தமிழ் முனிவன் தாள் பணிந்து !
சித்தர்கள் தரிசனம்..!
ஐந்தாம் பாகம்
தோன்றியது மறையும் , மறைந்தது தோன்றும் ;
சுழன்றது நிற்கும் , நின்றது சுழலும் ;
வளர்ந்தது தளரும் , தளர்ந்தது வளரும் ;
வற்றியது சுரக்கும் , சுரந்தது வற்றும் ;
வாழ்ந்தது தாழும் , தாழ்ந்தது வாழும் ;
நினைப்பது மறக்கும் , மறந்தது நினைக்கும் ;
இணைந்தது பிரியும் , பிரிந்தது இணையும் ;
அழுதவன் சிரிப்பதும் , சிரித்தவன் அழுவதும் ,
இன்பத்தில் துன்பமும் , துன்பத்தில் இன்பமும் ,
வெற்றியில் தோல்வியும் , தோல்வியில் பாடமும்
இறைவன் வகுத்த நியதி , இயற்கை தொகுத்த கணக்கு !
வேர் என்ன ? விழுது என்ன ? எல்லாமே நிலையாமையின் வினையாற்றல் !
பாரினில் இயற்கை தந்ததை எல்லாம்
பாவி மனிதன் தொலைத்து விட்டானே !
அழுது ஓய்ந்த ஆற்றுமணலே அத்தாட்சி !
ஆறுகளுக்கு ஆறுதல் யார் தான் சொல்வது ?
எதற்கோ ஓடுகிறான் , எதற்கு என்று தெரிவதில்லை ;
ஏனோ அழுகிறான் , அதற்கும் ஒன்றும் காரணமில்லை ;
எதற்கோ அஞ்சுகிறான் , அஞ்சுவது எதற்கு என்று அவனுக்கே புரிவதில்லை ( Imaginary fears ).
எப்படியோ சேர்க்கிறான் , அப்படியும் நிறைந்தபாடில்லை ;
எத்தனையோ பேசுகிறான் , எதற்கு என்று அவனே அறிவதில்லை ;
எப்பவும் பேசுகிறான் , அத்தனையும் புத்தகக்குப்பைகள் ;
மொத்தத்தில் தகவல் வங்கி , செய்தித்துணுக்குகளின் ATM !
பேசியவர் எல்லாம் பெரியவர் இல்லை , பெரியோர் அதிகம் பேசுவதில்லை ;
பேசாதவருக்கு பிரச்சனை இல்லை ;
மௌனம் காத்தவரே மகான் ஆகின்றார் !
காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும்
மாறி நினைக்குது பாவி மனது. நிலை கெட்ட நெஞ்சம் ; நித்தமும் நாடகம் !
தாய் மொழியை மறந்த தன்னலச் சேறு !
கொண்டு வந்தது ஒன்றும் இல்லை , எடுத்துச் செல்வதும் எதுவும் இல்லை ;
இடையில் எதற்கு இத்தனை ஜம்பம் ?
கூட்டமும் தேட்டமும் கூடவே வருமா ?
கூட்டிக்கழித்துக் கணக்கு பார்த்தால்
கனவுகள் தான் கையிருப்பு ,
கற்பனைகளே Closing Balance !
கட்டிடம் ஜொலிக்கிறது , அஸ்திவாரம் தான் அழுகிறதே !
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லைதொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
- கண்ணதாசன்
சரி. காயகற்ப விருட்சங்களான நம் சித்தர்களைத் தரிசிப்போம் வாருங்கள்...
போகர் பெருமானைப் பற்றிச் சொல்வதற்குப்
புதிதாய் என்னதான் இருக்கிறது ?
அன்னை புவனேஸ்வரியின் அருட்கொடை !
ஆதிரசம் கொண்டு வந்த அற்புதக் கற்பகம் !
வேதியலின் பிதாமகர் , நவப்பாஷாண நாயகன் !
அறிவியலின் அருளியல் , ஆதிமூலம் !
