Thursday, 29 November 2018

சித்தர்கள் தரிசனம்..! ஏழாம் பாகம்

                                           தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                          சித்தர்கள் தரிசனம்..!
                                                        ஏழாம் பாகம்


             உலகம் இயற்கையின் தோட்டம் .
அங்கே அழகு சிரிக்கின்றது ; அருள் ஒளிர்கின்றது .
இவை யாவுமே இயற்கையின் கை வண்ணம் , கலை வண்ணம் .
மண்ணின் கலை வண்ணம் மரங்கள் ,
பூவின் கலை வண்ணம் நறுமணம் ,
விண்ணின் கலை வண்ணம் வானவில் ,
பண்ணின் கலை வண்ணம் பாடல் ,
கல்லின் கலை வண்ணம் சிற்பம் ,
சொல்லின் கலை வண்ணம் கவிதை ,
ஸ்வரத்தின் கலை வண்ணம் இசை ,
தூரிகையின் கலை வண்ணம் ஓவியம் ,
எண்ணத்தின் கலை வண்ணம் எழுத்து ,
இறைவனின் கலை வண்ணமே மனிதன் !
எங்கும் எதிலும் கலைகளின் சிரிப்பு ! கலைக்கோயில் மணியோசை !

   வீணை இல்லாத கலைமகளா
குழல் இல்லாத கோவிந்தனா 
மத்தளம் இல்லாத நந்தியா
தம்புரா இல்லாத நாரதரா
நடனம் இல்லாத நடராஜரா
ஆண்டவனும் ஆலயங்களும் கூட கலைகளின் பீடங்களே !
ஆனால் அவை என்றும் கலையாத கலைகள் !
குன்றாத இளமையும் , குறையாத வயதும் ,
கலையாத கல்வியும் , கழுபிணி இல்லாத உடம்பும் 
ஒரு வகை வாழ்வியல் கலைகளே ! -
அது தான் நிலமிசை நீடு வாழும் சாகாக்கலை ! -
சித்தர் பெருமக்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள தத்துவப் பேழை , திருநடனப் பெட்டகம் !

    இக்காய சித்திக் கலையினை -
ஓங்கார உட்பொருள் ; நமசிவய எனும் ஐம்பூத பௌதிகம் , உயிரெழுத்து ஊமை எழுத்து ; ஓரெழுத்துக் கருப்பொருள் ; சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் எனப் பல்வேறு வகைகளில் பரிபாஷை சொற்றொடராக சித்தர் இலக்கியங்கள் கூறுகின்றன .
ஓங்காரப் பொருளே அகர உகர மகரக் கருப்பொருள் என்பதும் (எட்டு , இரண்டு ) , உடம்பினுள்ளே இந்த உறு பொருளைக் காண்பவன் - ஆதி ஒளியாகி , ஆள்வானும் தானாகி , மேதினியில் மெய்கடந்து வாழ்வான் என்பது , சித்தர்கள் வாழ்ந்து காட்டிய வரலாற்றுத் தடயங்கள் .

“ வறுமை போலுண்டுடுத்து உபரசத்தைத் தேடு
      மகத்தான யோகிகளைக் கண்டு பேசு
நிறுமையாய் அவருடனே வார்த்தை பேசு
      நினைவழிந்து போகாமல் உபரசத்தைக் கேளு
வெறுமைபோற் சீவனத்துக்கு இடத்தைக் கேளு
      வேதாந்த நுட்பத்தின் விபரங் கேளு
திறமையாய் மலைதனிலே சஞ்சரித்து
       சூதத்தின் சாரணைக்கு விபரங் கேளே
                                                           - போகர் நிகண்டு
            
       இதன் பொருளை உணர்த்தித் தொட்டுக் காட்டும் ஆசான் இல்லாமல், இதனை அடையமுடியாது என்பதும் உண்மை , மறுப்பதற்கில்லை .
ஆனால் அவ்வித சற்குருவிற்கும் அநேக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் உண்மை .
ஏழ் உலகு கிடைத்தாலும் எளிதில் உபதேசிக்கக்கூடாது . 
ஏனெனில் இது வானம் , பூமி , மலை , கடல் எல்லாவற்றினும் பெரிது , பெரிதினும் பெரிது !
ஏழ் நிலைக்கு அப்பால் உள்ள தண்ணமுது !
வானோர்க்கு அரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற நவநீத அமுதம் !
ஞானமும் யோகமும் , வாதமும் காயமும் , தியானமும் கர்மமும் சித்திக்கும் தேனமுது !
ஆசானை ஈசனாய்க் காணும் குருபக்தி நிறைந்த குணசீலருக்கே அருளப்படும் ஞானாமிர்தம் !
பரம்பொருள் மனம் வைத்தால் கோடியில் ஒருவருக்குக் கிட்டும் !

“ பாரப்பா வல்லாரையார் தான் காண்பார்
       பக்குவமாய் குரு சொல்லக் காணவேணும்
நேரப்பா குருவுரைத்துக் கண்டாலுந் தான்
        நினைவாக மனதுறுதியாக வேணும் 
காரப்பா மனதுறுதி யானாலுந்தான்
        கைபாகஞ் செய்பாகங் காணவேணும்
ஆரப்பாவானாலுங் குருவில்லா வித்தை
         அசத்தியந்தான் சத்தியந்தானாகா தெண்ணே ”
                                       -  அகத்தியர் அமுதகலைஞானம்

                      சித்தர்கள் தரிசனம் செய்வோம்... வாருங்கள் !
இப்போது நாம் தரிசிக்க இருப்பது சிவனுமையின் நேரடிச் சீடர் நந்தியெம்பெருமான் !
சித்தர் குருகுலத்தின் துணை முதல்வர் . 
சித்தர் பரம்பரையினைக் கட்டமைப்பு செய்த சிற்பி .
நேரடிச் சீடர் மட்டுமல்ல , நேர்முகச் செயலரும் ஆவார் .
ஆதி பராபரத்தின் அருகிலிருந்து கற்ற சோதிச் சுடரொளி .
ஆதி அரன் பாதத்தில் பெற்ற சகல கலை ஞானமெல்லாம் , பின் வந்த வேதியர்க்குப் புகட்டிய கோனான குரு நாதர். 
சிவன் உமைக்கு உபதேசித்த சாத்திரத்  தோத்திரங்கள் யாவும் கற்று , தம் சீடர்கள் வாயிலாக இப்பூவுலகிற்கு அருளிய பேருபகாரி .

“ நட்டேனே தமிழ்ப்பயிராய்  விளைய வைத்து 
       நன்மைபெற யிப்பொருளைக் கூறினேனே .
                                               - நந்தீஸ்வரர் நிகண்டு 


        நந்தீஸ்வரர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்.  கேட்போமா ...

   என் பெயர் நந்தி .
தமிழ்நாட்டு மூலச் சித்தர் மரபில் முதல் சித்தன் .
அதனைக் கட்டமைத்து நிர்மாணித்த ஆர்க்கிடெக்ட் !
ஆதிசிவன் உமையே என்னுடைய சற்குரு .
ஆதி குரு அருளிய தீட்சை தியானமெல்லாம் , இக்குவலயத்தோர் பயன் பெறவே குருமுறை கைமுறையாய் சித்தர் மரபிற்கு அருளிச் செய்தேன் .
தன்வந்திரி , திருமூலர் என்னிடம் பயின்ற மாணாக்கர்கள் .
சண்டிகேசர் எனது முதன்மைச் சீடர் .

