Saturday, 15 September 2018

சித்தர்கள் தரிசனம்..! நான்காம் பாகம்


               
                                                 தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                                                 சித்தர்கள் தரிசனம்..!
                                                           நான்காம் பாகம்

        அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளி வீசி 
அவனியை ஆளுகின்ற மௌன சக்தி இயற்கை ! இது -
உயிரினங்களின் அகரம் , ஆதார விசை .
ஓடுகின்ற வண்டியினுள் ஓடாத யோகி மனம் .
ஆடுகின்ற நாட்டியத்துள் அசையாத ஆன்மலயம் !
உணவூட்டும் அன்னை , உயிரூட்டும் இறைவன் ,
காக்கும் காவலன் , கற்பிக்கும் ஆசான் ,
பிணி தீர்க்கும் மருத்துவன் , அனைத்துக்கும் மேலாக 
அமைதியினை அளிக்கும் அமிர்த சஞ்சீவி !
மன அசதிக்கு சுடர்தரும் மலைத்தேன் , இது என மலைத்தேன் !
இயற்கையினை அறிய முயன்றது விஞ்ஞானம் ; அறிந்து தெளிந்தது மெய்ஞானம் !
வியந்து பார்த்தது விஞ்ஞானம் ; வயப்படுத்தியது மெய்ஞானம் !

காண்பது கண்கள் , காணத் தூண்டுவது .. எது ?
கேட்பது செவிகள் , கேட்க வைப்பது .. எது ?
பேசுவது வாய் , பேசத் தூண்டுவது .. எது ?
நுகர்வது புலன்கள் , நுகர வைப்பது .. எது ?
மாறுவது மனம் , மாற்றுவது ... யார் !
தொலைந்தது அமைதி , தொலைத்தது ... யார் ?
கலைந்தது கல்வி , கலைத்தது .. எது ?
குழம்பியது அறிவு , குழப்பியது ... யார் ?
கலங்கியது நெஞ்சம் , கலங்க வைப்பது .. எது ?
தொற்றுவது பிணிகள் , தொற்ற வைப்பது .. எது ?
கூடா நட்பு , கொண்டு சேர்த்தது எது ..?
இவைகளை எல்லாம் இயக்குகின்ற பின்புல விசை எது ..?
சொல்லில் பொருள் எது ..? சொல்லாத சொல்லே அது ..!

           பெற்ற தாயே பிள்ளையைப் பேணி வளர்ப்பதைப் போல, இயற்றிய இயற்கையே அனைத்து உயிரினங்களையும் அருட்சக்தியால் அரவணைத்து வளர்க்கின்றது .
ஒவ்வொரு படைப்பிற்கும் இலக்கும் , இலக்கணமும் இயற்கையே வகுக்கின்றது !
உறுதுணையாய் உற்றதுணையாய் , வழிகாட்டியாக வழித்துணையாக இருந்து நம்மைக் காத்து, காப்பாற்றும் இயற்கையினை மனிதன் இதுவரை உணர்ந்தானில்லை .

சுய நலத்திற்கு இரையாகி , வழிபட வேண்டியதை அழிக்க முற்பட்டான் .
வயப்படுத்த வேண்டியதைக் காயப்படுத்த முயன்றான் ... விளைவு ?
வீட்டை வெள்ளம் சூழ்ந்தால் காப்பாற்றத் தெய்வத்தைக் கூப்பிடலாம்..
கோவிலையே வெள்ளம் சூழ்ந்தால் யாரைக் கூப்பிடுவது..? 
யார் , யாரைக் காப்பற்றுவது ?
இது இயற்கை அனுப்புகின்ற இன்னொரு எச்சரிக்கை நோட்டீஸ் !

இயற்கைக்கு இடுக்கி என்ன , குருவாயூர் என்ன , எல்லாம் ஒன்றுதான் .
பம்பை பெருக்கெடுத்தால் , பக்தன் என்றா பார்க்கப்போகின்றது..?
இயற்கை வளங்கள் இறைவனின் அருட்கொடை , மானுடத்தின் சொத்து .
அதனை அழிக்க உனக்கு Power of attorney யார் கொடுத்தது ?
இதனை எப்படி புரியவைப்பது ?
அதனையும் காலமே செய்யும் !

