தமிழ் முனிவன் தாள் பணிந்து !
சித்தர்கள் தரிசனம்..!
ஒன்பதாம் பாகம்
அண்டமாய் அவனியாகி
ஆதியாய் அந்தமாகி
இருப்பதில் இரண்டுமாகி.
ஈசனும் உமையுமாகி
உள்ளமும் உறுதியுமாகி
ஊனுக்குள் உயிருமாகி
எஞ்சிய இருப்புமாகி
ஏற்றமும் இகபர அறமுமாகி
ஐயமும் விடையுமாகி
ஒலியும் ஓளியுமாகி
ஓங்கிய உலகுமாகி
ஔவியம் ஆக்கமுமாகி
எனதற நினைவற , திக்குவாயன் ( நான்முக பிரமன் ) தைத்த சட்டை !
உலகென்பது தொடக்கம் , உயிரென்பது அடக்கம் ;
விடையென்பது விளக்கம் , விதியென்பது என்ன ?
வாழ்வென்பது தொடக்கம் , வரவு செலவு அடக்கம் ;
வளி என்பது இயக்கம் , விதி என்பது என்ன ?
ஆசைப்படுவது நீ , அதனை ஆக்கி அருள்வது விதி !
ஆட்டம் போடுவது மனம் , அதனை ஆட்சி செய்வது விதி !
நினைத்தது நடப்பதும் , நடந்ததை நினைப்பதும் விதியின் விளையாட்டே .
எண்ண வைப்பதும் எண்ணியதை முடித்து வைப்பதும் விதியின் கோடு தான் .
எல்லாவற்றுக்கும் கால நேரம் என்று உணரவைப்பதும் , அந்த கால நேரத்தினைப் பின்பு கூடவைப்பதும் விதியின் விளைவே.
இன்ன காரியம் , இந்த காலம் , இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்று ; அவ்வளவு தான் .
கணக்கு எழுதுவதும் , அதனைத் தணிக்கை செய்வதும் , அதற்கு அறிக்கை தயாரிப்பதும் , எல்லாம் விதியே .
விதி இயற்கையின் கையிலுள்ள வேடிக்கைக் கருவி , மானுட இயக்கத்தின் ரெகுலேட்டர்.
விதி , மதி பட்டி மன்றத்தில் விதி தான் தீர்ப்பு சொல்கிறது - ஆனால் அதுவும் விதிக்கப்பட்ட விதியின் படி தான் .
இது விண்ணில் நிர்ணயிக்கப்படுகிறது , மண்ணில் தொடங்குகிறது .
பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் , படிக்க வைப்பதும் ;
தேர்வு எழுத வைப்பதும் , தேர்ச்சி பெற வைப்பதும் , அனைத்தும் விதியே .
இதில் கோல்டு மெடல் வாங்கி விட்டால் , உடனே Googleக்கு தலைவராகி விட முடியுமா ?
அந்த இடத்தில் அமர வைப்பதும் விதியின் வித்தையே !
விதியினை வென்ற வேதியரும் , விட்டகுறையே வேதம் என்று தானே சொன்னார்கள்.
எல்லாமே விதியின் இயக்கம் என்றால் இறைவன் என்பவன் எதற்காக ?
கொண்டு வந்தபடி தான் வாழ்க்கை என்றால் கடவுள் என்பவன் எதற்காக ?
இயக்கமும் , இயக்கு விசையும் விதி என்றானால் அதில் தடைகள் விளைவது எதனாலே ?
இரண்டும் முளைத்தது எதனாலே ?
இவை இறைவனின் லீலைகள் , அதனாலே !
“ தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே ”
- திருமந்திரம்
கருவாகும் குழவியின் மண்டை ஓட்டுக்குள் விதியின் ரேகைகள் வரையப்படுகின்றன .
பிறவியாக்கி பிறக்க வைத்ததே விதியின் பிரவாகம் தான் .
அதில் தானே தனது பயணத்தையும் தீர்மானித்து , அதற்கேற்றவாறு தாயின் கர்ப்பத்தையும் தேர்வு செய்கின்றது விதியெனும் விசை .
இதில் தந்தை நாற்றங்கால் , தாய் விளைநிலம் .
இந்த இருவருமே விதியிடமிருந்து பெற்றவர்கள் - அதனால் அவர்கள் பெற்றோர்கள் !
“ தாய் வயிற்றில் கருவாகும் முன்பே நான் உன்னை அறிந்திருந்தேன் ” என்று சொல்கிறது விவிலியமும் .