“ சித்தியாம் நந்தி தேவனென் றென்பேர்
     அத்தனார் கூப்பிட் டருளினார் வாதம் 
பெத்ததினாலே பெரெனக் காச்சு 
     முத்தமி ழதனால் மொழிந்தமுந் நூறே ”
                         -  நந்தீஸ்வரர் கருக்கடை சூத்திரம் 

“ கேளப்பா முப்புரமெரித்த சிவன் சொல்ல
         வெகு விசுத்தியுமையவளும் விளங்கினாள் பாரே 
விளங்கினாள் நந்தியவர்க்குபதேசஞ் சொன்னாள் 
         விபரமதாய் நந்தீசர் தன்வந்திரிக்கருள ,
வழங்கினார் தன்வந்திரி பகவானுமையா ,
         வசனித்தாரசுவனி தேவருக்கருள ,
உளங்கினாரசுவனி தேவர்தானும்
          உபதேசமெந்தனுக் கருளினார் பார் 
புளங்கினோ மென்பெய ரகத்தியன்றானையா 
          புலத்தியனே யுந்தனுக்குப் புகட்டினோம் நாமே ”
                                              - அகத்தியர் சௌமிய சாகரம்

    ஆதியே குருவாய் அமைந்தது நான் பெற்ற பெரும் பேறு .
அருளான குரு பதத்தில் அருளைப் பெற்றேன் , அறியாதன எல்லாம் அறிந்தேன் .
கோனான குருவே எந்தனுக்குத் தந்தைக் கொப்ப திருவானார் .
பூத்த மலர் வாசனை போல் பூரணத்தைப் புகட்டினார் .
மனிதன் என்ற பேர் போச்சு , மாநிலத்தில் நானுமொரு முனியுமானேன் .
ஆதியந்தம் நடு மூன்றுப் பொருளைக் கருவாகத் தானறிந்தேன் , அண்டர் கோன்தயவினாலே .
காணரிது , தோணரிது எவராலும் , மூலச்சூட்சம் காண்பவரே சிவயோகி , சிவன்முத்தர் .
தேனென்ற ஞானம் ஊட்டி , தெவிட்டாத பூரணத்தின் வகையும் புகட்டினார் .
மௌனமென்ற வித்தை கூறி மனமடங்க திடம் அளித்தார் .
அருளான முப்பொருள் ஈந்து , பொருளான போதம் அருளினார் .
யார்தான் அறிவார்கள் குருவின் மேன்மை ?
ஆதியிலே விட்டகுறை இருந்து அவரைச் சார்ந்தால் , சோதியெனும் பொருளீவார் , புகழும் ஈவார் , ஊனழியாது உடல் அழியாது , ஊழி தோறும் ஓங்கும் உத்தமச் சித்தி அளிப்பார் .

“ சித்தென்றால் சித்தரிவ ரரிது கண்டாய் 
         சிவமென்ற நாமமது மரிது கண்டாய் 
பித்தென்றாற் பிரணவமு மரிது கண்டாய் 
         பின்னு முன்னும் நீக்குவது மரிது கண்டாய் 
வித் தென்றால் விளைவது மரிது கண்டாய் 
         விளைந்தேறித் தேறுவது மரிது கண்டாய் 
நித்தென்ற நிசாகவச மரிது கண்டாய் 
         நிராமயமாம் நிர்மலமு மரிது தானே ”
                                     - நந்தீஸ்வரர் நிகண்டு 

              மனிதர்களைவிட மரங்களுக்கு வயது அதிகம் .
மரங்களை விட மலைகளுக்கு வயது அதிகம் .
மலைகளை விட கடலுக்கு வயது அதிகம் .
கடலை விட பூமிக்கு வயது அதிகம் .
காரணம் அவை மௌனத்தால் பேசுகின்றன , தேவையில்லாமல் பேசுவதில்லை ;
எப்போதும் எதற்கெடுத்தாலும் react பண்ணுவதில்லை . 
சலனம் அடைவதில்லை .
அதனால் சஞ்சலம் இல்லை .
அது தானே “ தனித்திரு ” தத்துவம் ; “ சும்மா இரு ... சொல்லற ” ஞானம் .

    மௌனம் ஒரு மகத்தான வரம் , தெய்வீகக் கலை .
அசைவது பலவீனத்தின் அடையாளம் ; அசையாமை உறுதியின் உத்திரவாதம் .
அசையாத உறுதிதானே இறுதியில் ஞானப்பழத்தை  வென்றது !
கோவிலின் சிலை மௌனத்தால் பேசுகிறது .
பக்தனின் மனந்தான் பேசுகிறது , புலம்பித் தீர்க்கிறது .
ஒரு வேளை சிலை ஒவ்வொரு பக்தரிடமும் பேசத் தொடங்கினால் , சலிப்புதட்டும் .
அதன் மீதான மதிப்பு குறையத் தொடங்கிவிடும் - இது தானே உண்மை !
கோவிலுக்குச் செல்வது தெய்வம் தெரிவிக்க விரும்புவதைத் தெரிந்துகொள்ள .
உனது குறைகளைக் கொட்டித் தீர்ப்பதற்கு அல்ல . அது தெய்வமே அறியும் .
பிரார்த்தனை என்பது petition அல்ல.., வெறும் மந்திரத்தால் மாங்காய் விழ.
அது உள்ளொளி பெருக்கும் உன்னதக் கலை .
பரம்பொருளை இணைக்கும் பக்திப்பாலம் !

     பேசாமல் இருக்கும் மௌனமே பெரிய விஷயங்களைச் சொல்கிறது - eloquent silence !
சலனமற்ற மனமே சாதனைகள் புரிகின்றது .
பேசுபவனுடைய வார்த்தைகளே அவனைக் காட்டிக் கொடுத்து விடும் . காரணம் ?
முதல் நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை .
நேற்றொரு தோற்றம் , இன்றொரு மாற்றம் .
அவை சலனத்தின் சின்னங்கள் , தடுமாற்றத்தின் அடையாளங்கள் .
காற்றடித்தால் தென்னை சாய்கிறது , நாணல் சாய்வதில்லை .
கோபுரங்கள் சாய்வதில்லை !  கனிந்த மரம் வீழ்வதில்லை !
மலைகளில் வாழ்பவர்கள் மருத்துவரைத் தேடுவதில்லை .

சலனங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் கர்த்தா யார் ? “ நான் ” தான் !
“ நான் ” தன்மையை வென்றவனுக்கு மௌனம் வசப்படுகிறது.., 
இயல்பாகவே தியானம் கைகூடுகிறது .
அதன் பின் மௌனமே பேசுகிறது ; தியானமே செயல் புரிகிறது .
மனதின் meditative quality மலர்ந்து மணம் வீசுகின்றது .
அதில் அவன் தன்னை அறிவதால் , எதுவும் பேசுவதில்லை , பிறரிடம் எதுவுமே கேட்பதில்லை .
தேவைகளுக்கு அடிமை ஆகாமல் அவற்றை வென்று நிற்கும் வீரத்துறவி ஆகிறான் .