மனம் போல் சூறையாட, இயற்கை ஒன்றும் விளையாட்டுப் பொருளல்ல .
அது உன்னையே உருவாக்கிய சிருஷ்டி கர்த்தா .
உன்னை இயற்றவும் , இயக்கவும் , காக்கவும் அழிக்கவும் அதற்கு நன்றாகவே தெரியும் !
இயற்கை வளங்களை அழிக்க நினைக்கும் இந்த மானுட வைரஸ் கிருமிகளை யார்தான் தடுப்பது? எப்போது தான் தட்டிக் கேட்பது ..?
மனிதன் இயற்கை வளங்களின் காவலன் , காப்பாளன் , Official Trustee!

அண்டம் பிண்டத்தினுள் , ஆதி அந்தத்தினுள் என்னும் அடிமுடித் தத்துவமே மானுடப்படைப்பு.
இதனைச் சாகாக்கால் , வேகாத்தலை , பாயாப்புனல் , நெருப்பாறு , மயிர்ப்பாலம் எனப் பலவகையான பரிபாஷை சொற்றொடர்கள் மூலமாக அறிகிறோம்.
இயற்கையோடு இயைந்த வாழ்வும் , இறவாப் பெருநெறியுமே இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கைமாறு , செலுத்தும் நன்றிக்கடன் .

“ நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி .
                                     - கடுவெளிச் சித்தர் 

            படைப்புகள் ஒவ்வொன்றுக்கு உள்ளும் , அவற்றின் உயிர்வினை இருப்பு வைக்கப்பட்டுள்ளது !
அது தான் உயிரினத்தை பரிமளிக்க வைக்கும் பரிணாமசக்தி ( Theory of Evolution ).
அவற்றை இயக்குகின்ற ஊக்கசக்தி , உந்து விசை !
இயற்கையினுள் மனிதனும் , மனிதனுக்குள் இயற்கையும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள பந்தக்கட்டமைப்பு !
இதனைத் தன்னை அறியும் தத்துவத்தின் மூலம் நமக்கு ஊட்டிப் புகட்டினார்கள்
சித்தர் பெருமக்கள்.

இயற்கையினுள்ளும் , அதன் படைப்புகள் ஒவ்வொன்றினுள்ளும் அளப்பரிய ஆற்றல் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
அந்த அணுசக்தித் திரள்களைத் தன்னுள் மறைத்து வளர்வன தாவரக்கருவூலங்கள் .
அதனை அறிந்து தெளிந்தது தானே தமிழ் மருத்துவம் , மூலிகை இரகசியம் !
இயற்கையில் காணக்கிடைத்தவற்றின் கண்டுபிடிப்பு செய்முறை தானே , காயகற்பம் , கனகமணி குளிகை எல்லாம் !

24 மணி நேரமும் தன்னைப் பற்றிய கனவுகளிலும் (egoism) , தன்னை மையப்படுத்தியக் கற்பனைகளிலும் (egotism),தனக்கு என்ன லாபம் என்ற சுயநலக் கணக்கிலும் (selfishness) ஆழ்ந்து போயிருக்கும் மனித மனம் இதையெல்லாம் எங்கே உணரப்போகிறது ..?

அப்படிப்பட்ட மனதுக்கு இயற்கை வளங்களைப்பற்றி என்ன கவலை ?
அவை எப்படிப்போனால் என்ன ? என்னதான் ஆனால் என்ன ?
ஏய்த்துப் பிழைப்பதும் ஏமாற்றி வாழ்வதும் தப்பு இல்லை என்று ஆகிவிட்ட பிறகு , எதுவுமே கணக்கில் இல்லை , எதிலுமே தர்மம் இல்லை !?
இப்பவும் , இவ்வளவுக்குப் பின்பும் இயற்கை சொல்வது , - 
நீ இறைவனின் குடிமகன் ! இயற்கையின் புதல்வன் ! இந்நினைவு என்றும் அகற்றாதீர் !

             சரி ; இனி இயற்கையின் துணையோடு சித்தர்களைத் தரிசிப்போம் , வாருங்கள் .
இது சித்தர்களைப் பற்றிய வழக்கமான வரலாற்றுப் புள்ளி விபரங்கள் அல்ல .
அரைத்த மாவு கரைத்த புளியென வினாத்தாளுக்கு விடை எழுதும் விபரக்குறிப்புகள் அல்ல.
மாறாக புதிய கோணத்தில் புதிய பார்வை - ஆன்மாவின் அணுகுமுறை !
மானுட சித்தத்தின் தேடல் ! 