இது விண்ணில் மலர்கின்றது , மண்ணில் மணம் வீசுகின்றது .
அருள் வெளியில் தோன்றுகிறது , கருவறையில் தொடங்குகிறது .
இளமையிலே பேறு பெறும் , எது வரையில் கூட வரும் ?
முழுமை பெற்ற பேறு என்றால் முதுமை வரை கூட வரும் !
உன்னைக் காலமெனும் தேரினிலே விதியே அழைத்துச் செல்கின்றது .
பாதையும் பயணமும் அதுவே தீர்மானிக்கின்றது .
சந்திப்புகளையும் சந்தர்ப்பங்களையும் அதுவே அளிக்கின்றது .
நிழலாகத் தொடர்ந்து நிஜங்களைக் காட்டுகின்றது .
கருவாகும் முன்பே உருவான மூலத்தை , யாரால் தான் அறிய முடியும் ?
அதனை அறிந்தவர்கள் ஞானிகள் மாத்திரமே - அதுவும் கூட விதியின் பரிசளிப்பு தான் !
சரி... விதி என்பது என்ன ? அதன் கருப்பொருள் யாது ?
விதி வீற்றிருக்கும் வேத பீடம் எது ?
விதி யெனும் போதமே நீ யார் ? நான் வினையின் ஒடுக்கம் .
வினையெனும் வித்தே நீ யார் ? நான் செயல்களின் பெருக்கம் .
செயல் என்னும் ஊற்றே நீ யார் ? நான் எண்ணங்களின் இயக்கம் .
எண்ணம் என்னும் சுழியே நீ யார் ? நான் மனதின் சுருக்கம் .
மனம் என்னும் மூலமே நீ யார் ? நான் விதியின் பெட்டகம் .
விதியே இறுதியாக ஒரு கேள்வி ; “ யார் நீ ” என்பதை எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்...
விதி : மொத்தத்தில் கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை , இயக்கம் , தயாரிப்பு அனைத்தும் நான் .
படத்தின் ரிலீஸ் , பார்வையாளர் , திரையரங்கம் எல்லாம் தீர்மானிப்பதும் நானே .
ஆகையால் படத்தின் வசூலும் என் கருவூலத்தையே சாரும் .
முயற்சிக்குக் கிடைக்கும் மெய்வருத்தக் கூலி கூட நான் கொடுக்கும் நன்கொடையே !
என்னை நீ என்ன பெயரிட்டு அழைத்தாலும் , அதனையும் முடிவு செய்யும் பொறுப்பில் நான் தான் இருப்பேன் .
நீர் நுழையாத இடத்திலும் , நெய் கசியாத இடத்திலும் நான் இருப்பேன் .
இப்போது தெரிந்து கொள் , நான் யார் , நீ யாரென்று ;
நாலுந் தெரிந்த நான்முகன் யார் என்று ...
“ தானென்ற பரத்தினுட அடிதானென்பார்
தன்மையுடன் அகாரமுதல் சோடசமாய் நிற்கும்
வானென்ற நாகமது கண்டத்திற்காணு
மகத்தான வாயுவுக்கு வுகந்த வீடு
ஊனென்ற பஞ்சகர்த்தாளிருக்கும் வீடு
உற்பனமாஞ் சத்தி சிவமொடுங்கும் வீடு
தேனென்ற மதியமுதஞ் சொலிக்கும் வீடு
சிவ சிவா சீவகளை யிருந்த வீடே ”
- அகத்தியர் அமுதகலை ஞானம்
விதி என்றொரு சொல் இருந்தால் , விலக்கு என்றொரு பொருள் இருக்கும் !
விதியினை வென்ற விலக்குகள் தான் மானுட வாழ்வின் ஒளி விளக்கு ; கரை தேடும் கப்பலுக்கு கலங்கரைவிளக்கம் .
மூலமாக முளைத்தெழுந்ததைத் தோழமை ஆக்கிக் கொண்டது - அது அனுபவித்துப் பெற்ற ஞானம் அல்ல .
இது அபூர்வத்தின் தொகுப்பு , லௌகீகத்தின் தவம் .
இந்த சக்தி அடுத்தவனை ஆகர்ஷிக்கும் .
இதைத்தான் கண்ணன் சொல்கிறான் : “ ஞானிகளின் ஞானம் நானே ” என்று .
