் அது ஆணவத்தின் அடையாளம் , அடக்கத்தின் பின்னடைவு .
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது .
நிறைகுடங்களை அது நெருங்குவதில்லை .

       பணிவது ஞானம் ; நிமிர்வது ஆணவம் .
பணிவது வென்று நிற்கின்றது ; நிமிர்ந்தது நின்று அடிவாங்குகிறது .
எந்த மார்க்கமாக இருந்தாலும் , முன்னேற்றத்திற்குப் பெருந்தடை ஆணவமே .
மகாபாரதத்தில் மதுசூதனிடம் உதவி வேண்டிப் போனதில் , ஆணவம் தலைமாட்டருகே அமர்ந்தது , அடக்கம் காலடியில் அமர்ந்தது !
சென்றதில் வென்றது காலடியில் அமர்ந்த அடக்கமே- அதனால் அது வேண்டியதைப் பெற்றது.
இறுதியில் போரில் தோற்றது ஆணவமே .
பணிந்த நாணல் புயலையும் எதிர்கொள்கிறது ; வளர்ந்த தென்னை காற்றின் வேகத்தில் கதிகலங்கி விழுகிறது !
ஆணவம் வென்றதாக வரலாறும் இல்லை ; அனுபவங்களும் சாட்சி இல்லை .
ஆணவக்காரனுக்கு அவனுடைய தலைமுடி கூட அடி பணியாது .
ஆசை வயப்பட்ட ஆணவம் அழிவைத் தேடும் திமிர் - மனிதனுக்கு மட்டுமே வருவது .
தேவைகளைக் கடந்த துறவியின் ஆணவம் தெய்வீக உணர்வின் திரட்சி - தன்னை அறிந்த தத்துவ விளக்கம் .

       ஆணவம் அரசாளும்போது , “ நான் நான் ” என்று அலைமோதுகிறது மனம் .
இவனுடைய எண்ணமும் இயக்கமும் தன்னை மையமாக வைத்தே (self centered egotism) வேலை செய்யும் .
“ தனக்கு எது பிடிக்கிறதோ அது பிறருக்கும் பிடிக்க வேண்டும் . இல்லையென்றால் அவர்கள் வேண்டாதவர்கள் ” என்று நினைப்பவன் .
ஒரு சிறிய கேள்வியில் கூட இவன் அஸ்திவாரம் ஆட்டம் காணும் - அதனால் எதனையும் எதிர்கொள்ளத் தயங்கித் தள்ளிப்போடுபவன் , விட்டு விலகிப்போக விரும்புபவன் .
தன்னுடைய சேவல் கூவுவதால் தான் காலைப்பொழுதே ஊருக்கு விடிகிறது என்று நினைப்பவன் .
பொறுப்பெடுக்கத் தயங்குபவன் , ஆனால் மொத்தப் பலன்களுக்கும் குத்தகை கேட்பவன் .
தவறு நேர்ந்தால் தப்பிக்கத் துடிப்பவன் , அடுத்தவர் மீது பழி சுமத்துவதிலும் ஆர்வம் காட்டுவான் .

      தான் என்னும் ஆணவம் தடுமாற்றம் கொடுக்கும் , தவறான பாதைகள் காட்டும் .
இதில் எல்லோருடைய வெறுப்புகள் தான் இவனுடைய இறுதி சம்பாத்தியம் .
இவனுடைய யோகத்தில் குறுக்கே வரும் ரோகம் இது .
கடைசியில் , காலங்கள் இவனுடைய பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது .
அதன் பின்புதான் தன்னைப் பற்றிய இருப்புத் தணிக்கைத் துவங்குகின்றது !
இந்தத் தணிக்கை அறிக்கை, தன்னைத் திருத்திக் கொள்ளச் சொல்லும் முதல் தகவல் அறிக்கை , FIR ( First information report ) .

     பிணியார் வருவார் , மருந்தார் தருவார் 
நோய் தீர்ப்பார் யார் யாரோ ? Physician only prescribes , God alone cures !
நடந்தார் விழுந்தார் , கிடந்தார் மடிந்தார் , பின்பு உதவிக்கு யார் யாரோ ?
கடைசியில் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் அந்த நாலுபேருக்கு நன்றி !
இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த ஆட்டம் ? எதற்கு இந்த செறுக்கு ?
உன்னை அறியவில்லையா ? உயிர் வாழ்வது எதற்கு என்பது தெரியவில்லையா ?