   சித்தர் பெருமக்கள் சராசரி மனிதர்கள் அல்ல , சரித்திரக் குறிப்புகள் தொகுப்பதற்கு !
சித்தர்கள் என்பவர் தத்துவ பீடங்கள் , வாழ்வியல் சூத்திரங்கள் !
அவர்கள் நூல்களில் காணப்படும் அரிய தகவல்கள் ஆனால் அறிய வேண்டிய தகவல்கள் திரட்டி பாடல் மேற்கோள்களுடன் தரப்படுகின்றன.
வானவில் வர்ணங்களைக் குழைத்து , வைரத் தூரிகையினால் தீட்டப்படுகின்ற சொல் ஓவியங்கள் !

“ முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?
                                         - குதம்பைச் சித்தர்

“ அடியேனுக்கு எனது குரு சொன்னதைப் போல்
   அப்பனே புலத்தியனே உனக்கு சொன்னேன் .”

அகத்தியரைப் பற்றிச் சொல்ல எழுத என்ன நம்மிடம் இருக்கிறது ? 
அல்லது அவர்கள் பெறுவதற்கு இன்னும் என்ன தான் இருக்கிறது ?
ஆனால் அவர் எழுதியது , சொல்லியதைப் பற்றிக்கூற ஏராளம் இருக்கிறது ?
எவ்வளவோ மருந்துகள் ! எத்தனையோ செய்முறைகள் !
அவ்வளவும் சொல்லிவிட்டு தன்னை மட்டும் மறைத்துக் கொண்டார் .
அதற்கு ஒரு காரணம் இல்லாமலா இருக்கும் ? நிச்சயம் இருக்கும் .
ஞானிகள் மனதை யாரால் அறிய முடியும் ?
அறியவே முடியாதெனும் போது , அளவிடுதற்கு ஏனோ ஆயிரம் முயற்சிகள் !
இதுவும் ஒரு வகையில் அதில் ஒன்று தான் .
ஆனால் அவரைப் பற்றி அறியும் முயற்சி அல்ல ; அவர் சொல்ல விரும்புவதைப் பற்றி !
இதனைப் படிப்பவர்களில் ஒருவர் பயன் பெற்றாலும் அது பெரும் பாக்கியமே !

                            அகத்திய மாமுனி தன் சீடர்களுக்குச் சொல்கிறார் ...
                                                  காண்போம்.. வாருங்கள் ..

         என் பெயர் அகத்தியன் . தென் பொதிகையின் நாயகன் ! தென்கயிலை தெட்சிணாயன் !
இந்தப் பெயரில் பல்வேறு காலங்களில் பலபேர் வாழ்ந்து இருக்கின்றனர் .
தமிழ் நாட்டு மூலச்சித்தர் மரபில் வந்த சித்த அகத்தியன் நான் .
பதினெண் சித்தர் குழாத்தின் தலைவனாகப் போற்றிப் புகழ்வார்கள் .
என்னைப் பொதிகை முனி , ஆதிமுனி , கும்பமுனி , குருமுனி எனும் பெயர்களாலும் அழைப்பார்கள் .
மகா மேருவாகிய பொதிகையே எனது வசிப்பிடம் .
பல யுகங்களாக நான் அங்கு வாழ்ந்து வருகின்றேன் .
புலஸ்தியர் , தேரையர் , யூகிமுனி மூவரும் என்னுடைய முதன்மையான சீடர்கள் !

        ஆதி சித்தர் குருகுலத்தில் அசுவனி தேவர் என்னுடைய குருநாதர்.
உவட்டாத உபதேசங்கள் புகட்டியவர் .
ஆன்மாவே சற்குருவின் சௌமிய பீடம் .
அவரே வழியில் விழி..! விழியில் ஒளி..!
குரு சொல்ல அறிய வேண்டும் ; குரு சொல்லில் காணவேண்டும் .

