Sunday, 23 December 2018

சித்தர்கள் தரிசனம்..! ஒன்பதாம் பாகம்

                                                   தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                         சித்தர்கள் தரிசனம்..!
                                                           ஒன்பதாம் பாகம்
 


           ண்டமாய் அவனியாகி
தியாய் அந்தமாகி
ருப்பதில் இரண்டுமாகி.  
சனும் உமையுமாகி
ள்ளமும் உறுதியுமாகி
னுக்குள் உயிருமாகி
ஞ்சிய இருப்புமாகி
ற்றமும் இகபர அறமுமாகி
யமும் விடையுமாகி
லியும் ஓளியுமாகி
ங்கிய உலகுமாகி
வியம் ஆக்கமுமாகி
எனதற நினைவற , திக்குவாயன் ( நான்முக பிரமன் ) தைத்த சட்டை !
உலகென்பது தொடக்கம் , உயிரென்பது அடக்கம் ;
விடையென்பது விளக்கம் , விதியென்பது என்ன ?
வாழ்வென்பது தொடக்கம் , வரவு செலவு அடக்கம் ;
வளி என்பது இயக்கம் , விதி என்பது என்ன ?

       ஆசைப்படுவது நீ , அதனை ஆக்கி அருள்வது விதி !
ஆட்டம் போடுவது மனம் , அதனை ஆட்சி செய்வது விதி !
நினைத்தது நடப்பதும் , நடந்ததை நினைப்பதும் விதியின் விளையாட்டே .
எண்ண வைப்பதும் எண்ணியதை முடித்து வைப்பதும் விதியின் கோடு தான் .
எல்லாவற்றுக்கும் கால நேரம் என்று உணரவைப்பதும் , அந்த கால நேரத்தினைப் பின்பு கூடவைப்பதும் விதியின் விளைவே.
இன்ன காரியம் , இந்த காலம் , இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்று ; அவ்வளவு தான் .
கணக்கு எழுதுவதும் , அதனைத் தணிக்கை செய்வதும் , அதற்கு அறிக்கை தயாரிப்பதும் , எல்லாம் விதியே .

     விதி இயற்கையின் கையிலுள்ள வேடிக்கைக் கருவி , மானுட இயக்கத்தின் ரெகுலேட்டர்.
விதி , மதி பட்டி மன்றத்தில் விதி தான் தீர்ப்பு சொல்கிறது - ஆனால் அதுவும் விதிக்கப்பட்ட விதியின் படி தான் .
இது விண்ணில் நிர்ணயிக்கப்படுகிறது , மண்ணில் தொடங்குகிறது .
பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் , படிக்க வைப்பதும் ;
தேர்வு எழுத வைப்பதும் , தேர்ச்சி பெற வைப்பதும் , அனைத்தும் விதியே .
இதில் கோல்டு மெடல் வாங்கி விட்டால் , உடனே Googleக்கு தலைவராகி விட முடியுமா ?
அந்த இடத்தில் அமர வைப்பதும் விதியின் வித்தையே !

      விதியினை வென்ற வேதியரும் , விட்டகுறையே வேதம்  என்று தானே சொன்னார்கள்.
எல்லாமே விதியின் இயக்கம் என்றால் இறைவன் என்பவன் எதற்காக ?
கொண்டு வந்தபடி தான் வாழ்க்கை என்றால் கடவுள் என்பவன் எதற்காக
இயக்கமும் , இயக்கு விசையும் விதி என்றானால் அதில் தடைகள் விளைவது எதனாலே ?
இரண்டும் முளைத்தது எதனாலே ? 
இவை இறைவனின் லீலைகள் , அதனாலே !

“ தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே ”
                                                                           - திருமந்திரம்

       கருவாகும் குழவியின் மண்டை ஓட்டுக்குள் விதியின் ரேகைகள் வரையப்படுகின்றன .
பிறவியாக்கி பிறக்க வைத்ததே விதியின் பிரவாகம் தான் . 
அதில் தானே தனது பயணத்தையும் தீர்மானித்து , அதற்கேற்றவாறு தாயின் கர்ப்பத்தையும் தேர்வு செய்கின்றது விதியெனும் விசை .
இதில் தந்தை நாற்றங்கால் , தாய் விளைநிலம் .
இந்த இருவருமே விதியிடமிருந்து பெற்றவர்கள் - அதனால் அவர்கள் பெற்றோர்கள் !
“ தாய் வயிற்றில் கருவாகும் முன்பே நான் உன்னை அறிந்திருந்தேன் ” என்று சொல்கிறது விவிலியமும் .
இது விண்ணில் மலர்கின்றது , மண்ணில் மணம் வீசுகின்றது .
அருள் வெளியில் தோன்றுகிறது , கருவறையில் தொடங்குகிறது .

        இளமையிலே பேறு பெறும் , எது வரையில் கூட வரும் ?
முழுமை பெற்ற பேறு என்றால் முதுமை வரை கூட வரும் !
உன்னைக் காலமெனும் தேரினிலே விதியே அழைத்துச் செல்கின்றது .
பாதையும் பயணமும் அதுவே தீர்மானிக்கின்றது .
சந்திப்புகளையும் சந்தர்ப்பங்களையும் அதுவே அளிக்கின்றது .
நிழலாகத் தொடர்ந்து நிஜங்களைக் காட்டுகின்றது .
கருவாகும் முன்பே உருவான மூலத்தை , யாரால் தான் அறிய முடியும் ?
அதனை அறிந்தவர்கள் ஞானிகள் மாத்திரமே - அதுவும் கூட விதியின் பரிசளிப்பு தான் !

       சரி... விதி என்பது என்ன ? அதன் கருப்பொருள் யாது ?
விதி வீற்றிருக்கும் வேத பீடம் எது ?
விதி யெனும் போதமே நீ யார் ? நான் வினையின் ஒடுக்கம் .
வினையெனும் வித்தே நீ யார் ? நான் செயல்களின் பெருக்கம் .
செயல் என்னும் ஊற்றே நீ யார் ? நான் எண்ணங்களின் இயக்கம் .
எண்ணம் என்னும் சுழியே நீ யார் ? நான் மனதின் சுருக்கம் .
மனம் என்னும் மூலமே நீ யார் ? நான் விதியின் பெட்டகம் .
விதியே இறுதியாக ஒரு கேள்வி ; “ யார் நீ ” என்பதை எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்...
விதி : மொத்தத்தில் கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை , இயக்கம் , தயாரிப்பு அனைத்தும் நான் .
படத்தின் ரிலீஸ் , பார்வையாளர் , திரையரங்கம் எல்லாம் தீர்மானிப்பதும் நானே .
ஆகையால் படத்தின் வசூலும் என் கருவூலத்தையே சாரும் .
முயற்சிக்குக் கிடைக்கும் மெய்வருத்தக் கூலி கூட நான் கொடுக்கும் நன்கொடையே !
என்னை நீ என்ன பெயரிட்டு அழைத்தாலும் , அதனையும் முடிவு செய்யும் பொறுப்பில் நான் தான் இருப்பேன் .
நீர் நுழையாத இடத்திலும் , நெய் கசியாத இடத்திலும் நான்  இருப்பேன் .
இப்போது தெரிந்து கொள் , நான் யார் , நீ யாரென்று ;
நாலுந் தெரிந்த நான்முகன் யார் என்று ...