விதி வயப்பட்டவர்கள் சலனத்தால் மயங்கியவர்கள் ;
விலக்காகி நின்றவர்கள் சாவையே வென்றவர்கள் .
அனுபங்களுக்குப் பிறகு தான் உண்மை அடுத்தவர்களுக்கு விளங்கும் ; இதனை ஆரம்பத்திலேயே தெரிந்து தெளிந்தவர்கள் விதிக்கு விலக்காகி வாழ்ந்தவர்கள் .
மனிதனாக இருந்து ஞானியாக வளர்ந்தவர்கள் .
இவர்கள் விதியின் வீதியை அறிந்தவர்கள் ; அதில் பயணத்தையும் நிர்ணயிப்பார்கள் .
எல்லோருக்கும் அரிதானது என்றால் , யாரோ ஒருவருக்கு எளிதானது என்பது தானே பொருள்.
அந்த ஒருவர் தான் இந்த ஞான தீபங்கள் .
அந்த ஒரு சிலரில் ஒருவனாக நீ ஏன் இருக்கக்கூடாது ?
இருக்கக் கூடாததும் அல்ல , இருக்க முடியாததும் அல்ல.
பூட்டிய விலங்குகளைப் புரிந்து கொண்டவனுக்கு , அதோடு ஓடுவது வீண் என்பது விளங்கும் .
மன விலங்கு ஒரு மாய விலங்கு மட்டுமல்ல , மாயைகளின் விலங்கும் கூட .
பூட்டிய விலங்கினை புரிந்து கொள்வது , தன்னை அறியும் தவம் .
தன்னை அறியும் தவசிக்கு மாட்டிய விலங்கு தானகவே உடையும் , பூட்டிய கதவு தானாகவே திறக்கும் !
இதைத்தான் வைகுண்ட ஏகாதசியின் சொர்க்க வாசல் திறப்பு உணர்த்துகின்றது !
“என்னுடையது” என்று சொல்ல இறைவனைத் தவிர இவனிடம் வேறு என்ன இருக்கிறது ?
இவன் இருக்கும் இடமே கோவிலாகும் , பாதம் பட்ட இடம் பூ பூக்கும் நந்தவனம் .
அதிர்ஷ்டம் என்பது இருப்பதை எண்ணிப் பார்ப்பது தானே தவிர , இல்லாததை எதிர்பார்ப்பதல்ல !
இவன் போட்ட கணக்கிற்கு இதுவரை அறிவியல் விடை கண்டதில்லை .
“ இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
ஏகாந்தமானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
உத்தமனே காயமது உறுதி யாச்சு
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
வண்டரோ டிணங்கியடா மருவிடாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்திடாமற்
குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே ”
- காகபுசுண்டர்
தன்னை அறியும் தவமியற்றி சித்தர்கள் தரிசனம் செய்வோம்... வாருங்கள்...
இப்போது நாம் தரிசிக்கச் செல்வது விண்ணியல் வேதமுனி , வித்தான சித்துமுனி , நவக்கிரக நாயகன் நம் இடைக்காடர் பெருமானைத்தான் !
ஏழை இடையன் இளிச்சவாயன் தான் , ஆனால் அண்ட சராசரங்களை ஆட்கொண்ட அறிவுக் கோமான் .
விண்ணியல் விந்தை புரிந்த மண்ணியல் சிறுதேர் !
மண்ணிலே சுடர்விட்ட மாணிக்கச் சித்து , மரகத மணி ஓசை !
“ தாம் திமி திமி தந்தக் கோனாரே
தீம் திமி திமி திந்தக் கோனாரே ” என ஆடிப் பாடிய அருட்கூத்தன் .
ஆடலுடன் பாடலைச் சொல்லி ஆட்டையும் மாட்டையும் , மயிலையும் குயிலையும் நம் முன் பேச வைத்த ஆத்மச்சித்து ! அண்டசராசரங்களின் நாயகன் !
அஞ்ஞானம் அகல , மெய்ஞானம் பாடிய தும்பீ !
வானியல் பரம் பொருளை ஊனியலாய்ச் சொன்ன வல்லாளன் !
மயில் , குயில் , தும்பீ , பசு மட்டுமல்ல இவருடைய புல்லாங்குழல் கூட போதி மரமாகி சேதி சொன்னது .
காலத்தினை வென்ற சோதி , கற்பனை கடந்த அற்புதத் தரு .
நோக்கிற்கு எளியவர் ஆனால் நூலாற் பெரிய நுண் பொருள் !