“ இயம்பினதோரென்ன வென்றால் புலத்தியனே கேளு
       யீசுரந்தானுமையவளுக் கெடுத்துரைத்தார்
வியம்பின தோருமையவளும் நந்திக்குச் சொன்னாள்
       யுருகியுடன் நந்திதர்மந் திரிக்குச் சொன்னார்
இயம்பினதோர் தர்மந்திரி யசுவினிக்கு சொன்னார்
       அருளினாருபதேச மருளக் கேளு 
மயம்பின தோரகத்தியனான் யெந்தனுக்கு
       மருளினாரசுவனியு மருளினாரே ”
                                     - அகத்தியர் சௌமிய சாகரம்

           குருவருளால் திருவருளும் கிட்டியது .
குருமுகமாக கலைக்கியானமும் அருள்ஞானமும் கிடைக்கப் பெற்றேன் .
அறிவால் அறியும் குரு மொழியால் அருள்வெளி கண்டேன் . 
அதில் அகிலாண்டகோடி எல்லாம் கண்டு தெளிந்தேன் .
கடல் கடந்தேன் , கரை அடைந்தேன் , கண்டு கொண்டேன் காட்சியெல்லாம் .
வா மகனே , என்று அழைத்தார். சின்மயம் காட்டி என் சிந்தை தெளியவைத்தார் .
குருகுலத்தின் உபதேசங்கள் , அருள் தரும்  மகத்தான ஞான மொழிகள் .
எட்டிரண்டின் பொருள் கூறி , என்னை அறிவித்து எனக்கருள் செய்தார் .
எந்தன் குருநாதன் அருளாலே , ஏகாந்த வீதியிலே வேதாந்த வீடறிந்தேன் .
ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாச ஒலிகேட்டேன் . 
ஆதி பிரம்மத்தைத் தொட்டுக்காட்டினார் , அறிவின் திருநடனம் அதனுள் கண்டேன் !
வித்தான சுழிமுனையை முத்தான மொழியில் சொன்னார்.
சத்தான உபதேசம் , சகலமும் சற்குருவே என்பேன் .

“ மருளினார் சௌமிய சாகரந்தானிந்நூல்
      மகத்தான பொருள்களெல்லா முபதேசித்தார் 
வருளினார் வாமகனே யறுவுள்ளோனே
      வரவழைத்து வலதுபக்க மாசனமேயிட்டு
குருளினார் குணங்குறிகள் நன்றாய்க் கேட்டு
     குருகுலத்தில் மிகுதி குலங்குணவானென்றும்
யருளினாருபதேசம் யெந்தனுக்கு 
     யப்போது புலத்தியனே யருள் கண்டேனே ”

“ அருளான சின்மயத்தின் குறியே கேட்டேன்
       அக்குறியினிதானமெல்லா மடவாய்ச் சொன்னார்
மருளான மவர்பதத்தில் பணிந்தேனப்பா
       மகத்தான வுபதேச மளித்தாரப்பா
வருளான வுபதேசம் சொன்னாரப்பா
       மகத்தான மண்டரண்ட சராசரங்களெல்லாம்
தெருளான தெளிவதனால் திசைதிகள் கண்டோம்
      தேவியுமை வாலையைனாம் தெரிசித்தோமே ”
                                        - அகத்தியர் சௌமிய சாகரம் 

           சற்குருவின் கடாட்சத்தால் தேவி உமை வாலையின் தரிசனம் கண்டேன் .
அன்னையவள் அருளுபதேசத்தால் அனைத்து கலைகளும் ஆனந்தச் சித்துக்களும் அடையப்பெற்றேன் .
அன்னையவள் அருள் உரை அவனி அண்டங்களெல்லாம் ஆளுகின்ற பொருள் உரை .
குருவடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்தார் ; திறமிது உறுபொருள் தெளிவாய் உணர்ந்தேன் . 
தெவிட்டா ஞானத்தெளிவை மகிழ்ந்தெனக்கு அருள் செய்தாள் வாலைக்கன்னி !