“ தானென்ற மூலியொன்று ஒன்றேயாகும் 
     தன்னறிவு அறிவதுவும் ஒன்றேயாகும் 
கானென்ற பொருளறமும் ஒன்றேயாகும் 
     கன்னியர்கள் நாதமது ஒன்றேயாகும் 
வானென்ற மண்ணும் விண்ணும் ஒன்றேயாகும் 
      வாய்ப்பதுவும் மாய்ப்பதுவும் ஒன்றேயாகும் 
நானென்ற ஆணுவமே ஒன்றைநீக்கி 
      நல்குமப்போ சுழிமுனையில் நாதங்காணே ”
                                             -  நந்தீஸ்வரர் நிகண்டு

      ஆத்ம பலம் என்பதே தன்னை உணர்தல் தானே !
தன்னை உணர்ந்தவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்கின்றான் - அது அவனுடைய யோகதர்மம் .
இந்த தர்மம் தலைமாட்டில் நின்று காக்கும் !
“ கடமையைச் செய் ” என்பது தானே கண்ணனின் ஞானமொழி !
ஆத்ம ஞானம் அடைந்தவனுக்குப் பிறரிடம் கேட்க என்ன இருக்கிறது ?
அவனுக்குக் கொடுப்பதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது ?
இவன் ஒரு ஓடும் நதி , உதிக்கும் ஞாயிறு , சுழலும் பூமி !
ஓடுகின்ற வண்டியில் ஓடாத யோகி மனம் !

வண்டிதான் ஓடுகிறது . வண்டிக்குள் இருக்கும் உன் மனமும் உடன் சேர்ந்து ஏன் ஓடுகிறது ?
என்றேனும் எண்ணிப் பார்த்தது உண்டா ?
வாழ்த்துக்கள் !

“ வாச்சுதென்று மகிழாதே மனம்பொல்லாது
        வாயாது வாயாது வசனித்தாக்காற்
போச்சுதென்று மவுனமுற்றா லுறையுஞ் சூதம் 
        பொருளாகும் மாத்துமிடப் பொன்னாம் மண்ணும்
காச்சுதென்று மகிழாதே கல்லதானால்
        கண்துலங்கும் பாத்துக்குங் கனியதாகும் 
ஏச்சுதென்று புகலுவா யாவரோடும்
        இணங்கினவர்க் குரைத்திட்டா லிதுதான்போமே ”
                                        - நந்தீஸ்வரர் நிகண்டு

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html

Wednesday, 14 November 2018

சித்தர்கள் தரிசனம்..! ஆறாம் பாகம்

                                                 தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                               சித்தர்கள் தரிசனம்..!
                                                           ( ஆறாம் பாகம் )


            உலகில் எல்லா விதமான பொருள்களுக்கும் உயிர் உண்டு . எனக் கூறுகிறது ஐலோசோயிசம் (Hylozoism) கோட்பாடு .
இறைவனின் படைப்பில் , இயற்கையின் வளர்ப்பில் எல்லாம் தன்னை வெளிப்படுத்த விழைகின்றன - an urge to evolve and express !
மரங்கள் மட்டுமல்ல , மலைகள் கூட வளர்கின்றன .
பரிணாமமே இதற்கான பின்புல விசை !
செடிகள் பூப்பதும் , கொடிகள் காய்ப்பதும் , காய்கள் கனிவதும் இந்த வகையில் தான் !
ஏன் ., உலகம் உதித்ததும் , உயிர்கள் தழைப்பதும் , ஓடும் நதிகளும் கூட இதற்காகத்தானே.

    இயற்கை பேசுகிறது , இதயமும் பேசுகிறது .
மலைகளும் , மரங்களும் கூட பேசுகின்றன .
ஏன் ? எறும்புகள் கூட பேசுகின்றன . 
ஆனால் அனைத்துமே எப்போதுமே பேசுவதில்லை . தேவைப் படும்போது மட்டுமே !
மனிதன் மாத்திரந்தான்... அவனுக்குப் பேசியே ஆகவேண்டும் , ஏன் ?
அவன் மனதுக்குள் மையங் கொள்ளும் தன்னை உணாரத் தாழ்வுநிலை !
ஒரு வகையான Inner crisis ! தேவை அதிலிருந்து விடுதலை .
அதற்காக எப்பவுமே பேசுகிறான் , எதற்கோ பேசுகிறான் 
ஏதேதோ பேசுகிறான் , எதைப் பற்றியாவது பேசுகிறான் .
பேசுவதற்குத் தேவை ஏதோ ஒரு பொருள் , கேட்பதற்க்குத் தேவை யாரோ ஒரு நபர் ,
அதில் அவன் அடைவது , ஒரு வகை self gratification மட்டுமே.
இதிலும் வாய் ஒன்றைப் பேசுகிறது , மனமோ மற்றது ஒன்றை ..?

    இந்தப் பேச்சில் தான் எத்தனை வகை , எவ்வளவு விதம் !
பேச்சுக்கள் பல விதம் , ஒவ்வொன்றும் ஒரு விதம் !
சின்னக் குழந்தையின் செல்லப்பேச்சு ;
முரண்டு பிடிக்கும் முரட்டுப் பேச்சு ;
பெற்ற தாயின் பரிவுப் பேச்சு ;
காரியம் ஆற்றும் கணக்குப் பேச்சு ;
அனைத்தும் கற்றது போல் ஆணவப் பேச்சு ; 
அரை குறையாகத் தெரிந்த அசட்டுப் பேச்சு ;
வியாபாரம் விற்கும் தந்திரப் பேச்சு ;
அரசியல்வாதியின் ஏமாற்றுப் பேச்சு ; 
போதையில் மனிதன் உளறும் பேச்சு ;
கற்றுத் தெளிந்தக் கனிவுப் பேச்சு ;
மகான்கள் ஒளி வீசும் மௌனப் பேச்சு !
அன்பே சிவமெனும் ஆண்டவனின் பேச்சு !

“ மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே .
                                                               - திருமந்திரம் 

     ஏனோ பிறந்தோம் ; எப்படியோ வளர்ந்தோம் ; எதற்கோ இருந்தோம் .
வந்தது இங்கே , செல்வது எங்கே , வாசல் நமக்கே தெரியாது .
இருந்தது இங்கே , எப்படி வாழ்ந்தோம் என்பதும் நமக்கே புரியாது .
மனிதன் பிறந்தான் , மரம் போல் வளர்ந்தான் .
எதிலும் அச்சம் , எல்லாவற்றிலும் ஐயம் ,
அனைத்திலும் மயக்கம் , அனைத்திலும் தயக்கம் ,
மனதிலே குழப்பம் , வாழ்க்கையில் கலக்கம் .
இடைப்பட்ட காலம் இதற்காப் பிறந்தோம் ? என்பது போலும் சலிப்பது வேறு .
“ ஆறிலும் சாவு நூறிலும் சாவு ” ; “ இந்தப் பிழைப்புக்கு இருந்தது போதும் ”
இவையெல்லாம் அறியாமையின் அடையாளங்கள் ,
தன்னை உணராத் தடுமாற்றங்கள் .
தோல்வி பாடுகின்ற தேசிய கீதம் !
துவண்ட நெஞ்சின் தத்துவ வேதம் !

உண்பதில் கூட நிதானம் இல்லை ,
உறக்கத்தில் கூட நிம்மதி இல்லை .
வாழத் தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையில் ,
இயற்கை அறிவை என்றோ இழந்தான் .
ஆறு அறிவை அறிந்த மனிதன் , ஆறாம் அறிவைத் தேரா அறிவால் 
தெருவினில் அதனைத் தொலைத்து விட்டானே !
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் மூலர் ,
என்பதை வெளியில் விட்டு விட்டானே !
முன்னாலே முகம் இருந்தும் கண்ணாடி கேட்பதென்ன ?