“ தானென்ற ஆணவத்தை நீக்க மாட்டார்
சண்டாள கோபத்தைத் தள்ள மாட்டார்
ஊனென்ற சுகபோக மொழிக்க மாட்டார்
உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்
பானென்ற ஞானவெள்ள முண்ண மாட்டார்
பதறாமல் மவுனத்தே யிருக்க மாட்டார்
வானென்ற பொருளென்ன எளிதோ மைந்தா!
மகத்தான மனமடங்க எய்யுங் காணே .
                                 - சட்டைமுனி சித்தர் ஞானம்

     இதனைச் சீர் செய்யும் காலத்தின் கருவியே கடவுள் சிந்தனை , பக்தி மார்க்கம் .
இறைவனைத் தேடத் துவங்கி இறுதியில் தன்னுள்ளே பரம்பொருளைக் காண்பதில் முடிகிறது.
உள்ளே இருக்கும் பரம்பொருள் குருவடிவாக நேரில் வருகிறது .
அதுவே ஆத்ம ஞானத்தின் ஆரம்பம் ! வேதாந்தத்தின் விடியல் !
ஆத்ம ஞானத்தில் தானே, அநுபூதி பிறக்கிறது .
ஆத்மஞானத்தில்.., தானே அநுபூதி பிறக்கிறது .
   
      சீடர்களே... கேளுங்கள் .
நிற்பதும் நிலைப்பதும் அவன் அருளாலே .
நினைப்பதும் நிகழ்வதும் அவன் அருளாலே .
அறிவதும் தெளிவதும் அவன் அருளாலே .
ஆனந்த பூர்த்தியும் அவன் அருளாலே .
பூக்காத நந்தவனம் , காய்க்காத சோலை , யாருக்கு லாபம் ?
தன்னை அறிதலே தடைகளை அகற்றும், திரையினை நீக்கும் !

       ஆணவம் ஆட்கொண்டு கர்மவினை வசத்தால் கதி கலங்கி நின்ற என்னைக் குருவிருந்து சொன்ன வார்த்தைக் குறித்துக் கேட்க வைத்தது , குவிந்து நோக்க வைத்தது .
கண்டு நின்ற மாயை விலகியது , கலந்து நின்ற பூதமும் அகன்றது .
பழுத்து விழுந்தன பாவங்கள் எல்லாம் .
எழுத்திலா எழுத்து என்னுள் விளங்கியது - அந்த எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் , அதில் ஐயமே இல்லை .

“ மருவிமன மொன்றாகி மவுனம் பார்த்தால் 
       மார்க்கமாகும் நோயெல்லாம் மறைந்து போகும் 
உருவுமன மொன்றாகி ஆயி பாதம் 
       உகந்துமேபூ சைபண்ண எல்லா மாகும் 
விரவிமன மொன்றாகில் விழலாய்ப் போகும் 
       வேதாந்த சாரமெல்லாம் வெளியா காது 
திருவிமன மொன்றாகில் சித்தி யெல்லாம்
       தீர்க்கமாயொன் றுமில்லைசித றித்தான் போச்சே ”
                                                        - போகர் ஏழாயிரம்

       நான் எழுதிய “ கடைக்காண்டம் ” சித்தர் குழாம் சிறப்பித்துச் சொல்லும் நூல் .

       திருமலைத் திருப்பதி , ஆதித்திருப்பதியான திருக்குறுங்குடி மற்றும் கோடியத்துறை ஆகியவை நான் அடங்கியத் தலங்களாகும் .
இவற்றுள் திருமலைத் திருப்பதி சந்திரனுடையத் தலம் .
சந்திர கிரகத்தினுடைய தண் கதிர்கள் இங்கு குவிந்து திரட்சியாகக் காணப்படும் .
சந்திரனை மனகாரகன் ; தனகாரகன் என ஜோதிட நூல்கள் போற்றும் .
ஓங்காரத்தினுடைய ‘உ’கர தத்துவத்தின் ஆதிவீடு , சித்தி பீடம் .

“ ஆடுங்கள் பெண்டுக ளெல்லோரும் அந்த 
        அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை 
       பரத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி ”

“ சித்தர்கள் வாழி சிவன்வாழி முனி
      தேவர்கள் வாழி , ரிஷிவாழி !
பக்தர்கள் வாழி , பதம்வாழி ! குரு
      பாரதி வாலைப்பெண் வாழியவே !”
                                             - கொங்கணவர்