விஞ்ஞானிகளின் விஞ்ஞானி ! மெய்ஞானச் சிகரம் !
பொறியியல் பொக்கிஷம் !
தொழில்நுட்பக் கருவூலம் !
கடல் கடந்து , மலை தாண்டி சஞ்சீவி கொணர்ந்து ,
போன உயிர் மீட்ட ஆஞ்சநேயர் !
சித்தான சித்து முனி , சித்தர்களில் சூப்பர் ஸ்டார் !
சித்தர் குருகுலத்தின் சிந்தாமணி விளக்கு !
அனைத்திற்கும் மேலாக மானுடத்தை நேசித்த மாசற்ற சோதி ,
சோதியில் ஆதிசொருபமாய் வந்தது !
மானுடத்தின் ஊனாய் , உயிராய் , உறவாய் உதித்த மெய்ஞான வேதமணி !
இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் ...
அகத்திய மாமுனி அகமகிழ்ந்து பாராட்டுவதைக் கேளுங்கள் :
“ சித்தான சித்து முனி போக நாதன்
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்தநேனும் காலாங்கி நாதர் சீடன்
கனமான சீனபதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றும்தான்
மூதுலகில் கண்ட முதல்வன் சித்தன்
நித்தமுமே மாசில்லாக் கடவுள் தன்னை
மாநிலத்தில் மறவாத போகர் தானே ”
போகர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார் ... காண்போம் வாருங்கள் ...
என் பெயர் போகநாதர் .
தமிழ்நாட்டு மூலச்சித்தர் மரபு எனது .
என்னுடைய பாட்டனார் பெயரும் திருமூலர் ; அவரும் சித்தர் மரபினைச் சார்ந்தவரே.
என்னைப் பற்றி எவ்வளவோ கதைகள் புனையப்படுகின்றன , வனையப்படுகின்றன .
கோனான காலங்கி என்னுடைய குரு நாதர் .
ஆதியாய் நின்று அறிவின் முதல் எழுத்து ஓதிய சற்குரு !
சிந்தையுள் நிறைந்த சிவ விசும்பு ! சித்தெல்லாம் செய்வித்த போதிமருந்து !
ஈசனோடு ஒன்றில் இசையாப் பொருளில்லை ; ஆசானும் அப்படியே !
புலிப்பாணி என்னுடைய முதன்மைச் சீடர் !
“ சித்தியாம் முப்பொன்று சிவன்தான்சொன்னார்
தேவியவள் மனமகிழ்ந்து நந்திக்குச்சொன்னாள்
நத்தியாம் நந்திதிரு மூலருக்குச்சொன்னார்
நலமாகத் திருமூலர் காலாங்கிக்குரைத்தார்
கத்தியாங் காலாங்கி நாதர்தாமும்
கடாட்சித்துப் பக்குவத்தில் அடியேற்குச்சொன்னார்
புத்தியாய் அடியேனும் பார்த்துத்தேறிப்
புகழ்ந்த ஏழாயிரத்தில் பாடினேனே ”
- போகர் ஏழாயிரம்
நான் சீனப்பயணியும் இல்லை ; பௌத்தத் துறவியும் அல்ல .
மூலரின் பேரன் , திருமூலர் எனது பாட்டனார் என்னும் பந்த உறவினைப் பல இடங்களில் , நான் கூறியதன் நோக்கம் இது தான் !
காரணம் இல்லாமலா இந்த உறவு முறையைத் திரும்பத் திரும்பச் சொல்வேன் ;
ஏன் என்பதை அறிவீர்களாக !
இந்தப் பெயரில் பல்வேறு காலங்களில் பலபேர் வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மையினை எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் .