“ தானென்ற பரத்தினுட அடிதானென்பார்
      தன்மையுடன் அகாரமுதல் சோடசமாய் நிற்கும்
வானென்ற நாகமது கண்டத்திற்காணு
      மகத்தான வாயுவுக்கு வுகந்த வீடு
ஊனென்ற பஞ்சகர்த்தாளிருக்கும் வீடு
     உற்பனமாஞ் சத்தி சிவமொடுங்கும் வீடு 
தேனென்ற மதியமுதஞ் சொலிக்கும் வீடு
      சிவ சிவா சீவகளை யிருந்த வீடே ”
                                   - அகத்தியர் அமுதகலை ஞானம்

          விதி என்றொரு சொல் இருந்தால் , விலக்கு என்றொரு பொருள் இருக்கும் !
விதியினை வென்ற விலக்குகள் தான் மானுட வாழ்வின் ஒளி விளக்கு ; கரை தேடும் கப்பலுக்கு கலங்கரைவிளக்கம் .
மூலமாக முளைத்தெழுந்ததைத் தோழமை ஆக்கிக் கொண்டது - அது அனுபவித்துப் பெற்ற ஞானம் அல்ல .
இது அபூர்வத்தின் தொகுப்பு , லௌகீகத்தின் தவம் .
இந்த சக்தி அடுத்தவனை ஆகர்ஷிக்கும் .
இதைத்தான் கண்ணன் சொல்கிறான் : “ ஞானிகளின் ஞானம் நானே ” என்று .
விதி வயப்பட்டவர்கள் சலனத்தால் மயங்கியவர்கள் ; 
விலக்காகி நின்றவர்கள் சாவையே வென்றவர்கள் .
அனுபங்களுக்குப் பிறகு தான் உண்மை அடுத்தவர்களுக்கு விளங்கும் ; இதனை ஆரம்பத்திலேயே தெரிந்து தெளிந்தவர்கள் விதிக்கு விலக்காகி வாழ்ந்தவர்கள் .
மனிதனாக இருந்து ஞானியாக வளர்ந்தவர்கள் .
இவர்கள் விதியின் வீதியை அறிந்தவர்கள் ; அதில் பயணத்தையும் நிர்ணயிப்பார்கள் .

           எல்லோருக்கும் அரிதானது என்றால் , யாரோ ஒருவருக்கு எளிதானது என்பது தானே பொருள்.
அந்த ஒருவர் தான் இந்த ஞான தீபங்கள் .
அந்த ஒரு சிலரில் ஒருவனாக நீ ஏன் இருக்கக்கூடாது ?
இருக்கக் கூடாததும் அல்ல , இருக்க முடியாததும் அல்ல.
பூட்டிய விலங்குகளைப் புரிந்து கொண்டவனுக்கு , அதோடு ஓடுவது வீண் என்பது விளங்கும் .
மன விலங்கு ஒரு மாய விலங்கு மட்டுமல்ல , மாயைகளின் விலங்கும் கூட .
பூட்டிய விலங்கினை புரிந்து கொள்வது , தன்னை அறியும் தவம் .
தன்னை அறியும் தவசிக்கு மாட்டிய விலங்கு தானகவே உடையும் , பூட்டிய கதவு தானாகவே திறக்கும் !
இதைத்தான் வைகுண்ட ஏகாதசியின் சொர்க்க வாசல் திறப்பு உணர்த்துகின்றது !

      “என்னுடையது என்று சொல்ல இறைவனைத் தவிர இவனிடம் வேறு என்ன இருக்கிறது ?
இவன் இருக்கும் இடமே கோவிலாகும் , பாதம் பட்ட இடம் பூ பூக்கும் நந்தவனம் .
அதிர்ஷ்டம் என்பது இருப்பதை எண்ணிப் பார்ப்பது தானே தவிர , இல்லாததை எதிர்பார்ப்பதல்ல !
இவன் போட்ட கணக்கிற்கு இதுவரை அறிவியல் விடை கண்டதில்லை .

“ இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை 
       ஏகாந்தமானதொரு பிரமந் தன்னில் 
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
        உத்தமனே காயமது உறுதி யாச்சு 
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல் 
        வண்டரோ டிணங்கியடா மருவிடாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்திடாமற்
          குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே
                                                     - காகபுசுண்டர்

          தன்னை அறியும் தவமியற்றி சித்தர்கள் தரிசனம் செய்வோம்... வாருங்கள்...

          இப்போது நாம் தரிசிக்கச் செல்வது விண்ணியல் வேதமுனி , வித்தான சித்துமுனி , நவக்கிரக நாயகன் நம் இடைக்காடர் பெருமானைத்தான் !
ஏழை இடையன் இளிச்சவாயன் தான் , ஆனால் அண்ட சராசரங்களை ஆட்கொண்ட அறிவுக் கோமான் .
விண்ணியல் விந்தை புரிந்த மண்ணியல் சிறுதேர் !
மண்ணிலே சுடர்விட்ட மாணிக்கச் சித்து , மரகத மணி ஓசை !

“ தாம் திமி திமி தந்தக் கோனாரே
           தீம் திமி திமி திந்தக் கோனாரே ” என ஆடிப் பாடிய அருட்கூத்தன் .

        ஆடலுடன் பாடலைச் சொல்லி ஆட்டையும் மாட்டையும் , மயிலையும் குயிலையும் நம் முன் பேச வைத்த ஆத்மச்சித்து ! அண்டசராசரங்களின் நாயகன் !
அஞ்ஞானம் அகல , மெய்ஞானம் பாடிய தும்பீ !
வானியல் பரம் பொருளை ஊனியலாய்ச் சொன்ன வல்லாளன் !
மயில் , குயில் , தும்பீ , பசு மட்டுமல்ல இவருடைய புல்லாங்குழல் கூட போதி மரமாகி சேதி சொன்னது .
காலத்தினை வென்ற சோதி , கற்பனை கடந்த அற்புதத் தரு .
நோக்கிற்கு எளியவர் ஆனால் நூலாற் பெரிய நுண் பொருள் !
ஆழ்கடல் முத்து , அகண்ட மெய்ஞானம் !
முத்திக்கு வித்தாய் முளைத்தெழுந்த மூலப்பொருள் , ஞானப்பால் ஊட்டிய அன்னை !