“ தெரிசித்தோ மவள்பதத்தில் பூசித்தோம் நாம்
        தெளிவாக யெந்தனுக்குத் தேவியாளும்
வருஷித்தாள் சகலகலைக் கியானமெல்லாம்
       வாமகனே யென்று சொல்லி வசனித்தாளப்பா
பரிட்சித்தாள் சகலசித்துக் குருவே சொன்னாள்
       பணிந்தோம் நாமவள் பதத்தில் முடிதான் தட்ட
யுரிஷித்தாளுபதேச மெனக்கே சொன்னாள்
       ளுலகமெல்லாமொரு னொடிக்கு ளாண்டொம் பாரே ”
                                               - அகத்தியர் சௌமிய சாகரம் 

         ஆதி சிவன் திருக்கோவில் சென்றேன் .
அருகில் நவகோடி சித்தர்கள் சூழ்ந்து நின்றனர் .
எழுதிய நூலின் பொருள் உணர்ந்து , ஈசன் முன் எடுத்துரைத்தேன் .
அரனும் அக மகிழ்ந்து அருகினில் அழைத்தார் .
மௌன தீட்சை அளித்து மதியமுது ஊட்டினார் .
சித்தமெல்லாம் குளிர்ந்து சிவகங்கை தீர்த்தம் அறிவாய்க் கண்டேன் .
சிதாகாசத்தில் தேனருவி பாயந்தோடியது .
அமிர்த ரசம் அருந்தியதால் அன்னை உமையும் அருள் பாலித்து , எழுத்தறிவித்தாள் இறைவி
சிவவாலை சாத்திரங்கள் கேட்டாள் , அண்டர் பிரான் தயவினாலே நவநீத அமுதளித்தாள்.
அகத்தியனே எனப் பெயர் சொல்லி அழைத்து சகல குருவுக்கும் மேலான ‘ மௌனகுரு நீ ’ எனப் பட்டம் சூட்டினாள் சிவனுமையாள் .
அகண்டத்தில் இதுவல்லோ மௌன தீட்சை .
அந்தரங்க தீட்சையடா , அதிக சூட்சம் !
அரிது , அரிது ; அறிந்து நீ தெளிந்து பாரே !

“ ஆமே புலத்தியனேயிதை யறிவாய்க்கேளு
        ஆதிசிவன் குகையிலிதை யலங்கிருதஞ்செய்தோம்
நாமேயிதன் பொருளறிந்து நன்றாய்ச் சொன்னோம்
        நவகோடிசித்தரென் னருகதனைச் சூழ
வாமே புலத்தியனேயிந்நூல் விருத்தாந்தங் கேளீர் 
        வசனித்தோம் சிவனருகே வாவென்றழைத்தார்
தேமே தென்பொதியைவளர் நாயனெனை மகிழ்ந்து 
        தெளிவதனால் மதியமுர்தந் திகட்டினாரே ”

“ திகட்டினாரை வருமே சூதரசங்கண்டு 
      தேவியுமெழுத்தாறுந் தெளிவாய்ச்சொன்னாள்
அகட்டினார் சிவனுமையை யவருக்குமதிக
      அகத்தியனென்றும் பேரிட்டுச் சகஸ்திரத்தைக் கேட்டார்
புகட்டினார் சௌமிய சாகரந்தன்னைப்
       பூலோக மனிதர்களில் தேருஞ்சித்தருக்கும்
மகட்டினார் சகலகுருவுக்கு மதிகமெனக் கூரந்து
       மவுனகுரு நீயென்று பேரீய்ந்தார் பாரே ”
                                           - அகத்தியர் சௌமிய சாகரம்

          புண்ணிய நதி பொருணை போல பூவுலகில் ஏதுமில்லை .
பொருணையின் பிறப்பிடமான பொதிகையே பூமண்டலத்தின் ஆதி வீடு , ஆதார பீடம் .
கோடானுகோடி ஆதிசித்தர் கோடியுகமாய் வாழும் கயிலயம்பதி .
பல யுகங்கள் தாண்டி கோடான கோடி சித்தர்கள் இருப்பினும் , பதினெண் தொகையின் வகைக் கணக்கினைப் பாங்காக வகுத்துச் சொன்னேன் .
பாரினில் பேர் விளங்கும்  பதினெண் பேர் பெருமைகளைச் சொன்னேன் .
தேர்ந்த பதினெண் பேர் மகிமைகளைத் தெளிவாகக் கூறினேன் , 
தென் கயிலைச் சித்தன் நான் !
பதினெண் குழாத்தின் தலைவனுமானேன் .
கோனான கும்பமுனி என அழைத்தார்கள் !
தென் பொதிகை நாயகன் எனப் புகழ்மாலை சூட்டினார்கள் .
தபோதனர்கள் தாமே கூடி குரு எனக் கொண்டாடினார்கள் .
பரமகுரு எனப் பணிந்து தொழுதார்கள் .
அனைத்துக்கும் மேலாக, ஆதிகுரு வேதியனாம் அசுவினியின் அருளாலே , 
ஈசனே எனக்கு ‘ குருமுனி ’ எனப் பட்டம் சூட்டி அழைத்தார் .
ஈசனின் சித்தி பெற்ற ‘ குருமுனி ’ என்னும் பட்டம் யாம் பெற்ற மணிமகுடம் , 
சிவசிம்மாசன மேருக்குத் தீபம் !