பாட்டரது சொந்த உறவுமுறைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வீராக :
“ வந்திட்டுச் சுற்றிலுமே வளைத்துக்கொண்டார்
வசியமா மந்திரத்தை உச்சரித்தேன்
அந்திட்டங் கடிவணங்கி எல்லோருந்தான்
அய்யாநீ ராருடைய மரபென்றார்கள்
முந்திட்டு மூலரவர் மூன்றாம்பேரன்
முக்கியாமாய் போகரென்று மொழிந்திட்டேன்யான்
கொந்திட்டுக் கொடுமூலர் பேரன்என்றால்
குளிகையதின் குணப்பாட்டைக் காட்டுஎன்றாரே ”
“ கலக்கியே மனதுபயமாய் இருந்தார்
காரணமா மூலருடைய பேரன்என்று
மலங்கியே நமைக்கண்டால் மரியாதைமெத்த
மார்க்கமாய் இருந்துவிட்டார் சித்தர்எல்லாம்
துலங்கியே பாட்டர்பதம் சிரமேல்வைத்துச்
சோதித்துச் சித்தருடன் வாதுபோட்டே
அலங்கியே ஆறுவரை கடந்தேஏறி
ஆத்தாளைக் கண்டதால் அஞ்சினாரே ”
- போகர் ஏழாயிரம்
சத்தம் பிறக்கும் இடம் சதாசிவம் இருக்கும் இடம் ,
சித்தம் உதிக்கும் இடம் சிவலிங்கம் காணும் இடம் ;
அருவி மலை நடுவே ஆயிரங்கால் மண்டபத்தில்
திரு நடனம் கண்டேன் தரிசனமும் கொண்டேன் .
உற்று உற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம் !
நெற்றிக்கு நேரே நிலைக்க வைத்து அருள் புரிந்தார் .
பொங்கி நின்ற மௌனமும் , பொதிந்து நின்ற மௌனமும்
தங்கி நின்ற மௌனமும் , தயங்கி நின்ற மௌனமும்
கங்கையான மௌனமும் , கதித்து நின்ற மௌனமும்
திங்களான மௌனமும் , சின்மயத்தின் சொருபமே !
என்னதான் கற்றால் என்ன ? எதை எதையோ அறிந்தால் என்ன ?
உன்னை உய்விக்கும் சற்குருவைக்காணாத பேர்
தன்னையே காணார் , தன் பெயரும் அறியாதவரே !
குருநாதன் தாள் வாழி !
“ பாரென்றே எனைஆண்ட காலாங்கிநாதர்
பக்குவத்தில் உபதேசம் பண்ணிப்பின்பு
கோரென்றே வாசியுடைக் குறியும்காட்டிக்
குளிகையுடை முறைகாட்டி வாதம்காட்டி
தீர்என்ற காயச்சித்திச் சிறப்பும்காட்டிச்
செயலான மனோன்மணியின் விலாசம்காட்டிக்
கார்என்றே சதாநித்தம் கேசரியைத்தானும்
கைநெல்லிக் கனிபோலக் காண்பித்தாரே ”
- போகர் ஏழாயிரம்
என்னுடைய பெயர் சொன்னதும், எல்லோருக்கும் நினைவில் மலர்வது
பழநி தண்டாயுதபாணித் திருஉருவச்சிலை !
வேதியலின் விந்தையாக இன்றும் என்றும் விளங்குவது !
விஞ்ஞான ஆராய்விற்குச் சவாலாக என்றைக்கும் இலங்கும் .
அப்பப்பா , ஐயனே காலங்கிநாதா ! எத்தனைப் பரிசோதனைகள் , என்ன என்ன ஆராய்ச்சிகள் இந்த சிலை மீது , இந்த பொய்யறிவுக்கலியுகத்தில் ?
எல்லா ஆராய்ச்சிகளும் பொல்லாப் பரிசோதனைகளும் என்னவாயிற்று ?
கல்லாப் பிழையும் , கருதாப் பிழையும் , நில்லாப்பிழையாகத்தானே நிலுவையாகி நின்றது.
எங்கே போயிற்று இந்த விஞ்ஞானம் ?
என்ன ஆயிற்று ஆய்வும் ஆராய்ச்சியும் ?