ஆழ்கடல் முத்து , அகண்ட மெய்ஞானம் !
முத்திக்கு வித்தாய் முளைத்தெழுந்த மூலப்பொருள் , ஞானப்பால் ஊட்டிய அன்னை !
சரி..., மண்ணாதி பூதங்களை வகுத்த இந்த வான் பொருளை இனிக் கண்ணாரக் காண்போம் , கருத்திசைந்து வாரீர்......
இடைக்காடர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்... கேட்போம்
என் பெயர் இடைக்காடர் .
தமிழ் நாட்டு மூலச்சித்தர் மரபு எனது .
என்னைத் திருமாலின் அவதாரம் எனத் தொழுவார்கள் .
வேதியல் வித்தகர் போகநாதர் என்னுடைய ஞானகுரு .
வானியல் விதிகளை உலகியல் நலத்திற்காக மாற்றி எழுதிய பெருமை எனக்கு உண்டு .
வானியல் வண்ணங்களை புவியினில் ஓவியமாக்கிய புதிய இலக்கணம் அவை !
விதியின் கோடுகளை மாற்றி வரையும் பேறு பெற்றேன் .
வானியல் வல்லுனர் என என்னைப் போற்றிப் புகழ்வார்கள் .
வானியலே வாழ்வியலின் இயக்கம் ( Cosmic Biology ) என்பதை உலகியலாய் ஊருக்கு எடுத்துச் சொன்னேன் !
எழிலான கும்பமுனி அகத்தியர் என்னைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்...
“ திரட்டானயிவ்வளவுஞ் சொல்லவெளியாகத்
தேசமதில்தேறும் பேர்களுக்கையா
பொட்டாகப்போட்டார்க ளந்நூலதீதம்
புவனசாகரங்களுட மகிமையெல்லாந்தான்
சொட்டானவன்னூலில் தேறினாரனேகஞ்
செயலானயிடைக்காடர் செப்புநூல்மார்க்கம்
கரட்டாகப்போகாது கடந்தபண்போர்கள்
கருவாகச்சொல்லியதோர் நூல்பெருமைதானே ”
- அகத்தியர் சௌமிய சாகரம்
விட்டகுறை வாய்த்தால் சித்த நெறி சித்திக்கும் என்பது என் வாழ்வில் மலர்ந்து மணம் வீசிய உண்மை .
தவமும் வரமும் என்னைத் தேடி வந்த செல்வங்கள் !
தானென்ற தத்துவத்தின் இசையைக் கேட்டு , கோனென்ற குருபதத்தில் சேர்ந்த பின்பு மனமது உறுதியாகி , மனமது அறிவும் ஆச்சு , ஆனந்த பூர்த்தி ஆச்சு .
நிஷ்டையிலே அட்டாங்க யோகம் பெற்றேன் .
பரவெளியில் சுடரொளியைப் பார்த்த பின்பு , பரமென்னும் பரிபாஷை பாங்காய் விளங்கியது .
இரவி மதி கலந்து சக்தி சிவமாயிற்று !
அடிமுடி ஆதியந்தம் அறிவாகக் கண்டது , அதுவாகி நின்றது .
ஒளியான பேரொளியே ஆதி அந்தம் .
நில்லென்ற சொல்லறிந்து நின்று கொண்டால் ,
சொல்லொன்றும் தப்பாது , எல்லாஞ் சித்தி !
மனம் அடங்கி மௌனமானால் , பூரணமும் காரணமும் பொருந்தி நிற்கும் .
பேசிடாது இருக்கும் போது ஈசன் வந்து பேசுவான் !
பாரிலே பாலனாகி வாழலாம் , பரபிரம்மம் ஆகலாம் .
என்னுடைய ஞானநூல் செய்யுள்களையே , எல்லாப் பஞ்சாங்கங்களும் இன்றும் மேற்கோள் காட்டுகின்றன .
“ மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே ”
“ வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே ”
- இடைக்காடர்
இறைவனே தனியே வந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்க முடியாது .
அதற்காக இயற்கை உருவாக்கிய கருவியே மனிதன் - இவன் இறைவனின் வார்ப்பு !
ஆகவே வாழ்வியலே கலையாக விவரிக்கப்பட்டது .
பல்வகைப் பரிமாணங்களில் அது வடிவமெடுத்தது .
ஒவ்வொரு காரியத்திலும் உள் அர்த்தம் விளங்கியது , உந்து விசை கண்ணுக்குத் தெரிந்தது .