             சரி..., மண்ணாதி பூதங்களை வகுத்த இந்த வான் பொருளை இனிக் கண்ணாரக் காண்போம் , கருத்திசைந்து வாரீர்......
இடைக்காடர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்... கேட்போம்

        என் பெயர் இடைக்காடர் .
தமிழ் நாட்டு மூலச்சித்தர் மரபு எனது .
என்னைத் திருமாலின் அவதாரம் எனத் தொழுவார்கள் .
வேதியல் வித்தகர் போகநாதர் என்னுடைய ஞானகுரு .
வானியல் விதிகளை உலகியல் நலத்திற்காக மாற்றி எழுதிய பெருமை எனக்கு உண்டு .
வானியல் வண்ணங்களை புவியினில் ஓவியமாக்கிய புதிய இலக்கணம் அவை !
விதியின் கோடுகளை மாற்றி வரையும் பேறு பெற்றேன் .
வானியல் வல்லுனர் என என்னைப் போற்றிப் புகழ்வார்கள் .
வானியலே வாழ்வியலின் இயக்கம் ( Cosmic Biology ) என்பதை உலகியலாய் ஊருக்கு எடுத்துச் சொன்னேன் !

எழிலான கும்பமுனி அகத்தியர் என்னைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்...

“ திரட்டானயிவ்வளவுஞ் சொல்லவெளியாகத் 
              தேசமதில்தேறும் பேர்களுக்கையா
பொட்டாகப்போட்டார்க ளந்நூலதீதம் 
               புவனசாகரங்களுட மகிமையெல்லாந்தான்
சொட்டானவன்னூலில் தேறினாரனேகஞ் 
               செயலானயிடைக்காடர் செப்புநூல்மார்க்கம்
கரட்டாகப்போகாது கடந்தபண்போர்கள்
                 கருவாகச்சொல்லியதோர் நூல்பெருமைதானே ”
                                                  - அகத்தியர் சௌமிய சாகரம்

          விட்டகுறை வாய்த்தால் சித்த நெறி சித்திக்கும் என்பது என் வாழ்வில் மலர்ந்து மணம் வீசிய உண்மை .
தவமும் வரமும் என்னைத் தேடி வந்த செல்வங்கள் !
தானென்ற தத்துவத்தின் இசையைக் கேட்டு , கோனென்ற குருபதத்தில் சேர்ந்த பின்பு மனமது உறுதியாகி , மனமது அறிவும் ஆச்சு , ஆனந்த பூர்த்தி ஆச்சு .
நிஷ்டையிலே அட்டாங்க யோகம் பெற்றேன் .
பரவெளியில் சுடரொளியைப் பார்த்த பின்பு , பரமென்னும் பரிபாஷை பாங்காய் விளங்கியது .
இரவி மதி கலந்து சக்தி சிவமாயிற்று !
அடிமுடி ஆதியந்தம் அறிவாகக் கண்டது , அதுவாகி நின்றது . 
ஒளியான பேரொளியே ஆதி அந்தம் . 
நில்லென்ற சொல்லறிந்து நின்று கொண்டால் ,
சொல்லொன்றும் தப்பாது , எல்லாஞ் சித்தி !
மனம் அடங்கி மௌனமானால் , பூரணமும் காரணமும் பொருந்தி நிற்கும் .
பேசிடாது இருக்கும் போது ஈசன் வந்து பேசுவான் !
பாரிலே பாலனாகி வாழலாம் , பரபிரம்மம் ஆகலாம் .
என்னுடைய ஞானநூல் செய்யுள்களையே , எல்லாப் பஞ்சாங்கங்களும் இன்றும் மேற்கோள் காட்டுகின்றன . 

“ மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே ”

“ வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே ”
                                                            - இடைக்காடர்

           இறைவனே தனியே வந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்க முடியாது .
அதற்காக இயற்கை உருவாக்கிய கருவியே மனிதன் - இவன் இறைவனின் வார்ப்பு !
ஆகவே வாழ்வியலே கலையாக விவரிக்கப்பட்டது .
பல்வகைப் பரிமாணங்களில் அது வடிவமெடுத்தது .
ஒவ்வொரு காரியத்திலும் உள் அர்த்தம் விளங்கியது , உந்து விசை கண்ணுக்குத் தெரிந்தது .
உடம்புக்கு தனித்து இயங்கும் சக்தி உண்டு ; மனதிற்கு ஆட்சி செய்யும் ஆற்றல் உண்டு .
உடம்பு மனதை வறுத்து எடுக்கும் ; மனது உடம்பை கசக்கிப் பிழியும்..
உடம்பு நலமாக இருந்தால் , மனதும் வளமாக இருக்கும் .
உடம்பு ஒடிந்து போனால் , மனதும் தளர்ந்து இருக்கும் .
உடம்பு வேலைகள் செய்யும் போது , மனதும் உடன் சேர்ந்தே பணிகள் செய்கின்றது .
புலன்களைப் புரிந்து கொண்டு , அனைத்தையும் ஆளுகின்ற தகுதி படைத்தவனே புவியினில் ஞானியாகத் திகழ்கின்றான் .

      கங்கையில் விழுந்த துரும்பு கங்கை கடலில் கலக்கும் வரை பயணிக்கின்றது . அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை .
ஆனால் மாணவன் ஒருவன் மன்னார் வளைகுடாவை நீச்சல் அடித்துக் கடந்தால் , அது கின்னஸ் ரெக்கார்டு !
இயற்கையான விஷயங்கள் இயல்பாக நம்மைக் கடந்து சென்று விடுகின்றது .
பெரிய காரியங்களே பெரிதும் கவர்கின்றன ; அரிய நிகழ்வுகளே ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன .
சோம்பல் நிறைந்தவனும் , சுயதர்மம் தவறுபவனும் , வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாகின்றான் .
கடமையைச் செய்யாதவன் தான் கடவுளையும் பழிக்கின்றான் .
உழைப்பினை உணர்ந்த மனம் உறுதியாய் நிற்கின்றது. அதற்கு களைப்பும் தெரிவதில்லை , களிப்பும் அறிந்ததில்லை .

“ கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே .

“ வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே .
                                                              - இடைக்காடர்

           வைரங்கள் புதிதாய் உற்பத்தி செய்யப்படுவதில்லை .
இயற்கை அவற்றை மண்ணுள்ளே மறைத்து வைத்திருக்கின்றது .
இருப்பது இனங்கண்டு இடங்கொண்டு வெளியே தோண்டி எடுக்கப்படுகின்றன .
பட்டை தீட்டிய பின்பு அவை பிரகாசிக்கின்றன .
மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடர் , விண்ணியல் வித்தகராக விஸ்வரூபம் எடுத்தது எப்படி ?
இடைக்காடர் என்னும் வைரம் புதிதாக ஒன்றும் manufacture செய்யப்படவில்லை .
அவர்  வாங்கி வந்த வரத்தால் ஏற்கனவே விளைந்திருந்தது .
காலத்தின் வருகைக் காத்திருந்தது . அதுவரை கர்மவினைகளைக் கழிக்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது .
காலம் கனிந்து , திருவாகிய போகநாதர் குருவடிவாகி வந்த பின்பு , மறைந்திருந்த மூலப்பொருள் முளைத்தெழுந்து , இடைக்காடர் என்னும் சோதியாக சுடர் விடத் தொடங்கியது .
வானியல் சாஸ்திரங்களும் , விண்ணியல் விந்தைகளும் இடைக்காடர் வாயிலாக வெளிவர வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் ! 
அது போகரின் வருகைக்காக காத்திருந்தது !
குரு பார்த்தால் கோடி புண்ணியம் அல்லவா ?

          விதி என்னும் விசைசக்தி வீதியிலே நிற்பவனையும் மாலை சூட்டி மன்னனாக்கி விடும் .
இவையெல்லாம் பூர்வ புண்ணிய ஒலியின் எதிரொலிகள் !
விதைத்த விதையின் அறுவடைகள் !
தர்மம் தலைகாக்கிறது - ஆம் , செய்த புண்ணியம் திரும்ப வருகின்றது முதலும் வட்டியுமாக !
அந்த அகல் விளக்கினை ஏற்றி வைப்பவர்கள் ஞானகுருமார்கள் !

“ சத்தியு வறுப்படாதான சிறுநீர் சிவ மதாம்
      முத்தி நிலவு பேசிவம் மூனாங் கங்கை
சத்தியே சித்தியான தோன்றடா சிறு கொனஞ்சிக் காயுளே 
      வுத்த குரு வுண்டு சிவம் உண்மை சத்தி மின்மினி ”
                                                        - இடைக்காடர் சூத்திரம்

       வாழ்க்கைக்குத் தேவையான திறனையும் சக்தியையும் (skill & power) இன்றையக் கல்வி தருவதில்லை .
போதிக்கும் ஆசிரியர் , பாவம் வைத்துக்கொண்டா வஞ்சனை பண்ணுகிறார் ...?
தனக்குத் தெரிந்ததை பாடத் திட்டக் கட்டுப்பாட்டுக்குள் நின்று சொல்லிக் கொடுக்கிறார் அவ்வளவு தான் .
இயற்கையை சார்ந்து வளர வேண்டிய கல்வி இப்போது ஒரே இயந்திர மயம் .
ஆசிரியரும் மாணவனும் வெறும் இயந்திரமாகவே காட்சியளிக்கின்றனர்.
மாணவர்களை manufacture செய்கின்ற manufacturing unitகளாகவே பள்ளிகள் கண்ணுக்குத் தெரிகின்றன.
பரமஹம்சரிடம் பயின்ற பின்புதான் நரேந்திரன் விவேகாநந்தனாக உருவெடுத்தான் !
அந்த அறிவையும் , ஆற்றலையும் ( spiritual strength ) இன்றைய இங்லீஷ் மீடியத்தால் அளிக்க இயலாது .

        முன்பெல்லாம் ஐந்து வயது குழந்தைக்கு மொழியும் அறமும் சேர்த்தே போதிக்கப்பட்டன். 
A for Apple என்ற மேலை நாட்டுக் கல்வியைப்போல ,
அ என்பதற்கு அல்வா என்று அவ்வை சொல்லிக் கொடுக்கவில்லை .
அ - அறஞ்செய்ய விரும்பு
ஆ - ஆறுவது சினம் என்று அறப் பயிரை பிஞ்சு நெஞ்சுலே பதியம் போட்டார் .
என்ன கம்பீரமான வார்த்தைகள் அவை ! எத்தனை கருத்துச் செறிவு !
ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது ! அற வாழ்க்கை ஆரம்பித்தது !
ஆத்திச்சூடியைப் போல் ஒரு அறக் கருவூலம் உலகில் வேறு எந்த மொழியிலும் உண்டா ? இருந்தால் சொல்லட்டும்...

        அதனால் தான் இந்த மண்ணில் ஞான வீரம் எங்கும் எதிலும் மலர்ந்து மணம் வீசியது.
இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது . 
நன்கு படிக்கட்டும் , நாலு காசு சம்பாதிக்கட்டும் .
விண்ணில் பறக்கட்டும் , விந்தைகள் புரியட்டும் . 
ஆனால் மண்ணில் மனிதனாக முதலில் நடக்கட்டும் - அது தான் இன்றையத் தேவை , இன்றியமையாத் தேவை...
கான்வென்ட் கல்வி , வயிற்றுப் பாட்டுக்கு உதவலாம் , வசதி வாய்ப்புகளைப் பெருக்கலாம் , ஆனால் ஞானத்தைத் தராது !
விதியார் வருவார்..! விளக்கந் தருவார் !
விடை சொல்ல யார் , யாரோ ?

        நிம்மதி இழந்த இன்றைய வாழ்க்கைக்குத் தேவை , உடம்பையும் மனதையும் உரப்படுத்தும் கலை ஞானக் கல்வி - Man making education !
அது தன்னை அறிய வைக்கும் தவ ஞான வேள்வி .
தன்னை அறிந்த தவசியின் அமைதி கூட ஆகர்ஷிக்கும் .
உலகம் அவனை வணங்கும் , உயிர்கள் எல்லாம் வாழ்த்தும் !
தன்னை அறிந்தவனுக்கு தருவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது ;
இனி அவன் பெறுவதற்கு உலகில் என்ன தான் இருக்கிறது ...?
நன்றுவாழ்த்துக்கள் !

கோனான எனதையர் அசுவனி தேவர் 
       கொற்றவனார் சொன்னதொரு நீதி போலே
தேனான கற்பமதை உண்டால் அப்பா
        தேகமது கல்தூணாய் இறுகும் பாரு
கரும்பான வயிரம் போல் சித்தி யுண்டாம் 
       கசடில்லை நரையில்லை திரையும் இல்லை
பெரும்பாண்டம் என்னும் ஒரு மண்ணின் பாண்டம் 
       பேரான இரும்பென்ற பாண்டமாச்சே 
                                     - அகத்தியர் பன்னீராயிரம்

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...


Wednesday, 12 December 2018

சித்தர்கள் தரிசனம்..! எட்டாம் பாகம்

                                              தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                            சித்தர்கள் தரிசனம்..!
                                                          எட்டாம் பாகம் 

                ண்டமும் அவனியும் அறியொணாப் பொருள்களையும் இயக்கும் பின்புலவிசை யிர் என்னும் அணுசக்தி . 
இதுவே அனைத்து உயிரினங்களின் மூலம் .
உயரே பறக்கும் காத்தாடிக்கு உதவியாய் நிற்கும் நூல்போலே , சுழலும் வாழ்வின் சக்கரத்திற்கு அச்சாணி என்பது உயிர்தானே !
விடிவென்பது தொடக்கம் , முடிவென்பது அடக்கம் 
விதியென்பது விளக்கம் , உயிர் என்பது என்ன ?
கருவென்பது தோற்றம் , உருவென்பது மாற்றம் 
வினை என்பது இயக்கம் , உயிர் என்பது என்ன ? அது
அறிவியலுக்கு வயப்படவில்லை !
ஆன்மீகத்திற்கும் பயப்படவில்லை !