கை கட்டிய சிறுபிள்ளை , வாய் மூடிய மௌனி தானே முடிவில் .
சூட்சுமத்தினை அளவிட ஸ்தூலத்தால் முடியுமா ?
பரிசோதனை செய்து பார்க்க இது என்ன சாதாரண ஜடப்பொருளா ?
ஆதிவஸ்துவின் அற்புதப் படைப்பில் யோக சக்தியும் , ஞானசக்தியும் சேர்த்துக் குழைத்து எடுத்த கலவை அல்லவா ?
எத்தனை எத்தனை நாடுகளுக்குச் சென்று சேர்த்த அரிய தாதுக்கள் (Minerals);
எத்தனை எத்தனைக் காடுகளுக்குச் சென்று சேகரித்த அற்புத மூலிகைகள் ;
எத்தனை எத்தனை மலைகளுக்குச் சென்று சேமித்த உலோக ரசங்கள் .
“ மண்ணான தேகமது இருந்துமென்ன
மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள்
வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
நடக்கவே கலியுகத்தார் பிழைக்கவேண்டி
நாமான மனோன்மணியாள் கிருபையாலே
உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான்
உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே ”
- போகர்
என் அன்பார்ந்த சீடர்களே , இதில் நவபாஷாணம் என்பது பொருள் பொதிந்த
பரிபாஷை சொற்றொடர் என்பதனைப் புரிந்து கொள்வீர்களாக .
சித்தர் குழாத்தில் அகத்தியரும் , தன்வந்திரியும் இந்த வேதியல் வித்தை தெரிந்தவர்கள்.
இந்த அற்புதக் கலவைக்கட்டு சகலபிணிகள் மட்டுமல்ல , அனைத்துப் பாபவினைகளையும் போக்கும் வேதியல் விருட்சம் !
கலியுகத்தின் காமதேனு , கற்பகத் தரு !
தண்டாயுதக் குண்டலினி !
செவ்வாய் கிரகத்தின் கதிர்வலைகள் குவியும் இடம் பழநி மலை .
வெறும் கற்பூர ஆரத்தி, பூஜை வழிபாட்டுக்கு மட்டும் அல்ல இந்த அதிசய வார்ப்பு .
இதன் இரசாயனக் கதிர் வீச்சினை ஏற்று உள்வாங்கும் உரமும் திறனும், நுட்பமும் திட்பமும்
இந்த கலியுக மாந்தருக்கு இல்லையே என்பது தான் கவலை .
பரிபாஷையாகப் பாடிவைத்ததற்குப் பலபேர் இன்று உரை எழுதத் தொடங்கினார்கள் .
ஆய்வும் ஆராய்வும் நல்லது ; நலமான திறன் தேர்ச்சி !
ஆனால் கக்கத்துள் வைப்பதைக் கருத்துள் வைத்தால் வளம் பயக்கும் , பயன் விளையும் !
நோக்கம் , ஆய்வினை ஒதுக்கிப் புறந்தள்ளுவதல்ல ;
இந்த வேதியல் மணி பீடத்தினை அதிசயத்து அசந்து விடாமல் ,
இதில் நின்றிலங்கும் நாத மணி ஒளி ஓசை
தவமான சிவயோகத்தில் காண வேண்டும்;
அந்தரங்கம் ஆதிசூட்சம் அறிய வேண்டும் என்பதே !
ஆராய்ச்சி செய்திட அருங்காட்சிப் பொருளல்ல .
சொல்லக்கேள் , அரிது, அரிது ! இதன் பெருமை யாருங்காணார் !
கண்ணிறைந்த கமல பீடம் , கற்பூரசோதி பீடம் !
அந்தரங்க பீடத்தை ஊமை எழுத்து ஓதி , வாசியால் பூசை செய்தால் ,
ஊனான தேகத்தில் சென்ற பீடை
உயிர் வாட்டி உட்கலந்து நின்ற பீடை
வீணான பீடை எல்லாம் விலகிப் போகும்
வேதாந்த தேகமது சித்தியாகும் !