கோட்டையை கட்டிவிட்டு , கொடிமரத்தை நாட்டிவிட்டு 
குதிரைலாயத்தில் கொசுக் கடியில் வாழ்கின்றான் .
எட்டு மாடி கட்டி விட்டு , மாட்டுக் கொட்டிலிலே பாய் போட்டு தூங்குகிறான் .
கேட்டால் , பூட்டிக் கிடக்குது கதவு ! என்பது பதில் .
பூட்டைத் திறக்கத் தெரியவில்லை , ஏன் ?
பூட்டின் சாவி குருவின் கையில் !
மன வீட்டுக்குள் அவர் இருந்தும் காண்பவரில்லை .
எள்ளுக்குள் எண்ணெய் போல் , உள்ளுக்குளே அவர் இருந்தும் உணர்வாரில்லை !

அரிது காண் ! மானிடராய் பிறத்தல் அரிது !
வாழ்வதன் கருப்பொருள் வாடுவது அல்ல !
சென்றதெல்லாம் வருமோ ? சிந்தனை தான் தருமோ ?
வந்ததை யார் தடுத்தார் ? வருவதை யார் மறுப்பார் ?
இமைகளை மூடு , அதில் துயரங்களையும் மூடு !
மறுபடி விழிப்பாய் , புது மனிதனைப் போல் பிறப்பாய் !
இன்று  புதிதாய் பிறந்தோம் என என்றும் புதிதாய் மலர்வாய் !
அதில் சொல் புதிது ! பொருள் புதிது !
நலம் புதிது ! பலம் புதிது ! வளம் புதிது ! வாழ்க்கையும் புதிது ! 

“ பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரிய பேறு இழந்தாரே .
                                                   - திருமந்திரம்

    காசேதான் கடவுள் என்று கலியுகத்தில் ஆன பின்பு கந்தன் என்ன , கண்ணன் என்ன ?
பணத்தின் மீது தான் பக்தி என்றபின் கோயிலாவது  குளங்களாவது ? 
ஆலயம் ஏது ? ஆண்டவன் ஏது ? 
இறைவன் உலகத்தைப் படைத்தான் ; இதையும் அவன் தான் படைத்தானா ?
காசைப் படைத்தவன் அவன் என்றால் , கடவுள் என்பவன் எதற்காக ?
இருவேறு இயக்கம் இது என்றால் , இறைவன் என்பவன் எதற்காக ?
காசே பெரிதென்று ஆலாய் பறக்கிற பாழாய் போன பூமியிலே பொன்னைக் கேட்காமல் , பொருளைக் கேட்காமல் , சித்தியைக் கேட்காமல் , முக்தியைக் கேட்காமல் 
“ சங்கத் தமிழ் மூன்றுந்தா ” என ஐங்கரனை வேண்டினாளே அவ்வை !
அது இந்த மண் தானே , இந்த மண்ணில் தானே !

முத்திக்கு வித்தான முத்தமிழில் அப்படி என்னதான் இருக்கிறது ?
முத்தமிழே சதாசிவ தத்துவம் , சிவஞான போதம் .
முத்தமிழ்த்தேன் சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டும் மெய்வழிச்சாலை .
பாலுக்குள்ளே நெய்யை வைத்து , பழத்துக்குள்ளே சாரை வைத்துப் 
பிறவிக் கென்று பெரும்பயனை வைத்தான் ! 
அது தான் இறைவனின் வேதம் , இயற்கையின் கீதம் !
பிறவாப் பேறும் , சாகாக் கலையும் தமிழ் மொழியில் தான் விரவி நிரவி , நிறைந்து மறைந்து புதைந்து உள்ளது .
அ , உ ( தமிழ் எண்களில் எட்டு , இரண்டு ) என்ற எழுத்துகளுக்கு பொருள் தெரியாதவர்கள்,  செந்தமிழின் சிறப்பை அறியாதவர்கள் , அஞ்ஞானிகள் என்று சித்தர் பெருமக்கள்  சொல்கின்றனர் . 
அன்னைத் தமிழின் சிறப்பே அதில் ஆழ்ந்து புதைந்து கிடக்கும் அந்தக் கலையே -
அது தான் சாகாக்கலை !

“ முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச் 
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் 
சத்தங்கள் ஏதுக்கடி ?
                                - குதம்பைச் சித்தர்

“ சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால் .
                                                 - திருமந்திரம்

இதற்கான மருந்தே , ரசவாத மருந்து எனக் கொள்ளலாம் , 
அதுவே காயகல்பம் ! காயசித்தி ! காலகாலனை வெல்லும் கற்பம் ! 
இம்மருந்து தெய்வீகமானது ! முக்தி தருவது , சித்தி அளிப்பது !
தேவர்களுக்கும் எட்டாதது , ஆனால் மனிதனுக்குக் கிட்டும் !
“ வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற ஞானோதய அமுதம் ” என்று பாடுகிறார் வள்ளலார் ! 
இந்தக் கலைஞானம் , குருவருளும் திருவருளும் கூடப் பெற்றவர்களுக்கு நிச்சயம் கைகூடும் .
இவை விட்டகுறையால் வாய்க்கும் என்பதை அறிவீர்களாக !
அதுவுமன்றி அடக்கம் வேண்டும் , ஒழுக்கம் வேண்டும் !
தான் என்ற அகந்தையினைத் தகர்த் தெறிய வேண்டும் ! 
அது தான் Essential qualification !

“ போச்சென்ற மனம்புத்தி ஆங்காரம் சித்தம்
            பொறி புலன்கள் போனவழி போகொட்டாமல்
நாச்சென்ற மனம்செம்மை யாகப் பண்ணி
            நாதாந்தப் பெருவழியே நாடிச் சென்றால் 
மாச்சென்ற நடனஒலி மருவிநிற்கில் தீயோ
            மானுடநர சென்மமல்ல சித்தன்சித் தன்தான்
மூச்சென்ற மூச்சுவிட்டு அடங்ககும் முன்னே நீயும்
            முதிர்ந்தறிவைத் தள்ளிவிட்டால் மோசம்தான் பாரே ”

“ பாரென்றால் சும்மாத்தான் வருமோ சொல்லு 
             பண்ணியதோர் பலாபலத்தால் பலிக்கும் பாரு
தேரென்றால் புத்தியினால் நேரப்போமோ 
            நேருவது குருசொல்ல நிலைத்துப் போகும் 
தூரென்றால் தத்துவமாம் குப்பை எல்லாம் 
             சோதித்துத் தள்ளிவிட்டுச் சூட்சம் பாரு
காருண்டாய் சதநித்த மூலத் துள்ளே
             கடாட்சித்து அருள்புரிவார் கணேசர் தானே ”
                                                           - போகர் ஏழாயிரம் 