உடம்புக்கு தனித்து இயங்கும் சக்தி உண்டு ; மனதிற்கு ஆட்சி செய்யும் ஆற்றல் உண்டு .
உடம்பு மனதை வறுத்து எடுக்கும் ; மனது உடம்பை கசக்கிப் பிழியும்..
உடம்பு நலமாக இருந்தால் , மனதும் வளமாக இருக்கும் .
உடம்பு ஒடிந்து போனால் , மனதும் தளர்ந்து இருக்கும் .
உடம்பு வேலைகள் செய்யும் போது , மனதும் உடன் சேர்ந்தே பணிகள் செய்கின்றது .
புலன்களைப் புரிந்து கொண்டு , அனைத்தையும் ஆளுகின்ற தகுதி படைத்தவனே புவியினில் ஞானியாகத் திகழ்கின்றான் .
கங்கையில் விழுந்த துரும்பு கங்கை கடலில் கலக்கும் வரை பயணிக்கின்றது . அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை .
ஆனால் மாணவன் ஒருவன் மன்னார் வளைகுடாவை நீச்சல் அடித்துக் கடந்தால் , அது கின்னஸ் ரெக்கார்டு !
இயற்கையான விஷயங்கள் இயல்பாக நம்மைக் கடந்து சென்று விடுகின்றது .
பெரிய காரியங்களே பெரிதும் கவர்கின்றன ; அரிய நிகழ்வுகளே ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன .
சோம்பல் நிறைந்தவனும் , சுயதர்மம் தவறுபவனும் , வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாகின்றான் .
கடமையைச் செய்யாதவன் தான் கடவுளையும் பழிக்கின்றான் .
உழைப்பினை உணர்ந்த மனம் உறுதியாய் நிற்கின்றது. அதற்கு களைப்பும் தெரிவதில்லை , களிப்பும் அறிந்ததில்லை .
“ கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே .”
“ வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே .”
- இடைக்காடர்
வைரங்கள் புதிதாய் உற்பத்தி செய்யப்படுவதில்லை .
இயற்கை அவற்றை மண்ணுள்ளே மறைத்து வைத்திருக்கின்றது .
இருப்பது இனங்கண்டு இடங்கொண்டு வெளியே தோண்டி எடுக்கப்படுகின்றன .
பட்டை தீட்டிய பின்பு அவை பிரகாசிக்கின்றன .
மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடர் , விண்ணியல் வித்தகராக விஸ்வரூபம் எடுத்தது எப்படி ?
இடைக்காடர் என்னும் வைரம் புதிதாக ஒன்றும் manufacture செய்யப்படவில்லை .
அவர் வாங்கி வந்த வரத்தால் ஏற்கனவே விளைந்திருந்தது .
காலத்தின் வருகைக் காத்திருந்தது . அதுவரை கர்மவினைகளைக் கழிக்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது .
காலம் கனிந்து , திருவாகிய போகநாதர் குருவடிவாகி வந்த பின்பு , மறைந்திருந்த மூலப்பொருள் முளைத்தெழுந்து , இடைக்காடர் என்னும் சோதியாக சுடர் விடத் தொடங்கியது .
வானியல் சாஸ்திரங்களும் , விண்ணியல் விந்தைகளும் இடைக்காடர் வாயிலாக வெளிவர வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் !
அது போகரின் வருகைக்காக காத்திருந்தது !
குரு பார்த்தால் கோடி புண்ணியம் அல்லவா ?
விதி என்னும் விசைசக்தி வீதியிலே நிற்பவனையும் மாலை சூட்டி மன்னனாக்கி விடும் .
இவையெல்லாம் பூர்வ புண்ணிய ஒலியின் எதிரொலிகள் !
விதைத்த விதையின் அறுவடைகள் !
தர்மம் தலைகாக்கிறது - ஆம் , செய்த புண்ணியம் திரும்ப வருகின்றது முதலும் வட்டியுமாக !
அந்த அகல் விளக்கினை ஏற்றி வைப்பவர்கள் ஞானகுருமார்கள் !
“ சத்தியு வறுப்படாதான சிறுநீர் சிவ மதாம்
முத்தி நிலவு பேசிவம் மூனாங் கங்கை
சத்தியே சித்தியான தோன்றடா சிறு கொனஞ்சிக் காயுளே
வுத்த குரு வுண்டு சிவம் உண்மை சத்தி மின்மினி ”
- இடைக்காடர் சூத்திரம்
வாழ்க்கைக்குத் தேவையான திறனையும் சக்தியையும் (skill & power) இன்றையக் கல்வி தருவதில்லை .