முத்தியுள்ள சித்தியது கெட்டியாகும் !
பக்தியுடன் பார்பவனே சித்தன் ஆவான் !
தன்னை அறியத் தலம் , பூதலத்தில் இது போல் வேறு எங்கும் இல்லை .
பொக்கிஷத்தைத் திறந்து புதைபொருளை வெளியிட்டேன் ;
பொக்கிஷத்தில் காதற்ற ஊசியும் , கைகாட்டும் குருவையும் காண்பாய் !
அவனியில் உள்ள அனைத்து நாடுகளிலும் எனது மனதுக்குப் பிடித்தது சீனதேசம் .
எனது ஐயன் காலங்கிநாதர் அங்கு வாழ்ந்து வந்ததும் அதற்கு ஒரு காரணம் .
பாரினில் பல தேசங்கள் இருப்பினும் , பழனி தண்டாயுதபாணி சிலை வார்ப்பிற்கு
நான் தெரிவு செய்தது இந்தத் தமிழ் மண்ணைத்தான் .
இங்கு தான் தென்கயிலை தட்சணாயன் வாழுகின்ற மாமேரு பொதிகை உள்ளது .
இந்த மண்ணில் தான் எண்ணற்ற புதையல்களும் , அளவற்ற பொக்கிஷங்களும் பொதிந்து கிடக்கின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த மண் பலகோடி சித்தர்கள் வாழும் ஜீவ பூமி ;
அருட்சக்தி மலர்ந்து மணம் வீசும் மகரந்தம்.
சீடர்கள் (தங்களுக்குள் ) : இந்த அதிசய சிலை வார்ப்பு வேதியலின் விஸ்வரூபம் !
இதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?
மைந்தர்களே , நோக்கமதை அறிவீர்களாக !
உடற்பிணி போக்குவது மட்டுமல்ல ,
உயிர் பிணி நீக்குவதும் ஆகும் .
உடல் வலிவு , குணப் பொலிவு , மனத் தெளிவு
அதில் ஆய ஒளி , ஆன்ம நேய சுடரொளி காண்பதே !
ஊனமில்லாப் பெருவாழ்வு வாழ்வது ஆகும் .
பொல்லாங்கு செய்யும் பொல்லாத கலியுகத்தில்
உன்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் காவல் தெய்வம் !
உன்னை மட்டுமல்ல உலகினைக் காக்கும் அமிர்த சஞ்சீவி !
எளிதாக எண்ணிவிடாதே... இந்த அற்புதச் சிலையின் அணுக்கதிர் வீச்சு
உன்னை மாற்றிப் பிறக்க வைக்கும் மாமருந்து!
உன்னை சித்தனாக்கிச் சிறக்க வைக்கும் சிவராஜ மருந்து !
நினைவில் கொள் , பழனியின் மற்றொரு பெயர் “ சித்தன் வாழ்வு ! ”
இதனை சிந்தையுள் வை , ஆராய்ந்து பார் !
விட்டகுறை இருந்தால் விவரங்கள் விளங்கும்.
கையில் வெண்ணையுடன் கடைத் தெருவில் நெய்க்காக அலைவது ஏன் ?
பையில் பேனாவை வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் தேடுவதால் பயன் என்ன ?
கையில் வெண்ணையும் , பையில் பேனாவும் நீவிர் உணர வேண்டிய மெய்ப்பொருளே !
“ பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான சமாதியருகே கட்டான பாடாணவகை
எட்டுடனொன்று காணவே சேர்த்துவார்த்த
சிலைதானும் நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசை சோடசமுஞ் செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆராப்பா அறிவார்களாருமில்லை ”
- புலிப்பாணி சித்தர்
எட்டாக்கனியல்ல , ஏட்டில் எழுதிய சுரைக்காய் அல்ல .
கண்முன்னே காட்சிதரும் கனகமணி பீடம் , நாத மணி சொரூபம் , ஞானத்தின் நிரூபணம் !