சரி... இனி சித்தர்களைத் தரிசனம் செய்வோம் , வாருங்கள்...
இப்போது நாம் தரிசிக்கப் போவது செந்தமிழாகமம்  செப்பி அருளிய 
சுந்தரநாதன் திருமூல நாயனார் .
சிவயோகத்து அமர்ந்து , சிந்தை கனிவுறத் திருமந்திரமாலை எனும் 
செந்தமிழாகமம் மூவாயிரம் அருளிய பைந்தமிழ் தேர்ப்பாகன் ! 
செந்தமிழ்த் தேனீ ; சித்துக்குத் தந்தை !
கூடுவிட்டு கூடு பாய்ந்து வித்தைகள்  செய்தவர் , விந்தைகள் புரிந்தவர் !
வாடிய பசுக்களைக் கண்டு வாடிய வள்ளல் ;
ஆவினத்தின் வாட்டம் போக்கிய கோமான் !  கோகுலத்தின் திருவிளக்கு ! 
அறம் பாட வந்த அறிவுக் கருவூலம் ! 
செவிக்குத் தேனாகத் திருமுறை தந்த தமிழ் கவிக்கு நாயகன் !
யோகத் தமிழ்க் குயில் ; ஞானத் தமிழுக்கு வான் புகழ் சேர்த்த ஆன்மீக வானம்பாடி !
ஆகம சாரத்தை அருந்தமிழில் தந்த சிவராஜ யோகி !
வேதத்தின் வித்தினைத் தெள்ளு தீந்தமிழில் தந்த வித்தகச் சித்து !
எண்ணிலா கோடியுகங்கள் இருந்த தவயோக சிகாமணி பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் ...

வீதியெங்கும் புல்முளைக்கும் விதையினைக் கண்டதுண்டா ? 
ஆழி நீரை மேகம் வாங்கும் யாரும் பார்த்ததுண்டா ? 
மருந்து உண்டால் மட்டுமே நோய் நீங்கும் , கண்டால் கேட்டால் அகலாது .
சித்தர் நூல்களின் பொருளுணர்ந்தால் மட்டுமே மருளும் இருளும் மாயும் .

சக்கரவர்த்தி தவராச யோகியெனும்
மிக்க திருமூலனருள் மேவு நாளெந் நாளோ ”
                                                       - தாயுமானவர்

“ திருமூல தேவனையே சிந்தை செய்வார்க்குக்
கருமூல மில்லையே காண் .

              திருமூலர் தம் சீடர்களுக்குச் சொல்கிறார்... கேட்போம் , வாருங்கள் ..

   என் பெயர் திருமூலன் !
தமிழ்நாட்டு மூலச்சித்தர் மரபு எனது .
பதினெண் சித்தர் குழாத்தின் மூத்த முனி என்றும் அழைப்பர் .
சுந்தரநாதன் எனது தொன்மை இயற்பெயர் .
நம்பிரான் திருமூலர் என உரிமை கொண்டாடி அழைப்பர் . 
திருமூலத்தேவர் எனவும் சிறப்பித்து அழைப்பர் .
இமயவருக்கு நெறியருளும் நந்தியெம் பெருமானின் மாணாக்கன் .
என்னை அறிவித்து , எனக்கருள் புரிந்த சற்குரு நந்தீசர் . 
எண்ணிலா கோடி ஆண்டுகள் நந்தியெம்பெருமான் திருவடி நிழலில் , வடகயிலையில் மோனத்தவமிருந்தேன் . 
சோமன் , பிரமன், உருத்திரன் என ஏழ்வர் என் வழி வந்த சீடர்கள் . 
என்னையும் சேர்த்து சமயக் குறவர் ஐவர் என்று சிறப்புடன் தொழுவர்.
தமிழ் நாட்டு வரலாற்றிலும் , தமிழ் இலக்கிய வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்று என்றும் சீரிளமைச் செந்தமிழ் போல் வாழ்பவர் நாங்கள் .

“ பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே .
                                              - திருமந்திரம்

விழுமிய தமிழ் முனிவன் மூலன் வழிமொழிகள் !

எழிலான கும்பமுனி தென்கயிலை அகத்தியனும் என்போல் தமிழ் பற்றாளர் .
தமிழன் என்று சொல்லி தலை நிமிரச் செய்தார் .

“ தெளியவே மவுனச் சொல் லறிய வேண்டும்
         தியான மந்திர சித்தி மவுனமாலாச்சு
களியவே பொருளெல்லா மவுன மதாலாச்சு
        கருவு குருவுருவுமுதல் மவுனமதாலாச்சு
சளியவே சிவயோக ஞானசித்தி முதல்
        சைதன்னியப் பொருள்களெல்லா மவுனமதாலாச்சு
பொருளியவே பொதியை தெட்சணாயனென்பேர்
       புனித மென்ற தமிழுக்குடையவனுனானே
                                - அகத்தியர் சௌமிய சாகரம் 

   குருவருளாலே திருவருள் நிறையப் பெற்றேன் .
எந்தன் ஈசன் நந்தியின் கடாட்சத்தால் எல்லாச் சித்துக்களும் கைவரப் பெற்றேன் .
நந்தீசர் திருவடி நிழலில் வேதாந்த வேதமெல்லாம் விட்டொழித்து , நிட்டையிலே ஏகாந்தமாகக் கலந்து நின்றேன் .
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல், மாயாப் பிறவியின் மயக்கம் தெளிவித்தார்.
காயாபுரிக் கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு , மாயா அனுபூதி மகிழ்ந்து எனக்கு அருளினார் .
நந்தியெம் பெருமான் சிந்தையுள் நிறைந்ததாலே அவனருளாலே அவன் தாள் நிழல் இருந்தேன் .
ஈசன் திருவடி எந்தன் சிரமிதில் வைத்து  திறமிது பொருளென , உடம்பினுள்ளே உறுபொருள் காட்டினார் .
உவட்டா உபதேசங்கள் புகட்டி என் செவியில் தெவிட்டா ஞானத் தெளிவையும் ஊட்டினார்.
திருவடித் தீட்சையால் அகம் உருக , அன்புருக , என்புருகப் போகா அனுபூதி பூத்து மலர்ந்தது.
தெள்ளத் தெளிந்த சிவானந்தத் தேன் அருந்தி என்னை அறிந்து , என் கோமானோடு கலந்து 
ஊருஞ் சதமல்ல , உற்றார் சதமல்ல 
சீருஞ் சதமல்ல , செல்வஞ் சதமல்ல 
யாருஞ் சதமல்ல , நின்தாள் சதம் என்றிருந்தேனே !

“ திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வற்றிடக் கண்டுகொண் டேனே .

“ திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே .  

“ திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே .  
                                         - திருமந்திரம்

      குருவருளாலே திருவருள் கிடைத்தது ; திருவருளாலே தேவியருள் கிட்டியது !
கண்ணப்பா கண்மணியே உண்ணப்பா அருளமுது எனத் தேவி திருப்பிரசாதம் ஊட்டினாள்.
அம்பிகையின் அமிர்தமென்ற வாலைரசம் பேரின்பத் தேனைச் சித்தமது ஒருமித்து சிறப்புடனே உண்டேன் .
புகழ் மிக்க நவநீதம் இது தான் அறிவீர் .
அமுதம் உண்டு சித்தி பெற்றால் , நமனல்லோ மாண்டு போவான் .
வித்தில்லா விருட்சமுண்டோ ? நலச்சித்தியில்லா சித்துமுண்டோ ?
சிவன் இல்லா சக்தி ஏது ? சக்தியில்லா சிவன்தான் ஏது ?
விட்டகுறை வாய்த்தால் பெறலாம் பேறு !
காயாபுரி பட்டினத்தின் கன்னி வாலை , கனிவுடனே மதியமிர்தம் தந்தாளாகில், முப்பாழும் மறைந்து போகும் ; அகத்தினிலே சுழியறிவு சுடர் விடுமே !
அன்புடனே அரனுடைய கிருபை பெற்றால் , அம்பிகையும் அரவணைத்து அருள் பொழிவாள் .
யாவர்களும் ஏவல் செய்வர் ; இவ்வுலகும் எவ்வுலகும் என்றும் போற்றும் ;
இருக்கலாம் கயிலை வாழ் ஈசன் பாதம் . 

“ நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே .

“ பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே ”

“ ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே .
                                              - திருமந்திரம் 


          சீடர்கள் : திருமூலர் திருப்பெயர் எப்படி வந்தது , எவ்வாறு வாய்த்தது ? என ஐயனே அருள்வீராக.

திருமூலன் பெயர் வந்த விதங்கேளீர் , கண்மணிகளே !

“ வாடாச்சீர்த் தென்னவன் தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ” - கலித்தொகை 

“ பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து , நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு 
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் ”
                                                                     - திருப்பாவை

         மாதவமூலன் உடம்போடு இனி நான் இருக்க வேண்டும் , மூலனின் உடம்போடு மூவாயிரந் தமிழ் பாட வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும் .
அதற்கான காலம் கனிந்த உடன் , தென்கயிலை தட்சணாயன் , பொதிகை முனி அகத்தியருடன் சிலகாலம் தங்க வேண்டும் எனும் ஆசை எனக்குள் பிறந்தது .
அதன்படி தென்திசை பிறந்தோற் பெரும் பயன் எனக் கருதிப் பொதிகை நோக்கிப் புறப்பட்டேன்.
போகும் வழியினில் வந்தது தான் எந்தன் வாழ்வின் திருப்புமுனை .
அது தான் ஆநிரை மேய்க்கும் கோகுல மூலன் ! - அதுவும் இறந்து கிடந்த நிலையில் !
நல்ல மேய்ப்பனை இழந்தப் பசுக்கூட்டமோ சொல்லொண்ணாத் துயரத்தால் கண்ணீர் சொரிந்து கதறி அழுதன .
பாவம் தங்கள் துயரத்தை யாரிடம் போய் சொல்லி அழும் ?
ஆவினத்தின் சோகக் கண்ணீர் எனது மனதைத் தொட்டது , உள்ளத்தை வாட்டியது .

விதியின்  விளையாட்டைப் புரிந்து கொண்டேன் , விளையாடி மகிழவும் உளங்கொண்டேன் .
உடலுக்குள்ளே உள்ளம் உண்டு ; உருவம் அதற்கு உண்டா ?
தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான் .
தெளிந்த நிலை கொண்டவனும் எங்குமில்லை என்றான் .
இல்லை , இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான் ?
இறுதியில் “ இல்லை ஒரு சக்தி ” என்று சொல்ல வில்லை என்றான் .
ஆவினத்தின் அல்லல் களைந்து , அருள் வழி காட்டி 
அவைகளுக்கு எல்லையில்லா ஆனந்தம் அளித்திட 
நந்தியெம்பெருமானின் அருளால் ஆணையால் 
கோகுல மூலனின் ஊன் புகுந்து , உடல்கலந்து , உயிர் நிறைந்தேன் !

“ வழக்கத்தைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வகையுள்ள சித்தநாதர்கள் மாறிமாறிப்
பழக்கமுள்ள கூடுவிட்டுக் கூடுபாய்வார்
பார்த்தவருங் காலமட்டு மிருந்து வாழ்வார்.
முழக்கமுடன் பின்புவந்து தன்சரீரம்
முழைந்து கொள்வார் தன்சரீரத் தப்பிப்போனால்
இளக்கமுள கற்பமதை சாப்பிட்டேன்தான்
இனிமையுடன் செடமலதைப் பெலஞ் செய்வாரே ”

“ பெலஞ் செய்வா ரதைவிட்டு மறுகூடேகிப்
பின்புமொரு கூடதனிற் பாய்ந்து வாழ்வார்
நலமுடனே அவர்கள் செய்யுந் தொழிலையேதான்
நானெடுத்துச் சொல்ல வென்றால் நாவோயில்லை.
பலமுடனே பரகாயஞ் செய்யும் பொழுது
பார்த்தாக்கால் வெகுசுருக்கு அதீதம் மெத்த
தலமுடனே தன்சரீர மொளித்து வைக்கத்
தான்செய்து வைத்துவைக்குங் குகையைப்பாரே
                                         - கருவூரார் வாத காவியம் 

         இப்போது மூலன் உயிர் பெற்று எழுந்தான்..!
சுந்தரன் ஒளிந்து கொண்டான் ; மூலன் வெளிவந்தான் .
அப்பப்பா பசுக்கூட்டத்தின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா ?
அளவில்லா ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தன .
என் அருகினில் வந்து உச்சி மோந்து மகிழ்ந்தன . 
கண்கொள்ளாக் காட்சி ! நெஞ்சம் நெகிழ்ந்தது ! இதயம் நிறைந்தது !
மாட்டிற்கு கூட நன்றி வைத்தான்.. மனிதனுக்கு என்ன வைத்தான் ?

      உள்ளே வாழ்வது நான் என்றாலும் , வெளியே தெரிவது மூலனின் உடல் தானே.
அதனால் வரலாற்றுப் பட்டயத்தில் முத்திரை பதித்தது மூலனின் பெயரே !
திருமூலன் என்பதே கருவூலம் ஆயிற்று .
இது தான் ஈசனின் சங்கல்பம் என்பது !
யோகியை சுமந்து வாழ்வது என்பது , ஆயன் மூலன் வாங்கி வந்த வரம் !

“ நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே .
                                                     - திருமந்திரம்

காலங்கள் உள்ளவரை , கதிரவன் உதிக்கும் வரை 
திருமூலன் திருப்பெயரே தழைத்தோங்கி நிலைக்கட்டும் !

“ சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே ”
                                                        - திருமந்திரம்

        மூலனின் உடம்பிருந்து மோனத் தவமியற்றினேன் - அதில் 
மூவாயிரம் தமிழ் பாட முகிழ்த்ததுப் பணித்திட்டம் - அதுவே
நவயோக நந்தி தேவனின் திருவுளக் குறிப்பு , திருவருட் செயல் !
ஆண்டிற்கு ஒரு பாடலாக தமிழ் மூவாயிரம் தரணியில் பிறந்தது .
சிவயோகத்தில் பிறந்த செந்தமிழ் ஆகமம் .
தவமே தவமிருந்து பெற்ற தமிழ் மூவாயிரம் .
வேணும் வேணுமென்று வீண் உழன்று தேடுவதல்ல வரம் ;
வேணுமென்று தேடினாலும் உள்ளது இல்லையே ஆகும் ; 
வேணு மென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் ,
வேண்டி நின்ற அப்பொருள் விரைந்து வந்து சேர்ந்திடும் !
இது தான் காலத்தின் கணக்கு , கண்டுபிடிப்புகளின் தத்துவம் !