       ஆண் என்ன , பெண் என்ன ;
அரசன் என்ன , ஆண்டி என்ன ;
நீ என்ன , நான் என்ன ;
ஏன் , விலங்குகள் கூட... எல்லாவற்றுக்கும் உயிர் ஒன்றுதான் .
நல்லவர் தீயவர் , வாழ்ந்தவர் தாழ்ந்தவர் 
அறிந்தவர் அறியாதவர் எல்லோரையும் இயக்குவது இந்த உயிர் தான் .
உயிர் என்ற ஒன்று இருக்கின்ற வரை தான் உயர்திருஎல்லாம் .
பிரிந்து சென்ற பிறகு அவனுக்குப் பெயர் வேறு, முகவரியே வேறு .

      வழியெல்லாம் வல்லாரை தூதுவளை 
வனத்துக்குள் கருநொச்சி 
விதையினை கண்டதுண்டா ?
பசும் புல்லுக்கு விதை விதைத்தவன் யார் ?
காட்டுக்குள் மரங்களை பதியம் போட்டவன் யார் ?
தேங்காய் ஓட்டுக்குள் இளநீரையும் 
தேகக் கூட்டுக்குள் உயிரையும் 
வாழைக்குள் கன்றையும்
பனம் பாழைக்குள் பதநீரையும் இருப்பு வைத்து 
ஏதும் தெரியாதவன் போல் இருக்கிறான் ஒருவன் ;
தெரிந்து கொண்டால் அது தான் பரம்பொருள் !
உயிரென்ற ஒன்றை உருவாக்கி விட்டு கருவாகி நின்றான் !
கண்டு கொண்டால் அவன் பெயர் இறைவன் !

       உயிர் என்பது தான் என்ன ? அதன் வடிவம் தான் யாது ?
அதன் உறைவிடந்தான் எங்கே ?
ஆயிரம் சொன்ன அறிவியலும் , பாயிரம் பாடிய பக்தியும் கூட உயிர் என்பதற்குப் பொருள் கூறவில்லை .
இதற்கு விளக்கம் சொல்லும் ஒரே அதாரிட்டி , எதற்கும் விடை கண்ட நம் சித்தர் பெருமக்களே! கேட்போம் வாருங்கள் .

உயிர் என்பதற்கு உரை எழுதுகிறார் ஆதிசித்தர் காகபுசுண்டர் ,
பாடலைப் படியுங்கள்...

“ அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
      அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் 
      பஞ்சமா பாதகங்கள்பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணிவ தாக்கி
      விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்டவுச்சி
      கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே
                                    - காகபுசுண்டர்

      ஆதிசித்தர் புசுண்டர் கூறுவதைச் சற்று ஆராய்வு செய்தோமனால் , உயிர் என்பது மனம்; உயிரும் மனமும் ஒன்று தான் என்பது தெளிவாக ஒளிவீசும் தத்துவச் சித்து !
உயிருக்கு உருவம் கிடையாது, அந்த உயிரின்றி எதுவும் நடவாது, உள்ளத்திற்கும் அவ்விதமே.
உயிரின் பிறப்பிடம் எதுவோ , மனதின் இருப்பிடம் அதுவே .
உயிரின் தன்மை பூதபௌதீகம் , மனதின் தன்மையும் அதனைச் சார்ந்ததே.
உயிரின் வாழ்நாள் ஊழி வரை , மனதின் ஆயுளும் அப்படியே .

      இந்த இரண்டுமே பரத்திலே பிறக்கும் மணிவிளக்கு, பரமே நிற்கும் சுடர் !
பகல் இருள் அல்லாத அருள் வெளியில் பூத்த ஞானமலர் !
இரண்டுமே அருவன்று உருவன்று , உளதன்று இலதன்று !
உயிர் பிறப்பதும் ஆதித்தன் உதிப்பதும் மறைவதற்காக அல்ல ; மறைவதெல்லாம் வெறும் தோற்றமே!
அது மனம் போடும் மனக்கணக்கு !
பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல , மீண்டும் பிறவாமையே - இதுவே உயிரின் வேட்கை !
அதனை மரணமில்லாப் பெருவாழ்வு என்று பாடினார் வள்ளலார் .

      இந்த உயிர் என்னும் உயர்ஞானப் பொக்கிஷத்தைக் காலனிடமிருந்து காப்பாற்றும் ரசவாதமே சாகாக்கலை . 
அதனை அருளும் அமிர்த சஞ்சீவியே “ முப்பூ ” எனும் சாகாமூலி , மார்க்கண்டேய மருந்து !
இந்த சாகாமூலியை எல்லா சித்தர்களும் பலவிதமாகப் பரிபாஷை சொற்றொடரால் பாடிப்பரவுகிறார்கள் , பாமாலை சூட்டுகிறார்கள் !
“ அண்டம் ” எனும் சித்தர் உலகினை குருமுகமாக அறிந்தவர்கள் , மெய்ப்பொருளை இவ்வளவு   வெளிப்படையாக எழுதுவது கண்டு அதிர்ச்சி அடையலாம் .
நம்மை வாழ்விக்க வேண்டி இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்களின் ஜென்மாந்திர உறவு நம்மிடையே தொடரவேண்டும் என்பது என் அவா .
அந்தப்பேறு நமக்குக் கிட்டுமா ? அதனை உணர்வது தானே உண்மையான கல்வி !
அதற்கான முதற் படியே இவ்வலைப்பூவின் வரைவுகள் !...  சித்தர்கள் தரிசனம் !
வாழையின் கன்று வாழையின் நிழலில் வாழ்வது போல நம்மை வாழ வைப்பார்கள் !

       வரஞ்செய்த தவத்தால் வாய்க்கும் இந்த மகத்தான மூலியை சித்தர்கள் , நாதவிந்து , அண்டம் பேரண்டம் , பீஜகோசம் , கருநெல்லி , நாதமணி , பொன்னாவரை , கல்லுப்பு , கருங்கோழி , குரு வண்டு , பூநீர் , சிவநீர் , வாலை ரசம் , காமப்பால் , கானற்பால் , கள்ளிப்பால் , பாதாள மூலி , பாஷாண மூலி எனும் பல விதமான பெயர் சூட்டி மகிழ்கின்றனர் .

“ விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
             வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
   மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
              மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
                                              - காகபுசுண்டர் .

இயற்கை இதனைக் கலியுகக் கடவுளாகப் படைத்துள்ளது . 
மானுடர்க்கே அருளப்பட்டுள்ள கற்பப் பொக்கிஷம் .
மனிதனைப் புனிதனாக்கும் பிரணவ பீஜம்.
சாகா உடலைக் கொடுக்க வல்ல நவநீதம் .
தேகமது சித்தியானால் ஆதிசிவசோதி அங்கே சுடரொளி வீசும் .
மேனாட்டு ரசவாத சித்தர்களும் இந்த மாமருந்துக்கு Philosopher’s stone ”, “ Divine Water ”, “ Water of life ”, “ Elixir of life ” எனப் பல்வேறு பெயர்கள் சூட்டியுள்ளனர் .

“ ஒண்ணான மூலியதின் பெருமைமெத்த
           உலகமென்ற யேழுலக முண்டா மூலி
பெண்ணான ஆண்பெண்ணாய் விளங்கும் மூலி
           பெருமைபெற்ற முப்பூவு முண்டா மூலி
வண்ணானு மாவதுவே பஞ்ச மூலி
            வானவர் கோனிமையவர்க்கும் வாய்த்த மூலி
கண்ணான நீலகண்ட ருண்டநஞ்சு
            காய்பழமாம் பழங்காயாம் கந்தமாமே ”
                                           - நந்தீஸ்வரர் நிகண்டு

              இந்த அமிர்த சஞ்சீவி உடம்பினுள் சுடர் விடுவதையே தசதீட்சை (8+2) எனச் சொல்கின்றனர் .
பத்து தலை உடைய இராவணேஸ்வரன் எனும் சொற்றொடர் பரிபாஷை , இந்நோக்கில் பார்க்கத்தக்கது .
இது கடல்கடந்து , மலைகள் தாண்டி காட்டில் குகையில் மறைந்து இருக்கும் மாயப் பொருள் அல்ல .
அருளிலே விளைந்து பொருளிலே புனைந்து , எட்டும் தொலைவில் மண்ணிலே மலர்ந்து மணம் வீசும் வாடாமலர் .
அணுவிற்குள் அண்டமாய் அம்பலத்தே ஆடும் அருமருந்து .
கண்முண்ணே காணக்கிடக்கும் விண்கடந்து நிற்கும் சோதி .
இதன் பெருமை ஏட்டில் அடங்காது , எழுத்தில் பிறவாது .
சொல்லாலே சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை !
இது பேசாத பிரம்மம் , வடிவில்லா வான் பொருள் !
பாற்கடலில் பிறந்த அமுதகலசம் !

“ உரைத்ததால் புலத்தியனே உனக்குச் சொன்னேன் 
         உண்மையுடன் எட்டு ரெண்டு மென்ற வார்த்தை
அரைகிறேன் தசதீஷை யாகு மப்பா
         அப்பனே யிதை யறியார்க் கென்ன வாய்க்கும்
உரைக்கிறேன் இந்த எட்டு ரெண்டு தன்னை 
         உத்தமனே நன்றாக யறிந்தா யானால்
அரைகிறேன் புலத்தியனே என்னைப் போலே
         அந்தமாங் கோடியுகம் வாழலாமே ”
                              - அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

“ அலையிலே வழிந்தாடி யசைந்தது
        சிலையதாய் மதியாகத் திரண்டது
மயிலே வரும் மங்கை மகத்துவம்
        தலையிலே சிவசத்தியின் தீட்சையே ”
                                                        - யூகி முனி

“ ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
      அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
      தெளிய விளம்பிய வா ! முக மாறுடைத் தேசிகனே
                                                                         - அருணகிரிநாதர்
  
         விட்டகுறை வாய்த்தால் , இதன் உண்மைப் பொருளை குரு தொட்டுக் காட்டுவார் .
அதற்கான முதல் தகுதி ஆசைகள் அகன்று , தேவைகளை கடந்து நிற்பதே ஆகும் .
அகத்தூய்மை , குணப்பொலிவு , மனவலிவு , உளத்திட்பம் , மதிநுட்பம் - இவையெல்லாம் இறையருளை நிச்சயம் ஈட்டுத் தரும் , குருவருளும் கூடிவரும் . 
அவனருளாலே அவன் தாள் பணிவீராக !

        இறவா வரம் பெறுதற்கு சித்தர்கள் தரிசனம்... தொடருவோம் , வாருங்கள் ...

     குருவருள் தேடும் ஞானப்பாதையில் , இப்போது நாம் தரிசிக்க இருப்பது பழமுனி , கிழமுனி என்றெல்லாம் வணங்கப்படும் சித்தர் பெருமான் காகபுசுண்டர் .
இயற்கை நியதிகளை வென்று , இறவாப்புகழுடன் வாழும் திரிகாலஞானி .
ஊழி யுகங்களைக் கண்டு கடந்து வாழும் உற்ற மெய் ஞான ஒளி .
பிரளயங்களை வென்று பிரம்ம அண்டங்களில் நின்ற குருபரன் .
பிரம்ம வித்தையினுடைய மூலம் அறிந்தவர் . 
பிறப்புகளுக்கு அட்டவணை சொல்லும் காலக் கணக்காயன் , காலக் கணக்குகளின் கருத்துக் கருவூலம் - ஆதிசித்தன் அல்லவா !

“ வேதனென்ற சித்தமே புத்தியாகத்
           தெளிந்தவரே மெய்ஞானி யாவர் பாரே ”
                                                     - காகபுசுண்டர்

“ ஆடவே அவர்செய்த வகைஏதுஎன்னில்
        ஐயமாம் கும்பகந்தான் அறுபான்நான்காம்
பூடவே பூரகந்தான் பதினாறாகும்
        புகையான ரேசகம்முப் பத்திரெண்டாம்
ஆடவே அவர்இருந்து பேறுபெற்றார் 
         அழகான கற்பமா மரத்தின்மேலே
காடவே காகம்என்ற உருவைக்கொண்டு
          கண்டிருந்தார் கோடியுகம் கரைகாணேனே ”
                                                       - போகர் ஏழாயிரம்
           

               “ கூறுகிறேனென் மகனே வாசி நாதா ”... எனக் காகபுசுண்டர் கூறுவதைக் கேட்க அருகில் செல்வோம், வாருங்கள்...
என் பெயர் காகபுசுண்டர் .
மூதண்ட ராஜரிஷி என அகத்தியர் அழைப்பார் .
ஆதியென்ற பராபரன் என்றும் அழைப்பார்கள் .
அருளான போதமெல்லாம் நிறைந்த வீட்டில் , சிவகலையில் பிறப்புற்று சிவநாத ரூபமான காக வடிவில் வந்துதித்தேன் . 
ஏக பரம் பொருளொடு இரண்டறக் கலந்து வாழ்பவன் .
மாயத்தை நீக்கி மருவினைகள் போக்கி 
காயத்தை வேறாக்கி கடந்து நின்றேன் கால ஊழி .
விண்ணிறந்து மண்ணிறந்து வெளியிறந்து ஒளியிறந்து 
எண்ணிறந்து நின்றதிலே ஏகாந்தமாகி நின்றேன் !

“ காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
          காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் ” 
                                                            - காகபுசுண்டர் 

“ வானப்பா காகமென்ற ரூபமானேன்
            வட வரையின் கூடு தொத்தி யிருந்தேன் பாரே ”
                                                                  - காகபுசுண்டர் 

“ பாரடா இப்படியே யுகங்கள் தோறும் 
         பார்தனில் நானிருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னைப் போல அறிவாருண்டோ
        ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானேன் ”
                                                                  - காகபுசுண்டர்

        ஊழிகள் முடிவுற்று , புவிதனில் மானுட உதயம் தொடங்கும் போது , மனித உருக்கொண்டு புஜண்டராய்ப் பிறப்புற்றேன் பார்தனிலே , பேரன்புற்றேன் ஈசனிடம் .
பிறப்புகளின் ரகசியத்தைப் பிறருக்குப் புகட்டும் பேரருள் பெற்றேன் .
யுகங்களின் நிகழ்வுகள் கூறும் வரலாற்றுப் பேராசிரியன் !

பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும் போது 
          பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர் கொண்டேனே ”
                                                                        - காகபுசுண்டர்

        உயிரென்ற ஒன்று உருவாகும் கருவறை எது ? 
உயிர்கள் உறைவிடம் எது , தங்கி வாழும் தவக்குடில் தான் எது ?
ஓடும் நதிகள் , மலரும் மலர்கள் , காய்க்கும் கனிகள் , சுழலும் கோள்கள் , உழலும் உயிர்கள் உலகில் நன்று தீது நாலுக்கும் , எண்ணம் இயக்கம் எல்லாவற்றுக்கும் 
உயிர் ஒன்றுதான் ; உருவங்கள் தான் வேறு .
விசை ஒன்றுதான் ; வெளிப்பாடு தான் வேறு .
மூலம் ஒன்றாகி முடியும் ஒன்றாய் , எல்லா உயிர்களுக்கும் காலமாய் நிற்பதே சிவம் .
மண்ணில் பிறந்த உயிர் அனைத்தும் தானாகி , விண்ணில் வாழ்வதே சிவம் .
தோற்றமது வீடு , உள்ளே குடி இருப்பவன் ஈசன் - அவன் 
எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் ; பாலின் கண் பரந்துள்ள நெய் .

        உலகத்தில் உள்ள மன்னுயிர்க்கெல்லாம் அலகிறந்த ஆதியே சிவம் .
கருவறை இல்லாத கோவிலுக்கு கருத்துரை ஏது ? அங்கே 
உருவின்றி நிற்கும் உணர்வே தெய்வம் - தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல.
வேய்குழலும் நாதஸ்வரமும் வெவ்வேறானாலும் , அதன் ஓசையில் பாடும் மூச்சுக்காற்றே ஈசன் !
உருவங்கள் எல்லாம் பருவங்கள் மாறி , திருவாகி அங்கே மலர்கின்ற போது , 
அதில் கருவாகி நின்று கடமை ஆற்றும் வீரமே சிவம் .
அதுவே அண்டம் , அதுவே அகண்டம் , ஆதிமூலம் என்பது ;
அதுவே கண்டம் , அதுவே கருத்து , காவியங்கள் ஆனது .
அதுவே ஊண் , அதுவே உணர்வு , உட்கலந்த சோதி !
என்னவென்று சொல்வேன் இலக்கணம் இலாததை ?

“ சுருதியாயெனை யழைத்தே சிவன்றான் கேட்கச் 
            சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே ”
                                                                - காகபுசுண்டர்

“ வீரடா விமலரிடஞ் செல்லும்போது 
         வெற்றியுடனெனை யெடுத்து முத்தமிட்டார்
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார் 
         காகமென்றே ரூபமா யிருந்தேன் பாரே ”
                                                           - காகபுசுண்டர் 

       உடம்பினை உயிர் தேர்வு செய்ததா ? அல்லது
உயிரினை உடம்பு தெரிவு செய்ததா ?
தேர்வும் தெரிவும் தெளிவால் விளைந்த பயன் தானே !
இல்லாத ஒன்றில்லை , அந்த உயிரின்றி எதுவும் உதிப்பதும் இல்லை !
எல்லாமும் இருந்தும் ,  எத்தனையோ மலர்ந்தும் 
இல்லாத ஒன்றுக்குத் தானே ஏங்குது பாவி மனம் .
வலைபட்டு உழலுகின்ற மானைப் போல் பரிதவித்து வாடாமல் 
தலை கெட்ட நூலது போல் தட்டழிந்து நிற்காமல் 
இருப்பதை வளர்த்துக் கிடைத்ததை உணர்ந்து
உடம்பினைக் காப்பதே உயிர் பயிரை வளர்ப்பதாகும் , அது தானே உயிர் வினை ஆகும் !

“ இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினி கம்பம்
          என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடம் பெண்ணரசி யொன்றி நிற்பாள்
          ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம் 
          புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம் 
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே,
          வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே ”

“ பாரப்பா இப்படியே அனந்த காலம் 
        பராபரத்தி னூடே தானிருந்து வாழ்ந்தேன்
ஆரப்பா பிரமுந்தான் மனமி ரங்கி 
         அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போது
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
          விமலரென்றும் உவமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
            திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே ”
                                                                          - காகபுசுண்டர் 

        காக உருவங்கொண்டார் ; காகத்தின் பெயருங் கொண்டார்.
புள்ளி மயில் , பச்சைக்கிளி , பாடுங்குயில் என பறவைகள் பலவிதமிருக்க -
ஏன் காக வடிவெடுத்தார்..?
காகத்திற்கெனத் தனிச் சிறப்பு ஏதேனும் இருக்கிறதா ?
குயில் பாட்டு பாடிய பாரதி கூட காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டானே .
எத்தனையோ பெயரிருந்தும் “ காக்கைப் பாடினியார் ” எனப் பெயர் சூடிக் கொண்டாரே சங்கத் தமிழ்ப்புலவர் .
காவிரி என்று காகத்தின் பெயரை ஒரு நதிக்குச் சூட்டினாரே...