        ஒரு கோவிலில் பத்து நாட்கள் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்றது .
தினமும் ஏகப்பட்ட கூட்டம் சொற்பொழிவைக் கேட்கக் கூடியது .
மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மாலைப் பொழுதில் , கோவிலுக்கு வெளியே நின்று அந்த சொற்பொழிவைத் தினம் கேட்டு வந்தான் .
சொற்பொழிவின் கடைசி நாளில் , சொற்பொழிவு நிகழ்த்தியவர் கூட்டத்தை நோக்கிக் கேள்விகேட்டார் - “ உங்களில் எத்தனை பேர் சொர்கத்திற்குச் செல்வீர்கள் ? ” என்று .
கூட்டத்தில் மயான அமைதி நிறைந்து நிலவியது .
“ ‘ நான் ’ போனால் போவேன் ” என்று கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு பதில் வந்தது .
குரல் வந்த திசை நோக்கிக் கூட்டமே திரும்பிப் பார்த்தது .
அது வேறு யாரும் அல்ல . மாடு மேய்க்கும் சிறுவனின் பதில் தான் அது .
சிறுவனின் பதில் சொற்பொழிவு செய்தவரைத் திகைக்க வைத்தது ; கூடியிருந்தவர்களையும் சிந்திக்கச் செய்தது .
இடைச்சிறுவன் “ நான் ” எனக் குறிப்பிட்டது தன்னை அல்ல , தான் என்னும் அகந்தையினை !
Egoவின் இலக்கணத்தை இனிதாய் எளிதாய் இதைவிட எப்படிச் சொல்ல முடியும் ?

            எல்லாம் விதியின் கோடு , வினைகளின் ஆட்சி , கோள்களின் இயக்கம் , காலங்களின் கணக்கு என்றால்..., இறைவன் என்பவன் எதற்காக ?
ஆலயம் எதற்கு ? ஆரத்தி எதற்கு ? தேர் எதற்கு ? திருவிழா எதற்கு ?
இறைவன் என்பவன் நீ தானா ? இதுவும் உனக்கு சரிதானா ? எனக் கேட்டேன்...
இறைவன் என் காதில் சொன்னான் : 

தடுமாறும் மனதுக்கு தண்டாயுதம் கைகொடுக்கும் .
தடம் மாறிய வாழ்க்கைக்கு கீதை வழிகாட்டும் .
இவை எல்லாம் நம்பிக்கையின் நாற்றங்கால் .
நம்பிக்கை தான் ஜெகநாதம் , ஜீவகீதம் . 
நம்பிக்கையில் தான் நான் மறைந்து இருக்கிறேன் . இதனை உணர்ந்தவன் உயர்கிறான் !
நம்பிக்கையில் தான் நிம்மதி பிறக்கிறது ; சேவையில் தான் சிந்தனை சிறக்கிறது .

      நம்பிக்கை இல்லா மனம் பலவீனமானது , திடமற்றது .
எதனையும் கேலி செய்து , கிண்டல் அடித்து , சிரித்து விட்டுப் போகின்ற சிறுபிள்ளைத்தனம் .
பட்டப்பகலைக் கூட இரவு என்று சொல்லும் பாசிட்டிவ் மனநோயாளி .
அவனுடைய சந்தேகம் பிறரையும் தொற்றிக் கொள்ளும் infectious virus.
அது தவிர்க்கப் பட வேண்டிய உறவு ; வளரவிட்டால் ஆட்கொல்லி .
இப்படிப் பட்டவர்கள் வீணர் என்று சொல்கிறார்கள் சித்தர் பெருமக்கள் .
உண்டு என்று நம்பினால் தான் உள்ளமும் வேலை செய்யும் .
நம்பினால் கைகொடுக்கும் நம்பிக்கை !

       அன்பே கோவில் , அறிவே தெய்வம் , அறமே தீபம் .
தீபத்தின் ஒளியில் நீ வேறு நான் வேறல்ல .
இருவரும் இணைந்தே இயற்கையின் இயக்கம் .
நீ வாழும் போது நானும் வாழ்கிறேன் , நீ வாடும் போது நானும் வாடுகிறேன் .
நீ மகிழ்ந்தால் நான் மகிழ்வேன் , நீ வளர்ந்தால் நானும் வளர்வேன் .
இப்போது தெரிந்து கொள் நான் யார் , இருப்பது எங்கே?” என்று சொல்லி முடித்தான் இறைவன்.

     அந்த பிரம்மத்தின் ஆதி பீடத்தை அறிவிக்கும் ஆசானே குருநாதர். 
மயக்கத்தைத் தெளிவித்து , மனத்திரையை நீக்கி , சிரமெனும் குகையிலே சிவகைலாயத்தைத் தொட்டுக் காட்டுபவரே வேதாசிரியனான சற்குரு !
அவர் நேரில் வந்த தெய்வம் ; நினைவில் நின்ற பரம்பொருள் .
கோவில் கோவிலாக போனால் என்ன , குருவருள் இல்லாமல் கும்பிடும் தெய்வம் என்ன செய்யும் ?