போதிக்கும் ஆசிரியர் , பாவம் வைத்துக்கொண்டா வஞ்சனை பண்ணுகிறார் ...?
தனக்குத் தெரிந்ததை பாடத் திட்டக் கட்டுப்பாட்டுக்குள் நின்று சொல்லிக் கொடுக்கிறார் அவ்வளவு தான் .
இயற்கையை சார்ந்து வளர வேண்டிய கல்வி இப்போது ஒரே இயந்திர மயம் .
ஆசிரியரும் மாணவனும் வெறும் இயந்திரமாகவே காட்சியளிக்கின்றனர்.
மாணவர்களை manufacture செய்கின்ற manufacturing unitகளாகவே பள்ளிகள் கண்ணுக்குத் தெரிகின்றன.
பரமஹம்சரிடம் பயின்ற பின்புதான் நரேந்திரன் விவேகாநந்தனாக உருவெடுத்தான் !
அந்த அறிவையும் , ஆற்றலையும் ( spiritual strength ) இன்றைய இங்லீஷ் மீடியத்தால் அளிக்க இயலாது .
முன்பெல்லாம் ஐந்து வயது குழந்தைக்கு மொழியும் அறமும் சேர்த்தே போதிக்கப்பட்டன்.
A for Apple என்ற மேலை நாட்டுக் கல்வியைப்போல ,
அ என்பதற்கு அல்வா என்று அவ்வை சொல்லிக் கொடுக்கவில்லை .
அ - அறஞ்செய்ய விரும்பு
ஆ - ஆறுவது சினம் என்று அறப் பயிரை பிஞ்சு நெஞ்சுலே பதியம் போட்டார் .
என்ன கம்பீரமான வார்த்தைகள் அவை ! எத்தனை கருத்துச் செறிவு !
ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது ! அற வாழ்க்கை ஆரம்பித்தது !
ஆத்திச்சூடியைப் போல் ஒரு அறக் கருவூலம் உலகில் வேறு எந்த மொழியிலும் உண்டா ? இருந்தால் சொல்லட்டும்...
அதனால் தான் இந்த மண்ணில் ஞான வீரம் எங்கும் எதிலும் மலர்ந்து மணம் வீசியது.
இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது .
நன்கு படிக்கட்டும் , நாலு காசு சம்பாதிக்கட்டும் .
விண்ணில் பறக்கட்டும் , விந்தைகள் புரியட்டும் .
ஆனால் மண்ணில் மனிதனாக முதலில் நடக்கட்டும் - அது தான் இன்றையத் தேவை , இன்றியமையாத் தேவை...
கான்வென்ட் கல்வி , வயிற்றுப் பாட்டுக்கு உதவலாம் , வசதி வாய்ப்புகளைப் பெருக்கலாம் , ஆனால் ஞானத்தைத் தராது !
விதியார் வருவார்..! விளக்கந் தருவார் !
விடை சொல்ல யார் , யாரோ ?
நிம்மதி இழந்த இன்றைய வாழ்க்கைக்குத் தேவை , உடம்பையும் மனதையும் உரப்படுத்தும் கலை ஞானக் கல்வி - Man making education !
அது தன்னை அறிய வைக்கும் தவ ஞான வேள்வி .
தன்னை அறிந்த தவசியின் அமைதி கூட ஆகர்ஷிக்கும் .
உலகம் அவனை வணங்கும் , உயிர்கள் எல்லாம் வாழ்த்தும் !
தன்னை அறிந்தவனுக்கு தருவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது ;
இனி அவன் பெறுவதற்கு உலகில் என்ன தான் இருக்கிறது ...?
நன்று ! வாழ்த்துக்கள் !
கோனான எனதையர் அசுவனி தேவர்
கொற்றவனார் சொன்னதொரு நீதி போலே
தேனான கற்பமதை உண்டால் அப்பா
தேகமது கல்தூணாய் இறுகும் பாரு
கரும்பான வயிரம் போல் சித்தி யுண்டாம்
கசடில்லை நரையில்லை திரையும் இல்லை
பெரும்பாண்டம் என்னும் ஒரு மண்ணின் பாண்டம்
பேரான இரும்பென்ற பாண்டமாச்சே
- அகத்தியர் பன்னீராயிரம்
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...