“ பேரானயிவ்வளவுஞ்சட்டை முனிபின்தான்
        பேர்பெரிய பதினெண்பேர் சித்தருட மகிமை
ஆரானயாரறிவார் தென் கயிலை சித்தர்
        அருளினோமாகதுகை யிவ்வளவுமாகும்
காரான கரைகாணார் கோடாகோடி சித்தர்
        கருதினோமதன்பிறகு தேறினார் பாரு
கோரானகும்பமுனி சகலருக்குந்தான்
        குருவானோந் தெட்சண வத்தியனாமே ”

“ஆமேதான் கைலாச பருப்பதந்தன்னில்
        அனந்தமாயுகாகோடி தவசிருந்தோம் பாரு
நாமேதானவசித்தர் வடமேருகிரியில் 
        நவகோடி காலங்களுந் தேறினோம் பாரு
கோமேதானென்னுடைய குருவினருளாலே
        குருமுனியென்றும் பேர் சிவன்றந்தார் பாரு
மூமென்ற மூன்றுபேர் புலத்தியனே தேறன்
        முதன்மை பெறும் யூகிமுனியென் சீஷனாமே ”
                                    - அகத்தியர் சௌமிய சாகரம் 

         தானான தன்னுக்குள் மூலங்கண்டு , தவமான சிவ யோகத்தில் இருந்தேன் .
தானேதான் தன்மனமே சாட்சியாக தன்மையுடன் பூரணத்தில் நிலைத்து நின்றேன் .
தாமென்ற தன்னிலை பிரம்மமாகி பூரணமே அண்டமாச்சு ; பதிவான காரணமே பிண்டமாச்சு.
அண்டமொடு பிண்டம் இரண்டும் நேர் அறிந்து கொண்டேன் .
மெய்ஞான வாசல் தாண்டி , அகத்திலே சுழி கண்டு , சுழியினுள் சுடர் கண்டேன் . 
மேலான மெய்தவத்தில் ஈசனும் வந்தார் , திருக்காட்சிதந்தார் .
“ யாரப்பா ? ” என்று கேட்டார் .
“ அகத்தியன் யான் ” என்று கூறி அவனருளாளே அவன்தாள் தொழுது நின்றேன்.
கற்பனை கடந்த சோதி , கருணையே உருவமாகி அருகில் வந்தார் , அருளாசி அளித்தார் . 
போற்றிப் புகழ்ந்து “ தட்சணாமூர்த்தி ” எனப்பட்டம் சூட்டி , பல்லோரும் ஏத்த ,
பாரினில் புகழுடன் வாழ்வாய் என வரமும் ஈந்தார் ஈசன் .
அண்டஞான சாத்திரங்கள் பாடுவதற்கு கற்றவர் விழுங்கும் கற்பகக்கனியை ,
அற்புத அட்சரத்தை என் நாவில் எழுதிவைத்தார் , ஆதிசிவன் !
மெய்ஞானம் புகட்டினார் ; அருள் நிதியம் அடையப் பெற்றேன் !
ஓரெழுத்தை உயிரெழுத்தாக்கி , ஊமை எழுத்தினை அறிவித்து , உயிர்மெய் எழுத்தெல்லாம் உணரவைத்தார் .
எண்ணும் எழுத்தென்னும் கண்திறந்தார் .
ஏற்றம் தரும் கலைஞானம் எனக்குத் தந்தார்.
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தார் .
ஓங்கார இசை தந்து உயர வைத்தார் ஆதிசிவன் !
ஐயனுமை அருட்கடாட்சத்தால் பேரருள் ஞானம் பெருகியது ! 
பெருநூல்கள் பாடும் பேறு பெற்றேன். 