        இவற்றுக்கெல்லாம் அடிநாதம் ஏதும் உண்டா..?
கூடி வாழும் குணமோ ? குலாவி உலவும் மாண்போ ?
பகிர்ந்துண்ணும் பண்போ ? தெரிந்தவரை இவைதான் .
ஆனால் , காலைப் பொழுது பிறப்பதைக் கரைந்து அறிவிக்கும் காகத்திற்குக் காலத்தின் கணக்கும் கைகூடிய வித்தை .
காரணம் இல்லாமலா காகத்தை சனீஸ்வரனுக்கு வாகனமாக வைத்தார்கள் ?
“ ஆயுள் காரகன் ” சனி பகவானுக்கு ஆராய்ந்து தானே அதை அமைத்தார்கள் .
பித்ருக்களின் உருவமாகக் காகத்தை மட்டுந்தானே சொன்னார்கள் பெரியோர்கள் .
ஆழ்ந்து நோக்கினால் அதற்கான விடை கிடைக்கும் , பொருள் புரியும் !
படைப்புகள் பாடும் பல்லவி விளங்கும் !
           
             சக்தியும் சிவனும் பாதியான பின்பு , அதில் மீதிபாதி எங்கே போயிற்று ?
அந்த மீதிப்பாதிதான் உலகினில் ஆணாகவும் , பெண்ணாகவும் அவதாரம் எடுத்தது என்பார்கள்.
அதைத்தான் “ நாத விந்துகளாதிப நமோ நமோ ” எனப் பாடினார் அருணகிரிநாதர் .
சிவநீர் வாலை ரசம் என்று சித்தர்கள் சொன்னார்கள் .
எளிதில் கிடைப்பது எளிதாய் தோன்றுகிறது .
ஒன்றில் நில்லாமல் ஊசலாடுவதே மனதின் இயல்பு .
ஒன்றிருக்க ஒன்றைத் தேடினால் என்றும் அமைதியில்லை என்பதை உணராமல் , 
இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடும் பொய்யான வாழ்க்கை - இதில் 
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் .

         கிளையிலே பாம்பு தொங்க அதை விழுதெனத் தொட்ட குரங்கு , மரத்தின் விழுதுகளையெல்லாம் பாம்பு என்று எண்ணிப் பயந்து , கிளைதோறும் தாவிக் குதித்து உச்சிக்கு சென்ற பின்பு கீழே தொங்கும் தன் வாலைப் பார்த்தது பழக்க தோஷம் , அதையும் பாம்பு என்று எண்ணி பள்ளத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது .

          இந்தக் குட்டிக் கதை சொல்லும் செய்தி என்ன ?
விழுதுகள் இருந்ததும் கிளையில் பாம்பு தொங்கியதும் - இரண்டும் உண்மைதான் .
பாம்பினைத் தொட்டு பதறிய குரங்கிற்கு , பாம்பின் உருவமே மனதில் நின்றது .
விழுதுகள் அனைத்தும் பாம்பிற்குள் மறைந்தன ; விழுதுகளையெல்லாம் பாம்பு விழுங்கிவிட்டது. 
குரங்கின் பார்வைக்கு ஆதாரமாய் இருந்தது பாம்பு .
மனதில் பதிந்த பாம்பின் பயமே, மீதிக் குரங்கினை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது .
பிரபஞ்ச தோற்றத்தை மறைக்கும் திரை, மனதில் ஓடும் எண்ணங்கள் - மாய லீலைகள் .
இதிலும் மனம் வேறு எண்ணம் வேறாய் காண்பது மனம் தானே !
பிரபஞ்ச விளக்கத்தில் காணுவதும் காண்பவனும் வேறல்ல , இரண்டு இடைவெளி இல்லாத ஒன்றே !
காற்றே ஆனாலும் ஜன்னலின் அளவைப் பொறுத்தே வருகிறது !
தொட்ட பின்பே பாம்பு என்று அறிந்த மனம் , சுட்ட பிறகே நெருப்பென்று அறிகிறது .
பட்ட பின்பும் , கெட்ட பிறகுமே பாவம் என்பது புரிகிறது , பரம்பொருள் நினைவில் வருகிறது !
அனுபவங்களுக்குப் பிறகு தான் உண்மை என்பது புரிகிறது !

         நிழல்களை நீக்கி நிஜங்களை தரிசிப்பதே மெய்யுணர்வு , மெய்யறிவு !
மனது இயற்றும் “ மாடல்கள் ” தானே நிஜத்தை மறைக்கும் மாயத்திரை !
மூர்த்தி தலம் தீர்த்தம் என்பது முன்னோர்கள் சொன்ன பரிபாஷை .
காசிக்கு போ , கங்கையில் நீராடு என்பதெல்லாம் கைகாட்டும் ஞானவழிகள் !
காசிக்குச் சென்றவருக்கு எல்லாம் முக்தி கிடைத்ததா ? 
கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் மோட்சம் பெற்றார்களா ?
அப்படி என்றால் கங்கையிலே குளித்து , காசியிலே வாழுகின்ற அத்தனை மக்களும்...?
உடம்பைக் கோவிலாக்கி , உள்ளே குடியிருக்கும் உத்தமனைக் காணாமல் , தேங்காய் உடைப்பதும் , தீபாராதனை காட்டுவதும் எதனைச் சொல்கிறது ?
பக்குவத்தின் பரிணாமம் !

        பாதையைப் பார்த்து நடந்தால் , முள் என்பது பார்வையிலேயே தெரிந்துவிடும் .
குத்திய பின்பு தான் முள் என்று அறிந்தால் ...? 
முள் என்ன தேடி வந்தா குத்தியது ?
அந்த நேரத்தில் முள் தான் சிந்திக்கச் செய்கிறது .
“ பார்த்து நட ” என்று பாடஞ் சொல்கிறது .
இனியாவது விழிப்பாக இரு என எச்சரிக்கை செய்கிறது .
துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொன்னது அதற்குத்தான் .
பட்டறிவு தருகின்ற பக்குவம் , தவம் செய்து கிடைப்பதை விட வலிமையானது !
எந்த துன்பம் ஆனாலும் , அது எந்த வடிவில் வந்தாலும் , அதன் பின்புலத்தில் தூண்டும் தவசக்தி ஒன்று இருக்கிறது .
ஒரு வகையில் அது கூட விதிக்கப்பட்ட விதிதான் .
எல்லாமே விதியின் கோடுதான் காலத்தின் அரசாங்கத்தில் !
அந்த விதியின் வேகத்தைக் குறைப்பதே தியானமும் , பிரார்த்தனையும் !
எதையும் உற்று நோக்கக் கற்றுக்கொண்டால் , உனக்கு முன்னே அறிவு முன் செல்கிறது !
அதற்கு இன்பமும் துன்பமும் ஒன்றுதான் !

“ மாங்காய்ப்  பால் உண்டு
   மலைமேல் இருப்போர்க்கு
   தேங்காய்ப் பால் ஏதுக்கடி ? – குதம்பாய் !
   தேங்காய்ப் பால் ஏதுக்கடி ?
                              - குதம்பைச் சித்தர் .

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html