காணுதற்கு எளியது , ஆனால் கருத்திற்கு அரியது !
கற்பனைக்கு எட்டாதது !
ஆண்டிக்கோலம் தான் ஆனாலும்.. அறிவியலை என்ன,
அண்டத்தையே ஆளுகின்ற தண்டாயுதக் குண்டலினி !
அறிவை அறிவால் தானே அறியமுடியும் , ஆராய்ச்சியால் முடியுமா ?
பலனை அனுபவிக்கத் தெரியாமல் , பகுப்பாய்வு செய்து பலன் என்ன ?
முத்திக்கு வித்தாய் முளைத்தெழுந்த சோதியை
சிந்தைதனில் ஒளி விளக்காய் தரிசனம் செய்வீர் , சிவஞானம் பெறலாம் !
காலமெல்லாம் கூடவரும் , உடனாகி நின்றருளும் .
தடுமாறினால் கை கொடுக்கும் தண்டாயுதம் !
பழனி மலை உச்சியிலே பழமுதிர்ச்சோலை !
சக்திசிவம் ஏகமாகி நிற்கும் போது , மனங்கனிந்து மாங்கனியை வாங்காமல் ,
பஞ்சாமிர்தக் கடைகளில் காத்திருப்பது எதைக் காட்டுகிறது ?
உன் மனதில் பதிந்தது தண்டாயுதமா ? பஞ்சாமிர்தமா ?
சீடர்களே கேளுங்கள்...
ஆயகலைகள் , அனைத்துத் துறைகள் என நாங்கள் முதன்மை பெறாத துறைகளே இந்த வையகத்தில் இல்லை .
உலகிலேயே அறிவியல் துறைக்கு முதன்முதலில் அடித்தளம் அமைத்தவர்கள் நாங்கள் -
அறிவியல் துறையின் ஆதிபீடாதிபதிகள் !
தமிழன் அறிவியல் முன்னோடி என்பதில் பெருமைகொள் , பெருமிதம் பெறு , அதனைத் தலை நிமிர்ந்து நீவிர் பாருக்குச் சொல்வீராக !
இதற்கு ஐ.நா. சபை தீர்மானம் இயற்றும் என்றெல்லாம் ஒருபோதும் ஏங்காதே , எதிர்பார்க்காதே !
பெருமை கொள்ளும் இந்த பேருண்மையை உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதியவையுங்கள் .
இதுவே உலகிற்கு உன்னை உதாரணம் காட்டும் , உன் மன அசதிக்குச் சுடர் தரும் மலைத்தேன் !
மூத்தக்குடி மட்டுமல்ல முதன்மையான குடி என்பதை உலகிற்கு உணர்த்தட்டும் ;
உலகம் உன்னை வணங்கட்டும் , உண்மையே என்றும் உணரட்டும் .
அந்த காலம் வெகுதொலைவில் இல்லை !
தேவை தன்னம்பிக்கையும் தன்னறிவுமே ஆகும் , பிறருடைய பாராட்டுப் பத்திரங்கள் அல்ல!
அன்னை மனோன்மணியின் அநுக்கிரகத்தால் அனைத்துக் கலைஞானமும் அருளப் பெற்றேன்!
தங்கம் முதலாய உலோகங்களின் உலோகவியல் ( Metallurgy ),
முத்து முதலாய ரத்தினங்களின் ரத்தினவியல் ( Gemology ), துறைகளில் முதன்மை பெற்று உலகோர்க்கு முதன் முதலாய் எடுத்துச் சொன்னேன் .
அனைத்து உலோகங்கள் , நவரத்தினங்களின் தோற்றம் , குணம் , பண்பு , மருத்துவப் பயன்கள் அடங்கிய ஆதார இலக்கணங்களை என்னைப் போல் எவரும் விளக்கமாய்ச் சொன்னதில்லை.