“ பாரப்பா அண்டபகி ரண்டந்தாண்டிப்
       பாதாளச் சக்கரமும் பதமுந்தாண்டி
நேரப்பா அகண்டபரி பூரணத்தில் 
        நிலைத்து நின்றேன் சுழினையென்ற துறவினுள்ளே
ஆரப்பா வென்றுசொல்லிச் சிவனும் வந்தார்
        அப்போது அகத்தியனானென்று சொன்னேன்
பேரப்பா தெட்சணாமூர்த்தி யென்று 
        பேருவைத்துப் பிரபலமாய் பேருண்டாச்சே ”

“ பேர்கொடுத்து மெஞ்ஞானந் திறந்துசொன்னார்
       பெருஞானம் பாடுதற்கு அருளுந்தந்தார் 
ஆர்கொடுத்தார் சிவனுமையு மெனக்குத்தந்தார்
       ஐயருட கடாச்சத்தால ருளும் பெற்றேன்
தேர்கொடுத்துச் சாத்திரங்கள் பாடுதற்கு
       நிச்சயமா யென்னாவி லெழுதிவிட்டார் 
சீர் கொடுத்து இன்னூலைப் பாடுமென்று 
      செப்பியே மகாமேரைக் கருதினாரே ”
                                         - அகத்தியர் கற்ப தீட்சை 

          விட்டகுறை வாய்த்து நாடி வரும் மெய்த் தொண்டர்களுக்கு நான் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறேன் .
அந்த இடத்தின் விபரங்களைக் கூறுகிறேன் , அன்பார்ந்த சீடர்களே கேளுங்கள் .
பொதிகைச் சாரலின் அடிவாரத்தில் கருவேங்கை மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கும் .
அதன் அடியில் அமர்ந்து , மனம் ஒடுங்கி மௌனமாக மந்திரஞ் செபித்தால் நான் அங்கு தோன்றுவேன் .
உறுதியான மனத்தோடும் , ஊனமில்லாக் கருத்தோடும் , உடலுயிரும் ஒருமித்து திடமுடனே அறிந்துகொள்.
தீபமதுகாண்பாயாக !
விளம்பியதை விரும்பி ஏற்று வேதமாகக் கருத்துள் வைப்பாய் .
இது என்னுடைய விசிட்டிங் கார்டு !

“ வந்துநீ பொதியைகிரிச் சாரலடிவாரம்
     வசனிப்போங்கருவேங்கை மரமாறுவுண்டு 
அந்துநீயம்மர மடிவாரந்தன்னில்
     அடவானயாசனமாந் தோலின் மீதில்
குந்தியுட்கார்ந்து நீயென்னுடைய தியானங்
      கூறுவீர் ஓம் வசிய நம வென்று தானும்
அந்து நீ அறிம் ஐயும் கிலியும் திறிசவ்வும்
      அருளுவாய்கிலியும் அங்கு ஷாயாவென்றுருவே ”
                                    - அகத்தியர் சௌமிய சாகரம் 

            விட்டகுறை தொட்ட மதியால் , அகத்தூய்மை குணப்பொலிவோடு என்னை நாடி வரும் மெய்த்தொண்டர்களுக்கு அருளுபதேசம் செய்து குரு தீட்சைஅளிப்பேன் !
ஓங்காரப் பொருள் உணர்த்தி உயர வைப்பேன் !
 பிரணவத்தின் தரிசனம் சொல்லிப் பிறவாப் பேறு அளிப்பேன் !
வேண்டும் வரம் அளிப்பேன் , வித்தையெல்லாம் அருள்வேன் ! 
நன்மை எல்லாம் பெறலாம், ஞானமும் பெறலாம்  !
வாழைக்கன்று வாழையின் நிழலில் வாழ்வது போலே வாழ்வினைத் தருவேன் !
எழுத்தறிவிப்பேன் ... எண்ணம் எல்லாம் நிறைவேன் ...!
சித்தமெல்லாம் குளிரும் ; சித்தியெல்லாம் மலரும்..!
பக்தியோடு நீ வந்தால் பழவினைகள் அகலும் !
அயனும் அருள்வார் , அரனும் அருள்வார் !
மாலும் இலக்குமியும் மகிழ்ந்து உனக்கு வரம் அளிப்பர்...!