              எண்ணியது நான் , சொல்லியது மூலன் .
சொல்லிய மூலன் பெயரே வரலாற்றில் நின்றது !
எதற்கு இந்த வினோத விளையாட்டு , கண்ணாமூச்சி ஆட்டம் ?
மாதொருபாகனே மண்ணில் பிறந்து ,
என்னை உள்ளே இருந்து சொல்ல வைத்தான் ;
மூலனை ஏட்டினில் எழுத வைத்தான் !
இருவரங்கம் இயற்கையின் கருவரங்கத்தில் 
உருவரங்கமாகித் திருவரங்கம் ஆன உண்மை தெளிந்து நீவீர் அறிவீராக.
இது எம் இருவருக்கும் இடையே உள்ள பூர்வ ஜென்ம பந்தம் , விட்டகுறை தொட்டகுறை !
சீர் விளங்கும் மூலன் , புவி பேர் விளங்கப் பிறந்தான் !

“ அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே .

“ இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே .
                                                    - திருமந்திரம் 

            நந்தியெம்பெருமான் திருவுளப்படி , திருமந்திர மாலை எனும் இத் தமிழ் மூவாயிரத்தை அவனியோர் அறிந்திட , அதனை வெளியிட அமைந்தத் திருவிடம் , அலைபுனல் ஆவடு துறையான திருவாவடுதுறை .
உருவான ,  உறவான , ஊனான , உயிரான வேத நாயகன் , வேதியர் நாயகன் , பூத நாயகன் , புண்ணிய மூர்த்தி எம் ஈசன் உறையும் ஆவடு தண்டுறை திருவாவடுதுறை .
இங்குள்ள அரசமரத்தடியினில் தவமியற்றி வந்தேன் ! 
தமிழ் மூவாயிரத்தைப் படித்து , என் சீடர் எழுவருக்கும் புகட்டி , அவர் வாயிலாக உலகோர்க்கும் உபதேசித்தேன் .

           ஈசனின் திருவருளால் இயற்றப் பெற்ற இத் திருமந்திர மாலையில் இல்லாத பொருள் இல்லை ; சொல்லாத கரு இல்லை . 
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் இத் தமிழ் மூவாயிரம் வையகத்திற்கு ஓர் வழிகாட்டி .
வாழ்க்கைக்கு ஓர் நன்னெறிக் களஞ்சியம் ! அருநெறி மறை !
பொறி கலங்கி , நெறி மயங்கும் மானுடத்திற்கு “ அஞ்சேல் ! ” என வந்த அருமருந்துப் பேழை ! ஆதிநூல் பெட்டகம் !
மந்திரமாவது தந்திரமானது ; முத்தி தருவது சித்தி அளிப்பது !
இதனைப் பாடுவார் பசி தீரும் , பரவுவார் பிணி அகலும் ;
பற்றி நின்ற பாவங்கள் போகும் , சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழும் .
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வாங்கு வாழ்வர் .
வானோர் போற்றுவர் , வையகத்தோர் வாழ்த்துவர் !

“ தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர் ”
                                                - ஔவையார்

“ திருமந் திரமே சிவகதிக்கு வித்தாம் 
திருமந் திரமே சிவமாம் - அருமந்த 
புந்திக் குளேநினைந்து போற்றும்அடி யார்தமக்குச் 
சந்திக்கும் தற்பரமே தான் .

        தில்லையம்பதியில் சமாதிக்கு ஏகு முன்பாக , தமிழ் மூவாயிரம் ஓலைச்சுவடிகளை , தவமியற்றி வந்த திருவாவடுதுறை திருத்தலத்தின் ஆவடுதுறை அரன் ஆலயத்தின் கொடிமரத்தின் கீழே பூமிக்குள் வைப்பாக மறைத்து வைத்தேன் .
அந்த வைப்பான ஓலைச்சுவடிதான் பிற்காலத்தில் நற்றமிழ் ஞான சம்பந்தனால் கண்டெடுக்கப்பட்டது . 
இது கர்ண பரம்பரைச் செய்தி . 

“ யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே .
                                                        - திருமந்திரம் 


         சித்தர் பெருமக்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு தனிப் பெரும் தவம் !  
அளவீட்டிற்கு அப்பாற்பட்டது !
இவர்கள் இம்மண்ணை நேசித்தார்கள் - எல்லாவற்றுக்கும் மேலாக உன்னை நேசித்தார்கள் , உன் சந்ததியை நேசித்தார்கள் . 
நீ வாழ , நிலம் வாழ , உன் சந்ததிகள் நீடுழி வாழ ,
எண்ணிலாக் கலைகள் சொன்னார்கள் , எழுத்தில் அடங்கா மருந்துகள் தந்தார்கள் .
விந்தைகளும் வித்தைகளும் செய்யும் கனகமணிக் குளிகையென்ன , காயகற்பமென்ன , ரசவாத மருந்தென்ன , ஞான வழிகளென்ன , வாழ்வியல் தத்துவங்களென்ன...
அத்தனையும் அளப்பரிய பொக்கிஷங்கள் , காலத்தை வென்று நிற்கும் கருவூலங்கள் !
இவற்றை எல்லாம் விட்டு விட்டு , இவர்களிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றது எதனால் ?
இன்றுவரை வாட்டியெடுக்கும் கேள்வி , விடைதேடும் வினா .
நாம் எங்கே நிற்கிறோம் ? எங்கே போய் கொண்டு இருக்கிறோம் ?
எத்தனையோ தொலைத்து விட்டோமே , எதனால் ?
நீ இறைவனின் குடிமகன் என்றார்களே ஆன்றோர்கள் - அது என்னவாயிற்று ?
அதிகாலையில் எட்டு மணிக்கே போய் , திரையரங்குகளின் வாசலில் க்யூவில் நிற்கும் இளைஞர் கூட்டம் எதைக் காட்டுகிறது ?
டாஸ்மாக் விற்பனைகள் கோடிகளில் குவிகிறதே , இது எதனைச் சொல்கின்றது ?
இவை எல்லாம் சீரழிவின் signalகள் .
நோய் பிணி மூப்பு என நலிந்து போன நாட்டினிலே , ஒலிம்பிக்கில் மெடல் வெல்ல ஒருவர் கூட இல்லையே...! சீரிய சிந்தனைக்கு !

     ஒரு ஜெர்மானியர் இங்கு வந்து தமிழ் கற்று, எண்ணற்ற ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றது எதை உணர்த்துகின்றது ?
இவை எல்லாம் உன்னுடைய பூர்வீகச் சொத்து .
எதிர்காலச் சந்ததிக்கு இவற்றைக் காப்பாற்ற தெரியாமல் களவு கொடுத்தோம் , இழந்து நிற்கிறோம் . எதனால் ?
எதுவுமே தெரியலையா ? அல்லது இறைவனின் துணை இல்லையா ?
இம் மண்ணின் ஞானமும் வீரமும் எங்கே போயிற்று ?

     இவற்றை எல்லாம் புறந்தள்ளியதை விட்டு விட்டு , இனிமேலாவது வாழக் கற்றுக்கொள் .
எத்தனை இங்லிஷ் மருந்துகள் இருந்தாலும் , இறுதியில் நிலவேம்பு கஷாயத்தில் தானே வந்து நிற்கிறோம் !
வரலாற்று அடையாளங்களைக் காப்பாற்றக் கற்றுக் கொள்வீர் !
தொலைத்தது போதும் , தொலைந்தது போதும் , இனியொரு விதி செய்வோம் !
தாய்த் தமிழைப் போற்றுங்கள் , தமிழ் மருத்துவத்தை ஆதரியுங்கள் ,
அவற்றின் ஆராய்வுகளை ஊக்கப்படுத்துங்கள் . இயன்ற அளவு உதவுங்கள் .
உருவாகும் நல்ல எதிர்காலம்  ஒன்று ! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ! 