சூரியகாந்தக்கல் , சந்திரகாந்தக்கல் , நட்சத்திரகாந்தக் கற்களின் சூக்குமத் தத்துவங்களைப் பாங்காய்ச் சொன்னேன் .
ரசவாத வித்தையை என்னைப்போல் எவரும் இவ்வளவு விரிவாகக் கற்றுக்கொடுத்ததில்லை .
எத்தனையோ முறைகள் எத்தனையோ விதங்கள் !
இவை மதிபோல் உடம்பினை மாசற நோக்கும் அகரத்தின் உபதேசம் !
பூமியளவும் ( Geography) , சமுத்திர அளவும் ( Oceanography ), என்றைக்கோ மக்களுக்கு எளிதாய்ச் சொல்லிவைத்தேன் .
அடிப்படை வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்திலேயே நீராவிக்கப்பல் கட்டி ,
பொறியியல் துறையிலும் எனது அரசாட்சி ( Engineering ).
கப்பலோட்டிய மாலுமி ; முதல் கப்பலோட்டிய தமிழன் !
“ துறையான துறைவழியே கண்டபோது
துப்புரவாய்க் கனகம் எல்லாம் கைக்குள்ஆச்சு
மறைவான பொருள்எல்லாம் கண்ணில் தோற்றும்
மகத்தான நிதிகள் எல்லாம் எடுக்கலாகும்
திரைகடலில் நீராவிக் கப்பல் தன்னால்
திகளான களஞ்சியத்தைக் காணலாகும்
குறையாமல் செல்வமது எந்நாளும் தான்
கொற்றவனே உந்தனுக்கு வாய்க்கும் பாரே ”
- போகர் ஏழாயிரம்
கூண்டு கட்டி ஆகாயத்தில் பறந்தேன் ,
பலூன் வித்தை ( Baloon flight) ,
புகைரதம் , ஆகாயரத வித்தைகள்
அறிவியல் துறையில் என்னுடைய சாகசங்கள் !
எத்தனையோ மறைத்திருக்கும் அண்டம் ;
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் .
என்னுடைய நூல்களை ஆராய்வு செய்வது , அறிவியலுக்கு என்றைக்குமே சவால் தான் !
அன்பார்ந்த சீடர்களே ,
ஆய்ந்து ஆய்ந்து வடித்த சிலை
பார்த்துப் பார்த்து வார்த்த சிலை
அதிசயக் கலவையின் அற்புத வடிவம்
ஆதார சக்தியின் ஆனந்த ரூபம்
ஓங்கார ஒளி பீடம் , பிரணவத்தின் பீஜ பீடம் !
கலியுகத்தில் இன்று கண்ணீர் வடிக்கிறது !
கரைந்தும் , உருகியும் , புகைந்தும் , ஆவியாகிப் போகாதவாறு திண்மையுறக்
கட்டி அமைத்தத் தத்துவலயச் சிலை !
இதில் எப்படித் தேய்மானம் வந்தது ?
அதுவும் தலையை விட்டு உடம்பில் மட்டும் ?
அரசு அமைத்த உயர்மட்டக் குழு அறிக்கை கூறுகிறது , சிலையில் காணப்படும் சேதாரங்களைப் பற்றி...
பழனி மலையே பதில் சொல் !
விண்ணே, வெளியே விளக்கஞ் சொல் !
மண்ணே , மரமே வந்து சாட்சி சொல் !
மனிதர்கள் மயங்கும் போது , நீங்கள் பேசுங்கள் !
நீதி கேட்டு நீங்கள் கொஞ்சம் தூது செல்லுங்கள்...
சுரண்டி எடுத்த எலியே இதுவும் சரியா , எண்ணிப் பாத்துக்கோ ?
கலியுகத்தின் களவும் திருட்டும் கோவில்களைக்கூட விட்டுவைக்கவில்லை .
அதர்மங்களும் அநியாயங்களும் ஆலயத்தில் கூட தலைவிரித்தாடுகிறது !
பணத்தாசை எதிலும் பேயாட்டம் போடுகிறது .