“ கேளப்பாயென்னிடம் வந்தையாவென்றாக்கால்
        கிருபை பெருஞ்சாயுச்சிய பதவியுனக்கீய்வேன்
சாளப்பா சௌமிய சாகரத்தின் பொருளைச்
       சார்வாக வெளியரங்க மாகவுநாம்சொல்வோம்
ஏளப்பாகுருவாணை யென்மீதிலாணை
       யேறும் பிராணாயபீட கரு சொல்வேன்
நாளப்பா செல்லாது நவகோடி சித்து
       நவதீட்சை குருதீட்சை நாமளிப்போமே ”
                            - அகத்தியர் சௌமிய சாகரம் 

       நான் எழுதிய நூல்களுள் சிலவற்றை காண்பீர்களாக..

“ ஒன்றான சௌமிய சாகரந்தா னொன்று
   உத்தமனே பெருநூல் பூரணந்தா னொன்று
   நன்றானயோக பூரணந்தா னொன்னு
   நாட்டினேன் பூரண சூத்திரந்தா னொன்று
   பண்டான காவியத்தில் நாலுஞ் சொன்னேன்
   பாரப்பா ஐயாயிர மாயிரமும் சொன்னேன்
   அய்யருட தயவினால் எண்ணூறு ஒன்று
   அப்பனே இவ்வளவு குறுக்கித் தானே ”
                         - அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

             பால் நினைந்தூட்டும் தாயினைப் போல , வரப்போகும் நோய்க்குக் கூட மருந்தினைச் சொன்னார்கள் .
அப்படியிருந்தும் அவர்களிடமிருந்து ஏன் நாம் விலகியே வாழ்கிறோம் ?
வேற்றுக்கிரக வாசிகளைப்போல அவர்களைப் பார்க்கிறோமே , ஏன் ..?
இது அச்சமா ? அறியாமையா ?
விலகிப் போனதால் நாம் அடைந்தது தான் என்ன ..? 
இழந்தது தானே ஏராளம் ! 
தொலைத்ததுதான் கொஞ்சமா , நஞ்சமா ?
நாளுக்கு நாள் வாட்டி எடுக்கும் நோய்ப்பிணிகள் ; 
நாளொரு நோய் , பொழுதொரு மாத்திரைகள் ! 
இதிலும் சாப்பாட்டுக்கு முன் - சாப்பாட்டுக்கு பின் என்று வேறு வகைக்கணக்கு ..!

ஆரோக்கியம் என்றால் என்ன ? என்று சிந்திக்கக் கூடத் தெரியாத நிழல் வாழ்க்கை !
ஓடி உழன்று சம்பாதித்த காசை மருந்து மாத்திரையில் கொண்டு போய் கொட்டுகிறோம்..
அப்படியும் நோய் தீர்ந்தபாடில்லை ! மனிதனும் திருந்தியபாடில்லை !
நோய்க்கு மருந்து கொடுப்பது இங்லிஷ் வைத்தியம் ; ஆரோக்கியத்திற்கு மருந்து தருவது தமிழ் மருத்துவம் !

நூறு கோடி பேர் வாழ்கின்ற நாட்டில் , ஒலிம்பிக்கில் மெடல் வாங்க ஒருவர் கூட இல்லையே, ஏன்..? 
அப்படியென்றால் நாம் எங்கே நிற்கிறோம் ? என்ன குறை நம்மிடத்தில்..?
உடம்பில் வலு இல்லையா அல்லது 
மனதில் துணிவு இல்லையா..?
அறிவில் தெளிவு இல்லையா அல்லது
ஆண்டவன் துணை இல்லையா..?
ஒண்ணுமே புரியல உலகத்தில ; என்னமோ நடக்குது .. மர்மமா இருக்குது ..!

 “ நூலெனப் படுவது நுவலுங் காலை
  முதலும் முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
  உண்ணின்றகன்ற உரையொடு பொருந்தி
  நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே
                                                       - தொல்காப்பியம்

                                               சித்தர் பெருமக்கள் திருவடிக்கு..!

                                                       தரிசனம் தொடரும்...

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html