        இந்த எளிய கருத்துக்களை எழுதி முடித்தபின்பு , திருமூலருடைய நினைவுகள் என்னைத் தாலாட்டியது . சற்று நேரம் கண்ணயர்ந்தேன் . கனவில் ஒரு கருத்து வந்து கவிதை பாடியது .
அது தான் , இந்த சித்தர் பெருமான் - மூலன் - திருமந்திரத் தமிழாகமம் ஆகிய மூன்றும் - இந்த மூவருக்கு இடையே உள்ள கூட்டணித் தொடர்பும் .
காரணமின்றி காரியமில்லை என்பது கர்மக் கோட்பாடு (Karmic Theory).
இது தான் cause and effect Theory . உலக இயக்கத்தின் பின்புல விசை , இயக்கு சக்தி .
எண்ணுவது தான் நாம் , அதனை முடித்து வைப்பவன் இறைவன் .
நினைப்பது தான் நாம் , அதனை நிறைவேற்றுவது தெய்வம் .
இது யோகிகளுக்கும் பொருந்தும் .

        திருமந்திரம் எனும் தெய்வீகப் பேழை வெளிவர வேண்டும் , அது அவனியில் அனைவருக்கும் கிடைத்திடல் வேண்டும் என்பது விதிக்கப்பட்ட உண்மை , எழுதப்பட்ட நியதி.
அது நிறைவேறுவதற்கு விதி எப்படியெல்லாம் காய்கள் நகர்த்துகின்றது என்பதைக்  கவனியுங்கள் .
யோகி சுந்தரநாதனை அகத்தியரைச் சந்திக்கத் சிந்திக்கத் தூண்டியது எது ?
ஆனால் வரும் வழியில் அவர் சந்திக்க நேர்ந்ததோ ஆயன் மூலனின் பூத உடல் , ஆயனை இழந்து தவித்த ஆநிரைக் கூட்டம் .
ஒரு யோகியின் வாழ்வில் கூட விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பாருங்கள் .
அதில் அவர் ஆவினத்தின் துன்பத்தினைத் துடைக்க , மேய்ப்பன் மூலன் உடம்பினுள் புகுந்தது , மறைத்து வைத்த யோகியின் உடல்  காணாமல் போனது - அது கடந்த வரலாறு .
ஆனால் இதனைக் கூர்ந்து நோக்கி அறிகின்ற உண்மை தான் காலத்தின் கணக்கு ,  கர்மாவின் இயக்கம் , பரம் பொருளின் தத்துவம் .

      ஓட்டப் பந்தயத்தில் ஓடிய உடம்பிற்குத் தானே பரிசுக் கோப்பை !
பரிசுக் கோப்பை திருமந்திரம் என்றால் , Man of the Match மேய்ப்பன் மூலன் .
திருமந்திர வரலாற்றில் அவன் தான் கதாநாயகன் !
நினைத்தது யோகி , முடித்து வைத்தவன் மூலன் !
எண்ணியது யோகி , எழுதியவன் மூலன் !
இயக்கியது யோகி , நிறைவேற்றியவன் மூலன் !
ஆட்டுவித்துவன் யோகி , ஆடியவன் மூலன் !
இது தானே விதியின் கோடு , இயற்கையின் இயக்கம் . 
நினைவில் நிற்பவர் யோகி என்றாலும் , வரலாற்றில் நின்றவன் மூலன் தானே !
திருமூலர் அருளிய திருமந்திரம் என்பது நூலின் தலைப்பு , வரலாற்றுக் கல்வெட்டு !
யோகி - மூலன் - ஆகம நூல் , இந்த முக்கோணத் தத்துவம் என்ன ?
இந்த மூவருக்கும் இடையே உள்ள தொந்தம் எது ?
அதுதான் எழுதிவைக்கப்பட்ட விதியின் கணக்கு - அதுவே ஈசனின் சங்கல்பம் !

        தூக்கம் கலைந்தது , கண் விழித்துப் பார்த்தேன் . 
வீட்டிலும் வெளியிலும் வழக்கம் போல் வாழ்க்கை இயங்கிக் கொண்டு தான் இருந்தது !

       கறவைகளின் கண்ணீரைத் துடைக்க விரும்பிய சித்தர் பெருமான் , இறந்த மூலனுக்கு மறுஉயிரளித்து , மேய்ப்பனை உயிர்த்தெழச் செய்திருக்கலாம் . 
அவரால் முடியாததா என்ன ? நிச்சயமாக முடியும் !
ஆனால் அவ்வாறு செய்யாமல் , ஆயனின் உடலில் புகுவதற்கு அவர் திருவுளம் கொண்டது எதனால் ? என்பது தானே புதிராய் நிற்கிறது .
இந்த வித்தை ( விந்தை !)க்குக் காரணம் என்ன என்பது தானே நம்மை சிந்திக்க வைக்கிறது.
இது தற்செயல் நிகழ்வு அல்ல ! 
மூலனின் பெயரால் திருமந்திரம் வெளி வரவேண்டும் , ஒளி வீசவேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் , ஈசனின் பணித்திட்டம் .
அதற்காகத்தான் இத்தனைத் திருவிளையாடல்களை இறைவன் நிகழ்த்தினார் போலும் !
இந்தக் கணக்கிற்கு வகையும் இல்லை , விடையும் இல்லை .

       மொத்தத்தில் எல்லாவற்றையும் ஏதோ ஒரு சக்தி வகுக்கின்றது ;
ஏதோ ஒரு சக்தி அதற்கானப் பணித்திட்டம் தயார் செய்கிறது ;
ஏதோ ஒரு சக்தி காலத்தைக் கணிக்கிறது ;
ஏதோ ஒரு சக்தி அதனை செயல் படுத்துகின்றது ;
ஏதோ ஒரு சக்தி அதனை ‘ ஆடிட் ’ செய்கிறது ;
ஏதோ ஒரு சக்தி இவை அனைத்தையும் கண்காணிக்கிறது ;
ஏதோ ஒரு சக்தி அத்தனையும் மேலாண்மை செய்கின்றது .
அதுதான் பரம் பொருள் !
அது இருக்கும் இடமே பிரம்ம வித்தையின் ஆதிபீடம், ஞானபீடம் ! 
சிரமெனும் குகையிலே சிவகயிலாயம் !

அதனைத் தொட்டுக்காட்டுபவரே குரு என்னும் ஞானாசிரியன் !
இறையருளால் எல்லோர்க்கும் குருவருள் கிடைக்கட்டும் ! வாழ்த்துக்கள் !

“ பிறிச்சறிந்த இடம்காட்டி நாதம் காட்டிப்
        பேசாத மவுனத்தின் பெருமை காட்டிக்
குறிச்சறிந்த வெளிகாட்டி ஆறுதலம் காட்டிக்
        குறியாகத் தோற்றுவிக்குங் குணமும் காட்டி
நெறிச்சறிந்த உடம்பைவிட்டுக் கேசரியும் காட்டி
        நிறையாக ஊடிமைநின்ற இடமும் காட்டிப்
பறிச்சறிந்த வாய்ப்பேச்சால் ஆமோ சொல்லு 
        பாட்டாரென்ற குருசொல்ல எல்லாம்ஆச்சே ” 
                                                       - போகர் ஏழாயிரம்

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html