சட்டத்தின் பின்னே நின்று சதுராடும் கூட்டம் ;
தடுமாறி ஆடுகின்ற அறியாத ஆட்டம் ;
தப்பாது இவர்கள் மேல் காலனின் நோட்டம் .
அநியாயம் செய்பவர்க்கே மரியாதை அதிகம் .
இதற்கெல்லாம் என்ன பதில் ?
எதிர்காலம் காட்டும் !
“ பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் ”
- கண்ணதாசன்
இது என் சமாதியிலிருந்து பிறக்கும் வாக்கு :
சமாதியிலிருந்து நான் திரும்பவும் வருவேன் !
இது என்னுடைய அடுத்த விசிட் !
எப்போது .........?
கோரக்கர் கூறுவதைக் கேளுங்கள் :
“ தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும் ”
- சந்திர ரேகை
இப்படிப்பட்ட ஞானக்கருவூலங்கள் , மருத்துவ சிரோன்மணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூட நாம் தயாராக இல்லையே ஏன் ?
அப்படியே கவனத்திற்குக் கிடைத்தாலும் , அவற்றை நின்று சிந்திப்பதற்குக் கூட
நாம் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன் ?
எடுத்த எடுப்பிலேயே மனம் ஒதுக்கித் தள்ளுகிறதே ஏன் ?
காரணம் அறியாமையா , அபக்குவமா அல்லது ஆர்வமின்மையா ?
அப்படியானால் மனம் வேறு எதிலோ வேர்பிடித்து விழிக்கிறது என்றுதானே அர்த்தம் .
சிக்கித் தவித்து பெருங்கதவைத் தாளிட்டுக் கொண்டது என்பது தானே பொருள் .
புறக்கணித்தது எதனால் என்பது தான் புரியாத புதிர் !
பகுத்தறிவுப் போர்வையில் , சந்தேகங்கள் என்னும் சாக்கு சொல்லி ,
வெறும் அனுமானங்களிடம் கொண்டு அடகுவைத்துவிட்டோமே சிந்தனைச் செல்வத்தினை!
முற்போக்கு என்று சொல்லி , மரபணுவிற்கே ஒவ்வாத ஒரு போலி வாழ்க்கை .
கருவூலத்தைத் தொலைத்து விட்டு , கஜானாவை இழந்து விட்டு ,
செல்லாக் காசுகளுக்குப் போய் சிறகடித்துப் பறப்பதுதான் விந்தை , வேடிக்கை மனிதர்கள் !
காசு பணம் பெருகியது, வாழ்நாள் குறுகியது .
அதோடு மனங்களும் சுருங்கியது !
அறிவைப் பெருக்குவதாக நினைத்து ஆன்ம பலத்தை ( Spiritual strength ) இழந்து விட்டோம்;
ஆடம்பரத்திற்கு அடிமையாகி ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டோம் ;
எதனையோ இழந்து தவிக்குது மனது ;
அதனை சொல்லத் துடிக்குது ஆன்மா ,
ஆனால் கேட்க மறுக்குது அறிவு !
“ சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர் !
சித்தன்இங்கு இருந்தும்என்ன பித்தன் நாட்டிருப்பாரோ ?
அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே ”
- சிவவாக்கியர்
இன்பம் கனவில் , துன்பம் எதிரில் காண்பது தானே காலத்தின் கணக்கு .
தானியத்தை நினைத்த புள் , வேடனின் வலையில் ;
தெய்வத்தை நினைத்தது மரத்தின் கிளையில் !
தேவைக்கேற்பத் திரவியம் , தெய்வம் போட்ட பிச்சை ;
அறியாத மானுடனுக்கு அக்கரையில் பச்சை !
அன்பினை அன்பினால் உணர்க ,
அறிவினை அறிவினால் அறிக ,
அமைதியை அமைதியினால் காண்க !
எல்லாம் உனக்குள்ளே என்பது எளிதாய் புரியும் !
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html