           நெறிபட்ட சற்குரு நேர் வாய்ப்பது நீ செய்த தவம், பல ஜென்மாக்களில் சேமித்து வைத்த வரம். 
அதை சாதாரண நிகழ்வாக எண்ணி அலட்சியப்படுத்தி விடாதீர்கள் .
கர்ம வினைகள் உன் நம்பிக்கையைக் கரைக்க முயற்சி செய்யும் , உள்ள உறுதியைச் சீர் குலைத்து விளையாடும் .
இதில் உனக்கு வெற்றிக் கனியை அளித்து மணி மகுடம் அணிவிப்பதும் , உன்னுடைய பாவ புண்ணியங்களே .
விட்டகுறை இருந்து குருவாகிய ஞானாசிரியன் காட்சி கிடைத்தால் , பணிவோடு அவரை அணுகு ; பக்தியோடு பணிவிடை செய் .
மாலைப் பொழுதில் மயங்கி , காலை விடிந்தால் தெளியும் குணம் கொண்ட மனம் உறுதி அடைந்து , உண்மை , அன்பு , சேவை இம்மூன்றும் ஒன்று சேர்ந்தால், அவருடைய எண்ணத்தில் இடம் கிடைக்கும் , பார்வையில் படம் பிடிக்கும் !

“ வணங்கியே நிற்கையிலே யாரென்று கேட்டால் 
         மகத்தான பெரியோர்க்கு தொண்டனென்று சொல்லு
இணங்கியே ஏன் வந்தாய் என்று கேட்டால்
         எனை ஆண்ட மூர்த்தியே அடியேன் தானும்
பிணங்கியே வீடு விட்டுக் காடு வந்தேன்
         பேரான பசியாலே இளைத்து ஏங்கி
துணங்கியே வழிதப்பி யிங்கே வந்தேன்
          நோக்கமெல்லாம் பார்த்தறிந்து தொழுது நில்லே ”

“ நிற்கையிலே கடுவிசேடஞ் சொன்னாராகில்
        நேராகப் பிறம்பாக அப்பாற் செல்லு
தற்கையிலே நல்விசேடஞ் சொன்னாராகில்
         தாட்சியில்லை வேலைசெய்து தயவு வரப்பண்ணு
மற்கயிலே மனதிறங்கப் பண்ணிக் கொண்டு
        வாய்ப்பேச்சு சொல்லு முன்னே வேலை செய்து 
விற்கையிலே அடிமை போல் காத்திருந்து 
         வேணுமென்ற பணிவிடைக்கு முன்னால் நில்லே ”
                                                               - போகர் நிகண்டு


         கிடைத்த குருநாதரின் பாதாரவிந்தம் சரணடைந்தால் , பரம்பொருள் அங்கே கொலுவிருக்கும் .
பரம்பொருளின் காட்சியில் கர்மவினைகள் அனைத்தும் கரைந்தோடிப் போகும், துன்பங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும் .
வராத அமைதி வரும் , கிடைக்காத நிம்மதி நிச்சயம் கிடைக்கும் .
இனம் புரியாத பரவசம் இருப்புக் கணக்குத் துவக்கும் .
தெளியாத மனம் தெளியும் , தீராத நோய்கள் தீரும், மூடிய கதவு திறக்கும் , முடியாத சோகம் அகலும் .
நிம்மதியில் நீங்காத செல்வம் நிறைந்து நிற்கும் .
மொத்தத்தில் அவர் அள்ளித் தந்த அன்னை , சொல்லித் தரும் தந்தை , கூடவரும் தெய்வம் .
அறிவை அறிவால் தான் அறியமுடியும் ; அன்பை அன்பால் தான் உணரமுடியும் .
அருளை பக்தியால் தான் ருசிக்க முடியும் , அமைதியை அமைதியால் தான் அனுபவிக்க முடியும் .
ஏடும் அறிவும் கூட இருந்தால் எல்லா நலனும் உண்டாகும் . அது தாமதித்தாலும் நிரந்தரமாக பலன் கொடுக்கும் , நல்ல வளம் கொழிக்கும் .
கடமையும் ஆசையும் நிறைவேறும் , அந்த காலமும் விரைவில் உருவாகும் !
நன்று ! வாழ்த்துக்கள் !

“உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே .     

“ சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே .
                                                 - திருமந்திரம்

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...